நேர்காணல் – தேவதை ஆவணப்படத்தை முன்வைத்து ஆவணப்பட இயக்குனர் லீனா மணிமேகலையுடன்
http://www.pesaamoli.com/thodar_interview_1.php
ஜெயச்சந்திரன் ஹஸ்மி
தேவதைகள் – நமது கனவுலகத்திலும் கற்பனைகளிலும் சினிமாக்களிலும் வெள்ளை உடை உடுத்திக் கொண்டு, அழகாக, கவலைகள் இல்லாமல், பாடிச் சுற்றிக்கொண்டிருக்கும் தேவதைகளை பார்த்திருப்போம். ஆனால், நிஜ வாழ்வின் தேவதைகளை அடையாளப்படுத்துகிறது ஒரு ஆவணப்படம். ஆம், இந்த தேவதைகள் உழைத்து உண்பவர்கள். வியர்வை சிந்தி சம்பாதிப்பவர்கள். ஆண் பெண் பேதங்களை உடைத்தவர்கள். உழைப்புக்கு ‘பால்’ ஒரு வரையறை இல்லை என்று உணர்த்தியவர்கள். எல்லாவற்றிற்கும் மேல் இவர்கள் பெண்ணைப் பற்றி சமூகம் கொண்டிருக்கும் உள்ளீடுகளை உடைத்தெறிந்தவர்கள். நம்மைச் சுற்றி வாழ்ந்து கொண்டிருப்பவர்கள். கனவு காணும் கண்களை கசக்கி, நம் சமூகத்தை ஆழ்ந்து கவனித்தால், தெருவுக்குத் தெரு இதுபோன்ற தேவதைகளை காணலாம். இவர்கள் நிஜ தேவதைகள். லீனா மணிமேகலை இயக்கத்தில் வந்துள்ள ‘தேவதைகள்’ ஆவணப்படம் உலகத்தோடு நிமிடத்துக்கு நிமிடம் போராடும் மூன்று பெண்களைப் பற்றி பேசுகிறது. இயக்குனர் லீனா மணிமேகலையோடு கலந்துரையாடியதிலிருந்து….
1. முதலில் இந்த தேவதைகள் ஆவணப்படத்திற்கான அடிப்படைக் கரு எங்கிருந்து வந்தது?
தோழர் பவா செல்லதுரையின் வழி ஒப்பாரி கலைஞர் லஷ்மி அம்மாவின் தொடர்பு கிடைத்தது. வசியம் வைக்கப்பட்ட ஒரு ஆடு போல அவர் பின்னாடி சுற்றிக்கொண்டிருந்தேன். மணிமேகலை என்று அறிமுகம் செய்துக்கொண்ட அடுத்த நொடி, மணிமேகலைக்கு ஒரு பாடல் என்று இட்டுக்கட்டி பாடத்தொடங்கிவிட்டார். ஒரு முழுமையான மனுஷி அவர். அவரைப்பற்றி மேலும் பலர் தெரிந்துக்கொள்வதற்கு ஏதுவாக கேமிராவில் ஆவணப்படுத்தலாமா என்று கேட்டேன். உனக்கு எது மகிழ்ச்சியோ அதை செய்துக்கொள் என்றார். தேவதைகளின் விதை அந்த உரையாடல் தான்.
இவரைப்போன்றே அசாதாரணமான வாழ்க்கையை எந்த புகாருமில்லாமல் வாழ்ந்துக்கொண்டிருக்கும் ஆன்மாக்கள் யாரும் இருக்கிறார்களா என்ற தேடலில், விகடன் சரண் மூலம் சேதுராக்கம்மாவையும், பாண்டிச்சேரி சுகுமாரன் மூலம் கிருஷ்ணவேணியம்மாவையும் தொடர்பு கொண்டேன். தேவதைகள் சாத்தியமானது.
2. நான் பார்த்து, ஆவணப்பட திரை முறையில் இது ஒரு வித்தியாச முயற்சியாக பட்டது. மூன்று பெண்களின் கதையை இணைத்து இப்படம் எடுக்க நினைத்தது ஏன்? இப்படத்தின் தன்மைக்கு அது எந்த அளவிற்கு உதவியது ?
என்னிடம் எழுதப்பட்ட ஸ்கிரிப்ட் எதுவும் இல்லை. குறிப்புகள் மட்டுமே இருந்தன. லஷ்மி அம்மா, கிருஷண்வேணியம்மா, சேதுராக்கம்மா என்ற மூன்று பெண்களோடு எனக்கிருந்த உறவும், அன்பும், நாங்கள் ஒருவரையொருவர் அணைத்துக்கொண்டதும் அதன் தாக்கமும் பிம்பங்களாக மாற்றம் பெற்றன. எதையும் திட்டமிடவில்லை. என் ஒளிப்பதிவாளர் சன்னி ஜோசப், ஒலிப்பதிவாளர் நம்பி இருவரும் ஆண்களாக இருந்தாலும், அவர்கள் ஆன்மரீதியாக என் தோழிகள். முடிவுகள் எதையும் எடுத்துவிட தேவையற்ற ஒரு அன்பு எங்களிடையே இருந்தது. அதை மடைமாற்றம் மட்டுமே செய்ய வேண்டியிருந்தது.
3. இந்த மூன்று பெண்களுக்கும் சில பொதுத்தன்மைகள் உள்ளது. பெண்ணியம் சார்ந்த சமூகத்தின் பொதுக்கோட்பாடுகளை உடைத்து, சுயமாக வாழ்பவர்கள் இவர்கள். இவர்கள் மூவரும் உங்கள் வாழ்க்கையில் நீங்கள் சந்தித்தவர்களா இல்லை இப்படத்திற்காக தேடியவர்களா?
பெண்ணியம் என்பதை, பால், பாலின ஏற்றத்தாழ்வுகளை அழித்து சமத்துவத்தைக்கோரும் ஒரு கருத்தியலாகவே நான் நம்புகிறேன்.தேவதைகளின் மூன்று பெண்களும் ஆணுக்கென்றே பணிக்கப்பட்ட உலகங்களை தங்கள் ஆளுமையால் கைப்பற்றியவர்கள். தங்களை ஒடுக்கும் ஆண்களையும் பேரன்பு கொண்டு அணைத்துக்கொள்பவர்கள். யாரளிக்கும் தீர்ப்புகளையும் பொருட்படுத்தாது வாழ்க்கையை ஒரு தீராத வேட்கையோடு வாழ்ந்து தீர்ப்பவர்கள். வெட்டிவிட்ட பாதையல்லாது, தங்களுக்கென்று புதிய பாதைகளை வகுத்துக்கொண்டவர்கள். உண்மையான கதாநாயகர்கள்.
எனக்கு நான் தேடிக்கொண்ட ஆசிரியர்கள். கலையின் போதாமைகளை இவர்களைப்போன்ற ஆளுமைகள் எனக்கு அவ்வப்போது அறிவுறுத்திக்கொண்டே இருப்பார்கள்.
4. இந்த படத்தை பார்த்த என் நண்பன் என்னிடம் கேட்ட கேள்வி இது. ‘இந்த மாதிரி லாம் பொம்பளைங்க இருக்காங்களா டா????’. இது போன்று தான் வாழும் சமூகத்தில் தான் பார்க்கும் பெண்களை வைத்தே பெண்ணினத்தை மதிப்பிடும் சமூகத்தில் இவற்றிலிலுந்து முற்றிலும் மாறுபட்ட பெண்களை படமெடுக்க நினைத்தது ஏன்?
