பரத்தையருள் ராணி
http://www.vallinam.com.my/issue21/poem2.html
நஞ்சாய் காய்ந்திருந்த நிலா நாளொன்று
தீண்டலற்ற கொதிப்பில்
உடலின் குறுக்கு சால் ஓடையொன்று உடைந்து
கைகளில் குருதியின் சகதி
ஏன் என்று கேட்டான் அவன்
ஏறிட்டு பார்த்த என் கண்களை
ஏற்கெனவே தெரியும் என்றான்
உறைய மறுத்த குருதியோடு போராடியபின்
உனக்கு என்ன வேண்டும் என்று கேட்டான்
சாரையை சுரக்க வைக்க வேண்டும் என்றேன்
வேர்களற்ற அவன் கால்களை என் கழுத்தில் சுற்றினேன்
வேட்கையின் நொதியை
பருகிய நொடிகளில்
வேறென்ன வேண்டும் என்றான்
பெண்களை வெறுப்பவனா நீ
அப்படி சொல்லிவிட முடியாது
ஆனால் யோனி மயிர்
கிருமிகள் வெள்ளைப் பொய்கள்
குற்றங்கள் தண்டிக்கப் பட வேண்டியவை
சரிதான்
என்ன விலை வேண்டும் தருகிறேன்
நீ பார்க்க வேண்டும்
எதுவும் அவசியமில்லை
கண் கொட்டாமல்
எவ்வளவு நேரம் பார்க்கிறாயோ,அவ்வளவு விலை
சரி
என் படுக்கையறைக்கு வந்தான் அவன்
அம்மணம்
அவனுக்கு காட்சி
எனக்கு செயல்
எனக்கு காட்சி
அவனுக்கு செயல்
தவளை வாசனை
நனைந்த பறவைக் குஞ்சொன்றின் தலை
கசியும் ரகசியங்களின் வெளுப்பு
பொந்து
நனவிலி
நரகத்தின் வாசல்
வெளியேறினான்
ஆனால் மீண்டும் வந்தான்
பருத்த மின்னலொன்று தாக்குண்டவனாய்
அதன் ஒளிக்கு கட்டுண்டவனாய்
கன்னிமை என்பது கட்டுக்கதை என்றேன்
நீ நம்ப விருப்பப் படாதது என்றேன்
என் உடல் நினைவகம் அல்ல
மொழியுமல்ல
பேசுவேன்,
புரிந்துக் கொள்ள மாட்டேன்
எல்லாம் அதிகாரம் என்றேன்
பார்க்க முடியாததை நோக்கி
மழுங்கிய முனையின் விறைப்பு
அவன் பார்வையை மங்கலாக்கியது
களைப்பாயிருக்கிறது
நாளை வருகிறேன்
அதிக விலை தருகிறேன்
என்னை அருகில் வந்து பார்
தூமையில் கெட்டித்திருந்த மயிர்
அவனின் நாக்கு ஒரு சிசுவினுடையதானது
பாலினம் மறந்தான்
அம்மா
அது ஆணின் நோய்
அப்பா என்ற சொல்லை பெருக்கிய தொற்று
நான் என்னையே பார்த்துக் கொள்ள சகியாமல் போகும்போதும் உன் பார்வையை விலக்க கூடாது
என் மனதை பழக்கப் படுத்த முயற்சிக்காதே ஆண்டையின் தந்திரம் அது
வெறுப்பு என்னை வசியம் செய்கிறது
வெறுப்பதை கைவிடாதே
மூன்றாவது இரவு
கதவை திறந்துப் போட்டிருக்கிறாய்
யாரும் வந்துவிட்டால் என்ன செய்வாய்
என் ரத்தம்
கெட்டுப் போகாது
உடைமையும் இழப்பும் நடக்க இங்கென்ன போரா
நடக்கிறது?
ரத்த ஒழுக்கிற்கு எதுவும் தெரியாது
விடுதலையைத் தவிர
அதன் மைக்கருப்பு உனக்கு அச்சமூட்டுகிறதா?
என்னை நீ அவமதிக்க முடியாது
உன்னால் கருத்தரிக்க முடியாதென்பதால்
துளிர்க்கும் ஒவ்வொரு புதிய உயிரும்
உன் ஆளுகைக்கு உட்பட்டதல்ல அல்ல
மறைந்தாய்
நானும் மறைந்து போவேன்
பார்வைக்கு கட்டுப்படாமல்
பார்த்திருக்க இருக்க மறைந்துப் போவேன்
அதுவரை காத்திருப்பேன்
அவன் வாய் முணுமுணுத்ததை
கவனிக்காமல் இல்லை
அசை போடும்போது திருத்திக் கொள்வான்
நான் பரத்தைகளுள் ராணி
(இயக்குனர் காதரின் பிரேயிலிக்கு………..)
