இரண்டு கவிதைகள்
1
நான் லீனா
நான் இலங்கையில் இந்தியாவில் சீனாவில் அமெரிக்காவில்
ஆப்பிரிக்காவில் செரோஜெவாவில் போஸ்னியாவில் துருக்கியில்
ஈராக்கில் வியட்நாமில் பொலியாவில் ரெமானியாவில்
வாழ்கிறேன்
என் வேலை
என்னிரு தொடைகளையும் எப்பொழுதும்
பரப்பியே வைத்திருப்பது
நாடு கோருபவ்ர்கள்
ஜிகாத் தொடுப்பவர்கள்
புரட்சி வேண்டுபவ்ர்கள்
போர் தொடுப்பவர்கள்
ராஜாங்கம் கேட்பவர்கள்
வணிகம் பரப்புபவர்கள்
காவி உடுப்பவர்கள்
கொள்ளையடிப்பவர்கள்
நோய் பிடித்தவர்கள்
எவன் ஒருவனும்
வன்புணர்வதற்கு ஏதுவாய்
யோனியின் உதடுகளை அரிந்துப் போட்டு
கருங்குழியென செதுக்கி வைத்துக் கொள்ள
சொல்லித் தந்திருக்கிறார்கள்
அம்மா அம்மம்மா அப்பத்தா அத்தை எல்லாரும் ஒருவரே
அவ்வப்போது
காலக்கெடுவில்
லிட்டர் கணக்கில் சேர்ந்துவிடும் விந்துவை
தூர் வாருவதையும்
படிப்பித்திருக்கிறார்கள்
எனக்கு தெரியும்
அறிவாளி ரோகி ஆசிரியன் கலைஞன்
லும்பன் தரகன் மகாராஜா தளபதி
திருடன் கணிப்பொறிக்காரன் போராளி
போதைப்பொருள் விற்பவன் மருத்துவன்
கூலித்தொழிலாளி மாலுமி விவசாயி
கணவன், தந்தை, சகோதரன், மகன்
எல்லோர் குறிகளும் ஒன்றுபோலிருப்பது எப்படி
என்ற ரகசியம்
எனக்கு மொழி தெரியாது
நிறம் கிடையாது
நாகரிகம் தேசம் கொடி அரசாங்கம்
வரலாறு ராணுவம் சட்டம் நாணயம்
ஏதொன்றையும் முகர்ந்துப் பார்த்தாலும்
என் உதிர வீச்சமடிக்கும்
பிரம்மா விஷ்ணு சிவன் புத்தன்
யேசு அல்லா இந்திரன் வர்ணன்
சூரியன் கருப்பசாமி அய்யனார்
ஆகமங்கள் இதிகாசங்கள் காவியங்கள்
யாவும்
கலைக்க முயன்றும்
என் சூலகத்தில்
தங்கிவிட்ட கருக்கள்
அணுகுண்டோ ரசாயனத்துப்பாக்கியோ
ராக்கெட்டோ கன்னிவெடியோ
எறியப்படும் குண்டுகளுக்கு
உடல் செத்தாலும்
யோனிக்கு சாவில்லை
யோனியிலும் சாவில்லை
2.
