விடுதலையான யோனி கலகக்காரிகள் – Pussy Rioters Freed
இணைப்பு : http://www.theguardian.com/world/2013/dec/23/pussy-riot-nadezhda-tolokonnikova-freed-russian-prison
2012 பிப்ரவரியில், நாடியா, மாஷா, காட்யா என்ற மூன்று இளம்பெண்கள் மாஸ்கோ தேவாலயத்தின் மேடையின் மேலேறி, ஒழுங்கவிழ்ப்பு நடவடிக்கையாக கலக பிரார்த்தனை பாடியது சர்வதேச செய்தியானது.
கைது செய்த மூன்று பெண்களில், நடனத்தில் பங்கு பெறாமல், கூட வந்ததால், தண்டனை குறைக்கப்பட்டு வெளியே வந்த காட்யா, மற்ற இரு பெண்களின் விடுதலைக்காக பிரசாரங்களை மேற்கொண்டார். ஆகஸ்ட் 2012 ல் வழக்கு நடந்துக்கொண்டிருக்கும்பொதே
“ப்யூடின் தன தலையில் கொள்ளி வைத்துக்கொள்கிறார்” என்ற ஆல்பத்தை வெளியிட்ட கலகக்காரிகளின் பாடல் வரிகளுள் ஒன்று ” எங்களுக்கு ஏழு வருடம் போதாது, பதினெட்டு வருடமாக சிறைவாசத்தை நீட்டிக் கொள்”.இன்று (23 டிசம்பர் 2013) முதலில் விடுதலையான மாஷா தங்கள் விடுதலையை ரஷ்ய அரசாங்கத்தின் வெறும் விளம்பர ஸ்டண்ட் என்று வர்ணித்திருக்கிறார். அடுத்த சில மணி நேரங்களில் விடுவிக்கப்பட்ட நாடியா, “ப்யுட்டின் நீங்கிய ரஷ்யா” என்று உரத்தக் கோஷமிட்டுக்கொண்டே வெற்றிக்கான இரண்டு விரல் குறியீட்டை உயர்த்திக் காட்டியிருக்கிறார். யோனிக் கலகக்காரிகளின் விடுதலைக்காக சர்வதேச அளவில் போராடிய மனித உரிமை மற்றும் கருத்து சுதந்திரப் போராளிகள், “ரஷ்யாவில் வரும் பிப்ரவரியில் நிகழவிருக்கும் ஒலிம்பிக் போட்டிகளுக்கு முன்பாக சர்வதேச அரங்கில் தலைகுனிவை தவிர்ப்பதற்கான கிரம்ளினின் முன்னெச்சரிக்கை நடவடிக்கை” என்று கருத்து தெரிவித்திருக்கிறார்கள்.
ஆகஸ்ட் 2012 ல் வழக்கு நடந்துக்கொண்டிருக்கும்பொதே “ப்யூடின் தன தலையில் கொள்ளி வைத்துக்கொள்கிறார்” என்ற ஆல்பத்தை வெளியிட்ட கலகக்காரிகளின் பாடல் வரிகளுள் ஒன்று ” எங்களுக்கு ஏழு வருடம் போதாது, பதினெட்டு வருடமாக சிறைவாசத்தை நீட்டிக் கொள்”.
இனி, சென்ற வருடம் வெளிவந்த என் கவிதை தொகுப்பான “அந்தரக்கன்னியில்” இடம்பெற்றிருந்த குறிப்பும், சுதந்திரக் கவிதை மொழிபெயர்ப்பும்
எதிர்ப்பெனப்படுவது சுதந்திரத்திற்கான வேட்கை – யோனி கலகக்காரிகளின் சாகசப் பயணம்
”மேரி மாதாவே! ருஷ்ய உழைக்கும் வர்க்கத்தை சுரண்டி பிழைக்கும் சர்வாதிகாரி விளாதிமிர் ப்யூடினை வெளியேற்று” மேரி மாதவே , நீ பெண்ணியவாதியாகி எங்கள் போராட்டத்திற்கு வலு கொடு”, “மேரி மாதாவே, வெறும் பிள்ளைகள் பெறும் காதல் அடிமைகள் அல்ல நாங்கள்” என்ற வரிகள் கொண்ட பாடலால் யோனி கலகக்காரிகளுக்கு மூன்று வருட தண்டனை விதிக்கப்பட்டது. சுமார் ஒரு நிமிடம் நீடித்த அந்த கொரில்லா நடனம் , மதவெறுப்பின் அடிப்படையில் நடந்த பொறுக்கித்தனம் என்று அரசாங்கத்தால் குற்றம்சாட்டப்பட்டது. ட்ராட்ஸ்கியவாதிகளாக, அராஜகவாதிகளாக, பெண்ணியவாதிகளாக, ஏகாதிபத்திய எதிர்ப்பாளர்களாக தங்களை அறிவித்துக்கொண்ட “யோனி கலகம் (pussyriots)” என பெயரிடப்பட்ட அந்த பெண்கள் குழு ஏற்படுத்திய அதிர்வு சர்வதேச கவனத்தைப் பெற்றது. பொது சொத்திற்கு எந்த இடையூறோ, பங்கமோ விளைவிக்காத இந்தப்பெண்களை ரஷ்ய அரசாங்கம் சமூக விரோதிகளாகவும், கடுங்குற்றவாளிகளாகவும் நடத்தியதும், கைது செய்ததும், தண்டித்ததும் உலகம் தழுவிய கண்டனத்துக்குள்ளானது. யோனி கலகக்காரிகளை விடுதலை செய்யக்கோரி ரஷ்யாவிலும், நாடு கடந்தும் போராட்டக்குரல்கள் எழுந்து வருகின்றன. மடோனா, ஸ்டிங், யோகோ ஓனொ போன்ற புகழ்பெற்ற இசைக்கலைஞர்கள் யோனி கலகக்காரிகளை விடுதலை செய்யக்கோரி நிகழ்ச்சிகள் நடத்திக் கொண்டிருக்கிறார்கள். ஆம்னெஸ்டி இண்டெர்னேஷனல் என்ற மனித உரிமை அமைப்பு “மனசாட்சி கைதிகள்” என அவர்களை சுவீகரித்து, பிரசாரம் செய்து வருகிறது
