இ.ம.க போலீஸில் கொடுத்த புகாரின் ஃபேக்ஸ் பிரதி /த.மு.எ.க சங்கத்தின் கண்டன அறிக்கை
இ.ம.க போலீஸில் கொடுத்த புகாரின் ஃபேக்ஸ் பிரதி /த.மு.எ.க சங்கத்தின் கண்டன அறிக்கை
தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர் கலைஞர்கள் சங்கம்
மாநிலக்குழு
28/21, வரதராஜபுரம் பிரதான சாலை, தேனாம்பேட்டை, சென்னை-600018
பத்திரிகைச் செய்தி
இந்து மக்கள் கட்சியினருக்கு தமுஎகச கண்டனம்
எழுத்தாளர் லீனா மணிமேகலையின் எழுத்துக்கள் ஆபாசமாக இருப்பதாகவும் சமூக ஒழுங்கைச் சீர்குலைப்பதாகவும் கூறி அவரைக் கைது செய்யுமாறும் அவரது எழுத்துக்களையும் சொத்துக்களையும் முடக்குமாறும் கோரி இந்து மக்கள் கட்சியினர் சென்னைக் காவல்துறை கமிஷனரிடம் புகார் அளித்துள்ளனர்.அவரும் அதை ஏற்று சட்டப்பிரிவுக்கு கருத்துக் கேட்டு அனுப்பியுள்ளார்.
ஒருவருடைய எழுத்துக்களின் மீது மாற்றுக் கருத்துக்கள் விமர்சனங்கள் யாருக்கு வேண்டுமானாலும் இருக்கலாம்.அதை வெளிப்படுத்துகிற உரிமையும் எவருக்கும் உண்டு.ஆனால் அதற்காக போலீஸ் உதவியுடன் எழுத்தை எழுத்தாளரை முடக்குவதை முடக்க முயற்சிப்பதை தமுஎகச ஒருபோதும் ஏற்காது. இந்து மக்கள் கட்சியின் இந்த அத்துமீறலை தமுஎகச வன்மையாகக் கண்டனம் செய்கிறது. இப்புகாரை நிராகரிக்க வேண்டுமெனக் காவல்துறையைக் கேட்டுக்கொள்கிறோம்.
கலாச்சார போலீஸ் வேலையின் இன்னொரு வடிவமாக வாயளவில் இடது தீவிரவாதம் பேசுகிற ஒரு சிறு குழுவினர் இரவு நேரங்களில் சில எழுத்தாளர்களின் வீடுகளுக்குப் போய் அவர்களின் எழுத்தை முன்வைத்து எழுத்தாளரின் குடும்பத்தினரையும் அண்டை வீட்டாரையும் எழுப்பித் தொல்லை செய்வதும் கலாட்டா செய்து வருவதும் எந்த எல்லைக்கும் சென்று எழுதுவதும் தாக்குவதும் நடந்துள்ளது.எழுத்தாளர் லீனா விஷயத்திலும் அவர்கள் இவ்விதமாகச் செயல்பட்டுள்ளனர்.அதையும் தமுஎகச வன்மையாகக் கண்டனம் செய்கிறது.கலாச்சாரப் போலீஸ்காரர்களாக மாறிக் கருத்துச் சுதந்திரத்துக்கு எதிராக தொடுக்கப்படும் எல்லாவிதக் தாக்குதல்களுக்கும் எதிராக தமுஎகச உறுதியுடன் போராடும் என்பதைத் தெரிவித்துக் கொள்கிறோம்.
எழுத்து சுதந்திரம் என்பது எதை வேண்டுமானாலும் எப்படி வேண்டுமானாலும் எழுதலாம் என்கிற கட்டற்ற நிலை அல்ல. நாம் வாழும் சூழலைக் கணக்கில் கொண்ட சுதந்திரமே சரியானது என்கிற நிலைபாட்டில் நின்றே தமுஎகச இந்தக் கண்டனத்தைப் பதிவு செய்கிறது.
அருணன் ச.தமிழ்ச்செல்வன்
மாநிலத்தலைவர் பொதுச்செயலாளர்
தோலுரிந்த கவிதை
மேல் தோலுரிந்த கவிதையொன்றை
எழுதிக் கொண்டிருக்கிறேன்
வழுவழுப்பான நிறமற்ற திரவத்தால்
மூடியிருக்கிறது அதன் உடல்
நண்பர்களும் அல்லாதோரும் அந்தரங்கத்தில்
பயம் கொள்கிறார்கள்
ஒதுங்கிக் கொள்ள ரகசியமாய் முடிவு செய்கிறார்கள்
மேல் தோலுரிந்த அபாயம்
எவ்வாறு நிகழ்ந்ததென்று நன்றாக அவர்களுக்குத்
தெரிகிறது. ஆனால் அப்படியில்லையென மறுத்துக்
கொள்கிறார்கள். அப்படி மறுத்துக் கொள்வதன் மூலம்
தற்காலிகமாக அபாயத்தை ஒத்திவைத்துவிட்டோம்
என்று நம்பிக்கை தோன்றுகிறது
மேல் தொலுரிந்த கவிதையொன்றை
எழுதிக் கொண்டிருக்கிறேன்
சக கவிகள் எழுதும் கவிதைகளிலோ
ஆடை அலங்காரங்கள்
அழகிய கைப்பின்னல் பூவேலைப்பாடுகள்
அலங்கரிக்கப்பட்ட கவிதையை எழுதுவது
எவ்வளவு பாதுகாப்பானது?
