ஒரு தொடக்கம் அல்லது சில திறந்த முடிவுகள்
திரைப்படக்கலையை ஒரு சமூகப் பண்பாட்டு அரசியல் நடவடிக்கையாக மேற்கொள்ள முடியுமா என்ற கேள்விக்கு, “முடியும்” என்று தீர்மானமாக சொல்கிற நம்பிக்கையைத் தந்திருக்கிறது டிஜிட்டல் தொழில் நுட்பம்.
மிக மலிவாக கிடைக்கும் ஒலி, ஒளிப் பதிவுக் கருவிகள், கை கணினிகளுக்கு வந்துவிட்ட படத்தொகுப்பு மென்பொருட்கள், டி.வி.டி விநியோக முறை என்று வணிக முதலாளி களிடமிருந்து சினிமாவை சாமானியனின் கைகளுக்கு மெல்ல கடத்துகிறது அதிவேக தொழில்நுட்ப மாற்றங்கள். ஒரு காகிதத்தைப் போல , எழுதுகோலைப் போல சினிமா தொழில் நுட்பத்தை எளிதாக்கிவிட்டதால் , ஒவ்வொருவரும் படமெடுக்கும் சமூக நீதியை டிஜிட்டல் புரட்சி சாத்தியமாக்கியிருக்கிறது.
தற்போதெல்லாம் நிறைவான திரைப்படம் தொழில்நுட்ப ரீதியிலும், கலை நேர்த்தியிலும் சிறப்பாக விளங்கும் திரைப்படம் பிற்போக்கானது என்று க்யூப இயக்குனர் கார்சியா எஸ்பினோசா குறிப்பிடுவார். தொழில்நுட்ப அழகியல் நேர்த்தி உருவாக்கும் முதலாளித்துவ செவ்வியல் மயக்கங்களிலிருந்து பார்வையாளர்களை விடுவிக்க புதிய சினிமா நமக்கு தேவைப்படுகிறது. இந்த புதிய சினிமா பார்வையாளர்களை நுகர்வோர் என்ற சட்டத்திலிருந்து மாற்றி பங்கேற்பாளர் என்ற இடத்திற்கு அழைத்து செல்கிறது. திறந்த சிந்தனை என்ற வெளிக்கு மடைமாற்றம் செய்கிறது. தொழிற்சாலைகளின் உற்பத்தி பொருளாக இருக்கும் திரைப்படங்களை மக்கள் கலையாக மாற்றுவதற்கு வழிவகுக்கின்றது.
புதிய சினிமா என்ற சொல்லாடலில், இந்த பத்து வருடங்களில் தமிழக கலைப் பண்பாட்டுச் சூழலில் ஒரு புதிய அலை உருவாகியிருக்கின்றது என்று நிச்சயமாக சொல்லலாம். ஆவணப்பட குறும்பட முயற்சிகளின் வீச்சு பட்டி தொட்டியெங்கும் பரவியிருக்கின்றது. குக்கிராமங்களில் கூட இயங்கும் திரைப்பட இயக்கங்கள் இதற்கொரு சாட்சி. பொதி நிகழ்ச்சிகளிலும், பள்ளி கல்லூரி விழாக்களிலும், இலக்கிய கூட்டங்களிலும் இன்று திரையிடல்கள் தவிர்க்க முடியாத நிகழ்வுகள் ஆகி விட்டன. அரசியல் இயக்கங்களும், தன்னார்வ அமைப்புகளும் தங்களுக்கான படங்களை தாங்களே உருவாக்கி கொள்ளும் குழுக்களை பயிற்றுவித்துக் கொள்கிறார்கள். உபதலைப்புகளுடன் வரும் வேற்று நாட்டு , வேற்று மொழிப் படங்களைக் கூட ஆர்வமாக மக்கள் பார்த்து, பொறுமையாக விவாதிக்கும் காட்சியை நாம் பரவலாக பார்க்க முடிகிறது. காட்சிக் கலைப் பண்பாட்டின் புதிய அசைவாக, தொடக்கமாக இதை அவதானிக்கலாம். இதை தொடர்ச்சியான இயக்கமாக, கூட்டு மன அமைப்பாக மாற்றினால் ஒரு நிஜமான மக்கள் கலையாக சினிமாவைப் பரிணமிக்க வைக்க முடியும்.