உங்கள் நண்பரை அவரின் தாயாரை, அவர் வீட்டுப் பெண்களை, அன்றாடம் சந்திக்கும் பெண்களை சற்று உற்று கவனிக்க சொல்லுங்கள். நம் பெண்களை பெறுமதியாகப் பார்க்க சொல்லித்தர தவறிய சமூகம் நம் சமூகம். எனக்கு என் தாய் ரமா, பாட்டிகள் ராஜேஸ்வரி, வீரலஷ்மி, பூட்டி நாகம்மா என என் வீடு நிறைய ஹீரோக்கள். பெண்களால் ஆனது என் உலகம். இன்னும் என் தொப்புள் கொடியை அறுத்துக் கொள்ளும் துணிவு வரவில்லை. என் எல்லா புரிதல்களும் அங்கிருந்தே தொடங்குகின்றன. தேவதைகள் கதாபாத்திரங்களின் தன்மைகள் நாமறிந்த பெண்களிலும் நிச்சயம் படிந்திருக்கும். கவனிப்பதும், அதை ஆராதிப்பதும் தான் நமது பாடு.
5. இதில் காட்டப்படும் மூன்று பெண்களின் வாழ்க்கையும் எங்கே இணைகிறது என்று நினைக்கிறீர்கள்?
வாழ்க்கைக்கான வேட்கையில் இணைகிறது. இறப்புக்கு முன்னும் பின்னும் எதிருமான அந்த விநாடியில் இணைகிறது.
6. தனியாக வாழும் போதும், இப்பெண்கள் சில ஆணாதிக்கக் கருத்துக்களுக்கு பழக்கப்பட்டு இருப்பதாகத் தோன்றுகிறதே. ஆண்கள் தான் கடலுக்கு செல்ல வேண்டும், ஆண்கள் தான் வேலைக்கு போக வேண்டும் போன்ற கருத்துக்களை சொல்கிறார்கள். இத்தகைய போக்குகள் இப்பெண்களிடத்தே கூட இன்னும் மாறவில்லையா?
யாவும் அவள் தொழிலாம் என்ற கருத்து அவர்களின் மூலம் நிரூபணமாகிறது.
நமது கலாசாரம், தூமையின் பொருட்டு பெண்களை தூய்மையற்றவர்களாய் கருதும் கலாசாரம். மீனவப்பெண்கள் மீன் தொழிலுக்கு அனுமதிக்கப்படுவதில்லை. சேதுராக்கு தான் நம்பும் கடவுள், அப்படி தனக்கு சொல்லவில்லை என்கிறார்.
வெட்டியான் என்பதற்கு பெண்பதம் நம் மொழியில் இல்லை. கிருஷ்ணவேணி அனாதைப் பிணங்களை புதைப்பதும் எரிப்பதுமான பணியை சமூக, குடும்ப பகிஷ்கரிப்பைத் தாண்டி செய்து காட்டுகிறார். வெட்டியாள் என்ற சொல்லை தமிழுக்கு தருகிறார்.
சாவு நடக்கும் வீட்டில், தாரை தப்பட்டையோடு ஆடும் பெண்களை நாம் யாரும் பார்த்திருக்க மாட்டோம். லக்ஷ்மி அதையும் போற்றுதலுக்குரிய தொழிலாக மாற்றி கம்பீரமாக செய்து வருகிறார். 5000 வார்த்தைகளைப்பேசி 550 ரூபாய் சம்பளம் பெறுவதாக தன்னம்பிக்கையோடு கூறுகிறார்.
இவர்கள் தங்கள் அளவில் ரோச லக்சம்பர்க்குகள் தாம்.
7. இதில் ஒப்பாரி பாடல் பார்க்கும் பெண் பேசும் ஒரு ஷாட்டில்(04.11) கேமரா தூரத்தில் இருந்து அவர் தனியே பேசிக்கொண்டிருப்பது போல காட்டுமே. அது ஆவணப்பட மொழிக்குள் அடங்குமா? அங்கே அவர் யாரிடமும் பேசுவது போல் இல்லாமல், கேமராவிடம் பேசுவது போலவும் இல்லாமல் இருக்கிறதே?
அவர் ஒரு கதைசொல்லி. தூரத்தில், கிட்டத்தில், ஓரத்தில் இருப்பதெல்லாம் கேமிராவின் போதாமைகளே!
8. இறந்த அநாதை உடல்களை புதைக்கும் பெண்மணி அதிர்ச்சியளிக்கிறார். அவரது இந்த வாழ்க்கையின் ஆரம்பத்தில், சுடுகாட்டுக்குள் செல்வது குறித்த அவரது குடும்பத்தினரின் எதிர்வினை எப்படி இருந்தது?
அவர் குடும்பம் அவரைத் தள்ளி வைத்திருக்கிறது. இல்லை, அவர் தன் குடும்பத்திலிருந்து தள்ளியிருக்கிறார். இல்லை அவர் செய்யும் தொழில் அவரை எல்லாவற்றிலிருந்து தள்ளி வைத்திருக்கிறது. எப்படி வேண்டுமானாலும் புரிந்துக் கொள்ளலாம். ஆனால் தான் நம்புவதை துணிந்து செய்துக்கொண்டு தந்தையில்லாத தன் குழந்தைகளைப் பேணுகிறார். சுடுகாடு அவருக்கு சோறு போடும் தெய்வமென சொல்கிறார். பிணங்களே தன் உற்ற துணை எனக் கருதுகிறார்.
அவர் முகத்திலிருக்கும் கருணைக்கு இந்த சமூகம் என்ன கைமாறு செய்துவிட முடியும்.
9. இப்படம் பார்க்கும்போது, ஒரு சிறிய கேள்வி தோன்றியது. இந்த மூன்று பெண்களையும் அவர்கள் சார்ந்த சமூகம் எப்படி பார்க்கிறது என்பதையும் பதிவு செய்திருக்கலாமே?
அதை அவர்கள் போதுமான அளவுக்கு படத்தில் சொல்லியிருக்கிறார்கள் என்றே கருதுகிறேன். மற்றபடி பிரதிக்கு கோனார் உரையெல்லாம் என்னால் எழுத முடியாது.
10. இவர்கள் மேற்கொண்ட தொழிலில் ஒரு பெண்ணாக இருப்பதினால் தொழில் ரீதியாக அல்லாமல் இவர்கள் எதிர்கொள்ளும் சிக்கல்கள் என்னென்ன?
பெண் பிறக்கும் போதே இச்சமூகத்தில் “ஆயா” தொழிலோடு தான் பிறக்கிறாள். அதைத் தவிர பெண்கள் தேர்ந்தெடுக்கும் ஒவ்வொரு தொழிலும் கூடுதல் சேவை தான். இச்சமூகத்தின் மன உயரங்கள் மட்டுமே பெண் சந்திக்கும் அன்றாட சிக்கல்கள்.
11. உண்மையில் இந்த படம் எங்கே தொடங்குகிறது என்று நினைக்கிறீர்கள்?
லஷ்மி அம்மாவின் ஒற்றைக்கண்ணிலிருந்து தொடங்குகிறது,
12. ஒரு சமூகத்தில் ஆவணப்படங்களில் பங்கு, முக்கியத்துவம் என்ன?
சமூகத்தின் மனசாட்சியைத் தொடர்ந்து தொந்தரவு செய்வது தான் கலையின் தலையாயப் பணி என்று நான் நம்புகிறேன். திரைப்படம், கவிதை என கலையின் எல்லா வடிவங்களும் “எல்லாம் சரியாகத் தான் போய்க்கொண்டிருக்கிறது” என்று நமக்கு சொல்லப்படும் போலியான அமைதியை கெடுக்கிற கலைஞனின் அரசியல் நடவடிக்கைகள் தாம்.
13. இன்றும் நம் சமூகத்தில் ஆவணப்படங்களில் முக்கியத்துவம் உணரப்படாமல் இருப்பது ஏன்?
தேவதூதனுக்கு மயிர் சிரைத்துக் கொண்டிருக்கிறார்கள்.
14. இப்பெண்கள் மூவரும் மரணத்தையோ, மரணம் சார்ந்த விஷயங்களையோ மிக அருகில் இருந்து பார்க்கிறார்கள். அது அவர்கள் உளவியலையும் சமூகப்பார்வையையும் மாற்றியிருக்கிறதா?
