இரோம் ஷர்மிளா-மணிப்பூரின் அழிக்க முடியாத கவிதை!
நன்றி – புதிய தலைமுறை
“இன்னும் என்னை மரணம் விரும்பாததால்
நான் பிறந்த மண் கங்க்லாய்
சிவந்த மையில் எழுதப்பட்ட புதிய வரலாற்றுப் பக்கமாய்
என் கண்களுக்குள் விரிகிறது
அமைதியின் நறுமணமாய்
கங்க்லாயிலிருந்து
பிரபஞ்சமெங்கும் நான் பரவுவேன்
வரப்போகும் நூற்றாண்டுகளுக்கும் “
– கவிஞர் இரோம் ஷர்மிளா, தன் கவிதைகளில் மரணம் என்ற வார்த்தையை திரும்ப திரும்ப பயன்படுத்துகிறார். ஆனால் சென்ற மாதம் “ரேப் நேஷன் ” (Rape Nation) என்ற என் திரைப்படத்திற்காக மணிப்பூரில் அவரை நேர்காணல் செய்தபோது வாழ்வு குறித்த அவரது தீராத வேட்கையை தரிசித்த உணர்வு தான் கிடைத்தது. இறையாண்மை என்ற பெயரால் மணிப்பூர் மக்களை வகை தொகையில்லாமல் ராணுவம் மூலம் வேட்டையாடும் இந்திய அரசாங்கத்தின் Armed Forces Special Power Act (AFSPA) என்ற கொடிய சட்டத்தை எதிர்த்து பதினான்கு ஆண்டுகளாக வாய்வழி உணவோ, நீரோ அருந்தாமல் உண்ணா நோன்பு மேற்கொண்டு வரும் இந்த போராளி தேவதை பேசும்போது ஒவ்வொரு சொல்லும் மின்னல் துண்டுகளாக விழுகின்றன. வாஞ்சையும் புன்னகையுமாய் வரவேற்கும் அவரின் முகம், தீர்க்கமான கண்கள், சுருள் முடி, வெளுத்த மெல்லிய தேகம், நீள நீளமான நகங்கள், மூக்கில் சொருகப்பட்ட அரசாங்கத்தின் சிரிஞ்ச் என்ற விவரணைகள் இரோமை வரையறுத்துவிட முடியாது. மறுக்க முடியாத, வலிமையான எதிர்ப்பின் பாடலாய், அஹிம்சையின் குறியீடாய் அவரின் இருப்பு வியாபித்திருக்கிறது.
மைதி மொழியில் இச்செ என்றால் சகோதரி. போலீஸ் அதிகாரிகளால் கூட அன்பும் மரியாதையுமாக இச்செ என்றழைக்கப்படும் இரோமை ஒவ்வொரு மணிப்பூரியும் வாழும் சிறுதெய்வமாகத் தான் நேசிக்கிறார்கள். அரசு மருத்துவமனையின் ஒரு பகுதியை பூட்டிய அறையாக மாற்றி ஆயுதமேந்திய காவலர்களை சுற்றிலும் நிறுத்தி மணிப்பூர் அரசாங்கம் இரோம் ஷர்மிளாவை சிறை வைத்திருக்கிறது. சிறைச்சாலை கமிஷனரிடம் ஒரு வாரத்திற்கு முன் எழுதி விண்ணப்பித்து, விளக்கங்கள் சொல்லி, குறிப்பிட்ட வார நாட்களில், இருபது நிமிட சந்திப்பிற்கான அனுமதியை பெற்றேன் . விதவிதமான Teddy Bear மென்பொம்மைகளும், சர்வ தேசங்களிலிருந்தும் வந்திருந்த வாழ்த்து அட்டைகளும், புத்தகங்களும் பரிசுகளும் இறைந்துக் கிடந்த அறையில், மென்மையான ஆனால் திடமான பறவைக் குஞ்சு போல அமர்ந்திருந்த இரோமிடம், ஆயுதமேந்திய ஒரு காவலர் அருகிருந்து கண்காணிக்க உரையாடியது ‘இந்தியா’ என்ற அபத்த நாடகத்தின் காட்சி போல இருந்தது. சந்தித்த அந்தக் குறுகிய நேரத்தில், “ஒருவர் விடாமல் நான் வீர மரணம் (Matryrdom) எய்தவேண்டும் என்று நினைக்கிறார்கள், ஆனால் நான் சாவதற்காக போராடவில்லை, நீதி நிலைத்த வாழ்விற்காக போராடுகிறேன்” என்றார். “ராணுவத்தால் மானபங்கப் படுத்தப்பட்டு, கொலைசெய்யப்பட்ட மனோரமா தொடங்கி எண்ணற்ற பெண்களுக்கும், தன் போராட்டத்திற்கு காரணமான மலோம் சம்பவம் போல வகை தொகையில்லாமல் சுடப்பட்டு இறந்த அப்பாவி மக்களுக்கும், இதற்கான எதேச்சதிகாரத்தை ராணுவத்திற்கு வழங்கியிருக்கும் AFSPA என்ற கொலைகார சட்டத்தை திரும்ப பெறக் கேட்டு தீக்குளித்த சித்தரஞ்சன் போன்ற போராளிகளுக்கும் நீதி கிடைக்க வேண்டும் , அதற்கு உண்மையான ஜனநாயகம் திரும்ப வேண்டும்” என்றும் ஆங்கிலத்திலும் தன தாய்மொழி மைதியிலும் அசைக்க முடியாத உறுதியுடன் பேட்டியளித்தார். என் படங்களைக் குறித்து விவரங்கள் கேட்டுக்கொண்ட அவர், இலங்கையில் நடந்த இனப்படுகொலைகளுக்கு தன் கண்டனங்களை தெரிவித்துக் கொண்டு, ஈழத் தமிழ் மக்களுக்கான சுயநிர்ணய உரிமையைப் பெற்றுத் தர வேண்டுமென்றார். விடுதலைப்புலிகளின் தலைவர் பிரபாகரனுக்குத் தான் ஆதரவுக் கடிதம் எழுதியதை நினைவு கூர்ந்தார். நேரக்கெடு நெருங்க விடைபெறுகிறேன் என்றதும், தன் காதலர் டெஸ்மாண்டின் புகைப்படத்தை ஒரு குழந்தை போல எடுத்துவந்து ஆதுரத்துடன் காண்பித்தார்.அவர் வாழ்க்கையையும், போராட்டத்தையும், காதலையும் அடிப்படையாக வைத்து தோழனும் எழுத்தாளருமாகிய ஷோபாசக்தி எழுதிய திரைக்கதையைப் பற்றி பகிர்ந்துக் கொண்ட போது மகிழ்ந்துப் போனார். காதல் தன் போராட்ட குணத்திற்கு மேலும் வலு சேர்க்கிறதே தவிர சோடை போக வைக்கவில்லை என்ற நம்பிக்கையை தெரிவித்து விட்டு ஆர்வமாக என் கண்களைப் பார்த்தார் . ஆமோதித்தவுடன் கைகளை இன்னும் இறுக்கிப் பிடித்துக்கொண்டார். நெகிழ்வில் உடல் சிலிர்க்க, பாதம் வியர்க்க, பூமி நழுவ, தடுமாறிப் போனது என் நெஞ்சம். அன்பிற்கும் உண்டோ அடைக்குந்தாழ் என்ற திருக்குறளை தமிழ்க் கவிதையென எடுத்து சொல்லி ஆங்கிலத்தில் மொழிபெயர்த்து எழுதி தர, பத்திரப்படுத்திக் கொண்டார் . நானும் கவிதை எழுதும் பெண் தான் என்ற நினைவு குறுக்கிட்டது. ஒன்றும் சொல்லாமல் மெளனமாக வாளாவிருந்தேன். கவிதையின் மீதான சாத்தியங்களை மொழியிலிருந்து அசாதரணமான இருப்பிற்கும் எதிர்ப்பிற்கும் கடத்தியிருந்த இரோமின் உடலுக்கும் உறுதிக்கும் முன் வார்த்தைகள் எனக்கு வசப்படவில்லை.
க்வெண்டானமா(Guantanamo)கைதிகளுக்கு அமெரிக்க அரசாங்கம் செய்வது போல உண்ணாவிரத போராட்டத்தை கையிலெடுக்கும் போராளிகளுக்கு பலவந்தமாக சிரிஞ்ச் மூலம் உணவளித்து கொடுமை செய்யும் இந்திய அரசாங்கம், அவரை அவ்வப்போது விடுவித்து பின் கைது செய்யும் வழக்கமான சடங்கு, சென்ற வாரமும் நடந்ததை செய்தித் தாள்களில் படித்துவிட்டு மணிப்பூர் நண்பர்களிடம் தொலைபேசினேன். இமா (மைதி மொழியில் தாய்) மார்க்கெட் என்றழைக்கப்படும் பெண்களால் நடத்தப்படும் சந்தைக்கு, விடுதலை செய்யப்பட்ட அந்த குறுகிய நேரத்தில் இரோம் சென்றதாகவும், ஆயிரமாயிரம் மக்கள் கூடி அவரை வாழ்த்தியதாகவும் தகவல் சொன்னார்கள். அதைக் காண சகியாத அதிகாரம் குண்டுகட்டாக இரோம் ஷர்மிளாவை தூக்கிக்கொண்டு போய் சிறையில் அடைத்தது எனவும் செய்திகள் மூலம் கேள்விப்பட்டேன். இந்தியா ஒரு தேசமாக தன்னைக் கட்டமைத்துக் கொள்வதற்காக வடகிழக்கு மக்களுக்கு வரலாறு முழுக்க செய்த அநீதிகளுக்கும், இன்னும் தொடர்ந்துக் கொண்டிருக்கும் கொடூரங்களுக்கும் காயாத ரணமாக மணிப்பூர் சாட்சி சொல்லி நிற்கிறது. ஒரு துளி நீர் கூட வாய்க்குள் விழுந்துவிடக்கூடாது என்பதற்காக ஈரப் பஞ்சு வைத்து காய்ந்துப் போன தன உதடுகளை துடைத்துக் கொண்டு வாழும், போராடும் இரோம் ஷர்மிளாவிற்கு முன் அதிகாரம் ஒரு நாள் மண்டியிடும். அப்போது இதுவரை வரலாற்றில் எழுதப்பட்ட கவிதைகள் அனைத்தும் அர்த்தம் பெறும்.
லீனா மணிமேகலை
அச்சமில்லை அச்சமில்லை! – புதிய தலைமுறை நேர்காணல் கட்டுரை
நன்றி – கீதா, 18/01/2014
நிழற்படம் : அறிவழகன்
என் பயணங்களின் வழியே – தொடர்
ராஜபக்சே அரசு, ஜெனீவாவில் ஐநா மனித உரிமைக் கவுன்சிலில் நெருக்கடிகளைச் சந்தித்துக் கொண்டிருக்கும் அதே வேளையில், அவருக்கு இன்னொரு தலைவலியைத் தரும் ஆவணப்படம் பரவலாகத் திரையிடப்படுகிறது. போரின் போது “காணாமல் போன”வர்களின் துயரங்களை ஆதாரங்களோடு முன் வைக்கும் “வெள்ளை வான் கதைகள்” என்ற அந்தப் படத்தைத் தயாரித்து இயக்கியவர் தமிழ்நாட்டைச் சேர்ந்த ஒரு தமிழ்ப் பெண். சானல் 4 உள்ளிட்ட சர்வதேச ஊடகங்கள், NDTV போன்ற தேசியத் தொலைக்காட்சிகள் ஆகியவற்றின் கவனத்தை, ஈர்த்துள்ள லீனா மணிமேகலை, நவீன கவிதை, சினிமா என்று தீவிரமாக இயங்கி வருபவர். நான்கு கவிதை தொகுப்புகளும், தனித்துவமும், துணிச்சலும் கொண்ட பனிரெண்டு சுயாதீன திரைப்படங்களும் அவற்றையொட்டிய பயணங்களுமாய் தனக்கென ஒரு பாதையைத் தேர்ந்தெடுத்து தனித்துவத்துடன் இயங்கி வருபவர். கவிதைக்கும், திரைப்படங்களுக்கும் பல தேசிய, சர்வதேச விருதுகள் பெற்றிருந்தாலும், தான் வாழும் சமூகத்தோடு கூடிய உரையாடலே தன் படைப்புகளுக்கானப் பிரதானப் பணி என்பது அவரது தரிசனம்.
இந்த வாரம் கவிஞர், இயக்குநர் லீனா மணிமேகலை தன்னுடைய பயணங்களை புதிய தலைமுறையுடன் பகிர்ந்து கொள்கிறார்.