இந்தச் சூழலில் தொடர்ந்து எழுப்பப்படும் கேள்விகளைப் பற்றி சற்று சிந்திக்கலாம். நமது எதிர்கால விவாதங்களுக்கான குறிப்புகளாக அச்சிந்தனை பயன்படக் கூடும்.
ஆவணப்படம் என்றால் என்ன? குறும்படம் என்றால் என்ன? மூன்று மணி நேரம் – தொடக்கம் -திருப்பம் -ஐந்துப் பாடல்கள், நான்கு சண்டைக் காட்சிகள், காமெடி டிராக், கிளைமாக்ஸ், என்று எடுக்கப்படுவது தானே திரைப்படம்? மற்றதெல்லாம் எப்படி திரைப்படமாக முடியும்?
சலனப்படக் கலையில், ஆவணப்படம் ஒரு வகை, கதைப்படம் ஒரு வகை. குறும்படம், நீளப்படம்(Feature) என்பெதெல்லாம் நேர அளவுகளைக் குறிப்பவையே. ஒரு நிமிடம் ஓடும் படமும் சலனமே, மூன்று மணி நேரம் ஓடும் படமும் சலனமே, பதினெட்டு மணி நேரம் ஓடும் ஆவணப்படம் கூட உண்டு. நமது சிக்கல் , இங்கு நாடகக் கலையின் நீட்சியாக, திரைப்பதிப்பாக சினிமா புரிந்துக் கொள்ளப்பட்டிருப்பதும், சந்தை நிர்ணயிக்கும் கால அளவுக்குள், வடிவ நேர்த்திக்குள், பொழுதுபோக்கு அம்சங்களுக்குள் சினிமா ரசனை வளர்தெடுக்கப்பட்டிருப்பதும் தான். உலக அரங்கில் தொலைகாட்சி , இணையம், மொபைல் தொலைபேசி போன்ற புதிய ஊடகங்கள் திரைப்படக்கலையின் வடிவத்தை, உள்ளடக்கத்தை வெகுவாக மாற்றி பரிசோதனை முயற்சிகளை திறந்து விட்டிருக்கின்றன. ஒரு கதைப்படம் போலவே ஆவணப்படங்களும், மற்ற எல்லா பரிசோதனை சலனப் படங்களும் கலை சார்ந்த மதிப்பீடுகளை கொண்டவை தான். கலை மூலப் பொருட்களைத் தேர்ந்தெடுப்பதில் தொடங்குகிறது. அந்த மூலப் பொருளே தனக்கான வெளிப்பாட்டு வடிவத்தை, அதாவது கதையாக சொல்லப்படுவதையோ, ஆவணப்படுத்தப் படுவதையோ முடிவு செய்கிறது.
திரைப்படப் படைப்பாற்றலைப் பொறுத்தவரை, கதைப்படங்களை விட ஆவணப்படங்கள் அதிக சுதந்திரமானவை. வெவ்வேறு காலங்களில், வெவ்வேறு இடங்களில் நிகழும் வாழ்க்கை நிகழ்ச்சிகளை இணைக்க புதிய வடிவங்கள் பயன்படுத்த முடியும். ஆவணப்படத்தில் பதியப் பெறும் ஒரு நடப்பு நிகழ்ச்சி எதிர்காலத்தில் வரலாற்று ஆவணமாகிவிட முடியும். சில கருக்கள் ஆவணப்படங்களை விட கதைப்படங்களுக்கு நன்றாகப் பொருந்தும்.ஒரு இயக்குனரின் வெற்றி என்பது, ஒரு படத்தின் கருவைத் தீர்மானித்தவுடன், அதை வெளிப்படுத்துவதற்கான மிகச் சரியான வழியை கண்டறிவதில் தொடங்குகிறது.
