Portugal Calling… April 29 -Lúcio Craveiro da Silva Library, Braga.






அனாமிகா பண்பாட்டு மையத்தில் திரைப்பட பயிற்சி முகாம்…



மாடத்தி திரையிடல்.

விளிம்பின் மையத்தையும் சிதறடிப்பேன் – லீனா மணிமேகலை நேர்காணல்
நேர்காணல் ஒருங்கிணைப்பு : க. உமாமகேஸ்வரி
பாலக்காடு மாவட்டம் பாஞ்சஜன்யம் திரைப்படவிழாவுக்கு தன்னுடைய ‘காளி’ நிகழ்த்து ஆவணப் படத்தைத் திரையிட வந்திருந்த லீனா மணிமேகலையை பொற்றாமரை இதழுக்காக நேர்காணல் வேண்டி அணுகினோம். வினாக்களைத் தாருங்கள் மின்னஞ்சல்வழி விடையனுப்பித் தருகிறேன் என உடனே ஒத்துக்கொண்டார். மின்னஞ்சல் வழி லீனா மணிமேகலை தந்த நேர்காணல் இதோ.
- இன்றைய தமிழ்க் கவிதைச்சூழல் பெண்களுக்கு புழங்கக் கூடியதாக உள்ளதா?
மொழி எனது எதிரி என்று ஒரு நூல் நீள நேர்காணலை விமர்சகர் சண்முகம் அவர்களுக்கு அளித்து அது புத்தகமாகவும் வெளிவந்துள்ளது. வரலாறு ஒரு நீலப்படம் என்று அறிவித்து, தமிழ் பெண்கவிதை குறித்த என் பெண்ணாடி கவிதைப்படத்தை முடித்திருப்பேன். மொழி ஒடுக்குபவன் கண்டுபிடித்த முதல் கருவி. இன்றல்ல வரலாறு நெடுகிலும் மொழி, பெண் மற்றும் பாலின சிறுபான்மையினரின் வெளிப்பாட்டை ஒடுக்கும் நிறுவனமாகத்தான் செயல்பட்டு வருகின்றது. சங்க காலப் பெண் கவிஞர்கள் என்பார்கள், ஆண்டாள் காரைக்கால் அம்மையார் என்பார்கள், புத்தகம் ஆய்வுக்கட்டுரைகள் புள்ளிவிவரம் என்று தூக்கிக் கொண்டு வருவார்கள் ஆனால் சமகாலத்தில் கவிதை எழுதும் பெண்ணை வேசி என்பார்கள். பெண் எழுதும் பிரதியை பெண்ணாகவே ‘வாசித்துக்’ தன் குறியை நீவி சுய இன்பம் காணும் தமிழ்ச் சமூகம் அடையவேண்டிய மன உயரம் இன்னும் சில நூற்றாண்டுகள் தூரம்.
இன்னும் துல்லியமாகச் சொல்லப்போனால் தமிழ் இலக்கிய வெளியில் முற்போக்கு சித்தாந்தப் பூச்சுற்றல்வாதிகள் பெருத்து, பெரியாரையும், அம்பேத்கரையும், மார்க்ஸையும் சாட்சிக்கு வைத்துக் கொண்டு எழுத வரும் பெண்ணைப் பாலியல் ரீதியாகச் சுரண்டுகிறார்கள். குடும்பம், அரசு, சாதி, மதம் என்று நிறுவனங்களை எதிர்த்துக் கொண்டு, அவை தரும் சமூகப் பாதுகாப்பையும் பணயம் வைத்து கலை இலக்கிய அரசியல் பாதையைத் தேர்ந்தெடுக்கும் பெண் நிராதரவாக உணரும் நிலைதான் நீடிக்கிறது. அதிகாரத்திற்கு எதிராக உண்மையைப் பேச புறப்படும் பெண்ணுக்கு சித்தாந்தவாதிகளின் அதிகாரத்திற்கும் எதிராக உண்மையைப் பேசும் நிலை ஏற்படும் போது தனிமைப் படுத்தப் படுகிறாள். பெண்ணுக்கென்று ஒரு தேசம் இல்லை என்பது எவ்வளவு உண்மையோ அவ்வளவு உண்மை பெண்ணுக்கென்று படைப்பு தேசமும் இல்லை.