மூடிய கர்ப்பத்தின் நீர்ப்பையில்
வளரும் சிசு அது
எனது சிசுவோ பாதுகாப்பின்மையின்
உதிரம் கொட்டியபடி வளர்கிறது
மேல் தோலுரிந்தக் கவிதையொன்றை
எழுதிக் கொண்டிருக்கிறேன்
பெரியவர்கள் முகம் சுழிக்க
பிசாசுகள் மோப்பமிட
அதிகாரிகள் அருவருப்படைய
அக்கறை கொண்டவர்கள் எச்சரிக்கை செய்ய
தொலைபேசி இணைப்புகள் கசப்படைய
சாப்பாட்டு மேஜைகள் மெளனம் சுமக்க
பயணங்கள் தனிமை கொள்ள
மேல் தோலுரித்த கவிதையொன்றை
எழுதிக் கொண்டிருக்கிறேன்
சட்டம் ஒழுங்கால் சிறைபிடிக்கிறது அரசு
எரியும் கண்களால் சுடுகிறது நிறுவனம்
துரத்துகிறது குடும்பம்
உரிக்கப்பட்ட தோலை எடுத்து ஆராய்ச்சி செய்கிறது
மனநலக் காப்பகம்
பழைய சன்னியாசிகள்
காலத்தில் மரித்த உயிரைச் சுமந்தபடி
பயணிக்கிறது எங்கள் உடல்
இப்போது அந்நியர்கள்
அதனால் தோலுரிந்திருக்கிறது
கவிதை
லக்ஷ்மி மணிவண்ணன்
(வீரலெட்சுமி தொகுப்பு பக்கம் 64,65)
என் கவிதைகளுக்கு எதிர்த்தல் என்று பெயர் வை*
தொடர்ச்சியாக பெண்ணெழுத்தின் மீது கலாசார அடிப்படைவாதிகள் தாக்குதலை நிகழ்த்திக் கொண்டிருக்கிறார்கள். பத்திரிகைகளிலும், கூட்டங்களிலும், திரைப்படங்களிலும் மேற்கொள்ளப்பட்ட இந்தத் தாக்குதல் இணையதளங்களிலும் பரவியிருக்கின்றது. விமர்சனங்கள், வக்கிரமான கட்டுரைகள், அவதூறுகளைத் தாண்டி கலாசார அடிப்படைவாதிகளின் தாக்குதல் இப்போது போலீஸ், நீதிமன்றங்கள் வரையில் விரிவாக்கப்பட்டுள்ளன. இதன் சமீபத்திய நிகழ்வாக லீனாமணிமேகலையின் ‘உலகின் அழகிய முதல் பெண்’ கவிதைத் தொகுப்பையும், அவரின் வலைத்தளத்தையும் தடை செய்யுமாறு ‘இந்து மக்கள் கட்சி’ சென்னைக் காவற்துறை ஆணையரிடம் புகார் கொடுத்திருக்கிறார்கள். பெண்ணெழுத்துக்கு எதிரான ஒடுக்குமுறையாக மட்டும் இதை எளிமைப்படுத்தி பார்த்துவிட முடியாது. எதிர்காலத்தில் சமூக ஒடுக்குமுறைகளுக்கு எதிராக எழுதும் அனைத்து சக்திகள் மீதும் இவ்வாறான அச்சுறுத்தல்கள் நிகழும் அறிகுறிகள் நமக்குத் தென்படுகின்றன. இந்தக் கலாசார அடிப்படைவாதத்தையும், எழுத்துச் சுதந்திரத்தின் மீதான கண்காணிப்பையும் கண்டித்து நடைபெறும் கண்டன ஒன்றுகூடல்:
இடம் : ICSA அரங்கம், 107, பாந்தியன் சாலை, எழும்பூர் – 8
(எழும்பூர் மியூசியம் எதிரில்)
நாள் : 15.4.2010 வியாழக்கிழமை, மாலை 5 மணி
பங்கேற்பாளர்கள் :
அ. மார்க்ஸ், ச. தமிழ்ச்செல்வன், தேவபேரின்பன், வெளி ரங்கராஜன்,சி. மோகன், கே.ஏ. குணசேகரன், கோ. சுகுமாரன், வ.ஐ.ச. ஜெயபாலன், ராஜன்குறை, இந்திரன், சமயவேல், இராமாநுஜம், ஆதவன் தீட்சண்யா, அன்பாதவன், யவனிகா ஸ்ரீராம், லதா ராமகிருஷ்ணன், பிரளயன், பா. வெங்கடேசன், ஓவியா, ரஜினி, அஜிதா, சங்கர்ராம சுப்ரமணியன், என்.டி. ராஜ்குமார், பசுமைக்குமார், கரிகாலன், மணிமுடி, லீனா மணிமேகலை, கம்பீரன், மு. சிவகுருநாதன், மணல்வீடு ஹரிக்கிருஷ்ணன், மோனிகா, மணிவண்ணன், கே.டி. காந்திராஜன், அய்யப்பமாதவன், பீர் முகம்மது, சிராஜுதீன், அசதா, அஜயன்பாலா, செல்மா பிரியதர்சன், நீலகண்டன், இசை, இளங்கோ கிருஷ்ணன், சுகுணா திவாகர், விஷ்ணுபுரம் சரவணன், பொன் வாசுதேவன், விசுவநாதன் கணேசன், யாழனி முனுசாமி, விஜய் மகேந்திரன், சந்திரா, பாக்யம் சங்கர், வசுமித்ரா, சிநேகிதன், சுபஸ்ரீ, மீனா, அமுதா, கவின்மலர், நிர்மலா கொற்றவை.