இரண்டாவது முறையாக அதிபராக ப்யூட்டின் தேர்ந்தடுக்கப்பட்டது ரஷ்யாவில், சுதந்திரவியலாளர்களை பெரிதும் விரக்திக்குள்ளாக்கியது. .யோனி கலகக்காரிகள் தேர்தலுக்கு முன்னரே “உங்கள் வோட்டு சீட்டுகள் அரச நிர்வாகத்திற்கு கழிப்பறை தாள்கள்” என்ற அதிரடி இசைநடன நிகழ்ச்சியை பொது இடங்களில் அரங்கேற்றினார்கள், தேர்தலுக்கு ஒரு வாரத்திற்கு முன் எச்சரிக்கை நடவடிக்கையாக அரச எதிர்ப்பாளர்களை கைது செய்ததையொட்டி, சிறைச்சாலைக்கு முன் ஒரு பட்டறையின் கூரையில் ஏறி நின்று “சிறைகளுக்கு மரணம், எதிர்ப்புக்கு சுதந்திரம்” என்று கலகக்காரிகள் பாடிய பாடல் கம்பிகளுக்குப் பின் இருந்த எல்லா சிறைக்கைதிகளையும் ஈர்த்ததாக சொல்லப்படுகிறது. சிவப்பு சதுக்கத்தில் சர்வாதிகாரத்திற்கு எதிராக மக்களை திரட்டுவதற்காக “ப்யூட்டின் தன்னை ஒன்னுக்கடித்துக்கொண்டார், ப்யூட்டின் தொடை நடுங்கினார், ப்யூட்டின் கழிந்துவிட்டார்” என்ற அரசியல் பங்க்(punk) பாடல்களை இசையமைத்து கவனம் ஈர்த்தனர். 2011 டிசம்பரில் சிவப்பு சதுக்கத்தில் கூடிய ஆயிரக்கணக்கான மக்களின் மேல் பறந்த ரோந்து விமானங்களையும், மாஸ்கோ காற்றில் கலந்த அதிகாரத்தின் நாற்றத்தையும், ஆட்சியின் அராஜகத்தையும் “யோனி கலகம்”” இசை நடன பாடல்களாக பல இடங்களில் நிகழ்த்தியது. “கன்னி மேரி, ப்யூட்டினை வெளியேற்று” என்ற மாஸ்கோ தேவாலயத்தில் நடைபெற்ற பிரார்த்தனை கலகம், ப்யூட்டினின் மறுதேர்வுக்கு ஆதரவளித்து பிரசாரம் செய்த மதகுருமார்கள் மீதும் குலபதிகள் மீதும் எரிச்சல் கொண்டு நிகழ்த்தப்பட்டது தான். பளீர் வண்ண உடைகளும், முகமூடிகளும் அணிந்து பொது இடங்களில் திடீர் திடீர் என எதிர்பாராத வகையில் தோன்றி ஒரு கொரில்லா தாக்குதல் போலவே நிகழ்த்தப்படும் இந்த இசை நடன கலகங்களை எதிர் அரசியல் நடவடிக்கையாக செய்யும் யோனி கலகப் பெண்கள் பிரதானமாக கருத்து சுதந்திரப் போராளிகளாக தங்களை அடையாளப்படுத்திக்கொள்கிறார்கள்
யோனி கலகக் காரியின் பாடல்கள்
(சுதந்திர மொழிபெயர்ப்பு)
Source : Pussy Riot – A punk Prayer for Freedom / Published by Feminist Press
பிரார்த்தனை கலகம்
கன்னி மேரி,ப்யுட்டினை வெளியேற்று
கருப்பு அங்கி, தங்க பட்டை
மிலிட்டரி கால்நக்கும்
சமயகுருமார்
விடுதலையின் பிசாசு்
சொர்க்கம் செல்லும்
சைபீரியாவிற்கு இடம்பெயரும்
ஒருபால் பெருமை நடை
இறுதியில் சிறை நிரப்பும்
கன்னி மேரி
உன் புனிதம் காக்க
நாங்கள் காதலிக்க முடியாது
நாங்கள் பிள்ளை பெறமுடியாது
புனிதம் என்பது கழிசடை
புனிதம் என்பது கழிசடை
கன்னி மேரி
நீ ஏன் பெண்ணியவாதியாக கூடாது
நீ ஏன் பெண்ணியவாதியாக கூடாது
சர்வாதிகாரிக்கு ஏன் ஆலயம் கூஜா தூக்குகிறது
கருப்பு சொகுசு கார்களுக்கு யார் பணம் தருவது
குலபதிகளே
ப்யூட்டினை தொழுவதற்கு
கடவுள் எதற்கு? ஆலயம் எதற்கு?
மாதா மண்டலம் மக்களுக்கானது
மன்னர்களுக்கானதல்ல
கன்னி மேரி இனி பெண்ணியவாதி
கன்னி மேரி இனி எங்கள் அணி.
மாஷாவின் கவிதைகள்
Source : Huffington Post
சொற்களின் ஒளி
நமக்கு பெயரென்ன பயமா?
நிழலென பின்தொடரும் பயம் நம்மை விட பாரமானது
முடிவில்லாமல் முளைக்கும் சுவர்களில் மோதி மோதி
துகளான பின் யார் நம்மை கண்டெடுப்பார்கள்
யாரடா அவன் கடவுள்
சொற்கள் ஒரு கவளம் வீசி
அவனைக் காட்டி கொடுப்போம்
துறைமுகத்திற்கு வழி சொல்வோம்
ஏதோ ஒரு கப்பலில் ஏறி தப்பித்துக்கொள்ளட்டும்.
குற்றம் பற்றிய குறிப்புகள்
1.பெண்ணென்பதால்
நானே குற்றமாக முடியாது
என் சிதைவுக்கு அடியில்
காலம் தேங்கி நிற்கிறது
பின் அது நீர்நிலையாகி, அலையாகி, கடலாகி
உங்கள் எல்லாரையும் அமிழ்த்தும்
எல்லோரும் குற்றமாக்கப்படுவீர்கள்
அறம் என்ற புதையல் நமக்கிடையே
ஒரு ஆளற்ற மிதவையில்
பால்பேதம் இருக்கும்வரை
எடுப்பாரின்றி
அல்லாடிக் கொண்டிருக்கும்
2.அதனதனை அதனதன் இடத்தில் விடாமல்
அவற்றுக்கெல்லாம் எண்ணிட்டோம்
வீடுகளை உருவாக்கினோம்
மரங்களை தொட்டிகளில் நட்டு நீரிட்டோம்
அதில் குழந்தைகளையும் தூளியிட்டோம்
பால் அடையாளமிட்டு
அவற்றுக்கும் எண் குறித்தோம்
அந்த எண்ணின் வாரிசுத்தன்மையிலிருந்து
தொடங்குகிறது குற்றத்தின் பத்திரிகைகள்
3. குற்றத்தின் கூரிய முனையை
பார்த்துக்கொண்டே இருப்பவர்களுக்கு
மலரின் வாசமோ
அது பூத்ததின் அவசமோ
ஒரு்போதும் தெரியாது
அவர்களே நட்ட செடியெனினும்
எதிர்ப்பு எங்கள் முகம்
நிரப்புவோம்
இந்த தெருக்களை. இந்த இரவுகளை. இந்த நகரங்களை. இந்த வீடுகளை. இந்த நாடுகளை
சுதந்திர மூச்சால் நிரப்புவோம்
செயல் அல்லது சாவு
எம் யோனி அடுக்குகளின் எண்ணிக்கையை
யார் எண்ணுவதென்பதை யாம் தீர்மானிப்போம்
எம் முலைகள் என்ன
தாய்மைக்கும், பாலியலுக்கும் சோதனை சாவடியா?