- கவிதைகள் எதிர் உரையாடல் தன்மையில் அமைவது ஒரு உத்தியா? அல்லது வேறு காரணங்கள் உண்டா?
பரத்தையருள் ராணி தொகுப்பிற்காக கவிஞர்கள் யவனிகா மற்றும் செல்மாவுடன் நடத்திய கலந்துரையாடலில் சொன்னதை மேற்கோள் காட்டினால் இதற்கு உகந்த பதிலாக இருக்கும். “வடிவம், உத்தி, அமைதி, இலக்கணம், வரையறை, மதிப்பீடுகள், என்றெல்லாம் சொல்லும் மரபு சார்ந்த பார்வையில் நான் தலையிட விரும்பவில்லை. அந்தப் பார்வை ஒரு இறுகிய வடிவத்தை நிலைநிறுத்த முயல்கிறது. இங்கு எல்லாம் நன்றாக இருக்கிறது என்றும் இந்நிலை தொடர்வதே அமைதிக்கு வழியெனவும் ஒரு பிரமையை வலியுறுத்துகிறது. எனக்கோ அமைதிக்கு மீறி கலகம் தேவைப்படுகிறது. ஏன் என்றால் அந்த அமைதி ஒடுக்கப்பட்டவர்களின் மெளனம். என் கவிதையின் நோக்கமே அந்த மெளனத்தைக் கலைப்பதும், எதிர் உரையாடலையும், கலகத்தையும் ஏற்படுத்துவதும்தான். மொழியை உச்சபட்சமாக விமர்சிப்பதற்குக் கவிதையே எனக்குகந்த ஊடகமாக இருக்கிறது. அதனால் என் மூச்சிருக்கும் வரை அதைச் செய்து கொண்டே இருப்பேன்.
- லீனா ஒரு வகையில் கவிதை எழுதிப் பார்க்கிறார் எனக்கு அது கவிதையாக இல்லை‘ என்ற ஜெயமோகனின் கருத்துக்கு உங்களின் எதிர் வினை என்ன?
அவருடைய மற்றுமொரு கட்டுரையில் “Male Chauvenist Pig” என்று அவரை நான் ஒரு உரையாடலின் போது விளித்தேன் என்று குறிப்பிட்டிருப்பார். நண்பராகவும் எழுத்தாளராகவும் நான் அறிந்தவரையில் ஜெயமோகன் ஒரு மரபான கலாச்சார ஆண். கலாச்சார ஆண்கள் பெண்ணை, பெண்ணுடலை, பெண்ணின் படைப்புகளைக் குறித்து தீர்ப்பு சொல்லிக்கொண்டே இருப்பதுதான் தமக்கு வாய்த்த வாழ்வின் பெரும் வினையாக ஏற்றுக் கொண்டவர்கள். அத்தகைய அதிகார போதையிலிருந்தும், அது விளைவிக்கும் பெருந்தனிமையிலிருந்தும், பெண் மீதான பதற்றங்களிலிருந்தும், கலாச்சார கருத்துருவக் கற்பிதங்களிலிருந்தும் ஒருவரை விடுவிக்கும் முயற்சியே எனது கவிதை நடவடிக்கை. மொழியில் விடுதலையை விரும்பாதவர்களுக்கு என் கவிதைகள் புலப்படாததில் எனக்கெந்த ஆச்சர்யமும் இல்லை.
மற்றபடி விமர்சன மரபில் phallic criticism என்ற பதமுண்டு. தமிழ் விமர்சன மரபு அதற்கொரு விளக்க ஏடு. அதைக் குறித்து விலாவரியாக தரவுகளோடு பேசுவதற்கு பிரத்யேகப் பேட்டி ஒன்றை ஒழுங்கு செய்தால் விரிவாக உரையாடலாம்.