அடிப்படை புரிதல்களுக்காக இவற்றை விவாதித்துப் பார்க்கிறோமே தவிர இன்று, திரைப்பட மொழி, கதை, ஆவணம் என்ற சொல்லல்முறை மயங்கிய ஒரு புதிய வெளிப்பாட்டு வகைமையை அடைந்துள்ளது. திரைப்பிரதி வழி இயக்குனர், கதாபாத்திரங்கள், பார்வையாளர்கள் ஒருவரையொருவர் தோள் தட்டி சண்டையிட்டு, தழுவிக் கொண்டு உரையாடும் பங்கேற்பு (Partcipatory) சினிமா இதனால் சாத்தியப்பட்டிருக்கிறது. இது வழக்கிலிருக்கும் வரம்புகளை உடைத்து முப்பரிமாணப்பரிவர்த்தனைக்கு வழிகோலுகிறது.
மிக இளைய கலையான சினிமா, தன் மூத்த கலைகளான நாடகம், இசை, கூத்து, நடனம், கவிதை, கதை, ஓவியம் போன்றவற்றின் பாதிப்பால் அவற்றின் மொழியையே நகல் செய்யாமல், தனக்கென்றொரு மொழியைக் கண்டடையும் முயற்சியில் உள்ளது எனலாம். எதை நோக்கி கேமிராவை குவிமையப்படுத்துவது, எப்படி காட்சிப்படுத்துவது (Mis – en -Scene),காட்சிகளை (Montages) தொகுப்பதில் உள்ள அரசியல் , கலை, தொழில் நுட்ப கண்ணோட்டங்கள் என்று எல்லாவற்றிலும் இந்த பங்கேற்பு பாணி பின்பற்றப்படும் பட்சத்தில் ஒரு புதிய அனுபவத்தை, தரிசனத்தை திரைப்படக் கலை தரக்கூடிய வாய்ப்புகள் அதிகம் .
எல்லாவற்றிற்கும் மேலாக எல்லா சாதனங்களையும் போல சினிமாவின் முக்கிய இலக்கு பரிமாற்றமே. புனைகதையோ, மிகை உணர்ச்சி மிக்க கதாபாத்திரங்களோ இல்லாமல், மக்களை முக்கிய பாத்திரங்களாக படைப்பில் பங்கேற்கச் செய்து ஊர் ஊராக மக்களின் பார்வைக்கு எடுத்து செல்லக்கூடிய திரைப்படங்களை எப்படி உருவாக்குவது என்பதிலிருந்து புதிய சினிமாவுக்கான நிரல் தொடங்குகிறது. அந்த அனுபவத்தின் அடிப்படையிலும் வரலாற்றின் துணையோடும் இதுவரையிலான படங்களையும், இனி எடுக்கப் போகும் படங்களை யும் விரிவான அலசலுக்கு உட்படுத்தலாம். சொந்த சமூகத்தின் வாழ்க்கையையும் யதார்த்தத்தையும் குறித்த கண்ணோட்டத்தைக் கொண்ட ஒரு தனித்துவமான சினிமா பாணியை படைப்பதற்கான முயற்சிகளுக்கான அடிப்படையாக அச்செயல் அமையும். திணிக்கப்பட்ட கலாசாரத்தின் முரண்பாடுகளைக் களைந்து, நமது உண்மையான அடையாளத்தை பிரதிநிதித்துவப்படுத்துவதற்கு திரைப்படக்கலையை அவ்வைகையில் மட்டுமே வசப்படுத்த முடியும்.