சித்தர் மரபை பற்றி வாசித்திருக்கிறீர்களா? தேவதைகளின் கதாபாத்திரங்கள் சித்தர்கள். மரணத்தோடு தினமும் உரையாடுவது, அவர்களுக்கு வாழ்க்கையை தள்ளி நின்றுக்கொண்டு தாமே பார்த்துக்கொள்ளும் அவதானித்துக்கொள்ளும் கலையை கற்றுத்தந்திருக்கின்றது.
15. இறுதியில் மீனவப் பெண்மணி பேசும் வார்த்தைகள் தான், ஒரு உழைப்பாளி அரசாங்கத்தின் விடும் அறிக்கை என்று எனக்கு தோன்றியது. நம் முன் பேசியவர்கள், தங்களை அரசாங்கம் சுரண்டுகிறது என்று உணர்கிறார்களா? அதை எதிர்க்கிறார்களா? இவரே கூட ஏன் அரசாங்கம் எங்களை காலி செய்கிறது என்று தெரியவில்லை என்று சொல்கிறார். அங்கு நடக்கும் அடக்குமுறைகளுக்கு எதிராக இப்பெண்களின் எதிர்வினை என்ன?
நாம் திணைவாழ் மக்கள். திணையை, அதாவது நிலப்பரப்பை நம்மிடமிருந்து துண்டித்துவிட்டால், நாம் சொந்த மண்ணில் அகதிகள் தாம். கடலை, மலையை, விளைநிலங்களை, காடுகளை நம்மிடமிருந்து பறித்து தான் நாடுகள் உருவாக்கப்படுகின்றன. அதற்கு அரசாங்கங்களைத் தேர்ந்தெடுக்கும் அடிமைகளாக நம்மை மாற்றிவிட்டார்கள்.
மிச்சமிருக்கும் ஆதிவாசி சமூகங்கள் தாம் மனித நாகரிகங்களின் எச்சங்கள். சேதுராக்கம்மாவின் குரல் ஒரு கடல் ஆதிவாசியின் கூக்குரல். யாரடா அவன் அரசாங்கம்? எங்கள் கடல் எங்களுக்கு சொந்தம் என அவர் கேட்பது கூடங்குளத்தின், பிளாச்சிமாடாவின், நர்மதை அணை மக்களின், ஜார்கண்ட்-ஒரிசா-வடகிழக்கு மாகாணங்களின் கேள்வியும் கூட தான்.
16. பிணங்களை புதைக்கும் பெண், தன் கஷ்டங்கள் பிணங்களிடம் சொல்வது, இச்சமூகத்தின் சாபம் அல்லவா?
சாபத்தை தலை வணங்கி ஏற்றுக் கொள்வோம். தெருவுக்கு தெரு காளி கோயில்கள் இருக்கும் இந்த ஊரில் தானே பெண்சிசுக்கள் கொல்லப்படுகிறார்கள்?
17. ஏதோ ஒரு வகையில் ஒடுக்கப்பட்டிருக்கும் இப்பெண்களுக்கு அரசாங்கம் சார்ந்த உதவிகள் ஏதாவது வருகிறதா? இவர்கள் வாழும் சமூகம் சார்ந்த இளைப்பாறுதல்கள் ஏதும் கிடைக்கிறதா?
இப்பெண்கள் அரசாங்கங்களுக்கு வெளியே வாழ்பவர்கள். அல்லது அரசாங்கத்தின் கெஸட்டுகளில் இவர்களின் பெயர்கள் இல்லை. அதற்கு அவர்கள் பொறுப்பாக மாட்டார்கள்.
18. முதலில் ஒரு பெண் படைப்பாளியாக உங்களுக்கு இச்சமூகத்தில் வரவேற்பு எப்படி இருக்கிறது. இப்போதை விட, ஆரம்ப கட்டங்களில் எப்படி இருந்தது?
வெகு மக்கள் என்னை எப்போதும் அரவணைத்துக்கொள்கிறார்கள். அது ஒன்று தான் எனக்கு ஊக்க சக்தி. திரைப்பட உருவாக்கத்திலும் சரி, திரையிடல்களிலும் சரி, எம்மக்களின் நேசம் தான் என்னை வழிநடத்துகிறது.
தமிழில் ’சிவில்’ சமூகம் என்று ஒன்று சொல்லப்படுகிறதே, அச்சமூகம் எனக்கு அளிப்பதெல்லாம் வெறுப்பொன்று மட்டுமே! அவர்கள் என் தற்கொலையை விரும்புபவர்கள். அதை தள்ளிப்போட்டு அவர்களைப் பதற அடித்துக் கொண்டிருக்கிறேன்.
19. இவர்கள் இருக்கும் ஊர்கள் மத ரீதியாக, சாதி ரீதியாக ஆட்பட்ட ஊர்கள் போல் தெரிகிறது. இது சார்ந்த பிரச்சினைகள் ஏதேனும் இப்பெண்களுக்கு வருகிறதா?
நீங்கள் கேட்கும் கேள்விகள் ஏதோ இப்பெண்கள் யாருமற்ற தீவுகளில் இருப்பது போல கருதி கேட்கப்படுவது போலிருக்கின்றன. தேவதைகளின் கதாபாத்திரங்கள் வாழ்வென்பது சாதி-மதம்-வர்க்கம-பால்-பாலின ஏற்றத்தாழ்வுகள் பீடித்திருக்கும் இக்கேடு கெட்ட சமூகத்தின் விளைவே! அனைத்து வகையிலும் விளிம்பின் விளிம்பில் வாழும் பெண்கள் அவர்கள்.
20. மதமும், சாதியும் தலைதூக்கி இருக்கும் ஊர்களில் இயல்பாக பெண்ணடிமைத்தனங்கள் இருக்கும் அப்போது, இவர்கள் இதுபோன்ற வேலைகளுக்கு செல்கையில், இவர்களில் பால் sex சார்ந்த எதிர்ப்புகள் என்னென்ன வருகிறது?
அடிமைத்தனத்தில் ஆதியானது பெண்ணடிமைத்தனம். சாதியும் ,மதமும், வர்க்கமும், “வளர்ச்சியும்”, தேச உருவாக்கங்களும், போர்களும் அவ்வடிமைத்தனத்தை பன் தன்மை மிக்கதாக மாற்றியிருக்கின்றனவே தவிர ஒழிக்கவில்லை. இதுவரை உருவான தத்துவங்களும், கருத்தியல்களும் கூட அதை கிஞ்சித்தும் மாற்றவில்லை என்பதே உண்மை. தேவதைகளின் பெண்களுக்கு வரும் அனைத்துவகை எதிர்ப்புகளின் அடிப்படையும் இதுதான்.
21. ஆவணப்படங்களை ஒரு பெரும் மெயின்ஸ்ட்ரீம் ஊடகமாக மாறுவதற்கு என்ன செய்ய வேண்டும்?
ஆவணப்படம் வெகுசன ரசனைக்கானதாகத் தான் என்றும் இருக்கிறது. கிராமங்களில் என் திரையிடல்களுக்கு கூடும் கூட்டம் அளப்பரியது. ஆவணப்படங்களை எடுத்துச் செல்ல வெகுசன ஊடகம் இல்லை என்று சொல்ல வேண்டும். நுகர்வு கலாசாரத்தில் புரையோடிப்போயிருக்கும் வெகுசன ஊடகங்களுக்கும் ஆவணப்படங்கள் பயன்படாது.
Paradox என்னவென்றால் 2009 ல், NDTV தேவதைகளை கோகோ கோலாவின் விளம்பரத்தோடு தான் திரையிட்டது. ஜார்கண்ட் ஆதிவாசிகளின் நிலமீட்பு போராட்டங்களைப் பற்றிய என் சமீபத்திய ஆவணப்படமான Ballad of Resistance என்ற படத்தை ரியல் எஸ்டேட் விளம்பரங்களின் ஊடாகத் தான் NDTV ஒளிபரப்பியது.