அறிவிக்கப்படாத போரின்முன்
நிராயுதபாணிகளாக நிற்க முடியாது
எதிர்ப்பு எமது ஆயுதம்
தண்டனையையும் எதிர்ப்போம்
ஆதிக்கத்தையும் எதிர்ப்போம்
சிறைகளுக்கு உலை வைப்போம்
சீருடைகளிலிருந்து அதன் மேலிருக்கும் பதக்கங்களிலிருந்து
லத்திகளிலிருந்து பதவிகளிலிருந்து அதிகாரத்திலிருந்து
கலாசாரத்திலிருந்து மதங்களிலிருந்து ஆண்மையிலிருந்து
பால் ஒவ்வாமையிலிருந்து வெறுப்பிலிருந்து
யாவரையும் விடுவிப்போம்
விடுதலையின் சுவை ஒப்பற்றது
ஆனால் எல்லோருக்குமானது
எங்களுக்குமானது
லீனா மணிமேகலை
புதிய கவிதைகள்
மலைகள்.காம் இணைப்பு : http://malaigal.com/?p=3670
ஒரு மாலைப்பொழுது
அன்பு என்னோடு கஞ்சா அடித்தது
பரிவாக
மிகப் பரிவாக
நெஞ்சு நிறைய
புகையை நிரப்ப சொன்னது
கரிக்கிறதா எனக் கேட்டது
ஆமாம் என்றேன்
இல்லை என்று
பொய் செல்வதில் உனக்கென்ன
பிரச்சினை என்றது
எரியும் மணத்தில் யார் மணக்கிறார்கள்
அடுத்த கேள்வி
அவனா
மௌனம்
இவனா
மௌனம்
அவளா
மௌனம்
நான்
என்றேன்
அமர்ந்த கனலை ஊதி ஊதி பெருக்கிய
கணத்தில் கண் சிமிட்டி
விசுவாசத்தை கைவிடு என்றது
என் கையை வெட்டிவிட்டது போல இருந்தது.
காயும் நிலவின் குளிர்மையில் நடுங்கி கொண்டிருந்த
விரல்களில் இன்னும் நெருப்பு பொறிந்ததைப்
பார்த்து கண்ணீர் வந்தது
தொடுதலில் தாக்குறுகிறேன், சத்தத்தை மின்னலா என்கிறேன், அசந்தர்ப்பத்தத்தை துயரம் என உழல்கிறேன், புன்முறுவலில் பெருமகிழ்ச்சியடைகிறேன், நண்பனை காதலிக்கிறேன், காதலனை கடவுளாக்குகிறேன், தோல்வியில் சாவைத் தழுவுகிறேன்
இதென்ன
துகளா, புகையா, நெருப்பா, ஆகாயமா, கண்ணீரா
தான் கஞ்சா என்றது அன்பு.
___________________________________________________________
பாவனைகள்
மதுக்கோப்பைக்கும் உதடுகளுக்கும்
இடையே விழுந்த கண்ணீர்த்துளியில்
அன்பை யாசித்து நிற்கும்
என் பிரதிமையை கண்டதாக
அவன் சத்தியம் செய்தான்.
அது என் கண்ணீரை மேலும் பெருக்கியது
நான் எதுவும் சொல்லாமலேயே
எல்லாம் விளங்குகிறது
என்ற அவனை அப்போதைக்கு பிடித்திருந்தது
அவன் கொண்டு வந்த கோப்பையால்
மதுவும் தனக்கொரு துணையை தேடிக்கொண்டது
வாழ்க்கையின் போக்கில் போய்விடுவது நல்லது என்றான்
தலை நிமிர்ந்துப் பார்த்தால் தெரியும் காட்சிகளை
மட்டுமே நம்புவது சிறந்தது என்றும் சொன்னான்
என் தலையை ஆதுரமாக தடவிக்கொடுத்ததற்காகவே
அவன் சொன்னவற்றை ஆமோதித்தேன்
உள்ளங்கை ரேகைகளின் சிக்கல்களை விடுவிப்பவன் போல
கைவிரல்கள் வருடியதும்
தொடுதலுக்கு பசித்த உடல்
தாய்ப்பறவையை தொலைத்த குஞ்சு போல கேவியது
கோப்பைகள் நிறைந்தன
அன்னியத்திற்கும் பரிச்சயத்திற்கும்
இடையே எத்தனை வண்ண விளக்குகள்
இரவின் சாலைகளில் அன்பு அம்மணமாக ஒடுகிறது
தட்டப்படுவது உங்கள் வீட்டுக்கதவாகவும் இருக்கலாம்
____________________________________________________________
Blind Date
Blind Date என்ற வார்த்தையை
கூகிள் மொழிபெயர்ப்பில் இட்டுப்பார்த்தேன்
குருட்டு தேதி என வந்தது
இக்கவிதைக்கு குருட்டு தேதி எனப் பெயரிடுகிறேன்
குருட்டு தேதி
ஒரு அநாதியான நாளில்
முற்றிலும் புதியவனைத் தேர்ந்தெடுத்தேன்.
நேற்றோ. நாளையோ இல்லாத
இன்றானவன்.
அறிதல் இல்லாத அவன் தொடுதலில்
கேள்விகளும் இல்லை
பெயர், ஊர், வயது, முகவரி, படிப்பு, வேலை, சாதி,தந்தை பெயர்
பரிமாறிக்கொண்ட முத்தங்களில்
தகவல்கள் பொதிந்திருக்கவில்லை
கொள்தலின் கைவிடுதலின்
பதற்றங்கள் இல்லாத கலவி
அவனை வெறும் ஆணாக்கி
என்னை வெறும் பெண்ணாக்கி
இருவரையும் நனைக்கும்
மழையாய் பொழிந்தது
இறுதி மேகத்தை கலைக்க
வார்த்தைகள் அங்கிருக்கவில்லை
________________________________________________________________
லீனா மணிமேகலை
லீனா மணிமேகலையின் எட்டாவது அகத்திணைக் கவிதைகள்
விமர்சனம்: கவிஞர் மனோ. மோகன்
நன்றி: புதுவிசை
முன்கதைச் சுருக்கம்
அதுவொரு காலம். ஆதித்தாயின் அரவணைப்பிலிருந்தது உலகம். அவள் உலகத்தை ஆள்பவளாக இருந்தாள். அவளே உலகமாகவும் இருந்தாள். அப்போதுதான் அது நிகழ்ந்தது.
தன் கண்ணுக்கு முன்னே பிரம்மாண்டமாய்த் தெரிந்த ஒவ்வொன்றின்மீதும் பிரமிப்பு கொண்டிருந்தான் மனிதன். மனிதன் என்பது ஆண் தன்னிலை மட்டும்தான். இங்கே பெண் இல்லை. ஏனென்றால் பெண் அவனுக்கு வெளியே தனியே நின்றாள். அவளின்மீதும் பிரமிப்பு கொண்டிருந்தான் அவன்.