உயிர்த்துடிப்புடன், ஆற்றலுடன் இருக்கிற மக்களின் கலாசாரத்தை ஆராய்வதிலும், அதனுடன் இணைவதிலும் மட்டுமே, விடுதலை பெறச் செய்யும் புதிய மொழி பிறக்க முடியும் என்று நம்புவதில் அர்த்தமிருக்கிறது. கலைஞர்கள் மக்களுக்கு வழங்குவது, மக்களிடமிருந்துப் பெறுவதற்கு சற்றும் குறைவாக இருக்க கூடாது.ஏனெனில் மக்கள் சினிமாவுக்கான, புதிய சினிமாவுக்கான தேடல் என்பது சமூகப்
பிரக்ஞைக்கான தேடலும் தான்.
லீனா மணிமேகலை
(உலகத் தமிழ் ஆராய்ச்சி நிறுவனத்தின் தேசிய கருத்தரங்கத்தில் “மாற்று சினிமா” அமர்விற்காக எழுதப்பட்டது. டிசம்பர் 20,21,22 – 2010 , சென்னை )
உலகின் அழகிய முதல் பெண்
இயல்புகளின் இயல்புகளுக்குள் பொதிந்த ஆதிப் பெண்ணின் குரல், லீனாவின் கவிதைகளில் பெரும் உக்கிரத்துடனும் கொண்டாட்டத்துடன் பதிவு செய்யப்பட்டிருக்கிறது. எல்லாவிதமான சுதந்திரங்களையும் சுவீகரித்துக் கொள்கிற கவி மனத்தின் கடடற்ற போக்கில், கவிதையின் வழியாக பெரும் கலாசாரத்தின், பாலியல் முகத்தின் கரும்புள்ளிகளை வெடிவைத்து தகர்த்துவிடுகிறார். பலரது கண்டனங்களையும், முகச்சுழிப்புகளையும் கிளப்பிய இவரது தூமத்திக் கவிதைகளை பெரும் கலாசாரத்திற்கு எதிரான ஒரு சொல்லியல் நிகழ்த்துப் போராட்டமாக கருதிவிட்டு இவரது கொந்தளிப்பு மிக்க கவிதைகளுக்குள் நுழைந்துவிடலாம்.
– கவிஞர் சமயவேல்
(அக்டோபர் 2010)
கனவுப்பட்டறை பதிப்பகம்
விலை 70
உலகின் அழகிய முதல் பெண்
இயல்புகளின் இயல்புகளுக்குள் பொதிந்த ஆதிப் பெண்ணின் குரல், லீனாவின் கவிதைகளில் பெரும் உக்கிரத்துடனும் கொண்டாட்டத்துடன் பதிவு செய்யப்பட்டிருக்கிறது. எல்லாவிதமான சுதந்திரங்களையும் சுவீகரித்துக் கொள்கிற கவி மனத்தின் கடடற்ற போக்கில், கவிதையின் வழியாக பெரும் கலாசாரத்தின், பாலியல் முகத்தின் கரும்புள்ளிகளை வெடிவைத்து தகர்த்துவிடுகிறார். பலரது கண்டனங்களையும், முகச்சுழிப்புகளையும் கிளப்பிய இவரது தூமத்திக் கவிதைகளை பெரும் கலாசாரத்திற்கு எதிரான ஒரு சொல்லியல் நிகழ்த்துப் போராட்டமாக கருதிவிட்டு இவரது கொந்தளிப்பு மிக்க கவிதைகளுக்குள் நுழைந்துவிடலாம்.