எழுத்து, கருத்து அடக்குமுறைக்கு எதிரான உங்கள் எதிர்ப்பை பதிவு செய்ய அனைவரும் வாருங்கள்.
தொடர்புக்கு :
கருத்துச் சுதந்திரத்தில் அக்கறையுள்ள எழுத்தாளர்கள்
3/5, முதல் குறுக்குத் தெரு, சாஸ்திரி நகர், சென்னை – 20
பேசி : 94441 20582
*கண்டன ஒன்றுகூடலுக்கான தலைப்பு ஈழத்துப் பெண் கவிஞர் பெண்ணியாவின் கவிதையிலிருந்து எடுத்தாளப்பட்டுள்ளது.
சிட்டுக்குருவி
குறிப்பு – புத்தகம் பேசுது – முதல் பிரேவசம் பகுதிக்காக எழுதப்பட்டது
என் முதல் பிரேவசம் என்பது என் பதினோரு வயதில், கோகுலம் என்ற குழந்தைகளுக்கான பத்திரிகையில் வெளிவந்த “சிட்டுக்குருவி” பற்றிய கவிதை தான். என் காலஞ்சென்ற தந்தை பேராசிரியர் இரா.இரகுபதி அப்போதெல்லாம் குமுதம், விகடன் கூட வாசிக்க விட மாட்டார். தாமரை, செம்மலர், கோகுலம், பூந்தளிர், ஆங்கிலத்தில் வரும் சோவியத் பத்திரிகைகள் தவிர மற்றவற்றிற்கெல்லாம், வீட்டில் தடை.நாங்கள் குடும்பமாக போவதென்றால் தாத்தா வெங்கடசாமியுடன்(இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சியின் விருதுநகர் மாவட்ட செயலாளர்) கட்சியின் மாவட்ட கவுன்சில் போன்ற கூட்டங்களுக்கோ அல்லது அப்பாவுடன் கலை இலக்கியப் பெருமன்றத்தின் வருடாந்திர முகாம்களுக்கோ தான் செல்வோம். எனக்கு அந்த சமயங்களில் ஒரே கொண்டாட்டமாகிவிடும். தோழர் எம்.வி.எஸ்ஸின் சேர்ந்திசைப் பாடல்களில் கோரஸ் பாடுவதற்கும், தோழர் கே.ஏ.குணசேகரனின் நாட்டுப்புறப் பாடல்களில் தன்னானே போடுவதற்கும் எனக்கொரு வாய்ப்பு கிடைக்கும்.
பாடல்களோடு தான் கவிதைக்கான என் பரிச்சயம் தொடங்கியது. கர்நாடக இசையை முறைப்படி படித்திருந்தாலும், “அனுமதியோம், அனுமதியோம், நாட்டைத் துண்டாட அனுமதியோம்” என்ற சேர்ந்திசையிலும், “பாவாடை சட்டைக் கிழிஞ்சுப் போச்சுதே”, “ஓலையக்கா கொண்டையில ஒரு கூட தாழம்பூ” என்ற தெம்மாங்கு பாடல்களிலும் தான் மொழி என் வசமாவதை உண்ர்ந்தேன். பரதத்தில் ஆடும் பதங்களிலும், வர்ணங்களிலும் சமஸ்கிருதத்தையும், தெலுங்கையும் அந்நியமாக உணர்ந்ததால்.எளிய தமிழில் அடவமைக்கப்பட்டிருந்த குறவஞ்சியையும், பாம்பு நடனத்தையும் மட்டும் விரும்பி ஆடுவேன்.
பள்ளிப் பருவங்களில் எதுகை, மோனை எல்லாம் போட்டு எளிய சொற்களில், பாடலுக்கான சந்தத்தோடு கவிதை எழுதுவது எனக்கு மிகவும் பிடித்த விளையாட்டு. கான்வென்டில் படித்ததால்,ஆங்கில கிறிஸ்தவ கோரஸ்களை நிறைய கற்றுத் தருவார்கள். அதை தமிழ்ப்படுத்தி,அதிலிருக்கும் வார்த்தைகளையெல்லாம் புரட்சி, எழுச்சி என்று மாற்றிப் பாடி பார்த்து தீவிரமாக டைரியில் எழுதி வைப்பேன். கட்சி மேடைகளில் தலைவர்களின் உக்கிரமான பேச்சுக்களின் நடுவே எனக்கு கிடைக்கும் பாடல் வாய்ப்பில் ஒரு மக்கள் கவிஞராக என்னைக் கற்பனை செய்துக் கொண்டு சொந்த வரிகளுக்கு மெட்டுப் போட்டு போடுவேன். பல மணி நேரங்கள் தலைவர்கள் உரையாற்றுவதை என் பாடல் ஒரு சில நிமிடங்களிலேயே சாதித்துவிடும் என்றும், சமூக மாற்றத்திற்கு முதல் படியே எல்லா தோழர்களையும் சேர்ந்திசைக்க வைப்பது தான் என்றும் திட்டவட்டமாக நிம்பியிருந்த காலங்கள் அவை.கவிதைப் போட்டிகள், பேச்சுப் போட்டிகள், கட்டுரைப் போட்டிகள் என்று எல்லாவற்றிலும் என் சொந்த வரிகளை எழுதும்போது,சொற்களால் சமூகத்தையே புரட்டிப் போட்டுவிடுகின்ற திமிருடன் ஒரு காவல்தெய்வத்தின் ஆணவத்தோடு திரிந்திருக்கிறேன்.