ஒரு புணர்தலின் உச்சியில் விலகி
அந்தரத்தில் விந்தைப் பீய்ச்சி
தோழர் என்றெழுதினாய்
உடலை உதறி கொண்டு எழுந்து
உலகத் தொழிலாளர்களே ஒன்றுபடுங்கள் என்றார் மார்க்ஸ்
என்று பிதற்றினாய்
கால்களுக்கிடையே தலையை இழுத்தேன்
உபரி என யோனி மயிரை விளித்தாய்
உற்பத்தி உறவுகள் என தொப்புளை சபித்தாய்
லெனின் ஸ்டாலின் மாவோ சி மின்
பீடத்தை ஒவ்வொருவருக்காய் தந்தாய்
முலைகளைப் பிசைந்து சே என்றாய் பிடல் என்றாய்
மனம் பிறழந்த குழந்தை போல மம்மு குடித்தாய்
பிரஸ்த்ரோய்கா, க்ளாஸ்னாஸ்ட் என்று மென்று முழுங்கினாய்
இடையின் வெப்பத்தில் புரட்சி என்றாய்
மூச்சின் துடிப்பில் பொதுவுடைமை என்றாய்
குறியை சப்ப குடுத்தாய்
பெர்லின் சுவர் இடிந்தது
சோவியத் உடைந்தது
எழுச்சி என்றாய்
அமெரிக்கா என்று அலறி ஆணுறை அணிந்தாய்
கீழே இழுத்து
உப்பை சுவைக்க சொன்னேன்
கோகோ கோலா என்று முனகினாய்
மயக்கம் வர புணர்ந்தேன்
வார்த்தை வறண்ட
வாயில் ஒவ்வொரு மயிறாய் பிடுங்கிப் போட்டேன்
இது கட்டவிழ்ப்பு என்றேன்
லீனா மணிமேகலை
நன்றி மணல்வீடு
ஆதித்தாயின் கர்ப்பக் கனவுகளால் பின்னப்பட்ட கவிதைகள் – லக்ஷ்மி சரவணக்குமார்
பெருந்திணைகளின் வழி விரியும் கனவுகளாய் ஆதியின தேவதையொருத்தியின் வேட்கை மொழியில் கட்டற்ற மழையென பீறிட்டு வெளிப்படும் சொற்களின் வழி நிறுவப்பட்ட அல்லது நம்பப்படுகிற ஒழுங்குகளின் மாயைகளை எளிதான மறுதலிப்புகளோடு எழுதிச் செல்கிறது இத்தொகுப்பின் கவிதைகள். பெருங்கனவுகள் அழீத்தொழிக்கப்படும் துயரங்களின் பால் விளைகிற அவசமாய் பெண்ணுலகின் கவிதை மொழி பேசத் தவறுபவை ஏராளம். மீறமுடியாத கட்டுப்பாடுகளென ஒன்றுமில்லை என்பதுடன் அதனைத் தகர்க்க வேண்டியதன் அவசியம் தங்களுக்கிருக்கிறதென்பதை உணர்ந்த பெண்கள் வெகு சொற்பமென்கிற தரவுகள் அறிந்ததுதானெனினும் எழுதப்படுதலின் வழி வெளிப்படும் சுதந்திரம் எதை நோக்கியெல்லாம் நிறைந்து விரிகிறதென்பது கவனிக்கப்பட வேண்டியது.
மொழியின் வேதிமாற்றத்திற்குப் படைப்பின் வழி தம்முடலை உட்படுத்தும் முயற்சியாய்த் தோன்றும் லீனா மணிமேகலையின் கவியுலகம் உடலுக்கான மொழியிலிருந்து முற்றிலும் விடுபட்டு தொன்மத்தில் உறங்கும் புராதன ஓவிய மாந்தர்களின் மொழிக்கான உடலாய் தம்முடலை ஒப்புக் கொடுத்திருக்கிறது. பல்வேறு மடிப்புகளால் கட்டப்பட்ட சிதிலமான கனவுகளாய் வெவ்வேறு தளம் நோக்கின பார்வைகளில் சொல்ல வேண்டிய தீர்மானங்களின் மீதான இறுக்கமிருக்கிறது. தனியொரு பெண்ணுடல் எதிர் நோக்கியிருக்க நேரும் பல்லாயிரம் ஆண் குறிகளும், யுத்த களத்தின் துப்பாக்கி முனைகளும் சதாவும் அப்பெண்களை துரத்தியபடியே தானிருக்கிறது, அல்லது காற்றில் அலைவுற்றபடி தனித் தலையும் பெண்களின் உடல்களின் மேல் அத்து மீறி தங்களை நிறுவியபடியும் அவர்களின் அடையாளங்களை கூச்சமின்றி அழித்துவிடுவதினூடாய் தங்களின் அடையாளங்களை நிறுவிக்கொள்வதிலும் தீவிரமாய் இயங்கிக் கொண்டிருக்கின்றன.
சபிக்கப்பட்டு இறந்துபோன கன்னிமார்களின் ஆசிர்வாதங்கள் கவிமனமாக விரிவடைந்திருப்பதின் நீட்சியாக தம் படைப்பினையும், சொற்களின் வழி விரியும் உலோக, அதியுலோக மொழியுடல்களையும் அக்கன்னிமார்களுக்கே படையலாக்கியிருக்கிறது.