விருதுநகர் மாவட்டத்தில் உள்ள ஒரு விவசாயக் குடும்பம் எங்களுடையது. என் அப்பாதான் எங்கள் குடும்பத்தில், முதல் பட்டதாரி ஆனாலும் எங்களுடையது. விவசாயக் குடும்பம்தான். இப்பவும் அப்பாவின் சகோதர்கள் எல்லாம் விவசாயம்தான் செய்கிறார்கள. என் அம்மாவும் இப்போது வரை விவசாயியாகத்தான் இருக்கிறார்.என் அப்பா படித்தது முழுக்கவே சிறப்புத் தமிழ். பி.ஏ.,எம்.ஏ.,எம்.பில்., என்று படித்துப் பட்டம் பெற்றவர்.. அவரின் அடுத்த தலைமுறையாக நாங்கள் படித்தோம்.அப்பா என் அம்மாவிற்கு தாய் மாமா. அதனால் அம்மாவின் மற்ற 2 சகோதரிகள், ஒரு சகோதரர் என்று அனைவரையும் அப்பாதான் படிக்க வைத்தார். என் குடும்பத்தில் முதலில் தொழிற்கல்வி படித்தது நான்தான். பொறியியல் பட்டதாரி. நன்றாகப் படிக்கிற நடுத்தர குடும்பத்து குழந்தைகள் ஒன்று மருத்துவம் படிக்க வேண்டும். இல்லாவிட்டால் பொறியியல் படிக்க வேண்டும். மருத்துவ படிப்பிற்கு என் பெயர் காத்திருப்போர் பட்டியலில் இருந்தும் இடம் கிடைக்கவில்லை. அதனால் என்ஜினியரிங் படித்தேன்.
தாத்தா வெங்கடசாமி, பெரிய தாத்தா சீனிவாசன் எல்லோரும் கம்யூனிஸ்ட் கட்சியில் இருந்தவரகள். தேசியச் செயலாளராக, மாநில செயலாளராக சுதந்திரப் போராட்ட காலத்தில் இருந்தே கட்சியில் பொறுப்பில் இருந்தார்கள். அதனால் எங்கள் வீடு எப்போதும் கட்சி அலுவலகம் போலவே இருக்கும் ஊரில் தினமும் ஏதாவது பஞ்சாயத்து நடக்கும். கம்யூனிஸ்ட் கட்சி பொதுக் கூட்டங்களுக்கு என் வீட்டுப் பெரியவர்கள் போகும்பொழுது என்னையும் அழைத்துப் போவார்கள். பெரும்பாலும் என்னுடைய குழந்தை பருவம் அந்தப் பொதுக்கூட்டங்களில்தான் கழிந்தது.
தாய் மாமாவிற்கு கொடுக்க வேண்டும் என்பதால் சிறிய வயதிலேயே என் அம்மாவிற்கு திருமணம் செய்து வைத்து விட்டார்கள். அம்மா பதின்வயதிலேயே (teen age) குடும்ப பொறுப்பிற்குள் வந்து விட்டதால் தான் விரும்பிய எதையும் என் அம்மாவால் செய்ய முடியவில்லை. அவருக்குள் இயல்பாகவே இருந்த ‘அதை படிக்கனும், இதை தெரிஞ்சிக்கனும், தேடிப் போய் பார்க்கனும்’ என்ற எல்லா விருப்பத்தையும் என் மூலம் செய்தார்.
நான் படித்தது முழுவதும் செங்கல்பட்டு, திருச்சி, சென்னை என்று நகரங்களில் இருந்த கான்வென்ட் பள்ளிகளில். என் அம்மாவின் விருப்பப்படி, திட்டமிட்டபடியேதான் என் குழந்தைப் பருவம் முழுவதும் இருந்தது. காலையில் எழுந்தவுடன் ப்ளேகிரவுண்டுக்கு போக வேண்டும். இயல்பாகவே அத்லெடிக், பேஸ்கட்பால் இரண்டிலும் ஆர்வம் அதிகம் என்பதால் தீவிரமாக பயிற்சி செய்தேன். அதன்பின் பள்ளி வகுப்புகள். வகுப்புகள் முடிந்தவுடன் மாலை 3 மணி முதல் 6 மணி வரை டிராமா கிளப், ஓவியக் கிளப் என்று மாற்றி மாற்றி ஏதாவது ஒரு பயிற்சி நடக்கும்.அதன்பின் பரத நாட்டியப் பயிற்சி. அம்மாவே டான்ஸ் கிளாஸ்சுக்கு அழைத்துப் போவார். எனக்கு நாட்டியம் கற்றுக் கொடுப்பதை ஒரு தவம் மாதிரி செய்தார் என் அம்மா. தொடர்ந்து 10 ஆண்டுகள் 11ம் வகுப்பு வரை பரதம் கற்று கொண்டேன். டான்ஸ் கிளாஸ் முடிந்தவுடன் பாட்டு கிளாஸ். வீட்டிற்கே டீச்சர் வந்து கர்நாடக இசை கற்றுத் தந்தார். என் குழந்தைப் பருவம் முழுவதுமே வகுப்பில் படிக்கும் பாடங்கள் தவிர டான்ஸ், மியூசிக், டிராமா, விளையாட்டு என்று மாறி மாறி ஒரு வகுப்பிலிருந்து இன்னொரு வகுப்பிற்கு போனதுதான் நினைவில் உள்ளது இதனாலேயே கோடை விடுமுறை எப்போது வரும் என்று எதிர்பார்த்துக் காத்திருப்பேன்.
ஏப்ரல், மே இரண்டு மாதமும் அம்மாவின் கிராமமான மகாராஜபுரத்திற்கு போய்விடுவோம். மேற்கு தொடர்ச்சி மலையின் அடிவாரத்தில் உள்ளது அந்த கிராமம். அந்த இரண்டு மாதமும் கிராம வாழ்க்கை. மாங்காய் பறிப்பது, கிணற்றடியில் நீச்சல் அடிப்பது, கபடி விளையாடுவது என்று ஒரு வருடத்தில் இரண்டு மாதங்கள மட்டும் முழுக்க கிராமத்து சூழலில் வாழ்ந்தேன். கிராமத்து சூழலில் வளரும்பொழுது யாரும் சொல்லிக் கொடுக்காமல் ஒரு சில விஷயங்களை எளிதாக தெரிந்து கொள்ள முடியும். குறிப்பாக மனிதர்களுக்கு இடையில் இருக்கும் வேறுபாடுகள். மனிதர்களைப் பிரித்து வைக்கும் ஏற்றத் தாழ்வுகளை கேள்வி கேட்கும் இந்த விஷயங்கள்தான் என்னுடைய முதல் ஆர்வமாக இருந்த்து.
நான் பெண்ணாக இருப்பதால் என் கேள்விகள் என் வீட்டிலிருந்தே ஆரம்பித்தது. பெரியாரின் ‘பெண் ஏன் அடிமையானாள்?” என்ற புத்தகம் 15வயதிலேயே வாசிக்கக் கிடைத்தது. ’தாய்’ நான் வாசித்த முதல் நாவல். வர்க்கம், சாதி, மதம், பாலினம் என்ற பிளவுகள் நம் சமூகத்தில் எவ்வளவு புரையோடிப் போயிருக்கிறது என்பதைப் படிக்க கிடைத்த ஜனசக்தியும், தாமரையும், செம்மலரும், சுபமங்களாவும் யோசிக்க வைத்தது.
பெரியார், அம்பேத்கர், மார்க்ஸ் இவர்கள் மூவரையும் நான் எங்கேயும் தேடிப் போக வேண்டியிருக்கவில்லை. என் வீட்டிலேயே இவர்களின் புத்தகங்கள் இருந்தன. இவர்களைப் படிப்பதற்கும் நடைமுறையில் நம்மைச் சுற்றி நடக்கிற விஷயங்களுக்கும் இருக்கும் தூரங்கள் திகைக்க வைத்தது என் குடும்பத்திற்குள்ளேயே இந்த வேறுபாட்டை பார்க்க முடிந்த்து. இடதுசாரி குடும்பம் என்று சொல்லுவோம், ஆனால் திருமணங்களை வெளியில் செய்ய மாட்டோம். இடதுசாரி குடும்பம் என்று பெருமையாக கூறிக் கொள்வோம். ஆனால் ஊரில் சேரிகள் இருப்பதற்காக வெட்கித் தலைகுனிய மாட்டோம்.’நான் இடதுசாரி’ என்று சொல்வதற்கும் பண்பாட்டு ரீதியாக நாம் நடந்து கொள்வதற்கும் எந்த சம்பந்தமும இருக்காது. வெளிப்படையாக சொல்வதானால் என்னுடைய விமர்சனங்கள எல்லாம் என் வீட்டிலிருந்தேதான் ஆரம்பித்தது.
‘நம்மிடம் ஏன் நிலம் இருக்கிறது? நம் வீட்டில் ஏன் 4 பேர் வேலை செய்கிறார்கள? ஏன் அவர்களிடம் நிலம் இல்லை? சலவைத் தொழிலாளிகள் ஏன் இன்னும் தூக்கு சட்டியில் சோறு வாங்கி செல்கிறார்கள்? நாம் மட்டும் இந்த குறிப்பிட்ட தெருவில் இருக்கிறோம். ஊரைவிட்டு தள்ளி சில தெருக்களில் வீடுகள் உள்ளன. அவர்கள் ஏன் ஊருக்குள் வருவதில்லை?குழந்தைப் பருவத்தில் இதுபோன்ற கேள்விகளை என் வீட்டுப் பெரியவர்களிடம் கேட்கும்போது, ‘பாப்பா எப்படி கேள்வி மேல் கேள்வி கேட்குது பாரு? என்று பாராட்டுவார்கள். தட்டிக் கொடுப்பார்கள். உற்சாகப்படுத்துவார்கள். ஆனால் எந்தக் கேள்விகளுக்கும் பதில் எனக்கு கிடைத்ததில்லை. என் தேடல் அங்கு தொடங்கியது.என் தாத்தாவிடம், ”சரி தாத்தா நீங்க பெரிய கம்யூனிஸ்ட் கட்சி தலைவர். உங்க அண்ணன் பெரிய கம்யூனிஸ்ட் அவரும் கட்சித் தலைவர். என் அப்பா கலை இலக்கிய பெருமன்றத்தில் இருக்கிறார். என் அப்பாவின் பெரிய அண்ணன் நக்சல்பாரியாக இருந்தார். சின்ன அண்ணன் மார்க்சிஸ்ட் கட்சியில் மாவட்ட பொறுப்பில் இருக்கிறார். எல்லாம் சரி. ஆனால் என் பாட்டி என்ன செய்றார்? என் அம்மா, பெரியம்மா, சித்தி என்ன பண்றாங்க? அவங்க ஏன் கட்சியில் இல்லை?”என்று கேட்பேன்.நான் என் வீட்டுப் பெண்களால் வளர்க்கப்பட்டவள். என் வீட்டு ஆண்கள் எல்லோரும் புரட்சி என்று வெளியில் போய்விடுவார்கள். என்னுடைய எல்லாத் தலைமை குணமும், எனக்குப் பிடித்ததை முழு ஈடுபாடுடன் செய்யும் வேகம், அதற்கான முழு அர்ப்பணிப்பு, என்று என்னிடம் இருக்கும் இந்த குணங்கள் எல்லாம் என் வீட்டுப் பெண்களிடம் இருந்து வந்தவை. என்னுடைய விமர்சனங்கள் எல்லாம் என் வீட்டு ஆண்களிடம் இருந்து ஆரம்பித்தது.
நம்மை சுற்றி நடக்கும் எல்லா விஷயங்களுக்கும் நம்மால் தீர்வு கண்டுவிட முடியாது என்பது தெரியும். ஆனால் எந்த விஷயத்தின் மீது நமக்கு ஈடுபாடு இருக்கிறதோ அதைச் சுற்றியேதான் இயங்க முடியும். என்னுடைய கவிதைகளை படித்தால் இது தெரியும். எல்லாமே சுய கேள்விகள், விமர்சனங்கள், அரசியலில் பாலியல் பாகுபாடு, மொழி, கலாசாரத்தின் மேல் இருக்கும் நம்முடைய விமர்சனங்கள, நம் அமைப்பின் ஒடுக்குமுறை வடிவங்கள் மீதான எதிர்ப்பு, இறுகிப் போயிருக்கும் நடைமுறைகள் மீது தொடர்ந்து கேள்விகள் எழுப்புவதற்கு மொழி எனக்கு உதவியது. ஆவணப்படங்களிலும் சரி, கவிதைகளிலும் சரி என்னை பாதிக்கும் விஷயங்களைக் சொல்கிறேன். அதற்கான உரையாடலைக் கலையின் மூலன் நிகழ்த்த முயற்சி செய்கிறேன்.