22. எந்த ஒரு கலைப்படைப்புக்கும் டார்கெட் ஆடியன்ஸ் என்று ஒன்று உண்டு. ஆனால் ஆவணப்படங்களுக்கு டார்கெட் ஆடியன்ஸ் இல்லாதும், அதன் வளர்ச்சியின்மைக்கு ஒரு காரணமா?
ஆவணப்படங்கள் என்ன ஃபேர் அண்ட் லவ்லியா? டார்கெட் ஆடியன்ஸை பிக்ஸ் செய்துவிட்டு எடுப்பதற்கு?
23. ஆவணப்படங்களில் மொழி வேறு. திரைப்படங்களின் மொழி வேறு. இந்த வேறுபாடுகளை நீங்கள் திரைப்படம் எடுக்கும் போது எப்படி சமாளித்தீர்கள்?
ஆவணப்படம், கதைப்படம், கவிதைப்படம் என எல்லா வகைப்படங்களும் திரைப்படங்கள் தாம். கதை, ஹீரோ, ஹீரோயின், சண்டை, பாடல், குத்து நடனம் எல்லாம் இருந்தால் தான் அது திரைப்படம் என்பது புரிதலின் குறைபாடே! நீங்க திரைப்பட இயக்குநர் இல்லையே? ஆவணப்பட இயக்குநர் தானே என்று கேட்கும்போது சிரித்துக்கொள்வேன். செங்கடலை தொழில் முறை நடிகர்கள் அல்லாது கதைமாந்தர்களையே கொண்டு திரைப்படுத்தியிருந்ததால், கதைப்படமாக அது இருந்தாலும், ஆவணப்படமெனவே இங்கு அடையாளப்படுத்தபடுகிறது. எனக்கு அதில் மகிழ்ச்சியே. ஆவணப்படத்தின் சத்தியம் கதைப்படத்திலும் உணரப்படுவது நிறைவைத் தரக்கூடிய விசயம் தான். சினிமாவிற்கென்று மொழி இருகின்றது. அதன் அலகு ஷாட்ஸ். ஒரு ஷாட்டை ஒரு வார்த்தை எனக்கொண்டால் கவிதைக்கும், சினிமாவுக்குமான தொடர்பு விளங்கும்.
24. ஆவணப்பட உலகமும், இச்சமூகமும், ஆவணப்பட படைப்பாளிகளுக்கு போதுமான பொருளாதாரத்தை வழங்க வல்லதா?
நான் ஒரு பிச்சைக்காரி, கொள்ளைக்காரி, திருடி, வேசி, 420. இது எல்லாமுமாக இருந்தால் தான் இச்சமூகத்தில் நான் நினைக்கும் திரைப்படங்களை நானே செய்துக்கொள்ள முடியும்.
25. இது போன்ற ஆவணப்படங்களுக்கான தயாரிப்பாளர்கள் கிடைக்கிறார்களா? அதற்கு என்ன செய்கிறீர்கள்?
ஏமாற்றுவேன். பல சாகசங்களை செய்து பணம் வைத்திருப்பவர்களை ஏமாற்றி அவர்களை தயாரிப்பாளர்களாக மாற்றுவேன்.
26. ஆவணப்படங்களை பொருந்த வரையில் சந்தைப் படுத்துதல் என்பது இருக்கிறதா? அதற்கு என்ன செய்ய வேண்டும்?
ஆவணப்படங்கள், கவிதை தொகுப்புகள், இவற்றை இலவசமாக மட்டுமே பெற்றுக்கொள்ள இச்சமூகம் விரும்புகிறது. இதை மீறி விற்றால் எம்மை கலை வியாபாரி, அறிவு விபசாரி என இச்சமூகம் சுட்டும். கலைஞன் காற்றை சாப்பிட்டு வயிற்றை நிரப்பிக்கொள்ள வேண்டியது தான். தெருவில் அனாமத்தாக விழுந்துக் கிடக்கும் நாணயங்களைக்கூட பொறுக்க தகுதியற்றவன் கலைஞன்.
27. இப்படம் ஏற்படுத்திய எதிர்வினைகளை சொல்லுங்களேன்?
விருதுகளைப்பற்றி சொன்னால் அது தற்பெருமை. திரையிடல்களைப்பற்றி சொன்னால், அது சுய சொரிதல்.
தனிப்பட்ட முறையில் இது எனக்கு 500 திரைகளைத் தாண்டிய ஒரு பெருவெளிப்பயணம்.
28. உங்களின் அடுத்த திரை முயற்சிகள்…
முயற்சிகள் நடந்துக் கொண்டிருக்கின்றன.
தெருவுக்குத்தெரு இத்தேவதைகள் வியாபித்திருக்கிறார்கள். இனியாவது, நம் கனா உலகத்தில் ஆடும் தேவதைகளுக்கு செலவிடும் நேரத்தில் ஒரு பகுதியையாவது, இது போன்ற உயிர்ப்பான ஆன்மாக்கள் நிரம்பிய தேவதைகளோடு செலவிடுவோம்.
தேவதைகள் ஸ்கிரிப்ட் மற்றும் டிவிடியை கனவுப்பட்டறை விற்பனைக்கு கொண்டுவந்துள்ளது.
இணையத்திலும் விற்பனைக்கு டிவிடி கிடைக்கிறது,
முகவரி-http://www.magiclanternfoundation.org/uc_filmdetails.php?FilmID=206
தமிழ்ச்சூழலில் சுயாதீன சினிமா(Independent Cinema) – மின்மினிப்பூச்சிகளின் கல்லறை
எந்த ஒரு திரைப்படமும் மெய்யான சுதந்திரத்துடன் அடையாளப்படுத்திக்கொள்வது சாத்தியமில்லை. முதலீட்டை ஆதாரமாகக் கொண்ட திரைக்கலையைக் கையிலெடுக்கும் கலைஞர் நிதியாதாரம் என்ற முதல்படியேலேயே தன் சுதந்திரத்தை பேரம் பேசக்கூடியவராக. மாறிவிடுகிறார். சுயாதீனம் என்பதை சரியான அர்த்தத்தில் முழுமைப்படுத்த வேண்டிய பார்வையாளனும் செயலற்ற ஒரு நுகர்வாளனாக ஆக்கப்பட்டிருக்கிறான் ஆக, தணிக்கை,தயாரிப்பு தொடங்கி விநியோகம் வரை திரைப்படக்கலையைச் சந்தைவயப்படுத்தியிருக்கும் பண்பாட்டுச்சூழல்,தொழில் என்ற முறையிலும் சுரண்டலுக்கு ஒப்புக்கொடுத்துவிட்ட வணிகமய திரைப்பட இயல், இதற்கிடையே தன் தனித்துவமான, விட்டுக்கொடுத்தலில்லாத, காத்திரமான வெளிபாட்டிற்காக சதா ஒப்பந்த பேரங்களில் உள்ளேறுவதும் வெளியேறுவதுமாய் தத்தளிக்கும் ஒரு மனநோயாளிதான் சுயாதீன(Independent)சினிமா இயக்குநர்..