“நூறாயிரம் பிள்ளைக் குழிகள்
தாண்டிய நகருலாவில்
சாமி
தந்தையர்களின் சுன்னிகளை
படையலாகக் கேட்டது”
என்னுமிடத்தினில், மதுவும், புகையும், இரத்தமும் தோலுரிக்கப்பட்ட சதையுடலுமாய் புராதன மனிதர்களின் மூர்க்கம் தெறிக்க தம்முலகை விரித்துப் பார்க்க முயலும்போது எழுதமுடிந்திருக்கிற கவிதைகளாய் அனேகம் வந்திருப்பதனை நூற்றாண்டு விம்மல் என்கிற இறுதிக்கவிதை வரையிலும் பார்க்க முடிகிறது. எங்கெங்கும் இரத்தம் என புறவுலகின் மீதியங்கும் இன்னுமொரு உலகினை ஞாபகப்படுத்துவதனூடாய் அந்தரங்கமாய் படைப்பாளிகளுக்குள் மிகுந்திருக்கும் வன்மங்களனைத்தும் கொட்டிக் தீர்த்துக்கொள்கிறது பேனா.
கதை சொல்லியாய், குறி சொல்லியாய் சதாவும் நீண்டு கொண்டிருக்கிற புனைவுகளுக்குள் தம் ஆன்மாவை உலவ விட்டுவிடுவதின் வழி ஆதியாண்கள் சிலரைக் கண்டடைந்து மீட்டுவர முயற்சிக்கையில் சாம்பானாகவும், அந்தைராவதனாகவும் இன்னும் சில தொன்மங்களின் சாட்சியாகவும் உருமாற்றமடைந்திருக்கின்றன.
“கலவி கூர்புனலைப்
பருகிய கீழுதட்டின்
தூசி ருசி
ஆதிக்கள்
குடித்த மதர்ப்பில்
உடல்களை
புராணங்களுக்குக் கடத்துகிறது…”
என்கிறான் சாம்பான். நிகழ்காலம் செரிக்கவியலாததொரு துயரமாகவே இருப்பதால் தொன்மத்திலும், புராதனத்திலும் கரைந்து போய்விடத் துடிக்கிற இயல்பான படைப்பு மனம் ஒவ்வொரு முறையும் எங்கெங்கோ சுற்றியலைந்துவிட்டு உறங்க மறுத்த மிருகமாய் மீண்டும், மீண்டும் அவ்விடம் நோக்கத் தம்மை நகர்த்திக் கொண்டிருக்கிறது.
ஓர் சமூகத்தின் நிலம்பிடுங்கி எறியப்படும் துயரத்தில் கட்டற்ற வெறிகொள்ளும் அடைபட்ட மனிதர்களின் சதை முதலான உடலை நிதானமாக சுவைப்பதில் குரூர ஆர்வங்கொண்ட அதிகார மையங்களும், மிகுதியானவர்களென தங்களைப் பற்றின மனப்பதிவில் திளைப்பவர்களும் சர்வ நிச்சயமாய் எதிர்கொள்ள வேண்டியதானிருக்கும் மன்னிப்புகளற்ற தண்டனைகளை தம்முடலையே ஆயுதமாய் மாற்றும் உச்சபட்ச போராட்ட முறையின் ‘தற்கொடை’ என விழித்திருந்த சமீபத்திய தமிழ்க் கவிஞர் ஒருவரின் வார்த்தையையும் இவ்விடத்தில் நினைவிற்கு வராமலில்லை. “என் உடலில் சில கன்னிவெடிகளை புதைக்கிறேன்” எனத் துவங்கும் கவிதையில் இயல்பாகவே என் மனம் வன்னிக்காடுகளுக்குள் தான் ஓடியது.