பதினாலு வயதில் காதல் வந்த போது தான் குழப்பமே வந்தது. டைரியில் நான் எழுதத் தொடங்கியிருந்த காதல் கவிதைகளை அப்பா உளவு பார்த்து கண்டித்தது என்னை கடுமையாக பாதித்தது. வாழ்த்து அட்டைகள், காதல் கடிதங்கள், பரிசுகள், இவற்றோடு கவிதைகளையும் பதுக்குவது பெரிய சாகசமாயிருந்தது.”உன் கண்களால் நான் கொஞ்சம் தூங்கி கொள்கிறேன்”, “நீ நலம், நான் அங்கு நலமா” போன்ற கவிதைகள் கவர்ந்த காலங்கள் அவை.எனக்கு வந்து சேரும் காதல் கவிதைகளில் சிறிது கவித்துவம் கூடி எழுதும் பசங்களுக்கு அதிகம் கரிசனம் காட்டுவது, ஒரு கவிதை டீச்சர் போல வரிகளைத் திருத்திக் கொடுப்பது என்று அட்டகாசமாய் காதலியை விட காதலை நேசிக்கும் விடலைப் பசங்களோடு என் கவிதைப் பிரயத்தனங்கள் வளர்ந்தது. கவிதைப் போட்டிகளில் நண்பர்களுக்கு எழுதிக் கொடுத்து பரிசு வாங்கித் தருவது, அதைக் கொண்டாடுவது என்று நட்புக்கும் கவிதை உதவியது.
குடும்பத்தின் கண்களிலிருந்து கவிதையை மறைக்க ஆரம்பித்ததில் கவிதை எனக்கு ரகசியங்களின் கிடங்காக மாறியது.பெண், சாதி, குடும்பம், வர்க்கம்,நம்பிக்கைகள்,இருப்பு என்று எல்லாவற்றையும் பற்றிய கேள்விகளும், தேடல்களும் தீவரமடைந்த போது, கவிதை எனக்கு நானே நடத்திக் கொண்ட உரையாடல் களமானது. பதிப்பிக்க வேண்டும், பத்திரிகைக்கு அனுப்ப வேண்டும், மேடைகளில் வாசிக்க வேண்டும் என்று எந்த நோக்கமும் இல்லாது என் உடல்தட்ப வெப்பத்திற்கேற்ப நீளும் அல்லது மறையும் நிழலாக கவிதை என்னைத் தொடர்ந்தது.நான் படித்த முதல் நாவல் தாய் தான் என்றாலும் நம்ம ஊர் படைப்பாளிகளைத் தேட தொடங்கினேன். ரமணிச்சந்திரன், சுஜாதா, பாலகுமாரனைத் தாண்டி ஜெயகாந்தனும், அம்பையும் வாசிக்கத் தொடங்கியிருந்தேன். சுபமங்களாவை புரிந்தும் புரியாமலும் மேலிருந்துக் கீழாக, கீழிருந்து மேலாக பல தடவை வாசித்துப் பழகுவேன்.
கல்லூரி நாட்களில் அனைத்திந்திய இளைஞர் பெருமன்றத்தோடு சேர்ந்து, கிராமங்கள் தோறும் வீதி நாடகங்களில் பங்காற்றியிருக்கிறேன். அப்போது நான் அறிந்துக் கொண்ட கிராமத்து சொலவடைகளும், நாட்டுப் பாடல்களும் நான் எந்த புத்தகத்திலும் படித்தறியாத அனுபவத்தையும் உணர்வையும் தந்தது. அப்பா நூலகத்தில் நான் பார்த்தறிந்த அகராதிகள், நிகண்டுகள் , அபிதான சிந்தாமணிகள் எதிலும் கற்றுக் கொள்ள முடியாத கிராமத்து பெரிசுகளின் சொற்களும் அர்த்தங்களும் மொழி, அழகியல்,பண்பாடு குறித்த புதிர்த்தனமான மனநிலையை தோற்றுவித்தன..ஆனால், பொறியியல் கல்லூரியில் படித்ததால், கவிதை ஒன்று தான் என்னை மொழியோடு,நான் வாழும் சமூகத்தோடு பிணைத்திருந்தது. எனக்கென்று ஒரு அரசியல் பார்வையையும் மொழிமூலமே பெற முடிந்தது. தொழில்படிப்பென்பதால், பாடங்களும் பயிற்சி வகுப்புகளும் கடுமையாக இருக்கும். ஆனாலும் அப்பாவின் நூலகங்களிலிருந்து உருவிய புதுமைப்பித்தனும், கி.ராஜநாராயணனும்,கு.அழகிரிசாமியும் என்னை சுண்டி இழுத்தார்கள்.வாசிப்பில் கதைகள் தான் அதிகமென்றாலும், தனியே நான் எழுதிப் பார்க்கையில் கவிதை மாதிரி ஒன்றைத்தான் என்னால் எழுத முடிந்தது.ஆனால்,நவீன கவிதை என்றால் என்ன என்ற அனா,ஆவன்னா தெரியாத காலத்தில் கூட நான் எழுதும் கவிதைகள் மிகவும் நாடகத்தனமாக இருக்கிறது என்ற எண்ணம் எனக்கிருந்தது. அதனால் யாரிடமும் நான் எழுதியதைக் காட்டுவதற்கு வெட் கமாகவும் தயக்கமாகவும் இருக்கும். கணினிகளோடும், எலக்டிரானிக் சிப்களோடும், மெஷின்களோடும் வாழப் போகும் எனக்கு கவிதை சாத்தியமாகுமா என்ற கேள்வியும் அவ்வப்போது என்னை ஒடுக்கிவிடும்.