மாத்தம்மா, பதின்வயதுகளில் தெய்வத்திற்கு நேர்ந்துவிடப்படும் ஒரு குறிப்பிட்ட சமூகத்தின் பெண்களைப் பற்றி பேசிய என் முதல் ஆவணப்படம். ஒரு சமூகத்தில் பெண்ணடிமைத்தனத்தை கட்டுக்குள் வைத்திருக்க கலாசாரம் எவ்வாறு நூதனமாகப் பயன்படுத்தப்படுகிறது என்பதை கேள்வியாக வைத்தேன். பல்வேறு திரைப்பட விழாக்கள் ஒருபக்கம் படத்தை திரையிட்டுக்கொண்டிருக்க, தமிழ்க் கிராமங்களின் வீதிகளில் எல்லாம் இந்தப்படம் திரையிடப்பட்டது. இந்தப்படத்தையும், தலித் பெண்களுக்கு தினந்தோறும் நடக்கும் பாலியல் சித்ரவதைகளைக் குறித்த “பறை” படத்தையும், நானே நேரடியாகவே ஏறக்குறைய 200 கிராமங்களில் திரையிட்டேன். இடதுசாரி, தலித் அமைப்புகளும்,திரைப்பட இயக்கங்களும் தன்னார்வ நிறுவனங்களும், பல்கலைகழகங்களும், கல்லூரிகளும் திரையிடல்களை சாத்தியமாக்கின. சமூக இயக்கங்களுக்கு ஜனநாயகத்திற்கு அடிப்படைத் தேவையான உரையாடலை, விவாதங்களை உருவாக்குவதற்கு ஆவணப்படங்கள் எவ்வளவு வலிமையான ஆயுதங்களாகப் பயன்படுகின்றன என்பதைக் கண் கூடாக பார்க்க முடிந்தது. எதிர்ப்புகளும் பலமாக இருந்தன.
நீ தலித்தா? நீ யார் இதையெல்லாம் கேள்வி கேட்பதற்கு என்று அடையாள அரசியலை முன்வைத்து என்னை தாக்கினார்கள்., ஒரு பக்கம் போலீஸ் விசாரணைக்குப் பதிலளித்துக்கொண்டேதான் மறுபக்கம் “பறை” படத்திற்கான படப்பிடிப்பை நடத்தினேன். சென்ஸார் தடை விதித்தது. 40 நிமிடப் படத்திற்கு 19 கட் கொடுத்தார்கள். தணிக்கைக்கு எதிராக இந்திய, சர்வதேச அரங்குகளில் திரைப்பட இயக்குநர்கள் தொடர்ந்து நடத்தும் போராட்ட முறைகளையும், அவற்றின் நீண்ட நெடிய வரலாறையும் தேடிப் படிக்க இந்தத் தடைகள் உதவின. இங்கு ஒரு மக்கள் சினிமா கலைஞியாக இருக்க வேண்டுமென்றால், அடிப்படையில் கருத்து சுதந்திரப் போராளியாகவும் தயார் படுத்திக்கொள்ள வேண்டிய கட்டாயம் இருக்கிறது.முதல்கவிதை தொகுப்பின் அட்டைப்படத்தில் தொடங்கிய சர்ச்சை, இரண்டாவது தொகுப்பான “உலகின் அழகிய முதல் பெண்” போலீஸ் வழக்குப் பதிவு வரை சென்றது. இந்து மக்கள் கட்சி என் கவிதைப் புத்தகத்திற்கான தடைகோரல் வழக்கைத் தொடர்ந்து, தமிழக அரசின் தொலைத் தொடர்பு மற்றும் ஐடி துறை என் Blogspot தளத்தை முடக்கப் பரிந்துரைத்தது.
ஒவ்வொரு தடையையும் என் அடுத்தடுத்தப் படைப்பின் எரிபொருளாக மாற்றினேன். இரண்டாம் தொகுப்போடு என்னை உயிரோடு புதைத்துவிட துடித்த சக்திகள் ஏமாந்துப் போகும் வகையில், அடுத்தடுத்து இரண்டு தொகுப்புகள் வெளியிட்டேன். தமிழில் ஆவணப்படக் களம் என்பது களமே இல்லாத களம். சினிமா எடுப்பதற்கான மூலதனம் புழங்காத துறை. அப்படியும் எடுத்துவிட்டாலும், வினியோக முறைகள் தென்படாத நிலை, திரையிடலுக்கான தியேட்டர்கள் அற்ற அவலம், தொலைக்காட்சி நிறுவனங்களின் பாரபட்சம் என்று மாற்று சினிமாவுக்கு ஏதுவான சூழல் ஏதுமற்ற நிலை பத்து வருடங்களாக பெரிதாக மாறிவிட வில்லை. ஆனாலும் ஆர்வம் அறுபடாத மனம் என்னைத் தொடர்ந்து அதை நோக்கிச் செலுத்தியது.
ஒரு முழு நீளக் கதைப்படம் (சினிமா) எடுக்க கூடிய பயிற்சியும் வாய்ப்பும் இருந்தும் அதற்கான சூழல் அமைந்தும், செங்கடல் என்ற மக்கள் சினிமாவையே செய்தேன். தனுஷ்கோடி மீனவர்களும், மண்டபம் அகதிகளும், ராமேஸ்வர பொதுமக்களும் பங்கேற்று தங்கள் பாடுகளை தாங்களே நடித்தார்கள். தடை செய்யப்பட்ட எல்லைக்கடலோரப் பகுதிகளில் இருக்கும் அந்த எளிய மக்களின் வாழ்வை உள்ளதை உள்ளவாறு ஒரு ஆவணப்பட இயக்குநரின் ஊடாட்டத்தை இணைத்து படமாக்கினேன். சென்ஸார்போர்ட் படத்தை தடை செய்தது. பத்து மாத சட்டப் போராட்டத்திற்குப் பிறகு உச்சநீதிமன்றத்தின் கிழ் இயங்கும் ட்ரைப்யூனல் எந்த வெட்டும் இல்லாமல் படத்தை விடுவித்தது.
கிட்டத்தட்ட நாற்பது சர்வதேச திரைப்பட விழாக்களில் பங்கெடுத்து, இந்தியன் பனோரமா தேர்வையும் பெற்று, இந்திய சினிமா நூற்றாண்டு கொண்டாட்டங்களிலும் பங்கெடுத்த செங்கடல், அரசியல் படமாததால் சந்தையால் முடக்கப்பட்டது. படத்தை பார்க்காமலேயே தமிழ்தேசிய சக்திகள் அவதூறுகளாலும், பொய்க்கதைகளாலும், கோழைத்தனமான வதந்திகளாலும் தங்கள் கீழ்த்தரமானப் பண்பாட்டு தணிக்கை முறைகளால் இன்றும் படத்தை முடக்கப் பார்க்கிறார்கள்.
பலரது கவனத்தை ஈர்த்த வெள்ளை வேன் கதைகள் படமும் பல சர்ச்சைகளுக்கு உள்ளானது.இலங்கையில் போரின் பெயரால் காணாமல் போனவர்கள் ஏராளம்.. தீடீர் திடீர் என்று. வெள்ளை நிற வேன்கள் வந்து சிலரை உயிரோடு கடத்திக் கொண்டு போகும். அதன் பின் அவர்கள் என்ன ஆனார்கள் என்று யாருக்கும் தெரியாது. அவர்கள் திரும்பி வருவார்கள் எனக் குடும்பத்தினரின் நம்பிக்கை மட்டும் குற்றுயிரும் குலையுயிருமாகத் தவித்துக் கொண்டிருக்கும். அந்தக் குடும்பங்களைப் பற்றிய முழு நீள ஆவணப்படம் “வெள்ளை வேன் கதைகள்”.சந்தேகத்தின் பேரில் விசாரணைக்கு கொண்டு செல்லப்பட்டவர்கள், வெள்ளைவேனில் கடத்தப்பட்டவர்கள், இயக்கப் போராளிகளாக சாட்சியங்களோடு சரண்டைந்தவர்கள், இயக்கத்தால் வலுக்கட்டாயமாக கைது செய்யப்பட்டு போராளிகளாக்கப்பட்டவர்கள், பத்திரிகையாளர்கள், கார்டூனிஸ்டுகள், பாதிரியார்கள், மெளல்விகள், கலைஞர்கள், கேள்வி கேட்டவர்கள், கேள்வி கேட்காதவர்கள், மாணவர்கள், மீனவர்கள் என காணாமல் போகடிக்கப்பட்டவர்களின் கதைகள் இலங்கை அரசின் கொடுமைகளுக்கு எந்தப் பிரிவினரும் தப்பவில்லை என்பதற்கு சாட்சி சொல்கின்றன ‘வெள்ளை வேன் கதைகள்’.இந்தப் படத்தை உருவாக்க இப்படிக் கடத்தப்பட்ட சுமார் 500 குடும்பங்களைச் சந்தித்தேன் இதற்கு கிட்டத்தட்ட உயிரைப் பணயம் வைக்க வேண்டியிருந்த்து. இலங்கையின் வடக்குப் பகுதி ராணுவத்தின் பயங்கர கட்டுப்பாட்டின் கீழ் இருந்தது. ராணுவத்திற்குத் தெரியாமல் யாரும் அந்நியர்கள் நுழைந்து விட முடியாது. பல செக் போஸ்ட்களைத் தாண்டிப் போக வேண்டும். வட இந்தியாவில் இருந்து வந்த டூரிஸ்ட்கள் போல உடையணிந்தும் பேசியும் இந்தப் பகுதிக்குள் நானும் என் குழுவினரும் நுழைந்தோம். அப்படியும் ஒரு இடத்தில் எங்கள் டேப்கள் பறிமுதல் செய்யப்பட்டன. நான் ராணுவத்தால் தடுத்து வைக்கப்பட்டேன் விசாரணைக்கு உள்ளாக்கப்பட்டேன் .இலங்கையிலிருந்து வெளியேற்றப்பட்டேன் . முன்யோசனையாக எடுத்த விஷுவல்களை தனியாக ஒரு ஹார்ட்டிஸ்கில் பிரதி எடுத்து வைத்த்தால் அவை தப்பின. ஆனால் மின்சாரம் எப்போது வரும் எனத் தெரியாத கிராமங்களில் காமெராவின் பாட்டரிக்கு சார்ஜ் போடுவது, பிரதி எடுப்பது எல்லாம் செய்ய வேண்டியிருந்தது.”எப்படி உன் உயிரை, மானத்தைப் பணயம் வைத்து இந்தப்படத்தை எடுக்க முடிந்தது என்று பார்ப்பவர்கள் எல்லாரும் முன் வைக்கும் கேள்வி. தங்கள் உறவுகளை பறிகொடுத்துவிட்டு, இன்றும் தங்கள் தலையைக் குறிவைக்கும் ராஜபக்சே ராணுவத்தின் துப்பாக்கிக்கு அஞ்சாமல், தெருவுக்கு வந்துப்போராடிக் கொண்டிருக்கும் காணாமல் போனவர்களின் குடும்பங்களின் வீரத்திற்கு முன் நானெல்லாம் எம்மாத்திரம்?” என்கிறார் லீனா
ராஜபக்சே அரசுக்கு கடும் நெருக்கடியை தந்துக்கொண்டிருக்கும் காணாமல் போன குடும்பங்களின் போர் சாட்சியமாக ஜெனிவாவில் இந்த மாதம் “வெள்ளை வேன் கதைகள்” திரையிடப்படுவதற்கான முயற்சிகள் நடக்கின்றன . ஏற்கெனவே, கடந்த நவம்பரில், காமன்வெல்த் மாநாடு இலங்கையில் நடந்ததையொட்டி சிறப்பு நிகழ்ச்சியாக சேனல் ஃபோர் படத்தை ஒளிபரப்பியது.
எங்கே என் மனம் போகிறதோ, எங்கே நான் உணர்வுரீதியாக இயக்கப்படுகிறேனோ, அதை நோக்கி என் பயணம் போகிறது. அதற்கு நான் என்னை முழுமையாக ஒப்புக்கொடுத்திருக்கிறேன்.கசக்க கசக்க உண்மைகளைச் சொல்வது எனக்குப் பிடித்திருக்கிறது. முப்பதை தாண்டி என் வாழ்க்கைப் போய்க்கொண்டிருக்கிறது. அடுத்த 30 வருடங்கள் இல்லை அதற்கும் அதிகமாக நான் வாழும் காலம் வரை சமரசமில்லாமல் வாழவே விரும்புகிறேன். அதை நோக்கியே என் பயணம் இருக்கிறது.
மக்களுக்கு எஞ்சியிருப்பது இரும்பும் சாம்பலுமே – குங்குமம் நேர்காணல்
நன்றி நா.கதிர்வேலன்
27.09.2013
இப்பொழுது தமிழ் ஈழம் எப்படியிருக்கிறது?