- தங்கள் கவிதைகள் பெரும்பாலும் தன்னிலை சார்ந்தே வெளிப்படுகின்றன. எழுத்தும் தன்னிலையிலிருந்து புறப்படும் எழுத்துகளாகவே உள்ளன. பெண்ணியக் கவிதைகள் என்றால் இப்படித்தான் இருக்க வேண்டும் என்று நினைத்து எழுதுகிறீர்களா? அல்லது இயல்பாகவே வருகிறதா?
இதுவரை 500 கவிதைகள் எழுதியிருப்பேன். அவற்றில் அகக் கவிதைகளுக்கு நிகராக புறக் கவிதைகளும் அடக்கம். ஒடுக்கப்பட்ட பாலினத்தின் பிரதிகள் பொதுவாக தமிழ் இலக்கியம் தொட மறுக்கும் புள்ளிகளை அதீதப்படுத்துவதால் ஏற்படும் பதற்றம் வாசிப்பையும் அக வெளிப்பாடுகள் மீது குவிக்கிறது எனக் கருதுகிறேன். தன்னிலை தானாக உருவாவதில்லை. பண்பாட்டால் தைக்கப்படுகிறது. To be precise. I am writing to unwrite myself from culture that oppresses my ‘self’ with my ‘sex’.
- லீனா மணிமேகலைக்கு திரையுலகிற்குச் செல்லும் எண்ணம் எப்போது தோன்றியது? எப்படித் தோன்றியது?
காலஞ்சென்ற என் தந்தை தமிழ்ப் பேராசிரியர் இரகுபதி “இயக்குநர் பாரதிராஜாவின் படங்களில் கருத்துப்புலப்படுத்தம்” என்ற ஆய்வை மேற்கொண்டு முனைவர்ப் பட்டம் பெற்றார். அவருடைய மறைவிற்குப் பிறகு அப்பாவின் ஆய்வைப் புத்தகமாக கொண்டு வர வேண்டும் என்று எடுத்த முயற்சியில் பாரதிராஜாவைச் சந்திக்கும் வாய்ப்பு கிடைத்தது. முதிர் பதின்ம வயதில் கிடைத்த சினிமா அனுபவம், நான் செய்து கொண்டிருந்த பொறியாளர் பணியை விட்டுவிட்டு கலைத்துறையைத் தேர்ந்தெடுக்கும் உத்வேகத்தை அளித்தது.
- தமிழ் சினிமா நேற்றும் இன்றும் நச்சு ஆண்மைய சினிமாதான்’ என்ற கருத்துக்கொண்ட உங்களால் திரைத்துறையில் எப்படிப் பணிபுரிய முடிகிறது ?
தமிழ் இலக்கியம் small dick energy என்றால் தமிழ் சினிமா big dick energy. காற்று, நீர், நிலம் மாசுபட்டுக் கொண்டேயிருக்கும் சூழலில் நாம் வாழவில்லையா? அதுபோலத்தான் நச்சு ஆண்மைய படைப்புச் சூழலுக்கு மத்தியில் இயங்கிக் கொண்டிருக்கிறேன். ஒரு சுயாதீன திரைக் கலைஞராக எனக்கென்று ஒரு படைப்புலகத்தை உருவாக்கியிருக்கிறேன். என் சினிமா சொன்ன கதைகளை, அணைத்துக் கொண்ட நிலங்களை, மக்களை, அவர்களின் பாடுகளை, தமிழ் சினிமாவில் எந்த விரைத்த ஆண்குறியும் இதுவரை சொன்னதில்லை. சொல்லப் போவதுமில்லை.
- வெகுசன சினிமா தாண்டி ஆவண படங்கள் அல்லது குறும்படங்கள் போன்ற இடங்களில் இந்த ஆணாதிக்கம் இல்லையா?
ஆணாதிக்கம் இல்லாத இடம் எது? கரன்ஸி பாயாத பாலைவனம் என்பதால் அதிகாரத்தின் குவிப்பு இல்லை என சொல்லலாம். சுயாதீன சினிமா உதிரி நிலம். நான் விளிம்பில் நின்று இயங்குகிறேன். என் படைப்புகளால் விளிம்பின் மையத்தையும் வெடித்து சிதற வைக்க முயற்சி செய்கிறேன்.