இயக்குநர் பாரதிராஜா, கவிதைக்கான என் வேட்கையை அடையாளம் கண்டவர். அவரிடம் உதவி இயக்குநராக இருந்தபோது ஒவ்வொரு நாளும் அவர் மேஜையில் அன்று மலர்ந்தப் பூக்களும்,என்னுடைய கவிதை ஒன்றுமிருக்கும். அவர் அதைப் படித்துவிட்டு உயர்த்தும் புருவத்திலும், சுருக்கங்கள் நெளிய காட்டும் முகபாவத்திலும் என் அடுத்தடுத்த கவிதைக்கான முகவரி இருக்கும்.என் தந்தையின் கண்டிப்புக்கும், ஒழுக்க மதிப்பீடுகளுக்கும் அஞ்சி பதுங்கியிருந்த என் மொழி, இயக்குநரின் நேசத்திலும் உரையாடல்களிலும் பாராட்டுகளிலும் ஒரு காட்டாறு போல பாயத்தொடங்கியது.
ஆத்மநாம், நகுலன், இன்குலாப், வ.ஐ.ச ஜெயபாலன், கலாப்ரியா, சுகுமாரன், சேரன், சிவரமணி என்று தேடி தேடி வாசித்தேன்.”தாமரை” என்னுடைய கவிதைகளை பிரசுரித்தது. கலை இலக்கியப் பெருமன்றத்தின் மாநாட்டுக் கவியரங்கத்தில் முதல் தடவையாக கவிஞர் லீனா மணிமேகலை என்று அச்சிட்டு வந்த அழைப்பிதழை வெகு நாள் பாதுகாத்து வைத்திருந்தேன். கவிஞர் குட்டிரேவதியின் “பூனையைப் போல அலையும் வெளிச்சம்” படித்தபோதுதான் நானும் ஒரு தொகுப்பு வெளியிடுமளவு கவிதைகள் எழுத வேண்டும் என்று உந்துதல் வந்தது. மாலதி மைத்ரி, சல்மா, கிருஷாங்கனி,லதா ராம்கிருஷ்ணன் இவர்களையெல்லாம் படித்து என் கவிதைகளைப் பலவாறு சுயவிமர்சனம் செய்து கொண்டு, இன்னும் எழுதிப் பழகனும், தொகுப்பெல்லாம் அப்புறம் பார்த்துக் கொள்ளலாம் என்று விட்டுவிட்டேன்.
ஜெரால்ட் தோழனான பிறகு, தமிழ் மாணவரான அவர், நான் எழுதுவதையெல்லாம் காட்டமாக விமர்சிப்பார். இலக்கியம், சினிமா, அரசியல், கலை என்று கன்னா பின்னாவென்று சுற்றித்திரிந்தபின் எழுது, அனுபவம் போதாது என்பார்.கணையாழி,தீராநதி, என்று எல்லா சிறுபத்திரிகைகளுக்கும் எழுதினேன். ஒரு தொகுப்பு வெளியிடுமளவுக்கு பிரசுரிக்கப்பட்ட கவிதைகள் சேர்ந்தபோதும் தயக்கம் தான். சரி, நான் மிகவும் நேசிக்கும் கவிஞர் சுகுமாரனுக்கு அனுப்பி பார்க்கலாம்.அவர் முன்னுரை அளித்தால் வெளியிடலாம் என்று தோன்றியது.கவிஞர் சுகுமாரன் “தமிழ்க் கவிதையில் கேட்கும் அசலானதும், தீவிரமானதுமான குரல்களில் லீனா மணிமேகலையின் குரலும் ஒன்று என்றும், சில ஆண்டுகளுக்கு முன் அவர் கணையாழியில் அவரெழுதிய “பெண் கவிதை மொழி, கணையாழி ஏப்ரல் 94″ என்ற கட்டுரையைத் திரும்ப பெற்றுக் கொள்வதாகவும்” எழுதியது எனக்கு உற்சாகத்தையும், நம்பிக்கையையும் தந்தது. ஜெரால்டு தன் கல்லூரிக்காலங்களிலிருந்து கண்ட பதிப்பக கனவை கனவுப்பட்டறையாக உருவாக்கினார். என் “ஒற்றையிலையென” அதன் முதல் புத்தகமாக வெளியானது.அப்போது எனக்கு வயது 23.என் தந்தையிடம் காட்டவே முடியாத பிரதி.எனக்கு அவரோடு இருந்த நட்பு முரண் இன்னும் தீர்த்துக் கொள்ள முடியாத கணக்கு.
சினிமாவும், தொலைக்காட்சியும் பிரதான ஊடகங்களென நான் தெரிவு செய்து பணியாற்றத் தொடங்கியபோது சுளீரென்று உரைத்த உண்மை ஒன்று தான். கவிதை என்பது உண்மையில் நான் எழுதிப்பார்க்கும் வரிகள் மட்டும் அல்ல. கவிதை என்பது ஒரு மனநிலை.ஒன்றை கதையாக்கி விரிப்பதும், காட்சிகளாக்கி பார்ப்பதும் கவிமனம் தான். எந்த ஒரு படைப்பாளிக்கும் கவிமனம் தான் ஆரம்பப் புள்ளி. எந்த கலையனுபவமும் அடிப்படையில் கவிதானுபவம் தான். ஒரு சொல், ஒரு பிம்பம், பல சொற்கள் ஒரு பிம்பம், பல பிம்பங்கள் ஒரு சொல் என்று கலையும், உணர்வும், தொழில்நுட்பமுமாய் சினிமா எனக்கு கவிதையின் நீட்சியாய் புலப்பட்ட போது தெளிவு பிறந்தது.