மனிதன் மண்ணையும் நீரையும் கையகப்படுத்த நினைத்தபோதுதான் பெண்ணையும் கையகப்ப்படுத்த நினைத்தான். (இதனை வரிசை மாற்றியும் வாசித்துக் கொள்ளலாம்). ஒரு பெண்ணைத் தனது உடல் பலத்தால் அடக்கியாள்வது எக்காலத்திலும் இயலாத ஒன்று என்பதை அறிந்த கணத்தில் உளவியல் போர்களை நிகழ்த்தினான். அதில் வேடிக்கை என்னவென்றால் அவனெதிரே போர்க்களத்தில் நின்றவளுக்கு அது போர் என்றே தெரிந்திருக்கவில்லை என்பதுதான்.
அவன் பெண்ணைப் போலவே தனக்குப் பிரமிப்புண்டாக்கிய ஒவ்வொன்றுக்கும் பெண்ணின் பெயரை வைத்தான்; பெண்ணுக்குத் தன் இடப் பக்கத்தில் இடம் தந்ததாக அறிவித்தான். (தனது தலையில் இன்னொரு பெண்ணுக்கு இடம் தந்ததாகப் புரளியைப் பரப்பி, பெண்ணின் இருப்புக்குத் தான் கொடுத்த அங்கீகாரத்தையே பகடி செய்து அவன் ரகசியமாய்ச் சிரித்தது வேறு கதை.)
இத்தகைய புனைவுகளின்மூலம் ஒரு நெருப்புப் பிழம்பைக் குளிர்வித்து தன் குளிர்ச்சாதனப் பெட்டிக்குள் வைத்து அதன் வெப்பநிலை மாறாமல் பார்த்துக் கொண்டான் அவன். அதன்பிறகு அவனே உலகத்தை ஆள்பவனாக இருந்தான். அவனே உலகமாகவும் மாறிப்போனான்.
பின்னணி : 1
தமிழில் பெண் தன்னிலையின் உடல் வேட்கை குறித்த பதிவில் முதலில் குறிப்பிடப்பட வேண்டியவள் ஆதி அவ்வை. கவிதைத் தலைவி பொதுவெளியில் பேசுவது மறுக்கப்பட்ட சூழலில் தனது காமத்தையே கவிதைத் தலைவியின் காமமென மொழிந்து பெருவெடிப்பை ஏற்படுத்தியவள் அவள். அதன்பிறகு இத்தைகைய பெருவெடிப்பைக் காண நீண்ட காலம் பயணித்து ஆண்டாளை வந்தடைய வேண்டியிருக்கிறது. இவர்கள் இருவரிடமும் இருக்கும் ஒரு பிரச்சினை தலைவனின் காதல் என்னும் பெயரால் மீண்டும் கலாச்சார ஆதிக்கவாதிகளின் பொதுச் சட்டகத்திற்குள் நின்று ஆண் மையத்திற்குள் அடைபட நேர்ந்ததுதான். என்றபோதும் கால வெளி சூழல்களைப் பொருத்திப் பார்க்கையில் அதுவே இன்றைக்கிருக்கிற எந்தக் கலகத்திற்கும் குறையாத ஒரு கலகமாக அக்காலத்தில் இருந்திருக்கும் என்பது என் உறுதி.
அவ்வைக்கும் ஆண்டாளுக்கும் இடையில் ஏறத்தாழ பத்து நூற்றாண்டுகள் இருக்குமா? அப்படி இருக்குமானால் ஆண்டாளுக்கும் நவீன பெண் கவிகளுக்கும் இடையில் இன்னொரு பத்து நூற்றாண்டு இருக்கும்.
வாசகக் குறிப்பு : 1
தமிழ் நவீன பிரதிகளில் Bisexual என்றழைக்கப்படுகிற இருபால் காதல் குறித்தும் கே (Gay), லெஸ்பியன் (Lesbian) என்று அழைக்கப்படுகிற ஒருபால் காதல்கள் குறித்தும் நான் முதலில் வாசிக்க நேர்ந்தது ரமேஷ் : பிரேமின் கிரணம் எழுத்துக்களில்தான். அதன் பிறகு அவர்களின் ‘அங்குமிங்கும் கதைகள் இங்குமங்கும் உடல்கள்’, ‘மனவெளி நாடகம்’, ‘இருவர்’, ‘கூத்தாண்டவர்’ முதலான புனைவுகளிலும் ‘சொல் என்றொரு சொல்’லிலும் இதனை வாசிக்க நேர்ந்தது. மாலதி மைத்ரியின் ‘மழை போகும் பாதை’ முதலான கவிதைகளை லெஸ்பியன் கவிதைகளாகவே வாசிக்க இயலுமென்றாலும் அவை வாசகரின் தேர்வைப் பொறுத்தது. இத்தகைய பதிவுகளுக்குப் பிறகு முதன்முதலாகத் தமிழில் ஒரு லெஸ்பியன் கவிதைத் தொகுப்பு என்னும் தன்னடையாளத்துடன் வெளிவந்திருக்கிறது அந்தரக் கன்னி.
அந்தரக் கன்னியின் குரல் : 1
ஈர சொப்பனங்கள்
என் விரல்களிலிருந்து
அவளுடையது
வேறொன்றாகத்தான் இருக்கின்றன
அவை வருடும்போதெல்லாம்
மூச்சுக் குழல்கள்
மர்மமாய் இரைகின்றன
எண்கள் குழறுகின்றன
நடுங்கி இறுகும் தசைகளில்
தேங்கிவிடும் குருதி
சிவப்பை இழக்கிறது
இசை பெறும் உடல்
கசிந்து பெருகுகிறது
ஆதிக் கிணறாய் என்னை மாற்றிவிடும்
உயிர்க்குமிழி கோல்களுக்கு
வெறும் விரல்கள் என
யாரடி பெயர் வைத்தது
பக்கம் : 35
பின்னணி : 2
நிறுவனமயப்படும் ஒவ்வொன்றும் அதிகாரம் பொருந்தியதாகத் தன்னை வடிவமைத்துக் கொள்வதன்மூலம் தன்னிலை (Self) மற்றமை (Other) என்னும் இருமை எதிர்வை ஏற்படுத்தி அதைக் காலத்திற்கும் பாதுகாக்கும் விருப்பத்தைக் கொண்டதாக இயங்குகிறது. (அதிகாரம் கையகப் படுகிற ஒவ்வொன்றும் நிறுவனமாகிறது என வரிசை மாற்றியும் இதனை வாசிக்கலாம்). இதன்மூலம் அதுவொரு படிநிலை அமைப்பைக் கட்டமைக்கிறது. படிநிலை அமைப்பென்பது இரண்டுக்கு மேற்பட்ட மற்றமைகளைக் கொண்டதாகக் கூட அமையுமென்றாலும் ஒவ்வொரு மற்றமையுடனான தனது உறவையும் இருமை எதிர்வாகப் பாதுகாக்கவே அதிகாரத் தன்னிலை விரும்புகிறது. அதன்மூலம் தன்னிலைகள் பேசுகின்றவையாகவும் மற்றமைகள் கேட்கின்றவையாகவும் இயங்கும் நிலையை அடைகின்றன. இன்னும் உன்னிப்பாகக் கவனித்தால் தன்னிலைக்கும் மற்றமைக்குமான உறவில் மற்றமை கேட்பதற்கான உரிமையே கூட மறுக்கப்பட்டிருக்கிற பாங்கினையும் உணர முடியும். ஒவ்வொரு விடுதலைப் போராட்டமும் இத்தகைய படிநிலை அமைப்பைக் குலைத்து மற்றமையாக இருக்கும் ஒன்று தன்னிலையாக மாற எத்தனிக்கும் வேட்கையின் வெளிப்பாடாகவே இருந்துவருகிறது.