லீனா மணிமேகலை
புதிய கவிதைகள்
நன்றி தீராநதி (ஆகஸ்ட் 2010)
1
மண் அடுக்குகள்
நாளையை பலியிட்டிருந்த
விசித்திரமான வீட்டில் தான்
நான் இறந்திருக்கக் கூடும்
மறுக்கப்பட்டவை விடுபட்டவை
லட்சியங்கள் அபத்தங்கள்
பைசாசங்களாக மாறியதில்
இருளின் நடமாட்டம்
ஒரு நடனம் போல
முற்றத்தில்
காணக் கிடைக்கிறது
சுவர்களில் கீறியிருந்த சித்திரங்களில்
காளைகள் அம்பு உழவு ஏர்
க ங ச ஞ ட ண ர ச ல ழ ள
பைபிள் பருத்தி
எந்திரம் துப்பாக்கி
ஆப்பிள் E=mc2 101011
கணினி பங்கர்கள்
என
எல்லா வடிவங்களையும்
யோனி அச்சில்
வரைந்து வைத்ததால்
ஓவியனின் கண்கள் பறிக்கப்பட்ட கதை
நாட்டார் பாடல்களில்
பாடப்படுவதாக செவிவழிச் செய்தி
ஆண் பெண் அலி
அரசுகளின் பால் அச்சு பொறித்த
ஆடைகளை அணிய மறுத்த
கலைஞர்கள் மேல் ஏவப்பட்ட
சாபங்களும் நிந்தனைகளும்
விலக்கப்பட்ட கனிதரும் மரங்களாக
வளர்ந்திருந்தன
அதன் மகரந்தமற்ற சாம்பல் நிறப் பூக்களை உண்டால்
உலகத்தின் துயர் தீர்க்கும் தத்துவங்களை எழுதிவிடலாம்
என்ற வதந்திகளும் நாடெங்கும் பரவியிருந்தன
நூறாயிரம் ஆண்டுகளாக
அரங்கேறி வரும்
வறுமைச் சடங்குகளில்
கொழுந்துவிட்டெரியும் சாமத்தீயை
முலைப்பால் அணைத்துவிடும்
என்ற வரலாற்றின் சான்றை
நிறுவ முயன்றதாலேயே
படுகொலை செய்யப்பட்டேன்
வட்டெழுத்தில் இருந்த
அந்த ஆவணங்களை
என் குருதி தோய்த்து
இங்கே தான் புதைத்திருக்கிறார்கள்
அர்த்தங்களை உருவாக்குவதும அழிப்பதுமான
போர்களின் கபாலங்கள்
இந்த வீட்டை ஆட்சி செய்வதை
நான் எதிர்த்தேன்
என்னை “புரட்சி”யாளர்களும் எதிர்த்தார்கள்
குறி வளர்ந்த பெண்களும் காட்டிக் கொடுத்தார்கள்
மகள்களைப் புணர்ந்த நிண வாடை வீசும்
இதன் தாழ்வாரங்களில்
கொடுமணல் தாழியைக் கண்டெடுத்திருக்கிறார்கள்
அதில்
சமணி, பமித்தி, கந்தி, கவுந்தி,
கெளத்தி, நக்கன்
பெயர்கள் கிறுக்கப் பட்டிருந்தனவாம்
அவர்களும் இந்த வீட்டில் தான்
இறந்திருக்கக் கூடும்
ஐயா ஐராவதம் மகாதேவனுக்கு
(சமணி(மணிமேகலை), பமித்தி(சீவக சிந்தாமணி ) , கவுந்தி(சிலப்பதிகாரம்),கந்தி கெளந்தி(சூடாமணி) , நக்கன்(தேவரடியார்) போன்ற பெண்பாற் பெயர்களை பனையோடுகளிலும், குகை கல்வட்டுகளிலும் ஆய்ந்தெடுத்திருக்கிறார்)
2
திணை, அகம், புறம்
நிலத்தின் மீது சினம் கொண்ட நிலவு
கடலில்
தன்னை மாய்த்துக் கொள்ள
விழுந்தது
அன்னங்கள் தங்கள் அலகுகளில் அள்ளி
நிலவை ஆமையோட்டின் மேல் விட்டது
ஹிட்ச்காக்கின் கழிவறைகளில் கிடந்த
பாம்புகளுக்கு எந்த துப்பும் கிடைக்கவில்லை
கிரகணங்கள் நிகழாமல் உறைந்துப் போன
காலம்
கிம் கி டுக்கிடம் யாசித்து நிற்கிறது
அவரோ கள்ளக் காதலர்களைப் பிரிப்பது
முடியாத காரியம் என்கிறார்
காலம் திகைத்து நிற்பதைக் கண்ட
சூரியன்
குந்தியையும் கர்ணனையும் நினைத்துப் பார்த்து
கண்ணீர் விட்டது
காதரீன் பிரேயிலி
ஆமைக்கும் நிலவுக்குமான காமத்தை வைத்து
புதிய படத்திற்கான திரைக்கதையை எழுதுகிறார்
பாம்புகள் மூன்றாம் உலகப் போரினை அறிவிக்கின்றன
அமெரிக்காவுடனான பாம்புகளின் ஆயுத பேரத்தை மைக்கேல் மூர்
ஆவணப் படமெடுத்து அம்பலப் படுத்துகிறார்
காதல் பயங்கரவாதிகள் தடுப்பு சட்டத்தின் கீழ்
அண்டசராசரத்திலும்
ஆமைகளைக் கண்ட இடத்தில் சுடும்
அவசர சட்டம் பிறப்பிக்கப்படுகிறது
கள்ளக் காதல் அடிப்படை மனித உரிமை
என்ற முழக்கத்தை முன்வைத்து
அருந்ததிராயும் நோம் சொம்ஸ்கியும்
போராட்டங்களில் இறங்குகிறார்கள்
ஆனந்த் பட்வர்த்தன் கிராமங்கள் தோறும்
கத்தாரின் எழுச்சிப் பாடல்கள் ஒலிக்க
எதிர்ப்பணியினரின் காட்சிகளை
திரையிடுகிறார்
பாம்புகளின் படை பலம் என்னவோ
வேதாந்தாவும், கோகோ கோலாவும், மேக்டோனால்டுமாய்
நாளுக்கு நாள் அதிகரித்தே வந்தது
பான் கீ மூன் தலையிட்டும்
யுத்தத்தை தடுக்க முடியவில்லை
ஆமைகள் அழித்தொழிக்கப் படுகின்றன
அன்னங்கள் துரோகத்தின் சின்னங்களாக மாறின
நிலவு வானத்திற்கே துரத்தப்படுகிறது
கிரகணங்கள் நடந்தேருகின்றன
காலத்தின் முள்ளும் நகர்கிறது
நிலவு ஆமையைக் கருவுற்றிருந்தது
லீனா மணிமேகலை
ஒரு பெட்டை நாயின் கூச்சல்
http://www.lumpini.in/a_punaivu-005.html
மகாஸ்வேதா தேவியின் “திரெளபதி” என்ற கதையில் வரும் காட்சியில் ராணுவ அதிகாரி முன் திரெளபதி நிர்வாணமாக நிற்கிறாள். அவள் தொடைகளிலும், முலைகளிலும், அல்குல்லிலும் உறைந்துப் போன ரத்தம். “இவ துணியெல்லாம் எங்க? “என்ற ராணுவ அதிகாரியின் கேள்விக்கு “உடுத்த மாட்டேங்கிறா சார், கிழிச்சுப் போட்டுட்டா” என்கிறார்கள்.மேலும் அதிகாரியின் அருகில் வரும் திரெளபதியின் கரிய உடல் குலுங்க ஆவேசமாக சிரிக்கிறாள். அவளின் குதறப்பட்ட உதடுகளிலிருந்தும் ரத்தம். “துணி என்ன துணி? யாருக்கு வேணும் துணி? என்னை நிர்வாண்மாக்க உன்னால் முடியும், ஆனால் என்னை திரும்ப உடுத்த வைக்க முடியுமா? சீ.. நீ ஒரு ஆம்பளையா?” என்று கேட்டுவிட்டு ராணுவ அதிகாரியின் தூய வெள்ளை சட்டையில் “தூ” என்று துப்பிகிறாள். “நான் பார்த்து வெட்கப்பட வேண்டிய ஆம்பளை இங்க யாருமில்ல, என்மேல் துணியைப் போட எவனையும் விட மாட்டேன். என்ன செய்வே? வா என்னை என்கெளண்ட்டர் பண்ணு” என்று சிதைக்கப்பட்ட முலைகளோடு தன்னை நெருங்கும் நிராயுதபாணியான டார்கெட் முன்னால் அதிகாரி பயப்படுகிறார். அது ஒரு அமானுஷ்ய பயம்.அந்த பயம் தான் ‘பெண் கவிஞர்கள் தம்மை திடுக்கிட்டு திரும்பிப் பார்க்க வேண்டுமென்பதற்காக ஆடையை அவிழ்த்தெறிகிறார்கள்’ என்ற விமர்சனத்தின் அடிப்படையும் காரணமுமாக இருக்க முடியும்.