குண்டுகள் வீசப்படவில்லை. ஷெல்லடி இல்லை. கிபிர் பறப்பதில்லை. சாவுகள் இல்லை. ஆனால் மக்கள் இன்னும் பீதியிலேயே வாழ்கிறார்கள். ஒவ்வொரு அரைமைல் தூரத்திற்கும் ராணுவ சென்ற்றி பாயிண்டுகளை நிர்மாணித்து மக்களை சதா இலங்கை அரசாங்கம் கண்காணித்து வருகிறது. எதிர்ப்பு என்ற உணர்வே மக்களின் மனதிலிருந்தும், உடலிலிருந்தும் கிளம்பிவிடாமல் ஒருவித கிலியையும் மிக கவனமாக தக்க வைத்திருக்கிறது . தன் பிரச்சன்னத்தை புத்த வழிபாடே இல்லாத வடக்கெங்கும் அகல நீளமுமாக விகாரங்களாக கட்டியெழுப்பி வெற்றிக்கொடிகளாக பறக்க விட்டிருக்கிறார் ராஜபக்சே. புலிகளின் நினைவுச் சின்னங்களையெல்லாம் ராணுவ வீரர்களின் நினைவுச் சின்னங்களாக மாற்றி அங்கு இரண்டு ராணுவ வீரர்களையும் பாதுகாப்புக்கு நிறுத்தி வைத்திருக்கிறது அரசாங்கம். மன்னாரிலிருந்து, வவுனியா, கிளிநொச்சி, புதுக்குடியிருப்பு, மாத்தளன், வட்டுவாகல், பொக்கணை, முள்ளிவாய்க்கால், முல்லைத்தீவு வரை, பொதுமக்களை விட ராணுவத்தின் நடமாட்டமே அதிகமிருக்கின்றது. வழி நெடுகிலும் இருக்கும் செக்போஸ்டுகள் ஐக்கிய இலங்கை என்னும் மாயையை ஒருபோதும் யதார்த்தமாக்கப போவதில்லை என்று கங்கணம் கட்டிக்கொண்டு நிற்கின்றன,
விடுதலைப் புலிகள் கோலோச்ச்சிய ஏ 9 ஹைவே இன்று சைனா காசால் பளபளவென மின்னுகிறது. இந்தியா ஏ 9 இணைக்கோட்டில் கொழுப்பு- யாழ்ப்பாண இரயில்வே தடத்தை நேரடியாகவே களத்தில் இறங்கி நிர்மாணித்து வருகிறது. மொட்டைப் பனைகளும், பச்சை பொய்த்த பெருவெளி நிலங்களும், ஆங்காங்கு கண்ணிவெடி கவனம் என்ற அறிவிப்பு பலகைகள் தொங்கும் பாதுகாப்பு வளையங்களும், மிலிட்டரி நடத்தும் ரோட்டோர காண்டீன்களும், , “வடக்கில் வசந்தம், கிழக்கில் உதயம்” என்ற அரசாங்கத்தின் அபிவிருத்தி திட்டங்கள் பற்றிய ராஜபக்சேயின் உருவம் பொதிந்த ஆளுயர விளம்பரத் தட்டிகளும், “ஆஸ்திரேலியாவுக்கு படகில் சென்று சாகாதீர்கள்” அபாய எச்சரிக்கை விளம்பரங்களும், வவுனியாவிலிருந்து யாழ்ப்பாணம் வரையிலான வழிப்பயண காட்சிகள். ஓமந்தை செக்போஸ்ட் மெக்சிகோ – அமெரிக்கா எல்லையை நினைவுபடுத்துகிறது.
விஸ்வமடு – புதுக்குடியிருப்பு – பொக்கணை ஆகிய இடங்களில் பிரபாகரன் வாழ்ந்த பங்கர்களை, கடற்படை – சூசை புழங்கிய இடங்களை, இயக்கத்திடமிருந்து கைப்பற்றிய ஆயுதங்களை – வாகனங்களை – கப்பல்களை – பீரங்கிகளை – சிறைக்கூண்டுகளை ,
“பயங்கரவாதிகள் இருந்த இடங்கள்- பயன்படுத்திய விடயங்கள் ” என்று சிங்களத்தில்/ தமிழில்/ஆங்கிலத்தில் விபரப்பலகைகள் நிறுத்தி மியூசியம் வைத்திருக்கிறார்கள். அவற்றைப் பார்க்க டூரிஸ்டுகள் வந்துப்போய்க்கொண்டிருக்கிறார்கள்.
போரின் வலியை எவ்வளவு தூரம் உணர்ந்து, மறந்து வாழ்கிறார்கள் ?
கவிஞர் நிலாந்தன் எழுதியது போல,
‘மாமிசத்தாலானதும்/சுவாசிப்பதுமாகிய/அனைத்தையும் சுட்டெரித்த பின்/மாமிசத்தாலாகாததும்/துருப்பிடிக்கக் கூடியதுமாகிய இரும்பையெல்லாம்/சேகரித்து உப்புக்களியில் குவித்து வைத்திருக்கிறார்கள்/ மக்களுக்கு எஞ்சியிருப்பது இரும்பும் சாம்பலுமே/
இழவு விழாத குடும்பம் இல்லை. மிஞ்சியிருக்கும் மக்களின் உடல்களில் இன்னும் ஷெல் துண்டுகள், அங்கவீனங்கள், படுகாயங்கள். வேலையில்லை, தொழில் இல்லை, அடிப்படை விசயங்களுக்கு கூட பொருளாதாரம் இல்லை, பிள்ளைகளின் படிப்பை தொடர வசதியில்லை, கடுமையான விலைவாசி, கால்நடையெல்லாம் அழிந்துப்போய் பாலுக்கும் முட்டைக்கும் கூட தட்டுப்பாடு, பொத்தல் வீடுகளில் அரசாங்கம் தந்திருக்கும் தகர ஷீட் களை வைத்து கூரைவேய்ந்து மக்கள் வாழ்கிறார்கள். இந்தியா ஒரு ஐம்பதாயிரம் வீடுகள் கட்டித்தருவதாக அறிவித்து ஆங்காங்கே கட்டுமானப் பணிகள் தெரிகிறது. மிலிட்டரிக்கு அடுத்து என்.ஜி.ஓ போர்டுகள் தான் அதிகம் தெரிகின்றன. கைவிடப்பட்ட வீடுகளில், கட்டடங்களில் எல்லாம் வரவிருக்கும் மாகாணத் தேர்தலுக்கான போஸ்டர்கள் ஒட்டப்பட்டிருக்கின்றன. போரின் அவலங்களைச் சொல்லி கட்சிகள் வாக்குகள் சேகரித்துக்கொண்டிருக்கிறார்கள்,
புலம்பெயர் வாழ்க்கை அநேகமாக முடிந்துவிட்டது. வரப்போக முடியும் சூழ்நிலையை அவர்கள் எப்படி கருதுகிறார்கள்?
சாலைகளில் செவ்விளநிகளை அருந்திக்கொண்டு, தீவின் வெக்கைக்கு பொருந்தாத உடைகளோடு ஐரோப்பா, கனடா, அமெரிக்காவிலிருந்து வந்து போகும் புலம்பெயர் ஈழத்து மக்களை நிறைய காண முடிகிறது. அவரவர் காணிகளைப பாதுகாத்து வரையறுத்து வேலி போட்டு வைத்துவிட்டு செல்பவர்களாகத்தான் பெருபாலானவர்கள் இருக்கிறார்கள். வரப்போக கிடைத்திருக்கும் சூழலை, இலங்கை ரூபாயைக் காட்டிலும் பல மடங்கு மதிப்பு மேலிருக்கும் தங்கள் டாலர்- ஈரோ கரன்ஸி கையிருப்பை யுத்தத்தால் பாதிக்கப்பட்டிருக்கும் மக்களுக்காக பயன்படுத்தும் முடிவை அவர்கள் எடுத்தால் இரும்பை சுரண்டி விற்று வாழ்ந்துக்கொண்டிருக்கும் வன்னிப் பகுதி மக்கள் மீள்வதற்கு உதவியாக இருக்கும்.
குறிப்பாக பள்ளிகூடங்கள். குண்டு வீச்சுகளால் பொத்தலாயிருக்கும் சுவர்களைப் பார்க்க நேர்கையில் இதயம் விண்டு போகிறது. கட்டிடங்கள மறு நிர்மாணம் செய்யப்பட வேண்டும். தமிழ்ப் பிள்ளைகள் பள்ளிப்படிப்பு முடித்து கேம்பஸ் அதாவது பல்கலைக்கழகம் போவது அரிதாகிவருகின்றது. இந்நிலை நீடித்தால், வரும் சந்ததியினர்களின் எதிர்காலம் கடும் பாதிப்புக்குள்ளாகும். குழந்தைகளின் மனநலம் கடுமையான சிக்கலுக்குள்ளாகியிருக்கிறது. தொடந்த இடப்பெயர்வுகள், கண்ணுக்கு முன் நடந்த கோர மரணங்கள் என அவர்களின் கண்களில் இருள் அப்பிக்கிடக்கின்றது.
புலம்பெயர் மக்கள் என்றில்லாமல், நாமெல்லோருக்கும் சேர்த்தே சொல்கிறேன்.விடுமுறைக்கு வந்துவிட்டு ஐரோப்பா, அமெரிக்கா. இந்தியா திரும்பியவுடன், ஐந்தாம் கட்ட ஈழப்போர் என்றெல்லாம் கூச்சல் போட்டுக்கொண்டிருக்காமல் ஆக்கப்பூர்வமாக எதாவது செய்யும் வழிகளைப் பார்க்கவேண்டும்.
காணாமல் போன பிள்ளைகள், திரும்பி வர முடியாத கணவர்கள், போரில் ஊனமுற்ற மக்கள், இவர்கள் எவ்வாறு சுமத்தப்பட்ட அமைதியை எதிர்கொள்கிறார்கள் ?
போரே நடக்கவில்லை என்று கூட கூடிய விரைவில் இலங்கை அரசு சொல்லக்கூடும். அந்த வேகத்தில் அடையாளங்கள் அழிக்கப்படுகின்றன. எல்லாவற்றையும் பூசி மெழுகி வெள்ளை அடிக்கப்படுகின்றன. கோகோ கோலாவும், ஏர் டெல்லும், சாட்டிலைட் டிவி டவர்களும், கார்பட் ரோடுகளும் துரிதகதியில் “அபிவிருத்தி” சாயத்தை பூசிக்கொண்டிருக்கின்றன.
ஆனால் வலிந்து சுமத்தப்பட்ட அமைதி, நிறுத்திவிடமுடியாத, மௌனமான, நெஞ்சைப் பிளக்கும் ஒப்பாரியாக இலங்கைத் தீவை கிழித்துக்கொண்டு தான் இருக்கிறது, நடக்கும் சாலைகளிலும், ஓடும் நதிகளிலும் குவிந்திருந்த பிணங்களை சனங்களின் நினைவுகளிலிருந்து அப்புறப்படுத்த முடியவில்லை. மொத்த வடக்கும் ஒரு மூடப்படாத பங்கர் போல பிளந்துக் காட்சியளிக்கிறது. ஒவ்வொரு வீட்டிலும் ஷெல் துண்டுகளை உடலில் சுமந்துக்கொண்டிருக்கும் மக்கள் காண்பிக்கும் லேசர் ஸ்கான் பிரதிகளைவிட, சரண் அடைந்த கடத்தப்பட்ட மகன்களை, மகள்களை உயிருடன் திருப்பித் தர தாய்மார்கள் கதறும் கதற்லைவிட, மனம்- உடல் பாதிக்கப்பட்டு வருத்தக்காரர்களாக நிற்கும் ஆயிரக்கணக்கான சனக்கூட்டத்தைவிட வேறென்ன போர்குற்றச்சாட்சியங்களை கேட்கிறது இந்த கருணையற்ற உலகம்?
வெளியெ சொல்ல முடியாத போதிலும் பிரபாகரனின் பெயர் இன்னும் எவ்வளவு தூரம் மறக்க முடியாமல் இருக்கிறது?
பிரபாகரனின் சிறு உருவப்படம் கூட இல்லாத, முன்னாள் போராளிகள் தங்கள் அடையாளங்களாக ஒரு நிழற்படம், பேப்பர் கட்டிங் கூட வைத்திருக்க இயலாத சூழல் தான் நிலவுகிறது. சண்டையில் இறந்த முன்னாள் புலிகள் “துயிலும் இல்லங்களை” புல்டோசர் வைத்து சமன்படுத்தி, அதன் மேல் ராணுவ தளங்கள் அமைத்திருக்கிறது அரசாங்கம். பிணங்களைக் கூட அவமதித்து அதன் மூலம் தமிழ்ச்சமூகத்தை தொடர்ந்து அவமானப்படுத்த, காயப்படுத்த முனையும் சிங்களப் பெருந்தேசியம் இருக்கும் வரை தமிழ்த் தேசியம் கொளுந்துவிட்டு எரியத் தான் செய்யும். அதன் எரிபொருளாக பிரபாகரன் இருக்கத்தான் செய்வார். தனிதேசத்தின் தேவைகளை பூகோள ரீதியாக இல்லாமல் ஆக்குவதற்கு எல்லா வேலைகளும் நடந்தேறுகின்றன. வடகிழக்கு மாகாணங்களில் கிழக்கு மொத்தமாகப் பிரிந்துவிட்டது.கிழக்கில் சிங்கள கலப்பும் நடந்து பல் இனங்கள் வாழும் பகுதியாக மாறிவிட்டது. வடக்கிலும் சிங்களக் குடியேற்றம் தொடர்ந்து நடைபெற்று வருகிறது. இந்த எதேச்சதிகாரத்திற்கு மத்தியில் பகைமறப்புக்கு வழியில்லை என்று தான் தோன்றுகிறது. பகைமறப்பு சாத்தியமில்லையெனில் ஐக்கிய இலங்கையும் கேள்விக்குறியே.