போர் ஆயுதங்கள் எப்படி பெண்டகனுக்கு சொந்தமாக இருக்கின்றனவோ அப்படித்தான் திரைப்படக் கருவிகளும், நிறுவனங்களும்,வியாபாரமும், பண்பாட்டு மேலாதிக்கமும், இன்னும் ஹாலிவுட்டிலிருந்தே உற்பத்தியாகின்றன.இன்னும் சொல்லப் போனால் Studio Cinema, Independent Cinema, Auteur Cinema, National Cinema, New wave Cinema என்ற பெயர்களும், விளக்கங்களும் கூட ஹாலிவுட் அகராதியில் பிறந்த சொற்கள் தான். அந்த அகராதியின் படி ஸ்டூடியோ நிறுவனங்களின் காலடியில் வைக்கப்படாத திரைக்கதைகளும், திரைப்படச்சுருள்களும் ”சுயாதீன சினிமா” என்று வரையறுக்கப்பட்டன. அந்த வரையறையில் பார்த்தால், தமிழ்ச்சூழலில் இன்று ’அட்டக்கத்தி’ கூட சுயாதீன சினிமா என்று அடையாளப்படுத்தப் படலாம். திரைவிமர்சகர்கள், ’பாதை தெரியுது பார்’, ’உன்னைப்போல் ஒருவன்’,’ஒருத்தி’, ’வீடு’, ’சந்தியா ராகம்’, ’மெட்டி’, ’பூட்டாத பூட்டுகள்’, ’ஊருக்கு நூறு பேர்’, ’ஏர்முனை’ போன்ற படங்களை தமிழ் சுயாதீன சினிமா “வரலாற்றின்” காயடிக்கப்பட்ட கண்ணிகளாக வர்ணிக்கலாம். வியாபார நெளிவு சுளிவுகளுக்கு கட்டுப்படாத படைப்பாளர்களின் வெளிப்பாடு என்ற வகையில் அந்த பட்டியல் தயாரிக்கப்படலாமே தவிர்த்து, இதில் பெருவாரியான படங்கள் மக்களின் வரிப்பணத்திலோ (NFDC, Films Division), ஏதொ ஒரு கட்டத்தில் நிறுவனங்களின் லெட்ஜர் இடம்பெறுபவையாகவோ தான் சாத்தியப்பட்டிருக்கின்றன. ஜான் ஆப்ரகாமின் தமிழ்ப்படமான அக்ரஹாரத்தில் கழுதை கூட அந்த அடிப்படையில் சுயாதீன சினிமா வகையில் இருத்த முடியாது.அவரின் மலையாளப்படமான ”அம்ம அறியான்” மட்டுமே அரசாங்கத்திலிருந்து, தயாரிப்பு நிறுவனங்களிலிருந்து விடுபட்ட மக்கள் தயாரிப்பு.
ஆக, தமிழில் இரண்டாயிரமாவது ஆண்டுக்குப் பிறகு ஒரு இயக்கமாக உருவாகிக்கொண்டு வரும் ஆவணப்பட முயற்சிகளை மட்டுமே உண்மையில் சுயாதீன சினிமா என்று குறிக்கலாம். இதிலும் தன்னார்வ தொண்டு நிறுவனங்கள்,PSBT போன்ற அரச நிறுவனங்களின் நிதி தலையீடு சுயாதீன வெளிப்பாட்டின் வீச்சை, விட்டுக்கொடுத்தலில்லாத வடிவத்தை, கவுச்சி மொழியை சிதைக்கவே செய்கிறது என்பதை என் அனுபவத்திலிருந்தே சொல்ல முடியும். என்.ஜி.ஓ, கார்ப்பரேட், அரசு நிறுவனங்கள் என்று பல கூட்டணிகளில் வேலை செய்து பார்த்திருக்கும் என் பத்து வருட அனுபவத்தை சுய விமர்சனத்தோடு அணுகினால், சொந்த சேமிப்பில்,”தேவதைகள்” ஆவணப்படம் போன்று ”பிராஜக்டாக” செய்யாத சில படங்களில் மட்டுமே முழு சுதந்திரத்தோடு என்னால் செயல்பட முடிந்திருக்கிறது. சொர்ணவேல், அருண்மொழி, ரமணி, அமுதன், ஆர்.ஆர்.சினிவாசன் என்று ஒரு தொடர் ஓட்டம் தொடங்கியிருக்கும் இந்த காலகட்டத்திற்கு, டிஜிட்டல் தொழிற்புரட்சிக்கு பெரும்பங்கிருக்கிறது. சில ஆயிரங்களிலேயே தயாரிப்பு செலவுகளை குறுக்கியிருக்கும் கையடக்க டிஜிட்டல் கேமிராக்களும், எடிட்டிங் மென்பொருளும், டிவிடி விநியோக முறைகளும், ஒரு பைக்கில்,பேக் பேக்குடனும் (Back pack), சட்டைக்காலரில் மைக்ரோ போனுடனும் கிளம்பி சென்று கொரில்லா சினிமாக்களை உருவாக்கக் கூடிய வாய்ப்புகளைத் தந்திருக்கின்றன. சிற்றூர்களிலும், கிராமங்களிலும் திரைப்பட இயக்கங்கள் தோன்றியிருக்கின்றன. பள்ளிகளும், பல்கலைக்கழகங்களும், கல்லூரிகளும்,மக்கள் இயக்கங்களும் திரையிடல்களை நிகழ்ச்சி நிரலில் சேர்க்கின்றன. ஆரம்ப நாட்களில்,படங்களை டி.வி.டி பிரதிகளாக விற்பனைக்கு வைத்தபோது மக்கள் பிரச்சினைகளை காசாக்குகிறார்கள் என்று விமர்சித்த பார்வையாளர்கள் இன்று சுயாதீன சினிமா இயக்கத்தின் பங்கேற்பாளர்களாக,புத்தகங்கள் வாங்குவது போல காசு கொடுத்து டிவிடிக்களை வாங்கி செல்வதைப் பார்க்க முடிகிறது.NDTV போன்ற தேசிய தொலைக்காட்சி சானல்கள் தணிக்கை விதிகளையகற்றி தொடர்ந்து உரிமம் வாங்கி படங்களை ஒளிபரப்புகிறார்கள். இவையெல்லாம் நிச்சயமாக மாற்றத்தின் அறிகுறிகள் தாம். ஆவணப்பட இயக்குநர்களை ஏதோ இடுப்பில் குண்டு பொருத்திக்கொண்டு அலையும் தீவிரவாதிகள் போல தொடர்ந்து ஒடுக்கும் போலீசும், நிறுவனமயமாகாத தணிக்கை ஏஜெண்டுகளான பிற்போக்கு சக்திகளும், கட்சி குண்டர்களும் கூட சுயாதீன திரைப்பட வெளிப்பாடு தீவிரமடைந்திருப்பதற்கான சாட்சிகள் தாம்.
சுயாதீன சினிமா என்பது ஒட்டுமொத்த பண்பாட்டு இயக்கமாக, கூட்டுப் பொறுப்புணர்வாக உருமாறாமல் ஒரு தனிப்பட்ட படைப்பாளியால் மட்டும் சாதித்துவிடக்கூடியதல்ல. மக்கள் பங்கேற்பு சினிமாவாக நான் எடுத்த செங்கடல் ஒரு உதாரணம். எழுதப்பட்ட பிரதியை எறிந்து விட்டு, படைப்பு செயல் உறவுகளை மாற்றி, ”நடிகர்களை” நீக்கி, பாதிக்கப்பட்ட மீனவர்களையும், அகதிகளையுமே பங்கேற்பாளர்களாகக் கொண்டு அவர்களின் வாழ்க்கையை, அவர்களின் தலத்திலேயே மறு உருவாக்கம் செயத ”செங்கடல்”, தணிக்கைக்கும் தலை குனியாது உச்ச நீதிமன்றம் வரை சென்று தடை நீங்கி வந்தாலும், தலையீட்டளவில் கடுமையான அடக்குமுறைகளை சந்தித்த ஒரு படைப்பு தான். கதைக்களம் இலங்கை இந்திய எல்லைக் கிராமமான தனுஷ்கோடி என்பதால், காவல் துறை, க்யு பிராஞ்ச், கடற்கரை ரோந்துப்படை, ரயில்வே காவல் துறை, நேவி என்று பொழுதும் கண்காணிப்போடும், அனுமதி விதிமுறைகளோடும் போராடி களைத்த நாட்களும், வானிலை சவால்களும்,சிக்கல் மிகுந்த மக்கள் தொகுதியை ஈடுபடுத்தியதில் இருந்த கடுமையான நடைமுறை சிக்கல்களும் படைப்பின் சாரத்தை பாதிக்கவே செய்தன. சொந்த மீனவர்களைக் காப்பாற்ற திராணியில்லாமல் ஈழக்கூப்பாடு போடும் போலித்தனமான தமிழக அரசியல், ஊடக, விமர்சனக் கோட்பாட்டு அறிவுத் துறைகளும் தயாரிப்பிற்கு முன்னும் பின்னும் படத்தை மோசமாக ஒடுக்கின. மூன்றாம் உலகப்பசியை டிராப்பிகல் சர்ரியலிசமாகப் பார்க்கும் பன்னாட்டு திரைப்பட ரசிகர்களை மட்டுமே சென்று சேர்ந்திருக்கும் செங்கடலின் தலைவிதிக்கு, படைப்பாளி மட்டுமே அவமானப்பட்டுக் கொண்டிருப்பது தான் தமிழ்ப் பண்பாட்டுச்சூழலின் சாபக்கேடு.