வாசகக் குறிப்பு : 2
அந்தரக்கன்னி மற்ற கவிகளின் கவிதைகளிடமிருந்து தன்னை வேறுபடுத்திக் கொள்வது போலவே லீனா மணிமேகலையின் மற்ற தொகுப்புகளிலிருந்தே கூடத் தன்னை வேறுபடுத்திக் கொள்கிறது. இதற்கு முன்வந்த பரத்தையருள் ராணி தொகுப்பு ஆண் தன்னிலையின் வன்முறைகளுக்கெதிரான உக்கிரமான குரலாகப் பதிவு செய்யப்பட்டிருந்தது. அதுவொரு போராளி களத்தில் நின்று உரக்கச் சத்தமிட்டுக் கொண்டு வாள் சுழற்றுவது போன்ற உணர்வை ஏற்படுத்தும் தொகுப்பு. ஆனால் அந்தரக் கன்னி உக்கிரம் கூடிய அதே போராளி வீட்டுக்கு வந்து தன் காதல் இணையோடு கலந்திருக்கும் தருணத்தைப் பதிவு செய்கிறது. இதில் குறிப்பிட வேண்டியது காதல் இணையில் எதுவும் களிறில்லை; இரண்டும் பிணைகள்தான்.
காதலின் இதம் கூடிய கவிதைகளாகத் தன்னை வெளிக்காட்டிக் கொள்ளும் அதே சமயம் இந்தக் கவிதைகள் போர் நிறுத்தத்திற்கான கவிதைகளாக இல்லை. இது வேறு மாதிரியான தாக்குதல். எதிராளிக்குப் பதிலடி கொடுப்பதை விடவும் பொருட்படுத்தாமல் போவது அதைவிடவும் உக்கிரமானது. ஒரு நபர் தன்னைத் தன்னிலையாக உணரும் கணத்தில் எதிரிலுள்ளவரை மற்றமையாக உணர்வது இயல்பு. அந்தரக்கன்னி தன்னிலையாகவும் மற்றமையாகவும் தன்னையே உணர்வதன்மூலம் (அதாவது கவிதைக்குள் பெண்ணையே தன்னிலையாகவும் மற்றமையாகவும் உணர்வதன்மூலம்) தனது மொழி வெளிக்குள் ஆண் இருப்பை அழித்துவிட்டு உரையாடலைத் தொடர்கிறது. ஆண் தன்னிலையாக இருக்கும்போது பெண் மற்றமையாக இருப்பாள். பெண் தன்னிலையாக இருக்கும்போது ஆண் மற்றமையாக இருப்பான். அந்தரக்கன்னியின் முழுச் சுற்றும் முடியும் கணத்தில் ஆண் தன்னிலையாகவும் இல்லை மற்றமையாகவும் இல்லை.
அந்தரக் கன்னியின் குரல் : 2
மின்னும் நாக்கு
உப்பும் பனியும் மின்னும் நாக்கால்
ஸாப்போவின்* கவிதையொன்றை
உயிருந்தப் பாதையில் பாய்ச்சி
என்னிலிருந்து
சூறையாற்றைப் பிரித்தெடுக்கும் உனக்கு
முப்பத்து மூன்று சிவந்த இதயங்களைப் பரிசாகத் தருகிறேன்
என் ஆலிவ் இலை விரல் அழுத்தங்களில்
தோல் வெள்ளியாய் காய்கிறது
உதிரும் மயிரையெல்லாம் வேட்கையில்
மிச்சமில்லாமல் தின்கிறேன்
மன்மதனைப் பலியிட்ட நாளில்
பறை முழங்குகிறது
நீயும் ரதி நானும் ரதி
* ஸாப்போ – வரலாற்றுக்கு முந்தைய காலத்தில் வாழ்ந்த கிரேக்க லெஸ்பியன் கவிஞர்
பக்கம் : 38
பின்னணி : 3
யதார்த்தம் என்பதே புனைவுகளால் கட்டமைக்கப்பட்டதாகத்தான் இருக்கிறது. கலாச்சாரம் முதலாக யதார்த்தத்தை இயக்கும் அரூபக் காரணிகள் யாவும் தனக்கு உரிமையான யதார்த்தத்தையே கட்டமைத்துக் கொள்வதன்மூலம் ஒவ்வொரு தனிமனிதனையும் தனது கண்காணிப்புக்குள் கொண்டுவருவதைச் சாத்தியமாக்கிக் கொள்கின்றன. தமிழ்ச் செவ்வியல் இலக்கியங்கள் யாவும் இத்தகைய அரசியலின் உப பிரதிகளாகத்தான் இயங்குகின்றன.
வரலாறு என நம்பப்படும் புனைவுகளும்கூட இறந்தகாலம் குறித்ததாக இல்லாமல் அதிகார நிறுவனத்தின் எதிர்காலத் திட்டங்கள் குறித்த வேட்கையிலிருந்து கிளைப்பவையாகவே இருக்கின்றன. இதன்மூலம் இயல்பான பன்மைத் தன்மைக்கெதிராக அதிகாரத் தன்னிலைகள் ஒற்றைத் தன்மை கொண்ட இலக்கு சமூகத்தைக் கட்டமைக்கின்றன. இதன்மூலம் ஒருவித ஃபாசிச இயங்குதன்மை கொண்டவையாக அவை உருமாறுகின்றன. சங்கப் பிரதிகள் உயர்குடிக்கான காமம் என நம்பப்பட்டவற்றை மட்டுமே பேசியதற்கான காரணமாகவும் இதுதான் இருக்கிறது.
அக்காலத்திலும்கூட இத்தகைய போக்குக்கெதிரான கலகக்குரல்கள் பேசப்பட்டே வந்துள்ளன என்றபோதும் அவை தொகுக்கப்பட்ட காலத்திலும் இலக்கணம் வகுக்கப்பட்ட காலத்திலும் வெளியேற்றப்பட்டிருக்கின்றன. இத்தகைய அரசியல் சூழ்ச்சியை வெற்றி கொண்டு காலத்தில் பயணித்த சிற்சில கலகப் பிரதிகளும் மைய நீரோட்டத்தின் நிறத்திலேயே இயங்குவதாகப் பாவனை செய்ததின்மூலமே தமது இடத்தைத் தக்கவைத்துக் கொண்டிருக்கின்றன. பாரி மகளிரின் ’அற்றைத் திங்கள்’ பாடல் மேல் பூச்சில் கழிவிரக்கப் பாடலாகவும் உள்பொருளில் இனப் படுகொலைக்கெதிரான குரலாகவும் பதிவு செய்யப்பட்டிருப்பதை இங்கு நினைவில் கொள்ளலாம். பின் நவீன காலத்திற்குள் வாழ நிர்ப்பந்திக்கப்பட்ட நாம் இத்தகைய பிரதிகளின் வாசிக்கப்பட்ட தொனிகளைக் கலைத்துவிட்டு வேறு பல தொனிகளிலும் வாசித்துப் பார்க்கவேண்டிய கட்டாயத்தில் இருக்கிறோம்.