தோல்விக்குப்பிறகான, போருக்குப்பிறகான காலகட்டத்தில் சலுகை அரசியல் பேசாமல் உரிமை அரசியல் பேசக்கூடிய குறைந்தபட்ச சனநாயகத்தை தக்கவைத்துக்கொள்ள ஈழத்தமிழ் சமூகம் திண்டாடிக்கொண்டிருக்கிறது. கூடவே , சகோதரக்கொலைகள், துரோகி/ உளவாளி அரசியல் கலாசாரம் இவற்றால் பிளவுண்டிருந்த தமிழ் தேசிய இயக்கங்கள் எல்லாம் இணைந்து ஓரணியில் தேர்தலில் களம் காணும் நிலையை வரலாற்றில் முதன்முதலாக எதிர்கொள்கிறது. ஆனால் “பிரபாகரன் உயிருடன் இருக்கிறார்” என்று பொய்க்கதைகள் பேசிக்கொண்டு ஈழப்பிரச்சினையை தங்கள் அரசியல் ஆதாயங்களுக்காக பயன்படுத்திக்கொண்டிருக்கும் தமிழக அரசியல்வாதிகளையும், ஒபாமாவையும், ஏகாதிபத்தியங்களையும் தங்களைக் காப்பாற்றச் சொல்லிக் கேட்கும் புலம்பெயர் தமிழர்களின் அரசியல்கோதாக்களையும் ஒரு பொருட்டாக கூட,வன்னி சனம் மதிப்பதில்லை.
புலிகளின் இவ்வளவு போராட்டமும், பட்ட பாடும், வீணாகிவிட்டது பற்றி அங்கே நிலவும் கருத்து என்ன ?
புலிகளின் போராட்டக்குணத்தையும் , தியாகத்தையும் கட்டுக்கோப்பான ராணுவ அமைப்பையும் , நிர்வாகத்தையும், தங்களுக்கு அவர்களுக்கு கீழ் இருந்த பாதுகாப்பையும் நினைவு கூறும் மக்கள், கட்டாய ஆள் சேர்ப்பையும், சகோதரக்கொலைகளையும், மாற்றுக் கருத்துக்களை ஏற்றுக்கொள்ளா எதேச்சதிகாரத்தையும், வரலாறு தந்த பல சந்தர்ப்பங்களையும் ஏற்றுக்கொள்ளாமல் ராணுவமார்க்கத்தை மட்டுமே நம்பி மோசம் போனதையும் விமர்சிக்காமல் இல்லை. இன்று இயக்கத்தில் இரண்டாம் கட்ட தலைமையில் இருந்தவர்கள் எல்லாம் அரசாங்கத்தோடு நிற்பதை ஏற்றுக்கொள்ள முடியாமல், “படுதோல்வி” இன்னும் எதையெல்லாம் அனுபவிக்கச் சொல்லுமென மனம் குமைந்துக்கிடக்கிறார்கள் மக்கள்
முள்ளிவாய்க்காலின் கடைசி நேர அவலங்களின் சாட்சியங்களை கண்டு உணர்ந்தீர்களா?
முள்ளிவாய்க்காலின் இறுதிநேர அவலங்கள் வாய் மொழி சாட்சியங்களாகவே இன்று இருக்கின்றன. வட்டுவாகல் பாலத்தில் நின்றுக்கொண்டு கிட்டத்தட்ட ஒரு நாள் முழுதும் கடந்துப்போன மக்களை, நந்திக்கடலில் நடந்தது என்ன என்று கேட்டுக்கொண்டிருந்தேன். அவர்கள் கண்ணீரும் விம்மலுமாக பகிர்ந்துக்கொண்ட ஒவ்வொரு சொல்லிலிருந்தும் பிணங்கள் உருண்டு விழுந்தன. எல்லாப்பக்கத்தாலும் கைவிடப்பட்ட அனாதைத்தனம் அவர்களை ஆட்கொண்டிருக்கிறது. ஒரு கவிதையிலோ, புகைப்படத்திலோ, வீடியோவிலோ, பதிந்துவிட முடியாத பயங்கரமது. குண்டு பொழிந்ததில் பொத்தலாய் கிடக்கும் சில கட்டிடங்களும் மரங்களும் துருவேறிய வாகனங்களும் தவிர மற்ற சாட்சியங்கள் அழிக்கப்பட்டுவிட்டன. கவிஞர் விஜயலட்சுமி எழுதியது போல, வீடுகளில் சாமி படங்களை விட இறந்தவர்களின் படங்கள் பெருகி கிடக்கின்றன.
நவிப்பிள்ளை வந்துப்போன பிறகு கிடைத்த பலன் என்ன?
இன்று கடவுளுக்கு அடுத்ததாக ஈழ மக்கள் நம்பும் ஒரு பெயர் நவிப்பிள்ளை. இலங்கைக்கு விஜயம் செய்த அவரை விரட்டி விரட்டி மக்கள் தங்களைக் காப்பாற்ற சொல்லி கதறியதும், நவிப்பிள்ளை ஜெனிவா சென்றதும், அம்மக்களை விரட்டி விரட்டி இலங்கை சி.ஐ.டியும் ராணுவமும், போலீசும் அச்சுறுத்தியதும் நடந்தேறியது.
நீதி செத்த நாட்டில் நம்பிக்கை இழந்த மக்கள், ஐ.நா இப்போதாவது தலையிட வேண்டும் என கோரிக்கை வைக்கின்றனர்.பிறப்பால் அவர் ஒரு தமிழர் என்பதால் அவர் மீதான தமிழர்களின் எதிர்பார்ப்புக்கள் பெருகி ததும்புகின்றன. அவரும் ஈழ மக்களின் குறைகளை கேட்டுச் சென்றிருக்கிறார்.
ஆனால் நாமெல்லோரும் புரிந்துக்கொள்ள வேண்டிய யதார்த்தம், மனித உரிமை ஆணையாளராக அவர் சிலவற்றை வழிமொழிவார் . அழுத்தமும் தருவார். ஆனால் ஐ.நா.வின் பாதுகாப்பு சபையின் நடவடிக்கைகளில் நேரடியான வகிபாகம் செய்யும் அதிகாரம் ஆணையத்திற்கும் இல்லை, அவருக்கும் இல்லை.
பெரும் திகில் அத்தியாயமாக இருக்கும் காணாமல் போனவர்களின் கதி என்ன? அவர்கள் திரும்ப கிடைக்கும் உத்தரவாதம் உண்டா?
அவர்கள் காணாமல் போகவில்லை. காணாமல் அடிக்கப்பட்டவர்கள். போரில் இறந்தவர்களுக்கு அவர்களின் குடும்பம் அஞ்சலி செய்யலாம். அதிலாவது மனசாந்திக்கு வழியுண்டு. ஆனால் கண்முன்னே விசாரணைக்கு அழைத்துச் செல்லப்பட்டவர்களும், ராணுவத்திடம் சரணடைந்தவர்களும் வருடக்கணக்காக வீடு திரும்பவில்லை என்றால், அந்தக்கொடுமையை மக்கள் எப்படி எதிர்கொள்வது. கணவனின் சாரத்தைக் கட்டிக்கொண்டு அழுதுக்கொண்டிருக்கும் அரை விதவைகளுக்கும் , தங்கள் தந்தையோ, தாயோ திரும்பி விடுவார்கள் என்று தினம் வாசற்படி பார்த்துக்கொண்டும், ஒவ்வொரு கேம்பாக கடிதம் எழுதிக்கொண்டுமிருக்கும் குழநதைகளுக்கும், பிள்ளைகளின் புகைப்படங்களைப் பிடித்துக்கொண்டு சிறைச்சாலைகளுக்கும், நீதிமன்றங்களுக்கும் வருடக்கணக்காக அலைந்துக்கொண்டிருக்கும் தாய்மார்களுக்கும் யார் நீதி பெற்றுத் தருவது?
இதை எழுதும் பத்திரிக்கையாளர்களும் காணாமல் அடிக்கப்பட்டும், பாதிக்கப்பட்டவரகள் பக்கம் நிற்கும் நீதிபதிகள் சொல்லாமல் கொள்ளாமல் மாற்றப்பட்டும் தொடரும் சூழலில் கொலைகார அரசாங்கத்தைப் பற்றிய மேல் முறையீடுகளை யாரிடம் வைப்பார்கள் மக்கள்?
இந்தக்கேள்விகள் என்னைப் பேய் போல விரட்ட கடுமையான நெருக்கடிகளுக்கும், உயிராபத்திற்குமிடையே யாழ்ப்பாணம், கொழும்பு, கிளிநொச்சி, வவுனியா, இரணபாலை, முல்லைத்தீவு, மன்னார், புத்தளம், திரிகோணமலை, கொழும்பு, அம்பாந்தோட்டை ஆகிய இடங்களுக்குப் பயணம் செய்து கிட்டத்தட்ட 60 மணி நேரம் படமாக்கித் திரும்பியிருக்கிறேன். அடுத்த ஜெனிவா கூட்டத்தொடர் தொடங்குவதற்குள் ஒரு முழு நீள ஆவணப்படத்தை எடிட் செய்து, படத்தில் சாட்சியம் சொல்லியிருக்கும் கதாபாத்திரங்களையும் அழைத்துசென்று ஜெனிவாவில் திரையிடும் முயற்சியிலிருக்கிறேன். படத்தில் பங்கு கொண்டவர்கள் தங்கள் உறவுகளின் விதியை தெரிந்துக்கொள்வதற்காகவும், தங்கள் போல எண்ணற்ற பாதிக்கப்பட்டவர்களுக்கு நீதி கிடைக்க வேண்டும் என்ற உறுதிப்பாட்டுக்காகவும், ராணுவத்திற்கும் அரசாங்கத்திற்கும் அஞ்சாது களத்தில் நிற்பவர்கள். அவர்களுக்கும், இலங்கையின் கடுமையான சூழலுக்குள்ளும் மக்களோடு நின்று போராடும் என்னருமை சிவில் இயக்க நண்பர்களுக்கும் இந்த படத்தை அர்ப்பணித்திருக்கிறேன்.
சிங்களப் பொதுமக்களின் மனநிலை எப்படி யிருக்கிறது?
பாசிச இலங்கை அரசாங்கம் வரலாறு நெடுகிலும் சிங்கள மக்களையும் ஒடுக்கியே வருகிறது. ஆயுத இயக்கமாக உருவெடுத்த ஜே.வி.பி கிளர்ச்சியாளர்களை எழுபதுகளின் ஆரம்பத்திலும், எண்பதுகளின் இறுதியிலும் தன் கொடுங்கரங்களால் நசுக்கியது. கிட்டத்தட்ட ஒன்றரை லட்சம் சிங்களர்களை காணாமல் அடித்து, எரித்து, வேட்டையாடி குவியல் குவியலாக புதைத்து கொன்றது. மொத்தம் மொத்தமாக எலும்புகூடுகள் தோண்டி எடுக்கப் பட்டுக்கொண்டிருக்கின்றன. அதில் தங்கள் குடும்ப உறுப்பினர்கள் இருக்கிறார்களா எனப் பார்த்து தரச்சொல்லி நீதினறங்களுக்கு அலைந்துக்கொண்டிருக்கிறது ஆயிரக்கணக்கான சிங்களக் குடும்பங்கள். கடந்த ஆண்டு தோண்டி எடுக்கப்பட்ட மாத்தளை மாஸ் கல்லறையில் ஒன்றாக புதைக்கப்பட்ட நூற்றுக்கும் மேற்பட்ட மக்களின் எலும்புக்கூண்டுகள் கண்டெடுக்கப்பட்டிடுக்கின்றன. வில்பிடா, சூர்யகண்டா, யாக்கலமுல்லா, பெமுல்லா என்று தெற்கில் இப்படியான மாஸ் கல்லறைகளுக்கு தனி வரைபடமே இருக்கிறது.
இருபக்கமும் இனவாத அரசியல் மக்களை துருவங்களாக நிறுத்தி ஆதாயம் பார்க்கின்றது. ராணுவ இலக்குகளாக மாற்றிக் அநியாயத்திற்கு கொல்கிறது. இலங்கைத்தீவின் சாபமது!
முள்ளிவாய்க்கால் என்பதை புலிகளின் முடிவாக மக்கள் நினைக்கிறார்களா?