ஆனாலும், ”சினிமா, விநாடிக்கு24 பிரேம்ஸ் உண்மை” என்ற கோடார்டைப் படித்து வேட்கையோடு பயிற்சியை தெருவிலிருந்து தொடங்கிய திரைப்பட மாணவி என்ற அடிப்படையில், திரைப்படக்கலை செயல்பாடுகளில் தொடர்ந்து தனித்துவத்தோடு இயங்க முடியும் என்ற நம்பிக்கை இன்னும் எனக்கு மிஞ்சியிருப்பதும் நடந்துக்கொண்டிருக்கும் மாற்றங்களின் விளைவு தான். ஒரு படைப்பாளியாக, நடுநிலை சாதியைச்சேர்ந்த ஆங்கிலம் பயன்ற மத்தியதரவர்க்க நகரத்துப்பெண் என்ற அடையாளத்தை தமிழ் வட்டாரத்திலும், திரைப்படக்கல்லூரிக்கு செல்லாத ஹிந்தி கற்க மறுத்த மதராஸிப்பெண் என்ற இந்திய தேசியத்திலும், மூன்றாம் உலக ஆசியக் கறுப்பு பெண் என்று உலக அரங்கிலும் ஏவப்படும் அடையாள வன்முறைகளை எதிர்த்து மொழி,இனம், சாதி, நிறம், புவியியல் கடந்த தனித்துவமான திரைமொழியைக் கண்டடையும் வேட்கை தீரும் வரை, சுயாதீன திரைப்பட இயக்கத்தின் ஒரு செயலூக்கமுள்ள அங்கத்தினராக இருக்க முடியும் என இந்த தருணத்தில் நினைப்பதும், கூடவே மின்மினிப்பூச்சிகளின் கல்லறைப் படிமமும் தோன்றுவதும் முரண்பாட்டு மெய்ம்மை.
லீனா மணிமேகலையின் ஜன்னல் – குங்குமம் தோழி
இடம் – மியுனிக் (ஜெர்மனி) – தூங்கா நகரம்
ஒரு தொன்மையான பாறையைப் பிளந்தால் பெருகும் ஸ்படிக ஓடையில் மின்னும் வானவில்லாக பழமையும் புதுமையும் பரவசமும் கலந்த ஊர் ம்யூனிக் (Munich). இரண்டு உலகப் போர்கள், மானுடத்தையே உலுக்கிய ஹிட்லர் நாஜி படையின் இனப் படுகொலைகள், இங்கிலாந்து, பிரான்ஸ், அமெரிக்கா, சோவியத் யூனியன் என வல்லரசுகளின் ஆக்கிரமிப்பு என்று வரலாற்றின் சிதைவுகளிலிருந்து மறுபடியும் மறுபடியும் பிறந்த ஜெர்மனியின் நகரமான ம்யூனிக் இன்று உலகின் சிறந்த பத்து நகரங்களில் ஒன்று.
கோதுமையில் தயாரிக்கப்படும் பியருக்குப் புகழ்பெற்றது ம்யூனிக். நகரைச் சுற்றியோடும் இசா நதியில் பியர்தான் ஓடுகிறதோ என்று எண்ணும் அளவுக்கு மக்கள் கொண்டாட்டத்தில் திளைக்கிறார்கள். இசா நதிக்கரையில் பரந்திருக்கும் இங்லீஷ் கார்டன் வெகு நேர்த்தியான பூங்கா. நகரில் இருபதுக்கும் மேற்பட்ட பியர் பூங்காக்கள் இருந்தாலும் மிகப்பெரியதும் அலாதியானதுமாக இருந்தது இங்கிலீஷ் கார்டனில் இருந்த பியர் பூங்கா. ஆயிரக்கணக்கான மக்கள் நதிக்கரையில் கூடி ராட்சச ஜார்களில் மது அருந்தி குதூகலமாக இருப்பதைப் பார்ப்பதே கண்கொள்ளாக்காட்சி. டியர் கார்டன் என்று சொல்லப்படும் விசேஷமான பகுதிகளில் மக்கள் நிர்வாணமாக உலா வருகிறார்கள். தடைகளே இல்லாத அதிகபட்ச இருத்தலை அனுபவிக்க முயற்சிக்கிறார்களோ?
ம்யூனிக்கின் பழமை வாய்ந்த கட்டிடங்களையும் மாளிகைகளையும் எந்த மாற்றமும் இல்லாமல் அப்படியே பராமரித்து வருகிறார்கள். பழமையான கோதிக் (Gothic) கட்டிடக் கலையமைப்பில் இருக்கும் தேவாலயங்களின் மணியோசை நகரத்துக்கு அவ்வப்போது பாடல் சேர்க்கிறது. உலகிலேயே மிகப்பெரிய அரிய ஆர்ட் கலெக்ஷன் வைத்திருக்கிறார்கள். மியூசியம் ஐலேண்ட் என்று அறிவியல், தொழில்நுட்பம், சினிமா, வரலாறு என்று ஒவ்வொன்றுக்கும் தனித்தனியே அருங்காட்சியகங்கள் அறிவுச் சாளரங்கள்!