வாசகக் குறிப்பு : 3
அந்தரக்கன்னி கவிதைகள் யதார்த்தம் என்னும் கலாச்சார ஒழுங்கு அடிப்படையிலான புனைவுகள் பெண் தன்னிலைக்கெதிராக நிகழ்த்தும் தாக்குதல்கள், வரலாற்றுப் புனைவுகளின் மூலம் பெண் தன்னிலை ஆட்கொள்ளப்படுதல் ஆகியவற்றிலிருந்து தனது கலகத்திற்கான தர்க்கக் காரணிகளைக் கைக்கொள்கின்றன. ‘தேவிடியா’ என்று தலைப்பிடப்பட்ட ஒரு கவிதை. தொகுப்பின் முதல் கவிதை அதுதான். ஒரு பழிச்சொல் தனது அர்த்த மதிப்பிற்கும் பயன் மதிப்பிற்கும் இடையில் இயங்கி பெண்ணின் இயக்கத்தை முடக்குவதைப் பதிவுசெய்கிறது அக்கவிதை. இன்னொரு கவிதை பெண் வழிபாட்டில் பின்னால் இயங்கும் வரலாற்றரசியலின் முரண் நகையைப் பதிவு செய்கிறது. கலாச்சார ஒழுங்குகளும் வரலாற்று ஒழுங்குகளும் மற்றமைகளைக் கழுவேற்றியபின் கழுவில் வழிந்த குருதிக் குழம்பென உறைந்திருக்கின்றன இக்கவிதைகள்.
அந்தரக் கன்னியின் குரல் : 3
மந்திரம்
அவள்
தனக்கு இன்னொரு யோனி வேண்டுமென்றாள்
ஊர்
அவளைக் காரி உமிழ்ந்தது
அவள் ஏற்கனவே நனைந்திருந்தாள்
வசை ஒவ்வொன்றும்
அவள் முலைகளில் தெறித்து நொறுங்குகிறது
கல்லால் அடிபட
கைது செய்யப்பட
சித்திரவதைக்குட்பட
சிதைக்கப்பட
சிலுவையில் அறையப்பட
நாடு கடத்தப்பட
கொல்லப்பட
உத்தரவுகளுக்கு வாய்ப்பு வழங்குபவள் போலவே
நித்தியமாய் சொல்லியபடியிருந்தாள்
தனக்கு இன்னொரு யோனி வேண்டுமென
அவள் நிர்வானமாயிருந்ததால்
காதலை அவளிடமிருந்து
வெளியேற்றிவிட முடியவில்லை
இறுதியில் அவளுக்கு
எட்டாவது கன்னி எனப் பெயரிட்ட
ஊர்
கழுவேற்றி முக்குகளில்
காவல் தெய்வமென வைத்து வழிபட தயாராகிறது
யோனியச்சில் செய்யப்பட்ட விளக்குகளின்
நெய்த்திரிகள்
தினமும் ஏற்றப்பட
அவளின் நாவு எரிக்கப்படுகிறது
பக்கம் : 11
வாசகக் குறிப்பு : 4
ஒரு கிராமத்துப் பெண்ணின் மனப்பதிவில் விளையாட்டுக்களும் பாடல்களுமெனப் பதிந்திருக்கும் வாய்மொழிப் பிரதிகளிலிருந்து தனது தொனியைக் கண்டடைகிறது அந்தரக்கன்னி. அதனால் இத்தொகுப்பின் வரிகள் சுருங்கி இறுகுவனவாக இல்லாமல் தளர்ந்து இளகிய நிலையில் இயங்குகின்றன. இது லீனா மணிமேகலையின் முந்தைய தொகுப்புகளில் இல்லாதது.
எழுத்துப் பிரதிகள் தொடர்ந்து கண்காணிப்பிற்குட்படுபவை. வாய்மொழிப் பிரதிகளோ கண்காணிப்பு வளையத்திற்குள் சிக்காமல் தமது மனவெளியை சுயத்தின் அழகியலை அடையாளத்தின் அரசியலை வெகு இயல்பாக நிகழ்த்திக் காட்டிவிடுகின்றன. வார்த்தைகளின் இடைவெளியில் இத்தகைய வாய்மொழிப் பிரதிகளின் தொனியைக் கைக்கொள்ளும் அந்தரக்கன்னி வார்த்தைகளுக்குள் வன மகள் ஒருத்தியின் நினைவிலிருக்கும் பூக்களையும் மரங்களையும் நினைவுகொள்கிறது. ஒரு பெண் தன்னிலையின் உடல்சார் பால்சார் அரசியல் என்னும் தளத்திலிருந்து தனது அரசியல் தள விரிவை இவ்விடத்தில் சாத்தியமாக்கிக் கொள்கிறது அந்தரக்கன்னி.
உப குறிப்புகள் :
Ø சங்கப் பிரதிகளில் இருவேறு பெண் தன்னிலைகள் தங்களை ஒரே உடலாக உணர்கிற கணங்களைத் தலைவி தோழி உறவிலும் தலைவி பரத்தை உறவிலும் காண முடியும். கல்யாணம் மறுக்கப்பட்ட தோழி தலைவியின் இடத்திருந்து தலைவனை எம் தலைவன் என உரிமை கொள்ளும் கணங்களிலும், குழந்தை பெற்றுக் கொள்ள உரிமையில்லாத பரத்தை தலைவியின் இடத்திருந்து அவளது புதல்வனை எம் புதல்வன் என உரிமை கொள்ளும் கணங்களிலும் இவற்றை உணரலாம். ஆனாலும் அவை தலைவனுக்கான பணிவிடை கருதியவை என்ற நிலையிலும் இரண்டு பெண்களுக்கிடையிலான உறவில் தலைவனைத் தவிர்த்த சுயத் தன்னிலைகளாகத் தங்களை உணரும் தருணங்கள் அவர்களுக்கு மறுக்கப்பட்டிருந்தன என்னும் நிலையிலும் இருவேறு பெண் தன்னிலைகள் ஒரே உடலாகத் தம்மை உணரும் நிலை இந்தத் தொகுப்பு குறித்த உரையாடலில் ஏதேனும் உதவி செய்யுமா?.
Ø யோனிக் கலகக்காரிகளின் கவிதைகளையும் ஜூன் ஜோர்டனின் கவிதைகளையும் இத்தொகுப்புக்குள் கொண்டுவந்ததை பல்வேறு பெண் தன்னிலைகளோடும் ஒரே உடலாகத் தன்னை உணரும் நிலையின் உச்சமெனக் கொள்ளலாமா?