முள்ளிவாய்க்கால் என்பது முடிவல்ல, “விளைவு” என மக்கள் நினைக்கிறார்கள். காரணங்கள் இல்லாமல் தோல்விகள் நடப்பதில்லை. சுய விமர்சனங்களோடு தோல்விகளை அணுகி பாடங்களை படிக்கச் சொல்லி வலியுறுத்துகிறது வரலாறு. திரும்ப ஆயுதம் தூக்கவோ, உயிர்ப்பலிகள் தரவோ, ஈழத்து சனம் தயாராக இல்லை. நீண்ட காலமாக இழப்பையும் துயரையும் மட்டுமே அனுபவித்த மக்கள் இன்னும் பற்றுறுதியோடு “ஒரு நாள் நீதி வெல்லும்” என்ற நம்பிக்கையை தாங்கள் உண்ணும் பாணின் மீதும் சம்பலின் மீதும் எழுதி உண்கிறார்கள்.
லீனா மணிமேகலை
மரணத்தில் நேசித்தவர்களே சீவியத்திலும் மறவாதிருங்கள்..
நன்றி – தீராநதி செப்டம்பர் 2013
யாழ்ப்பாணத்தில் ஜூலை 20, 21 தேதிகளில் நடைபெற்ற 41 வது இலக்கிய சந்திப்பை பற்றிய குறிப்புகளை எழுதும் இந்த தருணத்தில், ”நாங்கள் எல்லா தரப்புகளாலும் விசாரிக்கப்பட்டவர்கள்” என்ற ஐயா சோ.பதம்நாதனின் சொற்கள் தான் நினைவில் மோதுகின்றன. சிங்களப் பேரினவாதமும், ராணுவவாதத்தை மட்டுமே நம்பிய தமிழ்த் தேசிய விடுதலை இயக்கங்களும் குற்றவாளிகளெனவும், துரோகிகளெனவும் வேட்டையாடியது போக இன்னும் மிச்சமிருக்கும் கலைஞர்கள் உண்மைகளை இரத்தப்பலியென எழுத்தில் கழுவிக்கொண்டிருக்கிறார்கள். அதற்கு சாட்சியாக நிற்கும் புலம் பெயர்ந்த படைப்பாளர்களின் இயக்கமான “இலக்கிய சந்திப்பு” மூன்று தசாப்தங்களைக் கடந்து புலத்தின் கரை சேர, வரலாறு சற்று நெகிழ்ந்து நிற்கிறது.
தேசியம் குறித்த இலக்கிய சந்திப்பின் அரங்கில் பேசிய யதீந்திரா, அல்ஜீரிய சிந்தனையாளர் பிரான்ஸ் ஃபனானின் “தேசியம் என்பது ஒரு வெற்றுக்கூடு” என்ற கூற்றை முன்வைத்து, எப்படி தேசியம் அடிப்படைவாதிகளின் வசமிருந்தால், அவர்களுக்கு சேவை செய்யும், அது இடதுசாரிகள் வசமிருந்தால், இடதுசாரி முகம் காட்டும், அதுவே பயங்கரவாதிகள் வசமிருந்தால் பயங்கர முகம் காட்டும் என தேசியத்தின் பண்பை நாடி பிடித்துக் காட்டினார். இன்று ஈழத்தில் தமிழ்த்தேசியம், ஐக்கிய இலங்கையில் அதிகாரப் பகிர்வு என்ற ஆரம்பகால மிதவாத தேசிய அரசியலுக்கே திரும்பியிருப்பதின் நெருக்குவாரங்களினூடே கலை இலக்கிய செயற்பாட்டாளர்கள் தங்கள் பற்றுக்கோள்களைக் குறித்த விசாரணையில் இறங்கியிருக்கிறார்கள். இன்று கொத்துக்குண்டுகள் விழவில்லையென்றாலும், சிங்களப் பெருந்தேசியம் வடக்கின் ஒவ்வொரு அரைமைலுக்கும் தன் படையணியை நிறுத்தி மக்களை சோற்றுக்கு மட்டுமே வாய்திறக்க அனுமதி கொடுத்து வைத்திருக்கின்றது. சிங்கள காலனியாதிக்கம் – குடியேற்றம், புத்த விகாரங்கள், தாண்டி கல்வி கலாசார தளங்களிலும் ஒருவித மூர்க்கத்துடன் நடந்துக்கொண்டிருக்கிறது. குண்டுகள் துளைத்த வீடுகளையும், காயம்பட்ட பனைகளையும் தென்னைகளையும் விளாத்திமரங்களையும், இன்னும் பிணச்சூட்டில் கொதித்துக்கொண்டிருக்கும் காணிகளையும், உடலில் தங்கிவிட்ட ஷெல்துண்டுகளால் உயிர் பிரிந்தும் பிரியாமல் நடமாடிக்கொண்டிருக்கும் சனங்களையும், சல்லடையாய் நிற்கும் பள்ளிகளையும், காணாமற் போனவர்களுக்காக காத்திருக்கும் நிலப்பாவாடைகளையும், அம்பாரம் அம்பாரமாய நகரும் துயரம்போல ஓடிக்கொண்டிருக்கும் நதிகளையும், அலையற்றுப்போன கடலையும் மீறி ”பகை மறப்பையும், கற்றுக்கொள்ள வேண்டியப் பாடங்களையும்”குறித்து படைப்பாளிகள் பேச விழைந்தது, கவிஞர் கருணாகரனின் கவிதையைப்போல “நடந்து வந்த பாதை நம் காலடியிலேயே முடிந்தது போ” என்ற உணர்வையே தந்தது. ஆனாலும் நம்பிக்கைகளைக் கேட்கின்றது காலம். கடும் சவாலானாலும் படைப்பாளிகள் காலத்தோடு சில பேரங்களை நடத்த தான் வேண்டியிருக்கின்றது.
எரிக்கப்பட்ட யாழ்ப்பாண நூலகம் புனரமைக்கப்பட்டபோது, அன்றைய நாளில் மேயராக இருந்தவர் தலித் என்பதால், அவர் முன்னிலையில் நூலகம் திறப்பு விழா காண்பது தடுக்கப்பட்டது போன்ற சம்பவங்கள் “சாதி” பற்றிய அரங்கில் நினைவுகூறப்பட்டது. யாழ்ப்பாணமும் சாதியமைப்பும் பற்றிய பேசிய தெணியானும், மட்டக்கிளப்பின் சாதியத்தைக் குறித்து விவரித்த குமாரசாமி சண்முகமும், கல்வியில் சாதி ஒடுக்குமுறை நடைமுறைகளை விவாதித்த ஏ.சீ ஜோர்ஜும், சாதிக்கு எதிரான சனநாயக செயற்பாடுகளை டானியல் காலத்திலிருந்து இன்றுவரை பட்டியலிட்ட சீனியர் குணநாயகமும், மொத்தத்தில் நினைவுகூறல்கள் எந்த காப்புறுதிகளையும் தரவல்லவையா என்ற கேள்வியையே எழுப்பினார்கள் இனஒடுக்குமுறைக்கு எதிரான போர், அடைகாத்துக்கொண்டிருந்த சாதிய ஒடுக்குமுறை இன்று குஞ்சுப் பொரித்துக்கொண்டிருக்கிறது என்று அவதானித்த ஐயா தெணியான், விடுதலைப்புலிகளின் அரசியல் விளக்க ஏடு சாதியை பேசக்கூடாது என்று சொன்னதே தவிர சாதிஒழிப்பை முன்னெடுக்கவில்லை என்ற காட்டமான விமர்சனத்தை வைத்தார். தமிழனுக்கு ஈழம் கிடைத்தாலும்,கரையார் தோணி/ வமலர் மத்து/துலுக்கர் தொப்பி/வேதியர் பூநூல்/ காராளர் கலப்பை/வண்ணார் கல்/வேடுவர் வில்லம்பு/வாணிபர் செக்கு/ முற்குகர் எழுத்தாணி/கடையற் கூடை/ கோவிலார் கமல் மலர் /வேந்தர் செங்கோல்/ பண்டாரப்பிள்ளை கைப்பிரம்பு/ வள்ளுவர் மேளம் /திமிலர் பால்முட்டி/ குயவன் குடம் / சேணியர் நூலச்சி /தட்டார் குறடு / அமலர் தேர்க்கொடி/ சாணார் குத்து / அம்பட்டர் கத்திரிக்கோல் / செட்டி தராசு (உதவி திரு.கு.சண்முகம்), என குடிவகுப்புகளுக்குரிய குலவிருதுகளைப் பாடியபடி தான் இருப்பான் போலும். ஆலயப்பிரவேசம், விவாக மறுப்பு போன்ற ஆரம்பபடிநிலையிலேயே சென்றுக்கொண்டிருந்த விவாதநேரமும், இலக்கிய சந்திப்பின் பெரும்பாலான இண்டெலக்சுவல்கள் பெரியாரையும் அம்பேத்காரையும், ஏன் “தலித்” என்ற சொல்லாடலையும் கூட ஏதோ இந்திய இறக்குமதி போன்ற அசூயையுடன் அணுகியதும், சாதி ஒழிப்புக்கான சிந்தனைமட்டமும், வேலைத்திட்டங்களும் இலங்கையில் வெறும் ஆரம்ப படிநிலையிலேயே இருப்பதை உணர்த்தியது. ஆனால், “உங்க ஊரு மாதிரி இங்கே இளவரசன்கள் கொல்லப்பட மாட்டார்கள்” என்ற செய்தி எனக்கு அவசரமாக சொல்லப்பட்டது. பிரதானமாயிருக்கும் இனமுரண் சூழலில் பதுங்கியிருக்கும் சாதிமுரண், இரைதேட புறப்படாது என்பதற்கு எந்த உத்தரவாதமும் இல்லை என்பதை என்னால் அரங்கின் கால மட்டறுப்பால் அங்கு பதிவு செய்ய முடியவில்லை.
இந்தியாவிலிருந்து சிறப்பு அழைப்பாளராய் அழைக்கப்பட்ட லிவிங் ஸ்மைல் வித்யா, தாங்கள் தேசமிருந்தும் பாலின அகதிகளாக வாழ்வதைப் பற்றி உரையாற்றியது, “திருநங்கைகள்” தங்கள் அடையாளத்தைக்கூட வெளிப்படையாக சொல்லிவிட முடியாத யாழ்ப்பாண சூழலை உலுக்கிப் போட்டது.”திருநங்கைகளின் அடிப்படை வாழ்வு, உடல், பாலியல் விழைவுகள், அடையாள அரசியல்” என அரங்கிற்குப்பின்னான விவாதக்களத்தில் கேட்கப்பட்ட கேள்விகளும், வித்யா சொன்ன பதில்களும், படைப்பாளிகளிடையே நிலவும் பாலியல் சிறுபான்மையினர் குறித்த அறிதல் போதாமைகளை இட்டு நிரப்பியது. சந்திப்பிற்கு சென்று வந்த அனுபவங்களை “ஆண்களான நீங்கள், ஏன் புடவை கட்டி நிற்கிறீர்கள் என அவமானப்படுத்தி 5 திருநங்கைகளை பேருந்து நிலையத்தில் சுட்டுக்கொன்ற ஒரு தேசத்தில், பெண் தன்மையோடு இருந்ததால் ஏளனப்படுத்தி இயக்கத்தில் சேர்க்க மறுத்த ஒரு தேசத்தில் திருநங்கைகளை குறித்த புரிதலை இயன்ற மட்டில் செய்வது எனது தார்மீக கடமை” என்று முகநூலில் வித்யா பதிவிட, சர்ச்சைகள் கொடி கட்டி பறந்தன. யதீந்திரா சொன்னதுபோல தேசியம் என்ற வெற்றுக்கூடு அப்போது கலாசாரக் காவலர்களிடம் அகப்பட்டுக்கொண்டது.
