அவள் காதலிக்கிறாள் – கவிதைகள்
நன்றி – ஆனந்த விகடன்
1.
எட்டிவிடும் தூரம் தான்
மேசையின் மறுபக்கம் அமர்ந்திருந்தாய்
சுவரெல்லாம் சன்னல்கள் கொண்ட அறை அது
மஞ்சள் திரைச்சீலைகளில் கசிந்த மாலை சூரியன்
உன்னை ஒளியால் வரைந்த கோட்டோவியமாக்கியது
நீ அணிந்திருந்த நீல நிற சட்டையின் நூலாக
என் இதயம் நெசவுத்தறியில் சுற்றிக் கொண்டிருந்தது
உன் உதடு பிரிந்து மூடுவதை இமை கொட்டாமல் பார்த்திருந்தேன்
நேர்பார்வையில் ஆழ்கடல் தாவரங்கள் நெளிந்தன
வார்த்தைகள் எதுவும் என் காதில் விழவில்லை
காற்றில் சிகை ஒரு கனவுபோல அசைந்தது
ஏதோ நினைத்துக்கொண்டு லேசாய் சிரித்தாய்
அப்படியே அள்ளி அணைத்துக்கொள்ளலாமென
மனம் அடித்துக் கொண்டதில்
தவற விட்டுவிடுவோமென அஞ்சி
இரண்டு கைகளாலும் கோப்பையை தாங்கிப்பிடித்து
தேநீரை அலுங்காமல் பருகினேன்.
2.
காத்திருக்கிறேன்
காத்திருக்க நேரமே இல்லாதவள் போல
காட்டிக்கொள்ள செய்யும் முயற்சிகளில்
பெரும்பாலும் தோற்றுப்போகிறேன்
சந்திப்பின் ஒரு நொடி கூட
நழுவ விடக்கூடாதென்பதில்
பதட்டமாக இருக்கிறேன்
திட்டமிட்ட நேரத்திற்கு முன்பே வருகை தந்து
திட்டமிட்ட இடத்திற்கு சற்று வெளியே உலாத்துகிறேன்
நாளும் பொழுதும் ஒத்திகை
பார்த்ததையெல்லாம்
காத்திருக்கும் கணங்களில்
மறந்துப்போய் விடுவது எப்படி
என்பதறியாமல்
என்னையே நொந்துக்கொள்கிறேன்
கைகளும் கால்களும்
வார்த்தைகளும் பார்வைகளும்
கூந்தலின் அசைவும்
உடையின் சுருக்கங்களும்
அரும்பும் வியர்வையும்
என்னுடையதே ஆயினும்
என் சொல்பேச்சு கேட்பதே இல்லை
சந்திப்பிற்குப் பிறகும்
சந்தித்த இடத்தை விட்டு அகல முடிவதில்லை
எப்போதும் காத்திருக்கிறவளாகவே இருக்கிறேன்.
அவள் காதலிக்கிறாள்.
லீனா மணிமேகலை
காதல் – கவிதை
நன்றி – குமுதம்
காதல்
உனது கைப்பிடியின்
அந்த சிறுகுகையில்
என்னை ஒளித்துவைத்துக்கொள்
நீ அற்ற நாட்களின்
அனாவசிய வெளிச்சம்
என் கண்களை
கூசச்செய்கிறது
உன் சுவாசத்தின் வழி காற்றையும்
உன் முத்தத்தின் வழி நீரையும்
சுகித்து வாழ்ந்துகொள்கிறேன்
உன் அருகாமை இல்லாத
உலகம்
ஒரு ராட்சச மிருகமாக
மருட்சி கொள்ள வைக்கிறது
இந்த நிமிடத்தில்
என் தலையைக் கோதிவிடும்
உன் விரல்களில்
தஞ்சமடைகிறது என் பிறப்பு
கடவுளின் கருவூலங்கள்
இருண்டு கிடப்பவை
என்னால் அங்கெல்லாம் சென்று
தேடமுடியாது
உன் நெஞ்சின் அடைசலில்
சற்று ஒருக்களித்து படுத்துக்கொள்கிறேன்
எனக்கு வேறு நற்செய்திகள் எதுவும் வேண்டாம்
NINTH ANNUAL PANCHAJANYAM FILM FESTIVAL 2016











செய்வாயா – கவிதை
நன்றி -குமுதம்
செய்வாயா?
நாம் மிகச் சமீபத்தில் இணைந்து எடுத்துக்கொண்ட புகைப்படத்தில்
காலக் கடிகாரத்தின் உடைந்த முள்ளொன்று உயிருடன் படுத்துக் கிடந்தது
அதனிடம் விசாரித்தேன்
நாம் பிரிந்திருந்தோமா என்று
நாம் இப்போது இணைந்துவிட்டோமா என்று அது திரும்பக் கேட்டது
சற்று பொறு, முள்ளின் மறுபாதியை தேடி எடுத்து வருகிறேன் என்றேன்
அது உன்னிடமே இருக்கிறது என்றது
என்னால் கண்டுபிடிக்க முடியவில்லை
உன்னிடம் ஏதும் இருக்கிறதா மச்சான்?
நாம் பேசிக்கொள்ளாத சொற்களினிடையே கிடக்கிறதா என்று பார்ப்பாயா?
நாம் தந்து முடியாத முத்தங்களில் பதுங்கியிருக்கிறதா எனத் தேடுவாயா?
நாம் எழுதிக்கொள்ளாத கடிதங்களின் மடிப்புகளை சற்று கவனிப்பாயா?
நாம் இணைந்திராத இரவுகளில் களவு போயிருக்கும் என்று நினைக்கிறாயா?
நாம் இழந்ததெல்லாம் நதியாக ஓடிக்கொண்டிருக்கிறது என்று ஒருதடவை
தூர தேசத்து தொலைபேசி அழைப்பில் சொன்னாய்!
எந்த நதி? எந்தக் கடல்? எந்த மழை?
அடுத்த தடவை நாம் சந்திக்கும் முன் அந்த முள்ளின் பாதியைக் கண்டுபிடிக்க வேண்டும்
செய்வாயா?