– கவிஞர் சமயவேல்
(அக்டோபர் 2010)
கனவுப்பட்டறை பதிப்பகம்
விலை 70
உலகின் அழகிய முதல் பெண் – லீனா மணிமேகலையின் கவிதை முகம்
சமயவேல்
நன்றி தாமரை 14/10/2010
முப்பது ஆண்டுகளுக்கு முன்பு மேற்குத் தொடர்ச்சி மலைகளில், ஒரு பள்ளத்தாக்கின் சரிவில் பார்த்த ஆதி மனிதர்களின் குடியிருப்பில் அந்தப் பாறைகளைப் போன்றே, அந்த மரங்களைப் போன்றே வெகு இயற்கையான அந்த மனிதர்களின் அ-கலாச்சார வாழ்முறையைக் கண்டு, அது ஓர் அதிசயம் என நினைத்தேன். இயற்கையிலிருந்து ஒரு சிறிதும் பிரியாத அவர்களை, தொல்குடியினர் என்றும் பழங்குடியினர் என்றும் நாம் எழுப்பும் சொல்லாடல்களில் ஒரு அர்த்தமும் இல்லை. நம் காலத்தில் வாழ்ந்து கொண்டிருக்கும் அவர்களை பழங்குடியினர் என்று ஏன் அழைக்க வேண்டும்? ஆதி மனிதர்களின் மனசாட்சியாக வாழ்ந்தும் எழுதியும் வந்த லெவி ஸ்ட்ராஸ் கலாச்சாரத்தை இயற்கைக்கு எதிரிடையாக வைத்தார். ஒரு நொடியில் ஒரு நாட்டையே அழித்துவிட எத்தனித்திருக்கும் அணுக்கால மனிதர்களாகிய நாம், குகை வாழ்வைத் தாண்டி பல நூற்றாண்டுகளாக பூமி முழுதும் திரண்டிருக்கிற பல்வகை பண்பாட்டுச் சமூகங்களும் குறுக்கு மறுக்காக கட்டி எழுப்பியிருக்கும் கலாச்சாரச் சுவர்களை இடித்துத் தள்ளிவிட்டு, ஆதிவாழ்வின் அ-கலாச்சார மெய்மைகளை எப்படி மீட்கப் போகிறோம்?
லீனா மணிமேகலை, குகை ஓவியத்தையும் கவிதையையும் ஒரு நேர்கோட்டில் வைத்துப் பார்த்திருப்பது அவரது அ-கலாச்சாரத்தை அடைவதற்கான பெருவிருப்பத்தின் அடையாளமாகவே இருக்கிறது. இயல்புகளின் இயல்புகளுக்குள் பொதிந்த ஆதிப் பெண்ணின் குரல், லீனாவின் கவிதைகளில் பெரும் உக்கிரத்துடனும் கொண்டாட்டத்துடனும் பதிவு செய்யப்படிருப்பதை முதலில் நாம் அவதானிக்கிறோம். எல்லாவிதமான சுதந்திரங்களையும் சுவீகரித்துக் கொள்கிற கவி மனத்தின் கட்டற்ற போக்கில், கவிதையின் வழியாக பெரும் கலாச்சாரத்தின், பாலியல் முகத்தின் கரும் புள்ளிகளை, வெடிவைத்துத் தகர்த்துவிடுகிறார். பலரது கண்டனங்களையும், முகச் சுழிப்புகளையும் கிளப்பிய இவரது தூமத்திக் கவிதைகளை பெரும் கலாச்சாரத்துக்கு எதிரான ஒரு சொல்லியல் நிகழ்த்துப் போராட்டமாக கருதிவிட்டு இவரது கொந்தளிப்பு மிக்க கவிதைகளுக்குள் நுழைந்துவிடலாம். சமீபத்தில் ந.முத்துசாமியின் ‘பாஞ்சாலி’ என்ற சிறுகதையைப் படித்த பொழுது இன்று வரையிலும் பாரத கண்டமே பாஞ்சாலியின் தூமையில் நனைந்து கொண்டிருப்பதையும், அவள் துகிலுரியப்பட்ட நிகழ்வு இந்தியர்களின் கூட்டு நனவிலியில் ஆறாத புண்ணாகப் புரையோடியிருப்பதையும் அவதானிக்க முடிந்தது. லீனாவின் கவிதையிலோ தூமை, ஒரு எதிர்-அழகியல், தகர்ப்பு-மொழிப்பாடாக இயங்குவதை எவரும் வெகு எளிதில் புரிந்து கொள்ளமுடியும்.