“உன் மேன்மைக்கான தந்திர விளையாட்டுகளுக்கு
போர் எனப் பெயரிடுவாய்
இறையாண்மை என்ற அழித்தொழித்தலின்
ஆற்றலைத் தகர்ப்பேன்
ஒரு தற்கொலையால்
என் மறுமையிலும்”
இன்னும் யுத்த சாட்சியாய் தம்மை மாற்ற விளைகிறபொழுதும் பெண்களுக்கு எல்லாவற்றையும் விட உடலே மாபெரும் ஆயுதமாய் எழுந்திருப்பதுடன் நுட்பமாய் கவனிக்க முடிந்தவொரு விஷயம், போராட்டங்களில் தம்முடல்களில் வெடியேற்றிக் கொள்ளும் ஆணுடலைவிடவும் மிகுதியாயிருப்பது பலசமயங்களில் பெண்ணுடலில்தான்.
வர்ணங்களின் மீதும் மரம், நீர், பாறைகள் உள்ளிட்ட இயற்கையின் மீதும் பறவைகளாய், வண்டுகளாய் அலைந்து திரிந்து கூழாங்கற்களை பொறுக்கியெடுக்கிற சிறுமியின் பரவசத்தோடு அவற்றை கண்டடைந்திருக்கும் மகிழ்ச்சியில் அவற்றோடெல்லாம் உறவாடவும், முயன்றிருக்கின்றன சில கவிதைகள். சாம்பலும், பழுப்பும், அழுத்தமான பதிவென தொடர்வதின் பின்புலமாய் ஏமாற்றங்கள் நிரம்பிய ஓர் ஓவியனின் வரையப்படாத கேன்வாசுக்குள் வினோத ஓவியங்களை தீட்டி முடிக்க வேண்டுமென்கிற முனைப்பும் அச்சித்திரங்களின் மௌன மொழியினையும் தம் கவிதைகளில் பலவிடங்களில் உலவவிட்டிருக்கிறார்.
சிக்சிலியாய் தம்முடலை மாற்றிக்கொள்ளும் வேளைகளில் பறவைகளுக்கேயான ஓர் வெளியை உருவாக்கிக் கொண்டு விடுவதுடன் பறக்க நினைக்கிற ஒவ்வொரு மனிதருக்குள்ளும் ஒளிந்திருக்கின்றன சிறகுகள் என்கிற படிமத்தினையும் பார்க்கமுடிகிறது.
“அம்மணமும் ஆசையுமாய்
ஆலிங்கனத்துக்கு
யோனி விரித்திருக்கின்றன
கனவுகள்
கனவுதோறும் வனங்கள் பெருகின ”
இப்படி எரியும் மூங்கில் குருத்துகளாய் மரம், செடி, கொடிகளாய் ஏதோவொரு கணத்தில் மக்கி மீண்டும் வீர்யத்துடன் பூத்துவிடுகின்றன உடலும், கவிதைகளும். ஆணுடல் மீன்களாகவும் இன்ன பிற வேட்டை விலங்குகளாகவும் சதாவும் கொலைவெறி கொள்ளும் தாபத்துடன் அலைந்துக் கொண்டிருப்பதினால்தான் பெண்ணுடல் மீதான மூர்க்கங்களும், ஏமாற்றங்களும் மாறி மாறி தொடர்ந்துவர நேர்கிறது. அருவருப்புகளாகவும், அசிங்கங்களாகவும், பார்க்கப்படுகிற ரகசிய உறவுகளுக்குப் பின்னாலிருக்கும் மெல்லிய அழகுணர்வும், சிறு நிம்மதியும் சிக்கல் மிகுந்த இச்சூழலிலிருந்து தம்மை விடுவித்து எடுத்துக்கொள்ள முயலும் ஒவ்வொருவருக்குள்ளும் நிகழ்ந்தபடியே இருக்கின்றன என்பதை வலிந்தோ, மௌனமாகவோ ஒவ்வொருவரும் ஏற்றுக்கொண்டே ஆக வேண்டியிருக்கிறது.
“கசந்தும் கிளர்த்தும்
மதுவைப் போல்
ரகசிய உறவுகள்
பிடிக்கவே செய்கின்றன”
என்கிற வரிகளிலிருந்து மேலோட்டமாய் பேசப்பட்டுவரும் அபத்தமான போலி ஒழுக்கங்களை புறந்தள்ளி வீர்யத்துடன் சில புத்தொழுக்கங்களை முன்வைத்திருக்கின்றன ‘பகை பற்றிய படலம்’ என்கிற கவிதையில் நேசம் கொண்டுவிட்டபின் அடைய நேர்கிற ஏமாற்றங்களை சகித்துக் கொள்ள முடியாத மனம்
“நீ சிறிதேனும் நேசித்திருக்கலாம்
இல்லை
தீண்டாமல் இருந்திருக்கலாம்”
என நேசத்தால் வெடிக்க நேர்ந்த கொப்புளங்களில் வழியும் நிணநீரின் வேதனையாய் வழிந்திருக்கிறது.