இன்று வெகு தூரத்திற்கு வந்துவிட்டேன்.கவிதைகளைப் பற்றிய என் அரசியல் பார்வை தீர்க்கமடைந்திருக்கிறது. வன்முறையை மறுக்க, சகலவிதமான ஒடுக்குமுறையை எதிர்க்க,விடுதலையைக் கொண்டாட, உடலை-மனதை வியக்க, சமூக மதிப்பீடுகளை மீட்டுருவாக்கம் செய்ய,சுய விமர்சனம் செய்துக் கொள்ள, மாற்று அழகியலுக்கு களம் அமைக்க, பன்மையை நிறுவ என்று எழுத்தின் செயல்பாடுகளை கூர்மைபடுத்த விரும்புகிறேன்.என் கவிதை எதிர் கலாச்சார நடவடிக்கையாக மேலும் மேலும் தொழில்படும். எல்லா சட்டங்களையும் மீறும், வெளியேறும்,திளைக்கும். என் கலை வெட்டிவிட்ட பாதையில் ஒருபோதும் போகாது.
“உலகின் அழகிய முதல் பெண்” என்ற எனது இரண்டாவது தொகுப்பிற்கு சர்வதேச விருதும் கிடைத்திருக்கிறது, வக்கிரமான அவதூறு கட்டுரைகளும் நடந்திருக்கிறது ,போலீஸ் கேஸ், கட்சி வழக்குகளையும் இனி சந்திக்கும்.
ம.க.இ.க, இந்து மக்கள் கட்சி இன்னும் எங்கிருந்து எந்த தாக்குதல் வந்தாலும் என் படைப்பு ஒன்றே என்னிடமிருக்கும் முதலும், கடைசியுமான ஆயுதம்.
லீனா மணிமேகலை
25 . 03. 2010
மனிதனின் மொழி
(தணிக்கை செய்யப்படாத பிரதி)
கவிதை ஒன்றும் அழகுக் குறிப்புக் கிடையாது. வாசகருக்கு வாசிப்பு இன்பத்தை அளிப்பதைக் காட்டிலும் வாசகர்களின் கண்களில் அவர்களது சக மனிதனின் மனுஷியின் துயரத்தையும் ஆற்றாமையையும் இழிவையும் இரத்தத்தையும் எழுதிக்காட்டவே நான் விரும்புவேன். அங்கீகரிக்கப்பட்ட சொற்களால் மட்டுமே எழுதுவதற்குக் கவிதை அரசு அலுவலகக் குறிப்பல்ல. கவிதைக்கு புனிதச் சொற்கள் என்றோ விலக்கப்பட்ட சொற்கள் என்றோ விதிகள் ஏதும் கிடையாது. உண்மையின் தடத்தைப் பற்றியே நகரும் கவிதைக்குச் சட்டங்கள் குறித்து எந்த அச்சமும் கிடையாது.
அண்மையில், “உலகின் அழகிய முதல் பெண்” என்ற எனது இரண்டாவது கவிதைத் தொகுப்பு ஆபாசங்களின் தொகுப்பாக இருக்கிறது, அதனால் அந்த புத்தகத்தையும், எனது வலைப்பதிவையும் தடை செய்ய வேண்டும் என்று இந்து மக்கள் கட்சியினர் போலீஸ் கமிஷனரிடம் புகார் கொடுத்திருக்கிறார்கள். சில மாதங்களுக்கு முன், ம. க. இ. க ஆதரவு இணையதளமொன்று அதே கவிதைகளுக்காக என்மீது ஆணாதிக்க வக்கிரத்தோடு அவதூறுகளைப் பரப்பியிருந்தது. அவர்கள் இந்துத்துவாவைக் கடுமையாக எதிர்ப்பவர்கள். பெண்ணுக்கான மரபுகளையும் கலாச்சாரங்களையும் காப்பாற்றி வைப்பதில் இந்துத்துவ எதிர்பாளர்களும் இந்துத்துவாக்காரர்களும் ஒரே புள்ளியில் சந்திப்பது தமிழகத்தில் திரும்பத் திரும்ப நிகழும் முரண்நகை வரலாறு.
எனது கவிதைத் தொகுப்பைத் தடைசெய்வது என்றால் முதலில் அவர்கள் ஆண்டாள் எழுதிய நாச்சியார் திருமொழியைத் தடைசெய்ய வேண்டும். ஆண்டாளைக் கடந்து நானோ, இதே வகையில் சர்ச்சைக்குள்ளாக்கப்பட்ட எனது சக பெண் கவிஞர்களோ காமத்தையும் வேட்கையையும் எழுதிவிடவில்லை. நமது கோயில் கோபுரங்கள், குளங்கள், தேர்களில் இருக்கிற சிற்பங்களையும், ஓவியங்களையும் கொஞ்சம் நின்று பார்த்தால், நமக்கு பக்தி வருகிறதோ இல்லையோ இங்கே கலையில் ஒழுக்கவியல் மதிப்பீடுகள் என்றும் எதுவும் இருந்திருக்கவில்லை என்பதாவது என்று புரியும். நமது பெண்கள் விலங்குகளுடன் புணரும் நிலையிலுள்ள சிற்பங்கள் சீரங்கம் கோவில் மண்டபத்திலேயே இருக்கின்றன.