“சீமைக்கு போறமுன்னு / சிணுங்காத எம்மவளே /கடல்தாண்டி போறமுனு /கலங்காதடி ராசாத்தி / சிங்களவன் ஊர்போயி /சீக்கிரமா வாருமடி/ ” போன்ற மலையக நாட்டார் பாடல் வடிவங்கள் தான் மலையக இலக்கியத்தின் தோற்றுவாய் என்ற தன் ஆய்வுரையை வாசித்த மல்லியப்பு சந்தி திலகர்,” ‘நீ பார்த்து சலிக்காத/ பொருளென்ன’என்று நீர்/ எனைக் கேட்டால்/ நான் சொல்லும் பதிலிது தான்/ குளிர்மேகம் வாடியிடும் நக்கிள்ஸின் தொடர்கள் தான்/ நான் பார்த்து சலிக்காத பொருள்” என்பேன் நான்” என நீளும் அரு.சிவானந்தனின், 70 களில் இந்தியாவுக்கு நாடு கடத்தப்பட்ட ஒட்டுமொத்த மலையக மக்களின் அழுகுரலாக ஒலிக்கும் “சென்றுவருகிறேன் ஜென்மபூமியே” என்ற கவிதையிலிருந்து தொடங்குகிறது புலம்பெயர் இலக்கியம் என்றார். லெனின் மதிவானத்தின் “ஊற்றுக்களும் ஓட்டங்களும்” திறனாய்வு நூலையும் பேராசிரியர் செ.யேசுராசாவின் கட்டுரைகளையும் சான்றாக முன்வைத்து, மீனாட்சியம்மையை ஈழத்தின் முதல் பெண் கவிஞரெனவும் முன்னிறுத்தினார் திலகர். சிவரமணி தொடங்கி சர்மிளா செய்யித் வரையிலான ஈழப்பெண் படைப்பு வரலாற்றைக் கட்டுடைத்து, “பெண்கள் சொல்லும் சேதிகளைப்” பேசிய சித்ரலேகா மெளனகுரு, ஈழத்தில் துவக்கு தூக்க அனுமதிக்கப்பட்ட பெண்கள் எப்படி அரசியல் விமர்சனம், பாலியல் மதம் போன்ற “விலக்கப்பட்ட” பொருள் குறித்து கவிதைகள் எழுத அனுமதிக்கப்படுவதில்லை என்பதை விவாதித்தார். யுத்த நெருக்குவாரங்களிடையே ”கொலை அரசியல்” விமர்சிக்கப்பட்ட அளவுக்கு ”பாலியல் வன்முறை” அரசியல் பதிவுசெய்யப்பட்டிருக்கிறதா என்ற கேள்விக்கு கிருஷாந்தி, கோணேஸ்வரிகள் என ஒன்றிரண்டு கவிதைகள் மட்டுமே எஞ்சியிருக்கின்றன. சிங்களப் பேரினவாதம், இந்திய அமைதிப்படை, இயக்கப் பூசல்கள் என எல்லா அதிகாரமும் பெண்ணின் உடலை வன்முறைக்கானக் களனாகப் பயன்படுத்தியிருப்பதைப் புள்ளிவிவரங்களால் கணித்துவிடவோ, விசாரணை செய்துவிடவோ முடியாதென்பதே சொல்லப்படாத சேதி.
”அசன்பே சரித்திரம்” ஒரு முஸ்லிமால் எழுதப்பட்டதால், ஈழத்தமிழ் இலக்கிய வரலாற்றின் முதல் புதினமாக அங்கீகரிக்கப்படாமல் மறைக்கப்படுகின்றதா என்று வினவினார் முஸ்லீம் தேசிய இலக்கியம் பற்றிப் பேசிய நவாஸ் செளபி. தொடர்ந்து “முஸ்லீம் பண்பாட்டுருவாக்கங்களும், அண்மைக்கால நெருக்கடிகளும்” என்ற விவாதப்புள்ளியில், இத்ரீஸுடன் இணைந்த அரங்கம், சிங்களப் பேரினவாத அரசாங்கம் பொதுபலசேனா(Bodhu BalaSena) போன்ற அமைப்புகளின் மூலம் இஸ்லாமிய சமூகத்தை தொடர்ந்து அச்சுறுத்தியும் தாக்கியும் வருவதை கண்டனம் செய்தது. இனங்களுக்கிடையே வேற்றுமைகளைக் களைந்து சமரச நடவடிக்கை மேற்கொள்ளும் முயற்சிகள் தொடங்கப்பட்டால் சிங்கள பெரும்பான்மை தமிழர்களிடம் மன்னிப்புக் கோருவதோடு, தமிழர்கள் இஸ்லாமிய சமூகத்திடமும் மன்னிப்பு கோரவேண்டிய வரலாற்றுத் தேவையை அவை ஆமோதித்தது. அரசியல் மற்றும் கலாசார அலகுகளுடன் இன்று உருப்பெற்றிருக்கும் முஸ்லீம் தேசியம் ஈழப்படைப்பிலக்கியத்திலும் தனித்துவத்தைப் பெற்றிருக்கிறது.
பன்மைத்துவத்தை மிக சிரத்தையுடன் நிரல்படுத்திய 41வது இலக்கிய சந்திப்பு, சிங்கள நாவலாசிரியர் லியனகே அமரகீர்த்தியையும், வரலாற்றாளர் நிர்மால் ரஞ்சித் தேவசிறியையும் அழைத்திருந்தது குறிப்பிடத்தகுந்தது. சிங்களப்புனைவிலக்கியத்தில் தமிழ் கதாபாத்திரங்கள் பற்றி பேசிய அமரகீர்த்தி, சிங்களப் படைப்பாளிகளிடையே தென்படும் குற்றவுணர்வென்பது மிக மெல்லியது எனவும், காதலைப் பகிரத் தயாராக இருக்கும் அவர்கள் தேசத்தைப் பகிரத் தயாராய் இல்லை என்ற விமர்சனத்தை வைத்தார். சிங்களப் பொதுமக்களை ராணுவ இலக்குகளாக மாற்றிய புலிகளின் தன்மோகத் தமிழ்தேசியம், சுதந்திரவாத சிங்களப் படைப்பாளிகளையும் எதிர்நிலையில் நிறுத்திவிட்டதெனவும் பதிவு செய்தார். சிங்களப் பெருந்தேசியத்தின் வரலாற்றின் மீது ஆழமான விமர்சனப் பார்வையை வைத்த நிர்மால், இன்று அதன் ஆகக்கோரவடிவமாக உருப்பெற்றிருக்கும் ராஜபக்சேவை வீழ்த்துவது தமிழர்கள் மற்றும் சிறுபான்மையினருக்கு மட்டுமல்லாமல், சிங்களப் பெரும்பான்மையினருக்கும் அத்தியாவசியமானது என்று பேசினார். சந்திப்பு நடந்த சில வாரங்களில் சிங்களப் பகுதியில் ரப்பர்கையுறைதொழிற்சாலையால்மாசுபடும்நன்னீர் நிலைகளைக்காப்பாற்றக்கோரியும்சுத்தமானகுடிநீர்கோரியும்
போராடிய வெலிவேரியாமக்கள்மீதுஇராணுவம்நடத்தியதுப்பாக்கிச்
சூட்டில் 3 பேர்கள் வரைகொல்லப்பட்டார்கள். வடக்குக்கிழக்கில்மட்டுமல்லமுழுஇலங்கையிலும்இராணுவநீக்கம்அவசியம்என்றநிர்மாலின்கருத்தையே இந்நிகழ்வு உணர்த்துகிறது. இனவாத துப்பாக்கிகளின் அதிகாரத்திற்கெதிராக சிங்கள மக்களும், தமிழர்-முஸ்லீம் –மலையகத் தமிழர் சிறுபான்மையினரும் அணிதிரள்வதை காலம் நிர்ப்பந்திக்கும்.
ஷோபாசக்தியைப் பதிப்பாசிரியராகக் கொண்ட, பன்னிரெண்டு நாடுகளிலிருந்து எழுதப்பட்ட எழுபத்தியைந்துக்கும் மேலான பனுவல்களைத் தொகுத்திருக்கும் குவர்னிகா – 41வது இலக்கிய சந்திப்பு மலர், கருணாகரன், தமயந்தி, பானுபாரதி, நவீன் குழுவினரின் அயரா உழைப்பால் சாத்தியப்பட்டு, கருப்பு பிரதி வெளியீடாக வந்திருக்கிறது.சுல்பிகா, சுமதி ரூபன், அசுரா, தேவதாசன், ராகவன், ஸ்ராலின், விஜி, நிர்மலா என்று ஐரோப்பிவிலிருந்தும் கனடாவிலிருந்தும் வந்திருந்த படைப்பாளிகளும் செயற்பாட்டாளர்களும் இலக்கிய சந்திப்பு என்ற இயக்கம் மிகக்கடுமையான தணிக்கைச் சூழலையும் கடந்து, உயிர்ப்பலிகளையும் தாண்டி இன்று யாழ்ப்பாணத்தில் 41வது பதிப்பாக உரையாடல் களம் பெற்றிருப்பதன் வரலாற்று முக்கியத்துவத்தை உளநெகிழ்ச்சியுடன் பகிர்ந்துக்கொண்டனர். ரியாஸ் குரானா, சுமதி சிவமோகன், குணேஸ்வரன், லெனின் மதிவாணம், சிராஜ் மசூர், சோமேசசுந்தரி, தேவகெளரி, அஷ்ரஃபா நூர்தீன், விஜயலட்சுமி, ஞானசக்தி நடராசா, துஷியந்தினி, என்று கிழக்கிலிருந்தும், தெற்கிலிருந்தும், மலையகத்திலிருந்தும் இலக்கிய சந்திப்பில் பங்குகொண்ட ஒவ்வொருவரும், சந்திப்பை நெறிப்படுத்திய கருணாகரனும், ஒருங்கிணைப்பில் உதவிய திருவரங்கன், அகல்யா என்ற இளைய தலைமுறையினரும், சிவில்சமூகம் மேலெழும்புவதையே வருங்காலத்திற்கான நம்பிக்கையாக மீண்டும் மீண்டும் வெவ்வேறு சொற்களின் மூலம், வாக்கியங்களின் மூலம், கருத்துக்களின் மூலம் முன்வைத்தனர்.
கலை-இலக்கிய-பெண்ணிய- ஊடக –பண்பாட்டு – மனித உரிமை செயற்பாட்டாளர்கள் அனைவரும் ஒன்றிணைந்து, அனைத்து தரப்புகளாலும் வஞ்சிக்கப்பட்டு, அனாதரவாய் சந்தியில் நிறுத்தப்பட்டிருக்கும் சனத்திற்கு நீதியைப் பெற்றுத்தரும் பொறுப்பை ஏற்கவேண்டிய அவசியத்தை யாழ்ப்பாணத்தில் நடந்த 41வது இலக்கிய சந்திப்பு அறிவித்திருக்கிறது.
லீனா மணிமேகலை
கவிஞர் – இயக்குநர்
தூரத்து தண்ணி ஆபத்துக்குதவாது – கவிஞர் கருணாகரன் நேர்காணல்
கவிஞர் கருணாகரன் யாழ்ப்பாணம் – 41வது இலக்கிய சந்திப்பின்போது தந்த நேர்காணல்
முப்பது வருடப் போர் ஈழத் தமிழர்களை உலகெங்கும் வீசியெறிய, வீட்டையும் நாட்டையும், சொந்தபந்தங்களையும், இழந்தாலும் ஒட்டிக்கொண்டிருந்த உயிரை வைத்துக்கொண்டு படைப்பாளர்களும், கலைஞர்களும் இயங்கிக்கொண்டு தான் இருந்தார்கள். புலம்பெயர்ந்து வாழும் எழுத்தாளர்கள் மற்றும் இலக்கிய வாசகர்கள் 1988ம் வருடத்திலிருந்து ஐரோப்பாவிலும், கனடாவிலும் நடத்திவந்த இலக்கிய சந்திப்பு நாற்பது தொடர்களைத் தாண்டிய நிலையில், தற்போது வரலாற்றில் முதன் முதலாக நாற்பத்தியொன்றாவது இலக்கிய சந்திப்பை யாழ்ப்பாணத்தில் நடத்தி முடித்திருக்கிறார்கள். வடக்கு, கிழக்குப் பிரதேச படைப்பாளர்களும், முஸ்லீம் தமிழ் எழுத்தாளர்களும், மலையகத் தமிழ் மற்றும் புலம்பெயர் அறிவுஜீவிகளும் துருவ வேறுபாடுகள், இனக்கசப்புகள் கடந்து இலங்கைப் பேரினவாத அரசின் கருத்துச் சுதந்திர அடக்குமுறைகளையும் மீறி, கூடிக் கலந்து பேசி சிந்தனைகளையும் கருத்துக்களையும் எழுத்துக்களையும் பகிர்ந்தது போருக்குப்பின்னான ஒரு அனாதரவான மனநிலைக்கு மருந்தாக அமைந்திருக்கிறது.
ஏழு கோடி மக்கள் வாழும் தமிழ்நாட்டுத் தமிழர்களை விட, சில லட்சங்கள் மக்கள் தொகை கொண்ட ஈழம் தமிழுக்கு செய்த பங்களிப்பு ஏராளம். தமிழின் நவீன உரைநடையை வகுத்த ஆறுமுகநாவலர், தமிழ்ப் பேரகராதியைத் தந்த நா. கதிரவேற்பிள்ளை, தொல்காப்பியப் பொருளதிகாரம் உட்பட பலவற்றை பதிப்பித்த சி.வை.தாதோதரம்பிள்ளை, யாழ்நூலை எழுதிய சுவாமி விபுலானந்தர், தமிழராய்ச்சி மாநாட்டை உருவாக்கிய தனிநாயகம் அடிகளார், தலித் இலக்கியத்தின் முன்னோடி கே.டானியல், மார்க்ஸிய திறனாய்வின் முன்னோடிகள் பேராசிரியர்கள் கைலாசபதி, சிவத்தம்பி, நவீன தமிழ் இலக்கியத்தில் பாலியலை விரிவான பேசுபொருளாக்கிய எஸ்.பொ, நவீன தமிழ்க் கவிதையின் பிதாமகர்களில் ஒருவரான தருமு சிவராம், தமிழ் இலக்கியத்தின் புதிய வகைகளான போர்க்கால இலக்கியம் தந்த கருணாகரன், தமிழ்க்கவி, மலரவன், புலம்பெயர் இலக்கியம் படைத்துக்கொண்டிருக்கும் ஷோபாசக்தி, கலாமோகன், தமிழ் நவீன பெண் எழுத்துகளின் முன்னோடிக் கவிதைகளை எழுதிய மீனாட்சி, சிவரமணி, செல்வி, மைத்ரேயி, ஊர்வசி என்று நீளும் பட்டியல் இலக்கிய சந்திப்பையும் தன்னோடு சேர்த்துக்கொள்கிறது.