தூமை குடித்தவன், சாண்டைக் குடித்தவனென்பதை இழிசொல்லாய், பழக்கப்படுத்தி பல காலம் பேசி வந்திருக்கும் சமூகத்தில் தூமை தூமையென்று தன் தூமை கொள்ளும் வளர்சிதை மாற்றங்களை மிகுதியாய் பேசுகின்றன இத்தொகுப்பிலுள்ள கவிதைகள். அடிப்படையில் ஜீவித்திருக்கும் அனேக மனிதப் பிறவிகளும் தூமை குடித்து, உண்டு அதன் வாயிலாகவேதான் ஜனித்திருக்கின்றன. பின் எப்படி இது இழிவானதாய்ப் போனதென்பதுதான் புரியாத முரணாய்க் கிடக்கிறது. ‘பெண்ணின் தூமையை வறுத்து சாண்ட்விச்சில் வைத்துத் தின்றதாய்’ ஓர் ஆண் கவிஞனால் எழுத முடியுமென்றால், தூம கிரஹணம், தூமத்திப்பூ, தூமையின் வயது பதிமூன்று என அதனைக் கொண்டாட ஓர் பெண்ணால் இயலாமல் போய்விடுமா என்ன?
“சாண்டையின்
கட்டற்ற போக்கு
வரைபடத்தின் ரேகைகளை
மாற்றி எழுதிப்
பார்க்கிறது
தோன்றும் புதிய பரப்புகளில்
சூரைத் தீ பற்றுகிறது”
என தூமத்திப் பூவிலும்
“என் தாயின்
தாயின் தாயின் தாயின்
உப்பு
திரவியமாக்கி என்னை
மிதக்க வைத்ததில்
மொழியின் துடுப்புகளும்
வயதிற்கு வந்திருந்தன”
என தூமையின் வயது பதிமூன்றிலும் காண நேர்கிற வரிகள் சராசரி தமிழ் வாசக, படைப்பாளிகளின் மனங்களில் அதிர்வேற்படுத்தக் கூடியதுதான். பெண்ணுலகம் பேச முனைந்திருக்கும் அரசியலின் பார்வையின் இக்கவிதைகளை அணுக நேர்ந்தால் அதனைக் கொண்டாடி மகிழும் ஓர் தன்மை பால் நிலைகளைத் தாண்டி உயிர்பெறக் கூடும்.
தீவிரம் மிகுந்தவொரு வேட்டைகாரியாய் தம் வேட்கையை, ஆளுமையை, இந்நிலத்தின் தொன்மத்தில் புதைந்து கிடக்கும் மறுக்கப்பட்ட வரலாறுகளையென தேடிக்தேடி பேச விளைகின்றன லீனாவின் கவிதைகள். மிகுதியான உப்பினால் ஆன ஓர் வேதி உடலாகவே உலவுவதால் படைப்பின் அடியாழம் தேடின நீந்துதலில் மீன்களாகவும், பறவைகளாகவும் தொடர்ந்து இதுபோல் பயணித்துக் கொண்டிருக்க முடியுமென்பதுதான் மௌன சாட்சியாய் இதனை வாசிக்கிற வாசகனும் இருக்கக்கூடும், இருக்க முடியும்.
உலகின் அழகிய முதல் பெண்,
கவிதைகள்: லீனா மணிமேகலை,
வெளியீடு: கனவுப்பட்டறை,
3, பிரகதாம்பாள் தெரு,
நுங்கம்பாக்கம்,
சென்னை – 600 034.