தமிழ்ப் பெண் கவிதையின் தொப்புள் கொடியை சங்க காலத்தின் ரேகைகளிலிருந்து எடுக்கிறார்கள் பெண்ணியல் ஆய்வாளர்கள். பின், சமணம், பெளத்தம் என்று பெருமத காலங்களில் மடிந்து, பக்தி காலங்களில் சைவத்திற்கொரு காரைக்கால் அம்மையார்,வைணவத்திற்கொரு ஆண்டாள் என்று புனிதத்தில் தட்டுப்பட்டு, ஒரு நீண்ட தலைமறைவு காலத்தைக் கடந்து, 1970 களில் அரசல் புரசலாகத் தெரிந்து, 90களில் எழுச்சி பெறுகிறது. இது எழுச்சி அல்ல, சுழற்சி என்று சொல்பவர்கள் உண்டு. நிகழ்கால நோக்கில், பழங்கால இலக்கியங்களை ஆராயும் ஆய்வுகள் அடிக்கருத்தியல் மட்டும் சார்ந்தவையா என்ற கேள்வியும் கூடவே எழுகிறது.சங்ககால பெண்பாற் புலவர்களின் பாடல்களிலிருந்து, அக்காலத்துப் பெண்களின் காதல், பொருளாதார சார்புத்தன்மை, வீடே “வெளியாக” இருத்தல், பரத்தையிடம் சென்று வரும் கணவனையும் ‘கற்பு’ நெறியோடு ஏர்றுக் கொள்ளுதல், உடன் கட்டை ஏறுதல், கைம்மை, காதலனை கையகப்படுத்தும் முயற்சிகள் என்பது போன்ற கருப்பொருள்களை சங்க காலப் பெண்பாற் புலவர்களின் பிரதிகளில் காண முடிகிறது. காமத்தை வெளிப்படுத்துதல், காதல் துணையை தேடிக் கொள்வதில் இருக்கும் தேர்வுரிமை, களவொழுக்கம், போன்றவற்றை சுட்டிக் காட்டி, சங்க காலத்தில் ஆண் பெண் சமத்துவம் நிலவியது போல சில விமர்சகர்கள் குறிப்பிட்டாலும், சங்ககாலச் சூழல் தாய்வழி சமூகத்தின் மிச்ச சொச்சங்களையும், தந்தை வழி சமூகம் வேரூன்ற ஆரம்பித்த காலகட்டைத்தையும் கொண்டிருந்ததாக கணக்கிலெடுக்க முடியும்.
பக்தி இயக்கம் தந்த கவி ஆளுமைகளான ஆண்டாளும், காரைக்கால் அம்மையாரும் புனிதப்படுத்தப்பட்ட பிம்பங்கள். அன்றாட வாழ்வின் பெண் இருப்புக்கும், அவர்களின் பனுவல்களுக்கும் எந்த தொடர்பும் இல்லை. கருத்து ரீதியில் சமய நம்பிக்கையுடன் தன்னை அடையாளப் படுத்தும் அம்மையாரின் குரலில் மரபு வழிப்பட்ட பார்வையே பொதிந்துள்ளது. வேட்கை, விழைவு, இச்சை என்பனவற்றை முறைப்படுத்தி ஒருவித ஒடுங்கிய மன அமைப்பைத் தோற்றுவிக்கும் பக்தி உணர்வை காம விழைவாக எழுதிய ஆண்டாள் தனித்துவமிக்கவராகத் தெரிகிறார். ஆனால் கடவுளைக் காமுறுதல் என்ற “சலுகையினாலேயே” அவருடைய துய்ப்பும், திளைப்பும், மறுக்கப்படாமல் பெருக்கப் படுகின்றன, சிவனும், திருமாலும் பாலியல் பிரதிமைகளாக(Sexual Icons) மாறி பக்தைகளைப் பித்தாக மாற்றுவதும் லிங்கமையவாதத்தையே நிலை நிறுத்துகிறது.
2003 ல் எழுத வந்த எனக்கு முன் ஒரு நீண்ட பட்டியல் இருந்தாலும், வித்தியாசப்படுத்துதல் என்ற திசை நோக்கிய பயணம் 1990 களுக்குப் பிறகே பெண் கவிதைக்கு சாத்தியப்பட்டிருக்கிறது.
பாலினம் கடந்த எழுத்தை எழுதிவிட வேண்டும், பெண் எழுத்து என்பது மாதிரியான சொல்லாடலைக் கடுமையாக எதிர்க்க வேண்டும், பார்ப்பனியப் பெண்ணெழுத்து, பார்ப்பனியரல்லாதப் பெண்ணெழுத்து, தலித் பெண்ணெழுத்து என்றெல்லாம் பார்க்க கூடாது போன்ற அடையாள மறுப்பு அரசியலில் ஆர்வமும், குறிக்கோள்களும் மிகுந்தாலும், கடுமையான சிக்கல்கள் இருக்கின்றன.சாதி, மத, பாலின, வர்க்க வேறுபாடுகளும், ஏற்றத்தாழ்வுகளும் புரையோடிப் போயிருக்கும் சமூகத்தில், ஒரு தன்னிலை இவை எல்லாவற்றையும் கடந்துவிடும் இருப்பை அடைந்துவிட முடியுமா? அப்படியொரு இருப்பு சாத்தியமாகாதப் பட்சத்தில் எல்லாவற்றையும் கடந்தப் பிரதி மட்டும் எப்படி சாத்தியம் என்ற நெருக்கடி உண்டாகிறது.