Ø ஸாப்போவோடும் யோனிக் கலகக் காரிகளோடும் தன்னை ஒத்துணரும் இத்தொகுப்பின் தன்னிலை QUEER கோட்பாட்டுச் சிந்தனையாளர்களோடும் தன்னைப் பொருத்திக் கொள்ளும் திறப்புகளை உடையவளதானோ!
Ø தனது தெய்வம், தாய், விளையாடும் மரப்பாச்சி, சந்திக்கும் ஆட்டிடைச்சி என ஒவ்வொரு பெண்ணின் மீதும் காமம் கொள்ளும் அடங்காத வேட்கை கொண்ட கவிதைத் தலைவி முன்பு அவள்களோடும் இருந்தாள்; அதே சமயம் அவனோடும் இருந்தாள். வாசிக்கும் கணத்தில் அவன் பழைய ஞாபகமாக மட்டுமே எஞ்சுகிறான் அல்லது கவனத்திலேயே அவன் இல்லை. ஆனாலும் முன்பு இருந்தான் என்ற நிலையில் இது லெஸ்பியன் தன்னிலையின் தொகுப்பா அல்லது பைசெக்ஷுவல் தன்னிலையின் தொகுப்பா?
Ø கவிதைக்குள் பட்டியல் அடுக்குவதை லீனா மணிமேகலையின் கவிதைகளில் அதிகமாகவே வாசித்து வந்திருக்கிறேன். அவற்றுள் சில இயங்கு தன்மை கொண்டு என்னைத் தொந்தரவு செய்ததுண்டு. சில தட்டையாகவே என்னைக் கடந்துபோனதுமுண்டு. இத்தொகுப்பில் முத்தத்தின் தருணங்களை அடுக்கும் ‘மச்சக்கன்னி’ கவிதை என்னைத் தொந்தரவு செய்கிறது. கவிதைக்குள் தொந்தரவு என்பதே கொண்டாட்டத்திற்கானதாகவும் இருக்கிறது. இன்னொரு பக்கம் ‘அநிச்சம்’ கவிதை பொருட்கள் தருணங்கள் நிறங்கள் என மாறி மாறிப் பயணிக்கும்போதுகூட எனது வாசிப்பைத் தட்டையாகவே கடந்துபோகிறது.
Ø அந்தரக்கன்னியின் திரவ மொழியைக் கொண்டாடுவதானால் அது லீனா மணிமேகலையின் மற்ற தொகுப்புகளின் கவிதைகளை நான் உவப்பில்லாதவையாகக் கருதுவதாகுமா? ஒருவேளை முந்தைய கவிமொழியின் உறைபனி நிலை எனக்கு உவப்பில்லை என்பதிலிருந்தும்கூட இந்தத் திரவத் தன்மையை நான் கொண்டாடலாம்.
Ø முன்பொரு கணத்தில் லிங்கத்தைக் கோணக் குச்சியாக்கி உறுமி கொட்டிக் கொள்ளும் கவித் தன்னிலை பின்பு தன் தோழியொருத்தியின் விரலை உயிர்க்குமிழி கோலாக உணர்வது லெஸ்பியன் புணர்ச்சியின் வெளிப்பாடுதானா? அல்லது அந்தத் தோழியின் விரல் லிங்கத்தின் பதிலீட்டு உறுப்பாகத்தான் செயல்படுகிறதா?
Ø இறந்துபோன தன் லெஸ்பியன் தோழியுடன் காதலின் பைத்தியத் தன்மையோடு உடலுறவு கொள்ளும் பெண் தன்னிலையின் கவிதையான ‘அதுவொரு காதல் காலம்’ கவிதையும் இடிபஸ், எலெக்ட்ரா செயல்நிலைகளுக்கு வெளியே பெண்ணொருத்தியின் தாயின் மீதான காமத்தை வெளிப்படுத்தும் ‘அம்மா’ கவிதையும் தொகுப்பின் உரையாடலை வேறு பரிமாணங்களுக்குக் கொண்டு செல்லும் கவிதைகள் என்பது என் துணிபு.
அந்தரக்கன்னியின் குரல் : 4
அதுவொரு காதல் காலம்
அவள் இறந்துதான் போனாள்
இரவு முழுக்க
அணைத்தே இருந்தேன்
ஒரு பொம்மையைப்போல
உயிர்ப்பிழந்த
அவளின்
இமைகளை நாசியை கன்னங்களை
முலைகளை தொடைகளை பாதங்களை
அவளைப்போலவே சுவைத்தேன்
பெருகும் கண்ணீரில் அவள் பிம்பம் தொலைகிறது
கலையும் வண்ணங்கள் அவள் சுண்ணத்தைப் போல
பாலாய் வெளியேறுகின்றன
உள்ளங்கைகளின் ரேகைகள்
துடித்துவிடாதா என வன்மம் கூடி
வெறித்தபடி இருந்தது
நாங்கள் சுகித்திருந்த காலம்
பக்கம் : 37
திணை வரையறுத்தல்
தொல்காப்பியம் ‘கைக்கிளை முதலாப் பெருந்திணை இறுவாய்’ என்கிறது. ஆனால் சங்க இலக்கியத்தில் நடுவண் ஐந்திணைகள் மட்டுமே பேசப்படுகின்றன. கைக்கிளையும் பெருந்திணையும் சில கலித்தொகைப் பாடல்களின்மூலம் அடையாளம் காணப்பட்டாலும் அவையொன்றும் பெரிய அளவில் மாற்று உரையாடல்களை நிகழ்த்திய பாடல்களாக இல்லை. கைக்கிளையும் பெருந்திணையுமேகூட ஆண் பெண் உறவு என்னும் அங்கீகரிக்கப்பட்ட சட்டகத்திற்குள் இயங்குபவையாகத்தான் இருந்தன. வயது வித்தியாசங்கள், இணையைத் தேர்வு செய்தலில் பொதுவெளியிலிருந்து விலகுதல் என்னும் நிலையில் தான் இவை நடுவண் ஐந்திணைகளிலிருந்து வேறுபட்டியங்கின. மற்றபடி காமத்தின் வேறு பால் நிலை சாத்தியப்பாடுகளெதுவும் தமிழின் செவ்வியல் பிரதிகளில் இல்லை.
தொல்காப்பியம் பெருந்திணைக்குக் குறிப்பிடும் நான்கு பண்புகளில் ‘தேறுதல் ஒழிந்த காமத்து மிகுதிறன்’ என்பதை மட்டும் உரை பிரதிகளை மறுதலித்துவிட்டு வாசித்தால் அவை அங்கீகரிக்கப்பட்ட Heterosexual தன்மையைக் கடந்து வேறு பல காதல் வகை மாதிரிகளைப் பேசுவதற்கான திறப்பு கொண்டிருப்பதை உணர முடியும். அதாவது உயர்குடிகளுக்கான காதலொழிந்த எல்லாக் காதலும் (கே, லெஸ்பியன் உட்பட) இதில் அடங்கும் எனவும் பொருள் கொள்ள முடியும். எது எப்படி இருந்தபோதும் கே, லெஸ்பியன் முதலான காதல்களை அவற்றின் தனித்தன்மையோடும் தீவிரத்தன்மையோடும் புரிந்துகொண்டு அவற்றுடனான உரையாடலை நீட்டித்துக்கொள்ள, பேசப்பட்ட திணை வெளிக்கு அப்பால் அவற்றின் திணையைக் கட்டமைப்பது அவசியமாகிறது. அந்தரக் கன்னியின் கவிதைகள் ஏழு திணைகளுக்கு வெளியே தனது இருப்பை உறுதி செய்யும் கவிதைகள்; அவை எட்டாவது அகத்திணைக் கவிதைகள். அவற்றின் திணையை இனியும் பூக்களின் பெயரால் அழைப்பது சரியல்ல. வேண்டுமானால் யோனியின் பெயரால் அழைக்கலாம்; அதுவும்கூட அந்தத் திணை மாந்தரின் ஒப்புதல் இருந்தால்தான்.