நன்றி மணல் வீடு ஆகஸ்ட் 2009
சிறந்த மாணாக்கன்
ராணுவத் தளவாடங்களுக்குப் போக
எஞ்சிய பணத்தில்
இளைத்திருந்த அவ்வகுப்பறை
கூலி ஆசிரியர்கள்
அவர்கள்
இன்றும்
என் மகனின் தலையில்
தேசியக் கொடியை ஏற்றுகிறார்கள்
காவியின் மீது
பச்சையின் மீது
வெள்ளையின் மீது
உறுதியேற்கச் சொல்கிறார்கள்
கேள்வியை
சுட்டும் விரலை
கூர்மையான நாக்கை
தொங்கும் வாலை
எதையும்
சக்கரத்தின் ஆரங்களுக்கு
நேர்படுத்துகிறார்கள்
தாய்நாட்டின் பொருட்டு
படையெடுப்பு
அத்துமீறல்கள்
பொருளாதார உதவி
உள்நாட்டுப் போர்
குண்டுவெடிப்பு
ஆயுதம்
கூட்டுக் கொலை
நாடு கடத்தல்
அகதிகள்
நலத்திட்ட முகாம்கள்
உண்வுப் பொட்டலங்கள்
தமதற்ற மக்களையும் கொன்று போடும்
சனநாயகத்தைக் காப்பதின் பொருட்டு
தேசிய கீதத்தை
பிழையில்லாமல் பாடச் சொல்கிறார்கள்
நகரங்களைத் தகர்த்தெறி
சுவர்களை நொறுக்கு
ஆலயங்களை, தொழிற்சாலைகளை, பண்டகசாலைகளை
குடியிருப்புகளை நிர்மூலமாக்கு
வனங்களை கருக்கு
நீங்கள் படைவீரர்கள்
அடிபணியுங்கள்
நகரங்களை சீரமை
சுவர்களை எழுப்பு
ஆலயங்களை, தொழிற்சாலைகளை, பண்டகசாலைகளை
குடியிருப்புகளை மறுபடியும் உருவாக்கு
வனங்களைப் பெருக்கு
நீங்கள் பாட்டாளிகள்
அடிபணியுங்கள்
சீருடையில்
கட்டளைகள் பணிந்திருக்க
காரணங்கள் கேட்காதிருக்க
தண்டனைகள் அஞ்சியிருக்க
சலுகைகள் மகிழந்திருக்க
அரசியல் சாசனத்தில் தேர்ச்சி பெற வைக்கிறார்கள்
இனி
நாடற்ற இனங்களின்
வளங்களை பறித்து
அவர்களது மதுவைப் பருகி
பெண்களைப் புணர்ந்து
சந்தையைப் பழக்கி
கடவுள்களை மாற்றி
எல்லைக்கு தரகு பேசி
பிணை தேசத்தை உருவாக்கும்
நாளைய வல்லரசின்
குடிமகன்
சிறந்த தேசபக்தன்
என் எட்டுவயது மகன்
– லீனா மணிமேகலை
காதலற்ற முத்தங்களும் லெனினும்
ஒரு கோப்பைத் தண்ணீர் கோட்பாட்டை லெனின் சொன்னார் என்றாய்
ஏன் ஆண்டனி
அதை எப்படி குடிப்பது என்பது பற்றி கேட்டாயா
துளி துளியாகவா
ஒரே மூச்சிலா
மிடறு தாகத்திற்கா
இள்ஞ்சூட்டிலா
குளிரூட்டியா
பன்னாட்டு கம்பெனியின் சுத்திகரிக்கப்பட்ட ஒரு போத்தல் நீர்
எவ்வளவு ரூபிள்கள் என்று அவருக்கு சொல்வாயா ஆண்டனி
அமெரிக்க தண்ணீரா தேசிய தண்ணீரா
தடை செயப்பட்ட தண்ணீரா
விவசாய தண்ணீரா
இனி எப்போதுமே மாசுபட்டு விட்ட குழாய் தண்ணீரா
குத்தகை விடப்பட்ட கிண்ற்றுத் தண்ணீரா
திராவக சத்தேறிய மழைத் தண்ணீரா
மொழியாதாய தண்ணீரா, நதி நீங்கிய அணை தண்ணீரா
எல்லையிடப்பட்ட தண்ணீரா
திருட்டு தண்ணீரா
உப்பு அகற்றிய கடல் தண்ணீரா
அரசியல்வாதி ஓட்டாக்கும் தண்ணீரா
ஆண்டனி,
பாலுறவு பிரச்சினையைவிட தண்ணீர் பிரச்சினை எளிதானதல்ல
என்று ஒரு துண்டுப் பிரசுரத்தை நீ எழுத வேண்டும்
கட்சியை விட்டு நீக்குவார்கள் என்று அஞ்சுகிறாயா?