உடலுக்கு வெளியே, கலாசாரத்திற்கு வெளியே, நிறுவனங்களுக்கு வெளியே, எல்லைகளுக்கு வெளியே, தேசங்களுக்கு வெளியே தன்னை நிறுத்திக் கொள்ளும் முயற்சியாகத் தான் ஆணும் சரி, பெண்ணும் சரி எழுத வருகிறார்கள். ஆனால் நடைமுறையில் அற்பமாகவும், வரலாற்றில் ஒடுக்கப்பட்டவர்களாகவும் இருக்கும் தன்னிலைகளுக்கு கூடுதல் காரணங்கள் இருக்கின்றன என்பதை ஒத்துக் கொள்ள வேண்டியிருக்கிறது. இனத்தில், வர்க்கத்தில், பாலினத்தில், சாதியில் படிநிலையில் “மேலிருப்பவர்கள்” மீது சந்தேகமும், எச்சரிக்கையும், சுயமரியாதையும் கொண்டிருப்பதும், “கீழிருப்பவர்கள்” முன் குற்ற உணர்ச்சியும், “படிநிலை நீக்கம்” செய்ய விழையும் முனைப்பும், பழியையும் அதற்குரிய தண்டனையையும் கூட ஏற்றுக் கொள்வதுமாகத் தான் “இருப்பை” புரிந்துக் கொள்ள முடிகிறது.கலைச் செயல்பாடும் அதிலிருந்தே தொடங்க முடிகிறது. அந்த வகையில் சலனங்களை ஏற்படுத்தியவை, பொதுப் புத்தியை தொந்தரவு செய்தவை, நிறுவனங்களைக் கேள்வி கேட்பவை, சுரண்டல்களிலிருந்து இருப்பை விடுவிக்க நினைப்பவை, அசலான வித்தியாசங்களின் மீது வினை புரிந்தவை, ‘பெண்மை’ மேலானது – ‘பெண்’ இழிவானவள் அன்ற முரண்பாட்டைத் திருகியவை என்ற வகைகளில் பெண்ணெழுத்து கடந்தப் பத்தாண்டுகளில் தான் வினை புரிந்திருக்கின்றது.
“பெண்ணுடல் என்ற நிலத்தின் மீதே தந்தை வழி சமூகம் நிறுவப்பட்டது. பெண் தன்னிடம் சிதறிக் கிடக்கும் மன ஆற்றல்களையும், உடல் வல்லமையினையும் நோக்கு நிலையினையும் ஒன்றிணைக்க வேண்டுமானால் அவள் சிந்திப்பது உடலினூடாக நிகழ வேண்டும்” என்கிறார் பெண்ணியலாளர் அட்ரியன் ரிச். பெண் பெயரில் கையெழுத்துப் போட்டால் மட்டும் பெண்ணெழுத்து ஆகிவிட முடியாது.பாலின விழிப்புடன் எழுதும் சில ஆண் பிரதிகளிலும் பெண்ணெழுத்து நிகழ்ந்துவிடும் வாய்ப்புகளையும் மறுக்க முடியாது.
90களுக்குப் பிறகானப் பெண்கவிகள் முரணும் உடன்பாடுமாய் வெவ்வேறு தளங்களைத் தொட்டுச் சென்றிருந்தாலும், அவர்களின் பிரதிகளில் இருக்கும் “பிரதானப் போக்குகளை” அவதானிக்கலாம்.பெண் எழுத வந்ததே அரசியல் செயல்பாடு, மறுக்கப்பட்ட குரல்களின் வெளிப்பாடு, எதிர்ப்பின் தடயங்கள் என்ற அடிப்படையில் எழுத வந்த எல்லா பெண் கவிஞர்களையும் பொருட்படுத்த வேண்டும் என்றாலும், ஆணின், அதிகாரத்தின், நிறுவனத்தின் மொழியையே மறுபதிப்பு செய்யும் பிரதிகளை நிராகரித்து விடலாம்.அரசியல் மற்றும் கவித்துவத்தைக் கூட்டுவித்து வாசிப்பாளரை நுகர்வோராக மாற்றாமல் செயலூக்கமுள்ள பங்கேற்பாளராக மாற்றும் குறிக்கோளை ஓரளவு அடைந்திருக்கும் பிரதிகளாய் சிலவற்றை அடையாளங் காணலாம்.
“என் உடலுடன்
நான் உறங்க வேண்டும்
இடது கரத்தால் சிவனைப்
பிய்த்தெறிந்து விட்டு”
என்ற மாலதி மைத்ரியின் கவிதை, பெண்ணின் நினைவு உலகத்தை தன் கட்டுக்குள் கொண்டு வரும் ஆணின் உச்சக்கட்ட அடக்குமுறையை சிதைக்கிறது. ஆணை, அதன் வழியே அதிகாரத்தை வெளியே நிறுத்தும் துணிச்சலை அவர் பிரதிகள் செய்கின்றன. தாய்மை வழியாக குடும்ப அமைப்பை கையகப்படுத்தி சமூகத்தையும் கையகப்படுத்துவதன் மூலம் அதிகாரத்தை தாயை நோக்கி திரட்டிக் கொள்ளும் அரசியலை முன் வைக்கிறார்.மறு உற்பத்தி பெண்ணின் விடுதலைக்கு தடையாய் இருக்கிறது என்பதை மறுத்து தாய் – சேய் உறவை உயிரியல் அம்சமாகப் பார்க்கிறார். ஆண் – பெண் இணை முரணைத் தலைகீழாக மாற்றிப் போட்டு பெண் – ஆண் என்று பெண்ணை முதன்மைப் படுத்தும் செயல்பாடுகளை மாலதியின் கவிதைகள் செய்துப் பார்க்கின்றன.ஆனால் அந்த இணை முரணை, முரண்களாகவே நிறுத்திவிடாமல், சிதைத்துக் கலவையாக்கி விடும் எழுத்துமுறையை, பன்மைத்துவத்தை எழுதிப் பார்க்கும் சவாலை விட்டுவிடுகின்றன. பெண்ணை தனிமைப்படுத்தும் மாலதியின் கவிதைகள், அவளின் சுதந்திர இருப்பிற்கான மாற்று வழிகளை சொல்லத் தவறுகின்றன.
பெண் துறவை வழிமொழியும் ரிஷி, பெண் இருப்பையே வலியாகவும், மனப்பிறழ்வாகவும் வரிக்கும் சுகந்தி சுப்ரமணியன், மத்தியதர வாழ்க்கை, பணியிடம், குழந்தைகள் என்பது போன்ற “நல்ல” கச்சாவை மட்டும் கவிதையாக்கும் வெண்ணிலா, உழைக்கும் பெண்களைக் காட்சிப்படுத்தும் இளம்பிறை, காழ்ப்பையும் கழிவிரக்கத்தையும் அழகியலாக்கும் உமா மகேஸ்வரி என்று பெண்கவிகள் தங்களுக்கென்று அலாதியான உலகங்களை உருவாக்கிக் கொண்டு எழுதி வருகிறார்கள் என்றாலும் சமநிலையை குலைத்துப் போடும் பொறிகளே காலத்தின் தேவையாய் இருக்கின்றன.