தீர்ப்பு நாட்கள்
இறுதியில்
தீர்ப்புகளால் திருகியிருந்த
என் உடலின்
பாகங்களை
சரிசெய்ய
ஒரு கனவு தேவைப்பட்டிருக்கிறது
நரைத்த அந்த தாடியைக்கோதி
முத்தமிட்டுக்கொண்டிருந்த வேளையில்
ஜான் ஆப்ரகாமிடம் கேட்டேன்
உங்கள் ஒடஸ்ஸா உண்டியலை எனக்குத் தரமுடியுமா?
உடல் நொறுங்கத் தழுவிய அவர்
இழிசாவை அது தடுக்காது, வேண்டாம் என்றார்
இல்லை, நான் ஏற்கெனவே கொல்லப்பட்டவள் என்றேன்
ஒடஸ்ஸா உண்டியல்
நாணயங்களுக்குப் பதில் உயிர்களையே கேட்கிறதென்றார்.
அப்புவை அழைத்துக் கொண்டு ரேயைத் தேடிப்பிடித்தேன்.
அவர் அப்போதும், கன்னத்தில் கைவைத்து சிந்தித்தபடியிருந்தார்
வெகுநேரம் கடந்தே அவர் புருவம் சற்று நெறித்தார்
அவர் பார்வை திருப்பிய நொடியில் கேட்டேன்
ஏன் நீங்கள்
விளம்பரப்படங்களுக்கு கோட்டோவியங்கள்
வரைந்தீர்கள்
என் தலையைக் கோதிய அவர்
அவை இந்த சமூகத்தின் மேல் நான்
வைத்த விமர்சனங்கள் என்றார்
ஒரு கிராமத்தின் மாட்டுக்கொட்டகையில்
மேக தாக தாராவை திரையிட்டுக்கொண்டிருந்த
ரித்விக் கட்டக்கோடு படம் பார்த்துக் கொண்டிருந்தேன்
உங்களைப்போல படமெடுக்க தூய முதலீடு
சாத்தியமா என்றேன்
ஒவ்வொரு நாணயமும் உன்னுடையதே
ஆனால் உன்னிடம் இல்லை என்றார்
அவர் மேலெறியப்பட்ட கற்களைக் கேட்டு பெற்றேன்
அதில் பெயர்கள் அழிந்திருந்தன
அதனாலேயே படப்பெட்டிகள் கண்ணாடி கூடுகளில்
செய்யப்படுவதில்லை எனவும் சொல்லி சிரித்தார்
குலுக்கிய அவர் கைகளிலிருந்து ரேகைகளைத் திருடிக்கொண்டேன்
அதற்குள்
காப்பகத்திலிருந்து திருடிய கேமிரா
தனக்கு இனி தேவையில்லை
என்று ஹெர்சாக் திருப்பியனுப்பியிருந்த தபாலோடு
திரைப்பட மாணவனொருவன்
என்னை எழுப்பியிருந்தான்
அந்த கேமிராவை எந்த தராசில் வைத்தாலும்
எடைமுள் ஒடிந்தது
லீனா மணிமேகலை
*ஒடெஸா திரைப்பட இயக்கம், இயக்குனர் ஜான் ஆப்ரஹாமால் தொடங்கப்பட்டது. மக்களிடம் உண்டியல் குலுக்கி, அக்ரஹாரத்தில் கழுதை போன்ற திரைப்படங்களைத் தயாரித்து இயக்கினார் ஜான் ஆபரகாம்.
*இன்றைய நவீன உலக சினிமாவைக் கோலோச்சும் வெர்னர் ஹெர்சாக், படமெடுக்க நிதியில்லாமல், திரைப்படக் கல்லூரி காப்பகத்திலிருந்து 35 எம். எம் கேமிராவை திருடிக் கொண்டு போனது வரலாறு.
*ரே என்ற சத்யஜித ரே இந்தியக் கலைசினிமாவின் தந்தை
*ரித்விக கட்டக் இந்திய மாற்று சினிமாவின் ஆன்மா.
புது எழுத்தில் வெளியான கவிதைகள்.
அந்தரக் கன்னி
1
அவள்
அந்தரக்கன்னி
வேரிலும் பழுப்பாள்
இலையிலும் பழுப்பாள்
காயிலும் பழுப்பாள்
கொம்பிலும் பழுப்பாள்
வேடராக வரும்போதெல்லாம்
தேனாக விளைய மாட்டாள்
அவள்
கண்ணைக் குத்தி மீன் பிடிப்பது கடினம்
அவள்
குலவையிடும்போது மட்டும் தான் மழையறுக்க முடியும்
கையேந்தி நிற்கும் நட்சத்திரங்களுக்காக
மலையேற மறுக்கும்
அவள்
துத்திப்பூ சூடி வந்தால்
கொங்கைகளை பெருக்குவாள்
தாயார் விளக்கில் மிளகு திரி போட்டு வைத்தால்
முப்போகம் ப்யிரளப்பாள்
லிங்கம்
அவளின்
பதினோராவது விரல்
நாவற்ற அதன் வாய்க்கும்
வெற்றிலை பூசுவாள்
வேண்டும் போது
கோணக் குச்சியாக்கி
உறுமி கொட்டிக் கொள்வாள்
2.
அவள் குத்தியிருக்கும் பச்சையில்
கிளிகள் உறங்குகின்றன
வரகு அவிக்கும்போதெல்லாம்
அவற்றை எழுப்பி
ஊன் தருவாள்
அவை பறக்கும் திசைகள் தோறும்
முளை பாவ நார் கிளம்பும்
அம்மனுக்கு கால் முளைக்கும்.
அவள்
தலையில்
பூ மணக்க மணக்க
ஊரேகும் காவடி
3.
தாச்சியும் அவள் தான்
காவலாளியும் அவள் தான்
வெள்ளிமலையில் தீயெரிய
முட்ட முட்ட கடலை தின்பாள்
காலாட்டுமணி கையாட்டுமணி
அத்தலு புத்தலு
மக்கா சுக்கான்
பாலு பரங்கி
நட்டம் சுட்டம்
சீ ……சல்….. லே…… டு
லீனா மணிமேகலை
நன்றி தோழர் மனோன்மணி