இருபதுக்கும் அதிக ஹிட்லரின் வதைமுகாம்கள் ஐரோப்பா முழுவதும் ஆங்காங்கு பராமரிக்கப்பட்டு வந்தாலும், முதன்முதலில் தொடங்கப்பட்டு போரின் இறுதிவரை செயல்பட்ட ம்யூனிக்கின் டகௌ என்றழைக்கப்படும் வதைமுகாமுக்குச் செல்லும் வாய்ப்புக் கிடைத்தது. Work until You are free (சாகும் வரை அல்லது விடுதலையாகும்வரை வேலை செய்) என்ற வாசகம் பொறித்த கதவு நம்மை வரவேற்கும்போதே கிலி பிடித்துக் கொள்கிறது. 1933லிருந்து 45 வரை இரண்டு லட்சத்துக்கும் அதிக யூதர்கள், நாடோடிகள், ஆதிகுடிகள், ஓரினச் சேர்க்கையாளர்கள் என்று அரசியல் கைதிகளை அடைத்து வைத்து அழித்தொழித்த படுபயங்கரமான இடம் இது. கைதிகள் இருந்த படுக்கையறைகள், கழிவறைகள், சுட்டுக் கொல்லப்பட்ட இடங்கள், விஷ வாயுக் குளியலால் சாகடிக்கப்பட்ட இடங்கள், எரிக்கப்பட்ட பிரமாண்ட மார்ச்சுவரிகள், குளிரிலும் வெயிலிலும் பனியிலும் தண்டனை அனுபவித்த மயானங்கள் என்று நினைவுபடுத்தப்பட்டிருக்கும் ஒவ்வொரு சதுர அடியும் நடுக்கத்தை ஏற்படுத்துகிறது. சட்டென உலகின் வண்ணங்கள் எல்லாம் அழிந்து இருள் கவிந்தது போல உணர்ந்தேன். எண்ணற்ற மக்கள் நாள்தோறும் வந்து மலர்வளையங்களை வைத்துச் செல்கிறார்கள். போரின் ஒவ்வொரு அசைவையும் டாக்குமென்டரி படங்களாக, ஓவியங்களாக, நிழற்படங்களாக, புள்ளிவிவரங்களாக கேலரியில் பத்திரப்படுத்தி வைத்திருக்கிறார்கள். என்னுடைய ஜெர்மன் தோழிகளான ஆவணப்பட இயக்குனர் மிஹேலாவிடமும் எழுத்தாளர் சூசனிடமும் இத்தகைய நினைவிடங்கள் இந்த தலைமுறைக்கு எந்தவிதமான அழுத்தத்தைத் தருகிறது என்று கேட்டேன். ‘‘நாங்கள் ஒவ்வொருவரும் எங்கள் மூதாதையரிடம் இதற்காகக் கோபப்பட்டிருக்கிறோம், வருத்தப்பட்டிருக்கிறோம், குற்ற உணர்ச்சியில் ஆட்பட்டிருக்கிறோம். ஆனாலும், உண்மையை நாம் கையாளத்தான் வேண்டும். வரலாற்றின் சத்தியத்தில் சுடுபட்டால்தான் தவறுகள் மறுபடியும் நேராது’’ என்று அழுத்தமாக பதிலளித்தார்கள். ஜெர்மானியரின் இந்த அசாத்திய தைரியமும் முதிர்ச்சியும் என்னை உறைய வைத்துவிட்டது. பொய்களையே வரலாறுகளாகப் புனைந்து உவந்து சிலிர்த்துக் கொண்டிருக்கும் நம்மை நினைத்து அவமானமாக இருந்தது.
புத்தகம் – அகாலம் – பெண் போராளியின் யுத்த சாட்சியம்
ஈழத்துக்காகப் பற்றுறுதியோடு போராடி, ஆயுதம் தாங்கிய விடுதலைப் போராட்டத்தில் முதன்முதலாகச் சிறைக்குச் சென்ற தோழர் புஸ்பராணியின் நினைவுக் குறிப்புகள் ‘அகாலம்’ என்ற புத்தகமாக, ‘கருப்பு பிரதிகள்’ வெளியீடாக வந்துள்ளது. சிதைந்துபோன கனவின் சாட்சியமாக நம்மை துடிதுடிக்க வைக்கும் உயிர்ப்பத்திரம் ‘அகாலம்’. அரசியல் ஈடுபாட்டின் காரணமாக பொதுவெளியில் எழுச்சியடைந்து இயங்கும் ஒரு பெண் அதிகாரத்தரப்பால் சாதி ரீதியாக, இன ரீதியாக, வர்க்க ரீதியாக எப்படி ஒடுக்கப்படுவார் என்பதற்கு தோழர் புஸ்பராணியின் வாழ்வு ஒரு கொடூர உதாரணம். கடக்க வியலா அந்த காலங்களை நேர்மையோடும் நெஞ்சுரத்தோடும் ஒரு அரசியல் வரலாற்று ஆவணமாக பதிவு செய்த அவரின் அர்ப்பணிப்பு அளப்பரியது. முன்னுதாரணமானது.
‘உள்ளத்தில் லட்சியம் இருந்தாலும் கண்களில் நீரும் இருக்கத்தானே செய்கிறது’ என்று முன்னுரையில் கருணாகரன் குறிப்பிட்டுள்ளதற்கேற்ப, மக்களுக்காக தன்னையே கரைத்துக்கொண்ட புஸ்பராணியின் போராட்ட அனுபவங்கள் வாசிக்கும் ஒவ்வொருவரையும் பெருமிதம் கொள்ள வைத்தாலும், துக்கத்தில் உறையவும் வைக்கின்றன. இலங்கைப் போலீஸ் காவலில் வைக்கப்பட்டு அனுபவித்த சித்திரவதைகளும், வெலிகட சிறை அனுபவங்களும், அவர் இறக்கி வைத்திருக்கும் காலச்சுமையல்ல. இப்போதும் இனவாத இலங்கை ராணுவத்தின் சிறைகளிலிருக்கும் பெண் போராளிகளின் அவலங்களை, இலங்கை இராணுவத்தின் கட்டுப்பாட்டில் இருக்கும் தமிழ் சிவில் பகுதிகளில், பசியிலும் பட்டினியிலும் பாலுக்காக கையேந்தி நிற்கும் குழந்தைகளை காலத்தின் நீட்சியாக அறிவுறுத்தும் நெருப்பு வார்த்தைகள். யுத்தத்திலும் போராட்டத்திலும் வன்முறையின் உச்சத்தை அனுபவித்து வரலாறு நெடுகிலும் பெண்களே! தெலுங்கானா, காஷ்மீர், எரித்ரியா, சிலி, மலேசியா, தென் ஆப்பிரிக்கா, சூடான் என்று நீளும் பட்டியலில் இலங்கையில் தமிழ்ப்பெண்கள் பட்ட பாடு மனித நாகரிகம் வெட்கித் தலை குனிய வேண்டிய ஒன்று. மக்களை நம்பாமல், துப்பாக்கிகளையும் பீரங்கிகளையும் மட்டுமே நம்பியிருந்த போராளிகள் இறுதியில் அவற்றை கீழே வைத்துவிட்டு சரணடைந்தபோது காலம் அகாலமாயிருந்தது என்ற புஸ்பராணியின் வரிகள், தோல்வியடைந்து நிற்கும் 40 வருட ஈழ விடுதலைப்போராட்டத்தைப் பற்றிய மீள்பார்வையைக் கோரி நிற்கிறது.
பதிப்பாசிரியர்: ஷோபா சக்தி
(கறுப்பு பிரதிகள், பி74, பப்பு மஸ்தான் தர்கா, லாயிட்ஸ் சாலை, சென்னை&5. மொபைல்: 9444272500)
சினிமா – Circumstance – அன்பெனும் மாய உலகம்
கடந்த மார்ச் மாதம் லண்டனில் ஒரு திரைப்படவிழாவில் பார்த்த Circumstance சமீபத்தில் என்னை பாதித்த சினிமா. இரு இளம்பெண்களின் அன்பாலான உலகத்தை வேட்கையோடு சித்தரிக்கும் படம். ஒரு பால் ஈர்ப்பு உடையவர்களை கிரிமினல்கள் போலவும், நோய் பீடித்தவர்களாகவும், சமூகத்தை மாசுபடுத்துபவர்களாகவும் மத அடிப்படைவாத ஈரான் அரசாங்கம் கருதுகிறது. காவல் துறையையும் மதக்குண்டர்களையும் ஏவி தாக்கவும் செய்கிறது. அப்படிப்பட்ட வன்முறை நிரம்பிய சூழலில் இரண்டு பெண்களின் நேசமும் கனவுகளும் என்னவாகிறது என்பதே படத்தின் மையம். ஷெரீனும் தோழி அதேஃபாவும் மூச்சை கூட சுதந்திரமாக விட்டுக்கொள்ள முடியாத சமூக சூழலில் தங்களுக்கென ஒரு மாய உலகை மனப்படிகளில் உருவாக்கி, அதில் வாழ்ந்துவிட தவிக்கிறார்கள். நாட்டை விட்டு தப்பியோடி, சற்று தளர்வான துபாய் சூழலில் இணைந்து வாழ ஏங்குகிறார்கள். இசையும் நேசமுமான அவர்களின் காதலை ஒரு அபூர்வ ராகமாக படமாகியிருக்கும் இயக்குனரும் ஒரு பெண்தான் என்பது கூடுதல் அழகு!