காலங்காலமாக ஆண்கள் தமது கட்டுப்பாட்டுக்குள் வைத்திருந்த இலக்கியத்தையும் மொழியையும் பெண்கள் கைப்பற்றும்போது ஆணாதிக்கம் அதிகாரமும் துடித்துப் போகிறது. அவள் தனது உடலையும் விருப்புகளையும் இச்சைகளையும் இலக்கியத்தில் பேசும்போது கலாச்சாரம் கெட்டுவிட்டதாக ஆண்கள் கொதிக்கிறார்கள். பெண் விடுதலை குடும்பத்தின் வன்முறை சுதந்திரக் காதல் ஒழுக்கத் தடைமீறல்கள் இவற்றையெல்லாம் வியக்கத்தக்க முறையில் காலத்தைத் தாண்டிச் சிந்தித்து அறிவித்த தந்தை பெரியாரின் மண்ணில் இன்று கவிதை இந்துத்துவ சக்திகளால் கமிஷனர் அலுவலகத்திற்கு அனுப்பப்பட்டுள்ளது. வெறுமனே புகார் மிரட்டல் என்று இதை நான் அலட்சியம் செய்ய மாட்டேன். இவ்வாறான கலாச்சார அடிப்படைவாதிகள் மிரட்டல்களில் தொடங்கிக் காலப்போக்கில் கொலைகளில் முடிப்பார்கள் என்பதே வரலாறு. மெல்ல வளரும் கலாச்சாரப் பாஸிசத்தின் தொடக்கப் புள்ளியாகவே நான் இதை அடையாளம் காண்கிறேன்.
இங்கே மட்டுமல்ல உலகம் முழுவதுமே விடுதலையை எழுதும் பெண்கள் எதிர்கொள்ளும் நிலை இது தான். அவதூறு, மிரட்டல், கைது, வன்முறை, கொலை, நாடுகடத்தல், இல்லாமல் ஆக்குதல்,ஃபத்வா, என்று அதிகாரத்தின் ஆயுதங்கள் பெண்கவிகள் மீது எறிந்த ஆயுதங்கள் ஒன்றல்ல, இரண்டல்ல.
“என்னுடைய பெயர்களுள் ஒன்று
அந்த மலை முகடுகளுக்கிடையே
ஒருநாள் சூரியனாக உதயமாகும்
பெருமழையில் நனைந்துப் போயிருக்கும் இருளுக்கும்
சுழல்வெள்ளத்தில் களைத்துப் போயிருக்கும் மீனுக்கும்
நம்பிக்கையின் நினைவுகளாய் அது ஒளிவீசும்”
என்று எழுதிய ஆஃப்கான் கவிஞர் நாடியா அஞ்சுமான் 25 வயதில் கொல்லப்பட்டார். ஏனென்றால,அவர் பெண்களின் விடுதலையை எழுதினார். நாடியா தாலிபான்களால் தடைசெய்யப்பட்ட அவரது கவிதைகளை ஆஃப்கானிஸ்தான் தெருக்களில் இரகசியமாகப் பாடிச் சென்றவர்.புர்காவுக்குள் சொற்களைப் பதுக்கி, அவற்றை விடுவிக்கும் ஒவ்வொரு முறையும் தன்னை விடுவித்துக் கொள்ள முயற்சி செய்த ஒரே குற்றத்திற்காக நாடியா நயவஞ்சகமாக “மார்க்கத்துக்கான கொலை” என்ற பெயரில் தன் கணவராலேயே கொல்லப்பட்டார். வாப்பா ! இத்தனை நபிகளுள்ளும் ஏன் ஒரு பெண் நபி இல்லை என்று கேட்ட G.H. ரசூலின் முக்காடணிந்த கவிதைச் சிறுமி இதை எழுதும்போது என் ஞாபகத்தில் வருகிறாள்.
“அவர்கள் சொல்வார்கள்
இதெல்லாம் மிகச்சாதாரணம் என்று
பெரிதாக அலட்டிக் கொள்ளாதே என்று
சிறிது பணிவாக நடந்துக் கொள் என்று
அழுகையை அடக்கிக் கொள் என்று
அவர்கள் சொல்வார்கள் தான், ஆனால்
நீ எழுந்து நிற்க வேண்டும்
தலைநிமிர்ந்து நிற்க வேண்டும்
மனதை உரத்துப் பேச வேண்டும்
சத்தம் கேட்க கேட்க
அவர்கள் சொல்வார்கள்
வெட்கம் இல்லாதவள் என்று
நீ அதைக் கேட்டு இன்னும் உரத்து சிரிக்க வேண்டும்
சத்தம் கேட்க கேட்க
மேலும் அவர்கள் சொல்வார்கள்
மானங்கெட்டவள் என்று
இன்னும் நீ கத்தி சிரிக்க வேண்டும்
மேலும்,மேலும் அவர்கள் சொல்வார்கள்
பரத்தை என்று
நீ “ஆம் நான் பரத்தை” என வேண்டும்
அவர்கள் அதிர்ச்சியடைவார்கள், நம்ப மறுப்பார்கள்
ஆண்கள் நீ வேறு எதுவும் சொல்லிவிடுவாயோ என்று அஞ்சுவார்கள்
பெண்கள் உன்னைப் போல் பரத்தையாக உள்ளூர விரும்புவார்கள்”
என்று எழுதிய தஸ்லிமா நஸ் ரீன் மருத்துவராக மட்டும் பணி செய்திருந்தால் சமூகம் கொண்டாடியிருக்கும். கவிதை எழுதியதால் அவரை நாட்டை விட்டு வெளியேறச் சொன்னது. ஆணாதிக்கம் அடித்தது, உதைத்தது. மதவாதம் அவர் தலைக்கு விலை நிர்ணயித்தது.ஒரு பெண்ணாக எனக்கு நாடில்லை,ஒரு பெண்ணாக எனக்கென்று ஒரு நாடு வேண்டாம், ஒரு பெண்ணாக இந்த உலகமே என் நாடு என்று தஸ்லிமா வாழ நிர்ப்பந்திக்கப்பட்டார். தஸ்லிமா தஞ்சம் என்று வந்தபோது மேற்கு வங்கத்தின் கம்யூனிஸ்ட் அரசு கூட அவரைக் கைவிட்டது.