புரட்சி ஏற்பாடுகளுக்கு முன்
லெனினின் கோப்பை கவிழக்கப் பட வேண்டும்
அல்லது
அதில் கொஞ்சம் மதுவை நிரப்ப வேண்டும்
மேலும்
கிளாராக்களால் அவர் காதலிக்கப் பட வேண்டும்
இல்லை
ஃப்ராயிடை அவர் புணர வேண்டும்
– லீனா மணிமேகலை
என்னிடம் அந்தக் கவிதையில்லை
எப்போதும் முடிவுக்கு வராத ஒன்று
பயங்கரவாதத்திற்கு எதிரானது
மொழி பயிற்றுவிக்கப்பட்ட குண்டுகளின் திரிகளில் எல்லைகள்
எல்லைகளுக்குள் வேறு எல்லைகள்
தடுத்துநிறுத்தும் வார்த்தை எதுவும் இந்தக் கவிதையில் இல்லை
வேறு வார்த்தைகள் அதிபர்களிடமிருக்கிறது
வாசகர்கள் விற்பனை செய்யப்ப்ட்டுவிட்டார்கள்
பதுங்கு குழியில் அர்த்தங்கள்
தொலைக்காட்சி, தோட்டாக்களின் ஒரு வார்த்தையை உமிழுகிறது
அப்போது மனிதர்கள் கோப்பைகளில் நிறைகிறார்கள்
கோகோ கோலாவாக
பறவை நோய் தொற்றாக
கிரிக்கெட் மட்டையாக
தொள தொளத்த சவப்பையாக
ஒளி ஒலி காட்சியாக
போர் நடத்தப்படுகிறது நிறுத்தப்படுகிறது
கவசமிடப்பட்ட வாகனங்களிலிருந்து வரலாறு வழிநடத்தப்படுகிறது
அதற்கு தோல்வியுமில்லை அங்கு மனிதருமில்லை
அரசாங்கம் அறிவிக்கும் உறுதிமொழிபோல் கூட இந்தக் கவிதையில்லை
காப்பீட்டுத் திட்டங்கள் கடன் அட்டைகள்
குழந்தைகளின் கையில் ஆயுதங்கள்
அதைத் தடுக்க யத்தனிக்கும் வார்த்தை இறுதிக் கவிதையிலுமில்லை
அது வேறொன்றையும் கூட உணர்த்தவில்லை
டாலரோ ஈரோவோ
நாடற்ற தேசத்தில் கொத்தாய் வளரும்
எண்களிடப்படாத உலக குடில்களில் பரிமாற்ப்படும் கேப்புசினோ
நெல் வயல்களிலிருந்து பிதுங்கி வெளியேறும் புத்தம்புது மகிழ்வுந்துகள்
சொருகியதும் ஈனும் பண இயந்திரம்
இது பற்றிய குறிப்புகளுமில்லை
பொதுவாக அமெரிக்கர்கள் விதிகளுக்கு உட்பட்டது போலவே
விளையாட்டை சரியாக விளையாடத் தெரிந்திருப்பது பற்றியும்
இப்போது
வியட்னாமின் குருதி நினைவிலிருந்து உலர்ந்தது
கம்போடியா வால்மார்ட்டின் வாணிப சிற்ற்ங்காடி
இலங்கை தத்தளிக்கும் போர்ப்படகு
பர்மா, அப்படியொன்றும் இல்லை
இராக்கில் மரணம்
விளம்பர இடைவேளைக்குப்பின் ஒத்திப்போடப்பட்டுள்ள்து
சொல்வதற்கு எதுவுமில்லை செய்வதற்கும்
அமைதி
பழங்காலத்திலிருந்து பெருகிவரும் புன்னகை
பாடப்புத்தகத்திலிருந்து பேரரசர்கள் வெளியேறிவிட்டார்கள்