பிரமிளிடமிருந்து படிமங்களையும், தேவ தேவனிடமிருந்து ஆன்மிகத்தையும், கோணங்கியிடமிருந்து இடுகுறி சொற்களையும் எடுத்துக் கொண்டு எழுதும் குட்டி ரேவதி, ஆண் மையங்களை குலைக்காமல் அதன் எச்சங்களையே அடுக்குகிறார். ஆணை அறியாதவனாக்கி ” நான் வேறொரு உலகத்தைக் காட்டுகிறேன் வா” என்ற பெண்ணின் அழைப்பை கவிதைகளாக்குகிறார். அதன் மூலம் தன் ஆளுமையை கட்டமைக்கிறார். ஆணின் ஒடிபஸ் காம்ப்ளெக்ஸிற்கு வடிகாலாய் இருக்கின்றன இவரின் பிரதிகள்.அதிகார வடிவங்களை அப்படியே வைத்துக்கொண்டு உள்ளடக்கங்களை மட்டும் மாற்றிவிடுவது, அரசியலாக உடலை முன் வைக்காமல் வெறும் பேச்சாக அதைப் பெருக்குகிறது. அதனாலேயே தயாரிக்கப்பட்ட உடல்களை எப்படி வீழ்த்துவது என்ற கேள்வியை கேள்வியாகவே விட்டுச்செல்கின்றன.
“ரயில் நிலையத்தின் இரு மருங்கையும்
அணைத்துக்கொண்டிருந்த இரவின்
பால்வாசனையுடைய மேனியைத் தீண்டிய் ரயில்
வேகமெடுத்தது
மரத்தின் ரசத்தை உறிஞ்சி ஆடிய இலையொன்று
தன்னைக் கடந்த பருவத்தின் வேகம் நோக்கி
பழுத்து வீழ்ந்தது
முன்பின் பருவங்களின் நினைவுச் சின்னமாய்ப்
பூவின் மகரந்தங்கள் பெருக்கிய உடலை
மரம் சுமந்து நிற்கிறது
பொன்துகள் உதிரும் பலரியின் அழகை
நீயும் காணவேண்டுமென ஏங்குகிறேன்.
கிழவியின் உடலுக்குள் நீந்திய உடலில்
பைத்தியத்தின் குழப்பமற்ற கண்களுடன் தோன்றிய அவனோ
ஏழுகடல்கள் தாண்டி கூடு கட்டிய
மந்திரக்கிளியின் உயிர்தேடிச் சென்றிருக்கிறான்”
என்பது போன்ற இவரின் படிமமொழி தந்திரங்கள் வாசிப்பவரைக் களைப்படையச் செய்பவை.
“எல்லா அறிதல்களுடன்
விரிகிறதென் யோனி”
என்றெழுதும் சல்மாவின் வரிகள் ஒரு சராசரிப் பெண்ணின் எதிர்வினையை மட்டுமே ஆற்றுகின்றன.ஆணின் வஞ்சகத்தைக் காட்டிக் கொடுத்தாலும், அவனிடமே தன்னை ஒப்புக் கொடுத்துவிடும் இயலாமையாய் எஞ்சுகின்றன. ஆணின் விசாரணைக்குள்ளேயே இருந்துக் கொண்டு ஒரு பெண் தன்னை யார் என்று கண்டுபிடித்துவிட முடியாது என்பதை உணர்த்தும் பிரதிகள் இவருடையது. ஆனால் உடைமைவாதிகளான ஆண்களின் “எங்கே பறிமுதல் செய்யப்பட்டு விடுவோமா? எங்கே அடையாளமிழந்துப் போவோமா? ” என்ற பயங்களை மிக நுணுக்கமாக வெளிப்படுத்த சல்மா தவறவில்லை.
“எலி கீறிய காலில் குருதி கசிகிறது
கரப்பான் எகிறிப் பறக்கின்றன
முதுகில் நடந்து சென்ற புலியின் சுவடுகளை
எப்படி பார்ப்பது”
என்ற சுகிர்தராணியின் எழுத்தில் இருக்கும் களிப்பு ஒரு தாய்வழி சமூகப் பெண்ணிற்கே உரிய மூர்க்கத்திலிருந்து வருவது.போலி ஒழுக்கங்களுக்கு கட்டுப்படாத கச்சாவான எதிர் அழகியலை உருவாக்கியதில் சுகிர்தராணி முக்கியமானப் பங்காற்றுகிறார்..
பண்பாடுxஇயற்கை எதிர்வுகளில் இயற்கையோடு பெண்ணைப் பொருத்திப் பார்ப்பது, கொற்றவை, நீலி, பத்ரகாளி எனத் தொன்மத் தெய்வங்களோடு உருவகப்படுத்திக் கொள்வது, பெருங்கதையாடல்களை புறந்தள்ளி ஒருவித பேகனிஸ்ட்(Paganist) கலகத்தை செய்தாலும், உயர்வு நவிற்சிகள் விட்டில் பூச்சிகள் போல திரும்ப திரும்ப லிங்கமய அழகியலுக்குள்ளேயே விழவைக்கிறது என்ற அபாயத்தைப் புறந்தள்ள முடியாது.
ஒட்டுமொத்தமாகத் தொகுத்துப் பார்த்தால் ஏற்கெனவே கட்டமைக்கப்பட்டப் புனிதங்களின் மீது சந்தேகங்களும் அவற்றின் மேலான ஒரு ரண சிகிச்சையும் பெண்கவிதை உளவியலாக மேற்கொண்டிருக்கிறது என்பதை ஒத்துக் கொள்ளலாம்.கலாசார அரசியலில் இது ஒரு குறிப்பிடத்தகுந்த சலனம் என்றாலும் இன்னும் செய்ய வேண்டியவை ஏராளம் இருக்கின்றன.
சமகாலத்தில் ஒற்றையிலையென, உலகின் அழகிய முதல் பெண் என்று இரண்டு தொகுப்புகளை எழுதியவள் என்ற அடிப்படையில், பெண் எழுத்து எம்மிடம் கோரி நிற்பவை எவை என்பதை உரையாடலாக வைக்கிறேன்.இந்த கட்டுரையில் நான் சொல்ல விழைவதெல்லாம் முற்றும் முதலான முடிவுகளல்ல. நான் ‘சொல்வதெல்லாம் சரி’ என்று நிறுவ நான் நிறுவனமும் அல்ல. விவாதங்களுக்கான வாசல்களுடன் தான் என் கருத்துக்களையும் விமர்சனங்களையும் வைக்கிறேன்.