கட்டற்ற காமத்தின் களிப்பைக் கொண்டாடும் லீனாவின் கவிதைகள் நவீன தமிழ்க் கவிதையின் புதுமொழியில், விதம் விதமான பாலியல் பித்தத்தையும், கொதிப்புகளையும் பெரும் உக்கிரத்துடன் வீசி எறிகின்றன. சங்ககால அகப் பாடல்களில் உள்ளுறையாகவும், திருக்குறளின் காமத்துப்பாலில் மெல்லிய கீற்றுகளாகவும், ஆண்டாளில் உடலை ஆன்மீக வெளிக்குக் கடத்தும் ஏக்கங்களாகவும் தொடரும் தமிழ்ப்பாலியல் கவிதைகளின் தொடர்ச்சியாக லீனா மணிமேகலையின் கவிதைகளும் அமைகின்றன. என் கள்வனின் நாக்கில்/ ஊறுகிறது/ விநோதத்தின் சாவிகள் என்ற வரிகளில் பெண் உச்சமடைகிற ரகசியத்தை, மிக அழகாக, சற்று சாய்ந்திருக்கும் மச்சத்தையும் சேர்த்து என்று கோர்க்கிறார். இந்தக் கடைசி மூன்று வரிகள் என்றைக்குமான அழகியலோடு இருக்க, முந்தைய வரிகள் இன்றைய அழகியலோடு இன்றைய மொழிப்புதுமையோடு ஒரு பின்னலான பாலியல் கவிதை ஆகிவிடுகிறது. இதே போல சாம்பன் கவிதையிலும் கலவியின் பிறிதொரு சித்திரம். “தொய்கிற வேளையெல்லம்/ காம்புகளில் ஏவுகிறது” என பாலியலின் நுண்ணிய அலகுகள் வழியாக, உச்சத்தில் பெண் அடையும் “கலவிகூர்புனல்” என வெளிப்படையான உரத்ததொரு பாலியல் மொழித்தொடரை உருவாக்குகிறார். கடைசி ஆறு வரிகளில் கவிதை திரள்கிறது. உடல்களை புராணிகத்துக்குக் கடத்தும் ரகசியத்தை இக் கவிதை மெல்ல அம்பலப்படுத்திவிடுகிறது. நா மீறிய கடல் கவிதையிலும் “ஈரத்தால் தீ மூட்டியவன்/ தன்/ நாக்கையும் விட்டுவிட்டுப் போய்விட்டான்/..”. என்று விளையாட்டு தொடர்கிறது. வேட்டை மறந்தவன் கவிதையில் யோனிக்காட்டில் புதுக்குகையைக் கட்டிக் கொண்டிருக்கும் ஆதிப் பெண்ணின் தங்கக் கிளிஞ்சல்கள் புதிய ரொமாண்டிசிச சொல்லடுக்குகளை உருவாக்குகிறது. ஒரு நீலப் பரவசக் கவிதையில் “கருவுறுகிறேன் தீவை” என்று இரண்டு சொற்களில் கவிதையை நட்டு வைக்கிறார். நிலவின் துரு, உனக்கு என்ன வேண்டும், மிதக்கும் பாடல், நீ பரப்பு நான் துண்டு ஆகிய கவிதைகள், காதலும் காமமும் மயங்கிய அழகியல் சொல்லாடல்களால் புதிய அகப்பாடல்களாகி விடுகின்றன. “நம்மிடையே ஒரு பிரேதம் கிடக்கிறது” என கொடூரமான பிரிவையும் ஒரு கவிதை பதிவு செய்கிறது. “அன்பொழிந்தவுடன்/ தலைகளைக் கொய்துவிடும் திடம்/ வாய்க்கப் பெறுவதில்லை/” என உறவுகள் அறுந்த கவிதையில் வெண்ணிப்பறந்தலை ஆக முயல்கிறார்