யாழ்ப்பாண அஞ்சல் நிலையத்திற்கு வந்து சேர்ந்த “பன்னிரெண்டு நாடுகளிலிருந்து எழுதப்பட்ட எழுபத்தைந்துக்கும். அதிகமான படைப்புகளையும் கொண்ட ’குவர்னிகா’ இலக்கிய மலர்” பொதியைப் பிரித்தபடி நம்முடன் பேசினார் நிகழ்ச்சி ஒருங்கிணைப்பாளர் கவிஞர் கருணாகரன். கால் நூற்றாண்டுக்கும் மேலான படைப்பனுபவத்தைக்கொண்ட கவிஞர் கருணாகரன் நந்திக்கடலிற்குப் பிறகான ஈழத்துக் கலை இலக்கியப் போக்கிற்கு ஒரு முன்னோடி. தேசியவாதிகள், எதிர்த்தேசியவாதிகள், அதிருப்தியாளர்கள், அவதூறாளர்கள் எல்லோருக்குமாக திறந்திருக்கும் வாசல் அவர்.
லீனா மணிமேகலை
……………………………………………………………..
41வது இலக்கிய சந்திப்பு அரசாங்க ஆதரவாளர்களால் நடத்தப்படுகிறது, இப்படி ஒரு சந்திப்பு நடப்பதால் இலங்கையில் எல்லாம் சரியாகவே இருக்கிறது என்ற பிம்பத்தை நீங்கள் உருவாக்க நினைக்கிறீர்கள் என்ற குற்றச்சாட்டுக்கு உங்கள் பதில் என்ன?
இதை முற்றிலுமாக மறுக்கிறேன். தங்கள் கருத்துக்கு உடன்படாதவர்களை தாம் நிராகரிப்பதுடன், பொது வெளியும் நிராகரிக்க வேண்டும் என்ற புலிகள் மற்றும் தமிழ்ப் பெரும்பான்மையின் கடந்த கால – நிகழ்கால அணுகுமுறையின் வழியாக சிந்திக்கப்பட்டுள்ளது. அந்த வழிமுறையின்படியே குற்றச்சாட்டுகள் உற்பத்தி செய்யப்படுகின்றன.
இலக்கியச் சந்திப்பி்ல் யாழ்ப்பாணத்தார், மட்டக்களப்பார், வன்னியார், புலம்பெயர்ந்தோர், மலையகத்தார், ஆண்கள், பெண்கள், மாற்றுப்பாலினத்தவர், இளைஞர்கள், முதியோர் எனப் பல தரப்பினரும் தமிழ்த்தேசியவாதி, முஸ்லிம் தேசியவாதி, இலங்கைத் தேசியவாதி, மலையகத் தேசியவாதி, எதிர்த்தேசியவாதி – புலி ஆதரவாளர், புலி எதிர்ப்பாளர் என வெவ்வேறு அரசியல் தளத்திலிருப்பவர்களும் கலந்து கொண்டதை நீங்கள் பார்த்தீர்கள்.
தனியே ஒரு சாதிப்பிரிவோ, அரசியற் தரப்போ, ஒரு சார்புக்குழுவுக்கான சந்திப்போ இதுவல்ல. அரசியற் சார்புகளோ, விருப்பங்களோ அவரவர்களுக்கென பிரத்தியேகமாக இருக்கலாம். அது வேறு. இலக்கியச் சந்திப்பு வேறு. காயம்பட்ட கடந்த காலங்கள் எம்மை ஒருவரை ஒருவர் நம்பவிடாமல் செய்கிறது. இந்த தீவில் எல்லா சமூகங்களும் கடுமையான மன உளவியல் பாதிப்பில் சிக்குண்டிருக்கிறோம். அரசாங்கமும் அதற்கு விதிவிலக்கல்ல. அரசு அதிகார மையமாக இருப்பதால் படைபலங்களை அனுப்புகிறது கண்காணிக்கிறது. தணிக்கை செய்கிறது. அதிகாரபலம் இல்லாத ஏனைய தரப்பினர் புறக்கணிப்பு செய்கிறார்கள். அதுவும் அரசுக்கு வெளியேயான தணிக்கை செயல்பாடே.
அச்ச உணர்வும், தணிக்கையும் இன்னும் எம்மை ஆட்டிப்படைத்துக் கொண்டுதான் இருக்கிறது. ஆனால் முன்போல், அது ஒரு கொலையை உடனே நிகழ்த்தக்கூடியதாக இல்லை.
நாளை என்னையோ, நிகழ்வில் கலந்துக்கொண்டவர்களையோ உளவுத்துறை அழைத்தும் செல்ல வாய்ப்பிருக்கிறது. ஆனால் பயந்தால் முடியுமா? எல்லாவித நெருக்கடிகளுகெதிராக குரல் கொடுப்பவன் தான் கலைஞன். அதற்காகவேனும் நம்பிக்கையின்மையை கடக்க வேண்டியவனும் அவனே.
படுகொலைகள், கடுமையான இழப்புகள், சிதைவுகள் என உங்கள் ”வன்னி மரணக்குறிப்புகள்” கவிதையில் குறிப்பிடுவது போல சாவரங்காக காட்சியளிக்கும் இந்த மண்ணில் இலக்கிய சந்திப்பின் அவசியம் என்ன?
நெருக்கடிகளை வாழ்ந்தும் இயங்கியும் தான் கடக்க வேண்டியிருக்கிறது. இயங்கினால் தான் மீறவும் மீளவும் முடியும். போருக்கு முன்னும் பின்னும் இங்கே இலக்கியம் இருந்துக்கொண்டே தான் இருக்கிறது. விடுதலைப்புலிகளின் அரசியல் பிரசாரங்களை எடுத்துச் செல்லும் இலக்கியமும், அந்த அணுகுமுறையிலிருந்து மாறுபட்டு ஜனநாயக ரீதியிலான கருத்துப்பரவல்களுக்கும் விமர்சன மரபுக்கும் உட்பட்ட இலக்கியமும் வீர்யத்தோடு எம் வாழ்க்கையைப் பிரதிகளாக்கியிருக்கின்றன.
குண்டுகள் சாதி, பால்நிலை, மதம் பார்த்து விழவில்லை. எல்லோர் மேலும் தான் குண்டுகள் விழுந்தன. சாவு சதா எங்கள் கதவுகளைத் தட்டிக்கொண்டிருந்த காலகட்டத்தில், புலிகள் முதலில் இனரீதியான வெற்றியைப் பெற்றுவிட்டு மற்றவற்றைப் பார்க்கலாம் என நம்பினார்கள். துவக்குகள் தூக்க பலம் பெற்றிருந்த நாங்கள், விமர்சனங்களை எதிர்கொள்ளும் பலமற்றிருந்தோம். அதனாலேயே, இஸ்லாம் சமூகத்தினரை, இனசமத்துவத்தில் நம்பிக்கையோடு இருந்த சிங்கள அறிவுஜீவிகளை, பிராந்திய அரசியல் நேச சக்திகளை, சர்வதேச சமூகங்களை என எல்லோரையும் எதிர்நிலையில் நிறுத்தினோம். தன்னைத் தவிர யாரையும் நேசிக்காத விடுதலை இயக்கத்தால், கொத்து கொத்தாக மக்களைக் காவு கொடுத்தோம். ராணுவபலம் மட்டுமே தமிழர்களுக்கு தேசம் வென்று தரும் என்பது பொய்த்துப்போனது. இன்று தொடங்கிய இடத்திலேயே நிற்கிறோம்.
ஒருகணம் நின்று நம்மை நாமே திரும்பி பார்ப்பதில் என்ன தயக்கம்? அப்படி பார்க்கும்போது நமது தவறுகள் புலப்படும். சுயவிமர்சனம் மட்டுமே இப்போதைக்கு கைகொடுக்கும். படைப்பாளிகளின் கடமை தவறுகளை இனம் காண்பதும், அவற்றைக் களைவதும் தான்.
இன்று சூழல் மாறியிருக்கின்றது. புலிகளை வென்று விட்டோம் என கூப்பாடு போடும் அரசாங்கம் இனியும் மக்கள் மீதான் தன் பொறுப்புகளை தட்டிக் கழிக்க முடியாது. ராணுவத்தை மீளப்பெறுவதும், மக்களை மீள்குடியேற்றம் செய்வதும், அடிப்படை வசதிகளை செய்துக் கொடுப்பதும், சட்ட ஒழுங்கை நிலைநிறுத்துவதும், பொருளாதார நிலைகளை சீருக்கு கொண்டு வருவதும், அபிவிருத்திகளை மக்கள் கண்ணோட்டத்தோடு செய்வதுமான கடப்பாடுகள் எங்களால் தேர்ந்தெடுக்கப்படும் அரசாங்கத்திற்கு உண்டு. ஜனநாயக ரீதியாக பல படிகள் இறங்கிவர வேண்டிய கட்டாயத்தை அரசாங்கத்திற்கு ஏற்படுத்த வேண்டும், அதுவே மாற்றங்களுக்கு வழிவகுக்கும். முற்றுமுதலான மாற்றத்தையும், அதிகாரப்பரவலையும் சாத்தியமாக்க, துரிதமாக்க இலக்கிய சந்திப்பு போன்ற உரையாடல் களங்கள் உதவும்.
அப்படியென்றால் தமிழர்களின் அரசியல் வருங்காலம் “ஈழம்” இல்லையா? தமிழ்நாட்டில் மிகச் சமீபத்தில் கூட மாணவர் போராட்டங்கள் அந்தக் கோரிக்கையைத் தானே முன்வைத்தன?
தமிழகத்திலிருப்பவர்கள் யதார்த்ததைப் புரிந்துக்கொள்ள வேண்டும். தமிழகத்தில் கடந்த இருப்பத்தைந்து ஆண்டுகளாக எண்ணற்ற ஈழ ஆதரவுப் போராட்டங்கள் நடந்திருக்கின்றன. அவற்றால் எங்களுக்கு சிறு பயன் கூட இல்லை. ஈழத்தமிழர்களுக்கான அடிப்படை உரிமைகளைக் பெற்றுத்தருவதில் கூட உதவவில்லை. இனியும் எத்தனைப் போராட்டங்கள் நடத்தினாலும் எமக்குப் பயன் தரப்போவதில்லை. சொல்லப்போனால் நெருக்கடிகளையே தருகிறது.
நாங்கள் தமிழகத்திலுள்ள தமிழ்த் தேசிய கடும்போக்காளர்களைப் போல பவுத்த துறவிகளையும் சிங்கள கலைஞர்களையும் மாணவர்களையும் உதைக்க விரும்பவில்லை. அவர்களுடன் உரையாடவே விரும்புகிறோம்.
ஈழத்தமிழர் பிரச்சினையை தமிழகத்து அரசியல் கட்சிகளும், ஊடகங்களும், சினிமாக்காரர்களும் தங்கள் பிழைப்புக்குத்தான் பயன்படுத்தி வருகிறார்கள். குற்றவுணர்வென்ற பெயரில் நடக்கும் தமிழகத்தின் பொருத்தமற்ற போராட்டங்கள் சுத்த ஏமாற்று நாடகங்கள்.
தூரத்து தண்ணி ஆபத்துக்குவாத கதை தான்.
இலங்கைத் தமிழ் மக்களின் அரசியல் வருங்காலம் இன்றைய சூழலில் சனநாயக அடித்தளத்தை உருவாக்குவதிலும், அதை வளர்த்தெடுப்பதிலும் தான் இருக்கிறது. நாங்கள் வரலாற்றில் விட்ட தவறுகளை மீள்பார்வை பார்ப்பதில் தான் அரசியல் முன்னேற்றம் சாத்தியம். நேர்ந்துவிட்ட போர்க்குற்றங்களுக்கான நீதியைக்கூட அந்தவகையில் மட்டுமே வெல்ல முடியும். கடும்போக்குகளுக்கான காலம் முடிந்தது. பகை மறப்பும், புதிய பாடங்களை படிப்பதும், நல்லிணக்கமும், பல்நோக்கும், உரையாடலும் மட்டுமே சிதைந்துப் போயிருக்கும் எம் சமூகத்திற்கான நம்பிக்கை பாதை.