மரபிலி பிரதிகளைக் கண்காணிக்கும் அதிகார எந்திரம் தன் ஒழுங்கு நடவடிக்கைகளை பிரதியாளரின் மீது நீட்டித்து தாசி, தேவடியாள், அவிசாரி, பைத்தியக்காரி, முண்டை, வேசி, விபசாரி என்று பெயர்களிட்டுப் பாலியல் ரீதியாக ஒடுக்குவது. பெண் படைப்பாளியை திமிர் பிடித்தவள் என்றும் அவளைப் பலரும் புணர்ந்து தான் ஒடுக்க வேண்டும், யோனி வழியாக மட்டுமன்றி வாய்/குதம் வழியாகவும் புணர்ந்து ஒடுக்க வேண்டும் என்று குரலிடுவது, எழுதுவது போன்ற வன்முறைகளை செய்பவர்களின் மீது பகையை அறிவிக்க வேண்டும். அப்படிப்பட்ட சக்திகளோடு “பெண்” விசயத்தில் தானே அவர்கள் அப்படியிருக்கிறார்கள், மற்ற விசயங்களில் சேர்ந்து செயல்படலாம் என்று உடன்படும் பரந்த மனதுக்காரர்களின் இரட்டை வேடங்களை எழுத்தளவிலாவது தொடர்ந்து தோலுரிக்க வேண்டும். சாதி திமிரோடு இருக்கும் சக்திகளோடு எப்படி சகிப்புத் தன்மையைக் காட்ட முடியாதோ, அதே போல பாலினத் திமிரோடு இருக்கும் சக்திகளோடும் வேறு விசயங்களுக்கான கூட்டு நடவடிக்கைகளையும் மறுக்க வேண்டும். பாலின விழிப்பை முன் நிபந்தனையாக வைத்து பிரதிகளுக்குள்ளும், பிரதிகளுக்கு வெளியேயும் கறாராக இயங்க வேண்டும்.பெண்ணாக இருந்தும் ஆண்நிலைவாதக் குப்பைகளை எழுதுபவர்களும், அவர்களின் பிரதிகளும் இதில் விதிவிலக்கல்ல.
நடைமுறையில் பெண்வெளிக்கான , சுதந்திர இருப்புக்கான மாற்றுப் புனைவுகளை எழுதும்போது, நாம் வாழ்வதும் புனைவுகளுக்கு மத்தியில் தான் என்று உணரத் தலைப்பட வேண்டும். உண்மைகளையும், யதார்த்தத்தையும் திட்டமிட்டு குழப்பவேண்டும். மானுட சித்தாந்தங்கள் சந்தர்ப்பவசமாக ஏன் ஆண்களாலேயே எழுதப் படுகின்றன என்ற கேள்வியும், அவற்றின் மீது தீராத சந்தேகமும், அதிகார மறுப்பையும் பிரதிகளில் அச்சமில்லாமல் வைக்க வேண்டும்.
ஆண் பெண் ஏற்றத்தாழ்வை இதுவரை வந்துப் போன எந்த சித்தாந்தமும், தத்துவமும், கோட்பாடுகளும், தீர்த்ததாய் வரலாறோ, நிதர்சனமோ இல்லை. பெண்ணினத்தின் மீது ஒரு அறிவிக்கப் படாத போர் நடந்துக் கொண்டே தான் இருக்கிறது என்பதை அரூபமாகவோ, நேரிடையாகவோ பிரதிகளில் வைப்பதை தவறவிடக் கூடாது.
அனுமதிக்கப் பட்ட வெளியில் மட்டுமே பயணிக்கக் கூடிய அபத்தங்களை பெண்மொழி தாண்டிவிட்டதாக கருதினாலும், பெண்ணிய அனுபவங்களை மானுட அனுபவங்களாக மாற்றுவதற்குரிய புத்தொளிகளை, சமூகத் தணிக்கை, அரசுத் தணிக்கை, சந்தைத் தணிக்கை, சுயத் தணிக்கை யெல்லாம் தாண்டி இன்னும் இன்னும் பெண்ணியப் பார்வைப் படாத தளங்களில் பாய்ச்ச வேண்டும்.
ஆணுக்குப் பெண் மேலானவளும் அல்ல, கீழானவளும் அல்ல, வேறானவள் என்ற புள்ளிக்கு பெண்கவிதை நகர்ந்து வந்திருக்கிறது. ஆனால் அந்த வேறானவள் என்பதைப் பன்மைப் படுத்திப் பார்ப்பது அவசியம்.இன்னும் கவிதை தரிசிக்காத பெண் உலகங்களை, அனுபவங்களைக் கண்டெடுக்க வேண்டும்.
நுகர்வு, சந்தை நவீனங்கள் ஏற்படுத்தியிருக்கும் கொடூரமான பொய்மை, ஏமாற்று, ஏற்றத்தாழ்வு, அதிகாரத்துவம் போன்றவையின் நுண் அத்துமீறல்களை, அதன் வடிவங்களை எதிர்க்க சொற்களைப் பழக்கலாம், அல்லது புதிய சொற்களை உருவாக்கலாம்.
வடிவம், கூற்றுவகை, உத்தி, அமைதி, போன்ற ஒழுங்குகளுக்கு கட்டுப்பட வேண்டும் என்ற கெட்டி தட்டிப் போன மதிப்புரையாளர்களின் அதிகாரங்களைத் தாண்டி பென்ணெழுத்துக்கான விமர்சனத்திற்கென புதிய உபகரணங்களைக்(tools) கோர வேண்டும்.
மார்க்ஸியத்திற்கு உழைப்பு எப்படியோ அப்படித்தான் பெண்ணியத்திற்கு பாலியல்பு என்றார் காதரீன் மக்கின்னென்.உழைப்பை மூலதனமாகக் கொண்ட தொழிலாளர்களை அமைப்பு ரீதியாகச் சுரண்டும் அமைப்பில் வர்க்க வேறுபாடு தொழிற்படுகிறது. அதே போல பெண்ணின் பாலியல்பை அமைப்பு ரீதியாக சுரண்டும் அமைப்பில் பாலின வேறுபாடு தொழிற்படுகிறது. பாலியல்பு குறித்த விவாதம் பெண்ணிய அரசியலின் மையப்புள்ளியாக பெண்ணடிமைத் தனத்தைக் கருதவில்லை. இருபாலருக்குமான பாலியல்பு சுதந்திரத்தைக் கொண்டாடுவது, உடல் வேட்கையைக் கொண்டாடுவதை அங்கீகரிப்பது, இருபாலியல்பு, ஓரினச் சேர்க்கை ஆகியவற்றை தந்தைமை சமூகத்திற்கு சவால் விடும் கண்ணிகளாக அங்கீகரிக்கும் அரசியலைப் பெண்ணெழுத்து முன்னெடுப்பது முக்கியம்.
பெண்களை இணைந்து வேலை செய்ய விடாமல் செய்யும் தந்தைமை ஆதிக்க மதிப்பீடுகளில் உள்ளார்ந்த காலனியத்திற்கு அடிமைப்படாமல், ஆண்களின், ஆண்கள் நடத்தும் நிறுவனங்களின் ஏற்புக்காக நடக்கும் போட்டா போட்டியில் பெண்கள் ஒருவருக் கொருவர் வெறுப்பும், பகையும், பொறாமையும் விட்டொழித்து கவிதா செயல்பாடுகளில், அரசியல் நடவடிக்கைகளில், பொது எதிரிக்கு முன்னாவது இணைவது உத்தமம்.