“ஒரு குவளைக் கள்” கவிதையில் “இடுப்பின் கீழ் இறுக்கிக் கட்டப்பட்ட/ என்/ கன்னிமையின் வெற்றிடம்/ யாரும் அறிய முடியாதது/” என்று எழுதுகிறார். கன்னிமை என்பது உடலின் வரலாற்றில் ஒரு கால் புள்ளி. அவ்வளவு தான். ஒவ்வொரு கலவிக்கு முன்பும் பின்பும் எல்லாப் பெண்களுமே கன்னிகள் தான். பெண்களின் இடுப்புகளில் பூட்டு மாட்டும் ஆணாதிக்க சமூகக் கட்டமைப்பின் பொய்ப் புனிதங்களில் ஒன்றுதான் கன்னிமை. எனவே தான் “என் கற்பின் கட்டியங்காரி/ நான்/” என திட்டவட்டமாக அறிவித்துவிடுகிறார். “கசியும் சொல்” கவிதையில் துர்வாடையைப் பரப்பும் துரோகத்தின் ஆடைகளைத் தூக்கி எறிந்துவிட இவரது பறவைகளின் அலகுகளில் ஒரு புதிய சொல் தொற்றிக் கொள்கிறது. புதிய சொல் உள்ளவரை லீனா மணிமேகலை புதிய பெண்தான். “நாடோடி” கவிதையில் யாதொருவரும் தங்கள் தடையங்களைக் களைந்துவிட்டு புத்துயிர் பெறும் வழியை சொல்லித் தருகிறார். நாம் நமது கலாச்சாரத்தின் எல்லாத் தடையங்களையும் அழித்துவிட்டு நிர்வாணிகளாக மட்டுமே காம வெளிக்குள் நுழைய முடியும். கலவியின் ஒற்றைக் கணத்தில் ஆணும் பெண்ணும் அடைகிற மெய்மையை, ஆன்மீகத்தை, பிரக்ஞைக்குள் செலுத்தி,சமூகவெளி முழுமைக்கும் நாம் வழங்க முடியுமா? உலகின் பாலியல் இலக்கியங்கள் எல்லாம் இந்தப் புள்ளியில்தான், வியப்பின் வினாக்களோடு நிற்கின்றன.
இவரது இன்னொரு முக்கிய முகம் தன்னைத் தானே கொண்டாடிக் கொள்கிறது. பெண்ணிய உடல் மொழியின் முக்கியத்துவத்தை முற்றிலும் புதிய கோணத்தில் பேசும் இந்தக் கவிதைகளை ஒவ்வொரு பெண்ணும் தன்னைப் பற்றிய கவிதைகளாக எடுத்துக் கொள்ளலாம். ஆண் கவிகள் கூட இந்த அளவுக்கு பெண்ணுடலைக் கொண்டாடியதில்லை. “உடல்=பிரதி=உடல்” கவிதையில் ஒரு வசீகரமான மொழியில் உடலைப் பிரதியாக்கி விடுகிறார். “கனவு நினைவு கனவு” என்ற கவிதையில் ஒரு வெகு விநோதமான கொஞ்சுதலைக் காண்கிறோம். “குலவையிட்ட” என்ற ஒரே சொல் மூலம் இந்தக் கவிதை தன் நடனத்தை நிறைவேற்றி விடுகிறது.இந்தக் கொண்டாட்டம் தவளையின் பாடல் கவிதையில் வேறு வேறு வகையான அழிப்புகளோடு உள்-இணைப் பிரதியாக பெரும் அதிர்ச்சியூட்டும் கவிதையாகிவிடுகிறது.
இந்தத் தொகுப்பில் சாம்பல் மரம் என்ற கவிதை ஒரு தனி இடத்தை பிடித்திருக்கிறது. கூடு திரும்ப முடியாத பறவையின் இந்தப் பாடலை வாசிக்கிற எல்லாத் தந்தையரின் கணுக்களிலும் பதித்து விடுகிறார். தந்தையரைக் கொல்ல வேண்டும் என்ற குரல்களின் மத்தியில் இந்தக் கவிதை தனித்து நிற்கிறது. என் மகளே எழுதிய கவிதை போல உணர்ந்தேன்.