“அர்த்தமற்ற நாள்களில்
வாழ்ந்து கொண்டிருக்கின்றேன்
அவலத்திலும் அச்சத்திலும்
உறைந்து போன நாள்கள்…..
காலைப் பொழுதுகளில்
பனியில் குளிக்கும் ரோஜாக்களை விட
பக்கத்தில் இளமொட்டு முகையவிழ்க்கும்
தொட்டாற் சிணுங்கியில்
கண்கள் மொய்க்கின்றன
இன்னுமெப்படி களையெடுப்பவன்
இதனைக் காணாது போனான்? ”
என்று காத்திரமான கேள்விகளை கவிதைகளில் கேட்டதாலேயே செல்வி ஈழத்தில் விடுதலைப் புலிகளால் கைது செய்யப்பட்டு “இல்லாமல் ஆக்கப்பட்டார்”.செல்வியின் இருப்பிடத்திலிருந்து செல்வியின் கையெழுத்துப் பிரதிகள், குறிப்புக்கள், கடிதங்கள், புத்தகங்கள் அனைத்துமே அவர்களால் எடுத்துச் செல்லப்பட்டது. தமிழ் மக்களின் விடுதலையை உத்தரவாதப் படுத்தப்போகும் ஒரு இயக்கத்தினுள் சுதந்திரம் இருக்கிறதா என்று கேள்வி எழுப்பும் தார்மீகம் ஒரு கவிக்கு மறுக்கப்பட்டது.அரசு மட்டுமல்ல போராளிக் குழுக்களும் பெண்கள் “தன்னுணர்வை” பெறுவதை விரும்பவில்லை. இயக்கங்களிலும், போராட்டங்களிலும், புரட்சிகளிலும் பெண்கள் அதிக எண்ணிக்கையில் கலந்துக் கொண்ட போதிலும், ஆண்களின் பிண்ணிணைப்புகளாகவே செயல்பட அனுமதிக்கப்படிருக்கின்றனர். தலைமை, தலையீடு, சுயேச்சயான இருப்பு என்ற இடத்தில் நசுக்கப்பட்டே வந்திருக்கின்றனர்.
சர்வதேச கவிஞர்கள் மற்றும் நாவலாசிரியர்கள் கூட்டமைப்பு உலகப் புகழ்பெற்ற ‘POETRY INTERNATIONAL AWARD என்ற கவிதைக்கான சர்வதேச விருதை கவிஞர் செல்வி கைது செய்யப்பட்டிருக்கும் போது, அவருக்கு வழங்கி கவுரவித்தது.
அந்த விருது வெளியீட்டு பிரசுரம் பின்வருமாறு குறிப்பிடுகின்றது:
‘மரணத்தையோ அல்லது சிறைவாசத்தையோ கவிஞர்கள் எதிர்கொண்ட போதும் அவர்கள் மனிதனது மொழியை பேசுகிறார்கள். கருத்துச் சுதந்திரத்திற்கான போராட்டத்திற்கு உருக்கொடுக்கிறார்கள். மனித உரிமைகளை பாதுகாப்பதற்கும் அதற்கு போராடுவதற்கும் உலகம் தழுவிய முயற்சிகள் இருந்த போதிலும், மனிதனுடைய கௌரவத்தை நேர்மையாக பகிரங்கப்படுத்தும் குரல்களுக்கான அவமதிப்பும், கவிதைக்கான அவமதிப்பும் என்பது மனித வாழ்வுக்கேயான அவமதிப்பாக அநேகமாக வெளிப்படுகின்றது’.
இன்று எல்லா மொழிகளிலும், பண்பாடுகளிலும், எழுதிவரும் பெண்களின் கவிதைகள் கலாசாரம் என்ற நுகத்தடி கொண்டு மிக மோசமாக ஒடுக்கப்படுகின்றன. எதிர்ப்பை பற்றிய கவிதைகள் எதிர்ப்பை விட மேலோங்கி ஒலித்துக் கொண்டு தான் இருக்கின்றன. அழிப்பிற்கிடையே மிஞ்சும் சொற்களில் ஒளிர்கிறது பெண் வரலாறு.
லீனா மணிமேகலை
(நாடியா, தஸ்லிமா கவிதைகள் மொழிபெயர்ப்பு – லீனா மணிமேகலை.குமுதத்தில் எடிட் செய்துவிட்டார்கள்.)
இன்றைய சூழ்நிலையில் இந்த கட்டுரையை எழுதும் வாய்ப்பளித்த தளவாய் சுந்தரத்திற்கும், விட்டேத்தியாய் இருந்த என்னை சதா பேசி பேசி எழுத வைத்த ஜெரால்டிற்கும், எழுதியதை வாசித்து ஆலோசனைகள் சொன்ன ஷோபா சக்திக்கும் நன்றிகள்
நன்றி குமுதம்(7.4.2010)