உண்மையில்,பாட்டாளிகளை விடவும், தலித்துகளை விடவும் பெண் தான் தோல்விகளையே நீண்ட கால அனுபவங்களாக, போராட்ட வரலாறாகப் பெற்றவள். தலித்துகளுக்கு சோசலிச நிர்மாண வழியோ, அல்லது இன்றுள்ள முதலாளியப் பாதையோ திறந்திருக்கின்றன. பாட்டாளி மக்களுக்கு பொதுவுடைமை மார்க்கம் ஒரு இலட்சியமாகக் காட்டப்பட்டிருக்கிறது.ஆனால் விடுதலை பெற விரும்புகிற பெண்ணுக்கு மாற்றுவழி என்ன?
கவிதை சந்தேகமின்றி அதன் பயன்பாட்டு மதிப்புக்காக ஏற்றுக் கொள்ளப்படக்கூடிய ஒன்றாக இருத்தல் வேண்டும். எல்லாப் பெரும் கவிதைகளும் ஒரு சரித்திரப் பூர்வமான சாட்சீய மதிப்பீடைக் கொண்டிருக்கின்றன என்கிறார் பிரெக்ட்.
பன்னெடுங்காலங்களாக மானுடத்திற்கான ரொட்டிகளை தயாரிக்கும் பெண்ணுக்கு கவிதைகள் எம்மாத்திரம்.
லீனா மணிமேகலை
(நாகை மாவட்ட “கலை இலக்கியப் பெருமன்றத்தின்” முட்டம் முகாமில் வாசிக்கப்பட்ட கட்டுரை. 16.05.10)
லும்பினி: புதிய இணையதளம்
அ.மார்க்ஸ், ராஜன் குறை, ரமேஷ் பிரேதன், ஹெச்.ஜி.ரசூல், பொதிகைச் சித்தர், கவுதம் நவ்லக்கா, சேனன், லீனா மணிமேகலை, கொற்றவை, ரணஜித் குஹா, யவனிகா சிறீராம், கு. உமாதேவி, த.அகிலன், இளங்கோ கிருஷ்ணன், தர்மினி, கவின் மலர், அசாதி, ஸ்நேகிதன், இசை, ஷோபாசக்தி ஆகியோரின் எழுத்துகளுடன் புதிய இணையதளம்…
http://www.lumpini.in/punaivu.html
லீனா மணிமேகலையின் புதிய கவிதைகள்
1. வரலாறு
அவள் ஒரு கண்ணாடி
அவளருகே சில கற்கள்
அவள் நேசிக்கும் கற்கள்
அவள் வெறுக்கும் கற்கள்
அவள் முன் பின் அறிந்திராத கற்கள்
2. புள்ளிவிவரம்
ஒவ்வொரு மூன்று நிமிடமும்
ஒவ்வொரு ஐந்து நிமிடமும்
ஒவ்வொரு பத்து நிமிடமும்
ஒரு பெண் மானபங்கம்
ஒரு பெண்
சிசுக்கொலை
ஒரு
பெண்
துன்புறுத்தப்படுதல்
மூன்று எங்கே ஐந்து ஏன் பத்து எப்போது
கைகளுக்கு ஏன் பத்து விரல்கள்
கடந்தேன்
சாலை மிக நீளம்
ஒரு சூயிங் கம்மை விட
கடைக்கார கிழவன் தன் மனைவியை
ஒரு முப்பது நிமிடத்திற்குள் அடித்திருப்பானா
பைக்கில் செல்பவன் தன் வீட்டு சிறுமியின்
முலையைப் பற்றியிருப்பானா
நேற்று
சென்ற வாரம்
கைபேசியில் பத்து கிலோ எடை குறைப்புக்கு
பெண்களுக்குப் பத்து சதவிகிதம் தள்ளுபடி
அறிவிப்பு குறுஞ்செய்தி. எடை குறைத்தால்
ஒவ்வொரு பத்து நிமிடம் என்பது
ஒவ்வொரு பதினைந்து நிமிடம் என்று மாறுமா?
வன்புணர்ச்சிக்கும் எடைக்கும் தொடர்பு உண்டா?
இரண்டு பேருந்துகள் தவற விட்டேன்.
படிக்கட்டில் தொங்கிக் கொண்டு போகும்
இளைஞர்களிடமிருந்து
என் பின்புறத்தைக் காப்பாற்றி கொள்ள வேண்டும்.
என்னருகில் இன்னும் இரண்டு பெண்கள்.
அவர்களுக்கும் பேருந்து ஆண்களிடமிருந்து
தற்காத்து கொள்ள ஏதாவது இருக்கலாம்.
நான்கு, ஆறு, எட்டு
ஒன்பதாம் எண் பேருந்தில் ஏறி விட்டேன்
ஒரு சிறுவன், ஏழு வயதிருக்கும்.
சில வருடங்களில்
அவன் யாரையாவது காதலுக்கு வற்புறுத்தலாம்
இல்லை தன் தங்கையின் பொம்மைகளை
இன்று மாலை உடைக்கலாம்
எண்கள் ஏன் வரிசையாக இல்லை
கடிகாரம் ஏன் வட்டமாக இருக்கிறது
மணி அடிக்கும் போதெல்லாம்
ஒரு திராவகம் ஊற்றப் பட்ட கன்னிமையோ
ரத்தப் பெருக்குத் துணியோ
கொதிக்கும் விந்துவோ
தொடை சூட்டுக் காயமோ
கேஸ் சிலிண்டரோ
நினைவுக்கு வந்து தொலைக்கிறது
என் அம்மாவிடம் கேட்க வேண்டும்.
எருக்கஞ்செடிக்கு தப்பியதால் தான்
என் உடல் நீலமாக இருக்கிறதா என்று
என் எழுத்துக்களும் நீலமாக இருப்பதாகத் தான்
புகார் இருக்கிறது
தொலைக்காட்சி விளம்பரம்
ஒரு சிவந்தப் பெண்ணின் புட்டம்
ஒருவேளை சிவப்பழகு கிரீம் வாங்குவதற்காக
உயிருடன் விட்டு வைக்கப்பட்டிருக்கிறேனா
காபி ஆறிக் கொண்டிருக்கிறது
அதில் மிதக்கும் ஆடை
நாளிதழின்
அடையாளம் தெரியாமல் ஆற்றங்கரையில் ஒதுங்கியிருந்த
பெண் பிணத்தின் கலைந்திருந்த ஆடையை ஒத்திருந்தது
பத்தில் ஒரு பெண் எல்லைகளில் கடத்தப் படுகிறாள்
எதிர்ப்படும் பெண்களில் ஒருவரை
நாளை பார்க்க முடியாமல் போய் விடுவேனா
பக்கத்துக்கு வீட்டுக் குழ்ந்தை காணாமல் போய்விடுமா
என்னை யாரவது எண்ணிட்டிருக்கிறார்களா
எனக்கு உனக்கு அவளுக்கு
ஒவ்வொரு பத்து நிமிடமும் ஒவ்வொரு ஐந்து நிமிடமும்
ஒவ்வொரு மூன்று நிமிடமும்
கடந்து செல்லும் ஆண்களின்
சட்டைப் பைகளை சரி பார்க்க வேண்டும்
அதில் நானறிந்த சிறுமியின் வாசனை இருக்கலாம்.