ஆனால் லீனா மணிமேகலையின் பிரதான கவிதைமுகம் விலக்கப்பட்ட குருதியில் நனைந்த ஆதிமுகமாக இருக்கிறது. புத்தகம் முழுதும் குருதி கொட்டி சிவப்பேறிக் கிடக்கிறது. இந்தக் கவிதைகள் ஒரு பழைய நிகழ்வை ஞாபகமூட்டியது. எனது கல்லூரி நாட்களில் ஒரு விடுமுறை சமயத்தில் வீட்டில் தனியாக உட்கார்ந்து படித்துக் கொண்டிருந்தேன். ஏதோ வாசலில் நிழலாடியது. இரண்டு பள்ளிச் சிறுமிகள் தயங்கியபடி நின்றிருந்தார்கள். ஒருத்தி ஜோதி. உறவுக்காரப் பெண். இன்னொருவள் அவளது தோழி. “அண்ணே ஜோதியைக் கொண்டு போய் அவங்க வீட்ல விட்ருங்கண்ணே, மேத்ஸ் மிஸ் சொல்லிவிட்டாங்க.” என்றாள். ஜோதி அழுதபடி கன்னமெல்லாம் உப்பிப் போய் இருந்தது. ஜோதியின் வீடு எங்களூர் கண்மாயின் அக்கரையில் உள்ள முள்காடுகளைத் தாண்டி பனைமரக் கூட்டங்களுக்குள் இருந்தது. அந்தப் பெண் எனக்குப் பக்கத்தில் வந்து மெதுவாக “ஜோதி சடங்காயிட்டாண்ணே அதான்”. என்று கூறிவிட்டு ஓடிவிட்டாள். எனக்கும் திகைப்பாகிவிட்டது. சட்டையைப் போட்டுக் கொண்டு கிளம்பினேன். கதவைப் பூட்டப் போனபோது “இருங்க” என்று என்னைத் தாண்டி கதவைத் தள்ளிக்கொண்டு அடுப்பங்கரைக்குள் நுழைந்து கதவை சாத்திக் கொண்டாள். அடுப்பங்கரையில்தான் அங்கணம் இருக்கிறது. அங்கணத்தில் அவள் கழுவுக்கொள்கிற சப்தம் கேட்டது. அவளைக் கூட்டிக் கொண்டு வற்றிய கண்மாய் வழியாக நடந்தபொழுது அவளது உடையில் படிந்திருந்த இரத்தத்தைப் பார்த்ததும் எனக்கும் அழுகை வந்தது. பெண்களுக்கு மட்டும் ஏன் இப்படி ஒரு துயரம் வர வேண்டும் என்று பலவாறாக யோசித்தபடி நடந்துகொண்டிருந்தேன். இயற்கையின் புரியாத புதிர், அன்றே என்னை ஒரு பெண்ணியப் பிரக்ஞை உள்ளவனாக மாற்றி இருந்தது. காலத்தின் சுழற்சியோடு உடல்ரீதியாக பெண் ஒவ்வொரு மாதமும் இயற்கையைத் தொட்டுக் கழுவுகிறாள். ஒவ்வொரு பெண்ணுக்கும் ஒரு தனியான காலச்சுழற்சி இருப்பதால் அவள் ஒரு விண்கோளுக்கு ஒப்பாகிவிடுகிறாள். தான் ஒரு விண்மீன் என்றும் பெருஞ்சக்தியைக் கொண்டவள் என்றும் விலக்கப்பட்ட குருதிமூலம் அவள் உணர்ந்துவிடுகிறாள்.
லீனா மணிமேகலையும் விலக்கப்பட்ட குருதியால் ஒரு பிரளயத்தையே உண்டாக்கிவிடுகிறார். வாழ்த்துக்கள்.