எப்போதும் இந்த இளம்பெண்களின் நடவடிக்கைகளை, வீட்டிற்குள்ளேயே யாருக்கும் தெரியாமல் சிசிடிவி வைத்துப் பார்த்து தண்டனை வழங்கும் அதேஃபாவின் அண்ணன் கதாபாத்திரம் & அன்பை நசுக்கும் மத அடிப்படைவாதத்தின் கண்காணிப்புக்கும் ஒடுக்குதலுக்கும் மிக நூதனமான குறியீடு. எப்போதும் பெண்களை இவ்வுலகம் கண்ணுக்குத் தெரியாத கேமராக்களை வைத்து கண்காணித்து தன் தீர்ப்புகளையும் தண்டனைகளையும் வழங்கியபடிதானே உள்ளது!
இணையம் – தூமை(http://thoomai.wordpress.com) – மொழியைச் சுத்திகரிக்கும் பெண்ணாற்றல்!
கவிஞர் தர்மிணியும், ஓவியர்–கவிஞர் மோனிகாவும் நடத்தும் ஆதிக்கத்துக்கு எதிரான பெண்களுக்கான வலைத்தளம் & தூமை. பெண்களை இழிவுபடுத்துவதற்காக ஆணாதிக்க சமூகம் கையில் எடுத்திருக்கும் சொல்லைக் கொண்டே அதை எதிர்க்கவும் ஊடறுக்கவும் தலைப்பட்டிருக்கிறது பெண் படைப்புகளுக்கான இந்த வலைத்தளம். கவிதை, கட்டுரை, விமர்சனம், விவாதங்கள் என்று தீவிர பெண் படைப்புகளை இங்கு வாசிக்கலாம்.
மாதாமாதம் குருதி வெளியேறுவதை தீட்டு எனவும், அந்த நாட்களில் விலக்கமும், கடவுள் நிந்தனையும், தீட்டு கழிதலுமென பெண்களை உடல்ரீதியாக மதம் காலம் காலமாக ஒடுக்கி வருகிறது. தமிழ் நிகண்டுகளைப் புரட்டினால், ‘தூமை’ என்பதற்கு தூய்மையான மை(ரத்தம்) என்றே அர்த்தம் வருகிறது. மனித நாகரிகத்தில் பெண்ணின் குருதி வெளியேற்றத்தை வைத்துதான் நிலா நாட்களைக் குறித்தார்கள். தமிழ் மாதங்கள், நாட்காட்டிகள் அப்படித்தான் உருவாயின. ஆதியில் பெண்குருதி வழியாமல் பார்த்துக் கொள்ள கண்டுபிடித்ததுதான் பருத்தி. அதிலிருந்தே உடை உருவானது. இன்னும் தூமையை வைத்துத் தான் கொடிய நோய்களைக் கொல்லும் மருந்துவகைகளைக் கண்டுபிடித்திருக்கிறார்கள். மருந்தாகச் சாப்பிட்டால் தீட்டுப் போய்விடுமா? இப்படி பல சிந்தனைகளைத் தூண்டும் வகையில் தூமை என்ற தலைப்பை வலைத்தளத்துக்கு வைத்திருக்கிறார்கள் இத்தோழிகள்.
சமூகத்தில் வசைச்சொற்கள் எல்லாம் ஏன் பெண்களை இழிவு செய்வதாகவே இருக்கிறது என்று யோசித்துப் பார்த்தால், மொழி எப்படி ஆணாதிக்கத்தின் கையில் சிக்கியிருக்கிறது என்பது புரியவரும். இழிவென்ற அர்த்தத்திலிருந்து பெண்ணுடலை மீட்டு ஆற்றலாக்குவது தான் ஒரே வழி என்பதால் தான் பெண் படைப்பாளிகள் அதை உறுதியோடு செய்துக் கொண்டிருக்கிறார்கள். தூமை அதற்கொரு முன்னோடி.
லீனா மணிமேகலை
நன்றி – வள்ளிதாசன்
தீர்ப்பு நாட்கள்
இறுதியில்
தீர்ப்புகளால் திருகியிருந்த
என் உடலின்
பாகங்களை
சரிசெய்ய
ஒரு கனவு தேவைப்பட்டிருக்கிறது
நரைத்த அந்த தாடியைக்கோதி
முத்தமிட்டுக்கொண்டிருந்த வேளையில்
ஜான் ஆப்ரகாமிடம் கேட்டேன்
உங்கள் ஒடஸ்ஸா உண்டியலை எனக்குத் தரமுடியுமா?
உடல் நொறுங்கத் தழுவிய அவர்
இழிசாவை அது தடுக்காது, வேண்டாம் என்றார்
இல்லை, நான் ஏற்கெனவே கொல்லப்பட்டவள் என்றேன்
ஒடஸ்ஸா உண்டியல்
நாணயங்களுக்குப் பதில் உயிர்களையே கேட்கிறதென்றார்.
அப்புவை அழைத்துக் கொண்டு ரேயைத் தேடிப்பிடித்தேன்.
அவர் அப்போதும், கன்னத்தில் கைவைத்து சிந்தித்தபடியிருந்தார்
வெகுநேரம் கடந்தே அவர் புருவம் சற்று நெறித்தார்
அவர் பார்வை திருப்பிய நொடியில் கேட்டேன்
ஏன் நீங்கள்
விளம்பரப்படங்களுக்கு கோட்டோவியங்கள்
வரைந்தீர்கள்
என் தலையைக் கோதிய அவர்
அவை இந்த சமூகத்தின் மேல் நான்
வைத்த விமர்சனங்கள் என்றார்
ஒரு கிராமத்தின் மாட்டுக்கொட்டகையில்
மேக தாக தாராவை திரையிட்டுக்கொண்டிருந்த
ரித்விக் கட்டக்கோடு படம் பார்த்துக் கொண்டிருந்தேன்
உங்களைப்போல படமெடுக்க தூய முதலீடு
சாத்தியமா என்றேன்
ஒவ்வொரு நாணயமும் உன்னுடையதே
ஆனால் உன்னிடம் இல்லை என்றார்
அவர் மேலெறியப்பட்ட கற்களைக் கேட்டு பெற்றேன்
அதில் பெயர்கள் அழிந்திருந்தன
அதனாலேயே படப்பெட்டிகள் கண்ணாடி கூடுகளில்
செய்யப்படுவதில்லை எனவும் சொல்லி சிரித்தார்
குலுக்கிய அவர் கைகளிலிருந்து ரேகைகளைத் திருடிக்கொண்டேன்
அதற்குள்
காப்பகத்திலிருந்து திருடிய கேமிரா
தனக்கு இனி தேவையில்லை
என்று ஹெர்சாக் திருப்பியனுப்பியிருந்த தபாலோடு
திரைப்பட மாணவனொருவன்
என்னை எழுப்பியிருந்தான்
அந்த கேமிராவை எந்த தராசில் வைத்தாலும்
எடைமுள் ஒடிந்தது
லீனா மணிமேகலை
*ஒடெஸா திரைப்பட இயக்கம், இயக்குனர் ஜான் ஆப்ரஹாமால் தொடங்கப்பட்டது. மக்களிடம் உண்டியல் குலுக்கி, அக்ரஹாரத்தில் கழுதை போன்ற திரைப்படங்களைத் தயாரித்து இயக்கினார் ஜான் ஆபரகாம்.
*இன்றைய நவீன உலக சினிமாவைக் கோலோச்சும் வெர்னர் ஹெர்சாக், படமெடுக்க நிதியில்லாமல், திரைப்படக் கல்லூரி காப்பகத்திலிருந்து 35 எம். எம் கேமிராவை திருடிக் கொண்டு போனது வரலாறு.
*ரே என்ற சத்யஜித ரே இந்தியக் கலைசினிமாவின் தந்தை
*ரித்விக கட்டக் இந்திய மாற்று சினிமாவின் ஆன்மா.