அல்லது ஒரு வன்மையான வார்த்தை
மேலும் ஒரு வயாக்ரா மாத்திரை
யாரையாவது துன்புறுத்தினாயா
சில மணிநேரங்களுக்குள்
சில மாதங்களுக்குள் யாரையாவது காயப்படுத்தினாயா
சில வருடங்களுக்குள்
யாரையாது வன்நுகர்ந்தாயா
கேள்விகள்
தாய்களில், தங்கைகளில், காதலிகளில்
இருக்கும் பெண்களை விடுவிக்கலாம்
சொந்த ஆண்களில் இருக்கும் ஆணைக் கொல்லலாம்
உடனடி காரணமாக அன்பை சொல்லலாம்
அல்லது ஒன்றிலிருந்து பத்து வரை எண்ணிப் பார்க்கலாம்
3. பசி
இறுதியில்
காவல் அதிகாரி
என் கவிதையைப் பிடித்துக் கொண்டு சென்றார்
விசாரணையின் போது அவர்
கண்களைக் கட்டிக் கொண்டிருந்தார்
ஆடையில்லாத என் கவிதையைக் காண
அவருக்கு அச்சமாக இருந்ததாம்.
குற்றங்கள் விளைவிப்பதே
தன் தலையாயப் பணி என்பதை
என் கவிதை ஒத்துக் கொண்டதால்
அபராதம் அல்லது சிறைத்தண்டனை,
பிணை இல்லையென்று ஆணையிட்ட நீதிபதி
தன் கண்களோடு காதுகளையும் பொத்திக் கொண்டிருந்தார்
என் கவிதை பேசிய சொற்களின் புதிய அர்த்தங்கள்
அவரை திடுக்கிடச் செய்தனவாம்
அபராதம் கட்ட பணம் இல்லாததால்
சிறையிலடைக்கப்பட்ட என் கவிதை
கம்பிகளை மீட்டிக்கொண்டு
சதா பாடல்களை இசைத்தபடியிருந்தது
நாளடைவில் மற்ற கைதிகளும்
ஆடைகளை களைந்தனர்
அவர்கள் பேசத் தொடங்கிய புதிய மொழியால்
அதிகாரிகள் மனம் பிறழ்ந்தனர்
சிறைச்சாலைக்குப் பிடித்த பைத்தியம்
மெல்ல நகரமெங்கும் பரவியது
நிர்வாணம் பெற்ற அந்த நகரத்தில்
அதன்பிறகு
அரசும் இல்லை
குடும்பமும் இல்லை
கலாசாரமும் இல்லை
நாணயங்களும் இல்லை
விற்பனையும் இல்லை
குற்றமும் இல்லை
தண்டனையும் இல்லை
4. வேடிக்கை
நீ உன் சொற்களை
என்னை வல்லுறவு செய்ய ஏவினாய்
மலம் மூத்திரம்
கழுவப்படாத கழிப்பறை
அழுகல் அலறல்
செத்த எலி
வீச்சம் நிணம்
ஊசிய மீன்
வலி உதிரம்
கறை இருள்
பிடுங்கி எறியப்பட்ட உன் விதைப்பைகள்
என்னிடமும் சொற்கள் இருந்தன
அவர்களிடமும் சொற்கள் இருந்தன
அவரவர் விதைப்பைகளின் பாதுகாப்பை
சரி பார்த்துக் கொண்டு வாளா விருந்தன
தோலுரிந்த கவிதை
மேல் தோலுரிந்த கவிதையொன்றை
எழுதிக் கொண்டிருக்கிறேன்
வழுவழுப்பான நிறமற்ற திரவத்தால்
மூடியிருக்கிறது அதன் உடல்
நண்பர்களும் அல்லாதோரும் அந்தரங்கத்தில்
பயம் கொள்கிறார்கள்
ஒதுங்கிக் கொள்ள ரகசியமாய் முடிவு செய்கிறார்கள்
மேல் தோலுரிந்த அபாயம்
எவ்வாறு நிகழ்ந்ததென்று நன்றாக அவர்களுக்குத்
தெரிகிறது. ஆனால் அப்படியில்லையென மறுத்துக்
கொள்கிறார்கள். அப்படி மறுத்துக் கொள்வதன் மூலம்
தற்காலிகமாக அபாயத்தை ஒத்திவைத்துவிட்டோம்
என்று நம்பிக்கை தோன்றுகிறது
மேல் தொலுரிந்த கவிதையொன்றை
எழுதிக் கொண்டிருக்கிறேன்
சக கவிகள் எழுதும் கவிதைகளிலோ
ஆடை அலங்காரங்கள்
அழகிய கைப்பின்னல் பூவேலைப்பாடுகள்
அலங்கரிக்கப்பட்ட கவிதையை எழுதுவது
எவ்வளவு பாதுகாப்பானது?
மூடிய கர்ப்பத்தின் நீர்ப்பையில்
வளரும் சிசு அது
எனது சிசுவோ பாதுகாப்பின்மையின்
உதிரம் கொட்டியபடி வளர்கிறது
மேல் தோலுரிந்தக் கவிதையொன்றை
எழுதிக் கொண்டிருக்கிறேன்
பெரியவர்கள் முகம் சுழிக்க
பிசாசுகள் மோப்பமிட
அதிகாரிகள் அருவருப்படைய
அக்கறை கொண்டவர்கள் எச்சரிக்கை செய்ய
தொலைபேசி இணைப்புகள் கசப்படைய
சாப்பாட்டு மேஜைகள் மெளனம் சுமக்க
பயணங்கள் தனிமை கொள்ள
மேல் தோலுரித்த கவிதையொன்றை
எழுதிக் கொண்டிருக்கிறேன்
சட்டம் ஒழுங்கால் சிறைபிடிக்கிறது அரசு
எரியும் கண்களால் சுடுகிறது நிறுவனம்
துரத்துகிறது குடும்பம்
உரிக்கப்பட்ட தோலை எடுத்து ஆராய்ச்சி செய்கிறது
மனநலக் காப்பகம்
பழைய சன்னியாசிகள்
காலத்தில் மரித்த உயிரைச் சுமந்தபடி
பயணிக்கிறது எங்கள் உடல்
இப்போது அந்நியர்கள்
அதனால் தோலுரிந்திருக்கிறது
கவிதை
லக்ஷ்மி மணிவண்ணன்
(வீரலெட்சுமி தொகுப்பு பக்கம் 64,65)