- மாடத்தி திரைப்படத்தில் விளிம்பு நிலை மக்களின் வாழ்வினைப் பற்றி நுட்பமாகப் பேசியிருப்பீர்கள். விளிம்பின் விளிம்பில் இருக்கும் மக்களின் வாழ்வியல் சிக்கலைக் கதைக்கருவாகக் கொண்ட திரைப்படத்தை எடுக்க வேண்டும் என்ற எண்ணம் உங்களுக்கு எப்படித் தோன்றியது?
பார்க்கவும் தகாதவர்கள் என்று ஒரு மக்கள் தொகையை ஒதுக்கியும் ஒடுக்கியும் வைக்கும் சமூகத்தில் பிறந்ததற்காக வெட்கப்படுகிறேன். சாதி என்ற பேரிழிவை என் படைப்புகளால் கேள்விக்குட்படுத்திக் கொண்டே இருப்பது என் படைப்புச் செயல்பாடுகளின் முதன்மை நோக்கம். 2003-இல் வெளிவந்த மாத்தம்மா என்ற ஆவணப்படம் முதல் 2019-இல் வெளிவந்த மாடத்தி என்ற முழுநீளக் கதைப்படம் வரை அதைச் செவ்வனே செய்திருக்கிறேன். இன்னும் செய்வேன்.
- இப்படத்தை இயக்கும் போது ஏதேனும் நடைமுறைச் சிக்கலை அல்லது கருத்தியல் சார்ந்த சிக்கலை நீங்கள் எதிர்கொள்ள வேண்டி இருந்ததா? அப்படி ஏதேனும் இருந்தால் அதைப் பற்றி கூற முடியுமா?
பாலியல் வன்முறையை எதிர்கொண்டு போராடிய குஜராத்தின் பில்கிஸ் பானு, சத்திஷ்கரின் சோனி சூரி, மணிப்பூரின் மனோரமா, ராஜஸ்தானின் பன்வாரி தேவி, மல்யுத்த வீராங்கனைகள் என்று எனது நீண்ட ஆவணப்படத் தயாரிப்பின் போது எனக்கு மிகப்பெரிய மனக்சோர்வு உண்டானது. நீதி, அரசு, நியாயம், தர்மம் என்று எல்லாவற்றின் மீதும் அவநம்பிக்கை ஏற்பட்டது. உண்மையிலேயே பாலியல் வன்முறைக்கு உள்ளாக்கப்படட பெண்ணுடலுக்கு நீதி என்பது சாத்தியமா? அப்படியே சட்டப்படி போராடி வெல்லும் நீதி போதுமானதா? நீதியென்றால் உண்மையில் என்ன? என்னோடு தங்கள் வாழ்க்கையைப் போராட்டங்களை அவ்வளவு தீர்க்கத்துடன் பகிர்ந்து கொள்ளும் பெண்களுக்கு என்னதான் நான் செய்து விட முடியும் என்பது போன்ற கேள்விகள் என்னை நிலைகுலைய வைத்து விட்டன. ஐந்து வருட உழைப்பை அப்படியே கைவிட்டு விட்டு மனம் குழம்பித் திரிந்தேன். மாடத்தியைக் கண்டடைந்ததும் அந்த கேள்விகளால்தான். நாட்டார் கதைகளும் அதன் ஆன்மச் சரடான Poetic Justice என்ற தர்க்கமும் என்னை ஆற்றுப்படுத்தியது. Nobodies do not have Gods; they are Gods என்ற பேருண்மை எனக்கு பற்றுக்கோலாகக் கிடைத்தது.
- பெண் குறித்த கடவுள் புனைவுகளுக்குக் கொடுக்கப்படும் புனிதம் சமூக எதார்த்தத்தில் பெண்களுக்குக் கிடைப்பதில்லை. பெண் மீதான உடல் சார்ந்த, ஒழுக்கம் சார்ந்த சமூக ஆணிய பார்வை இன்னும் கெட்டிப்படுவதனை பார்க்க முடிகிறது. காளி ஆவணப்படத்தில் அதனை எதிர்கொண்டீர்கள். இப்போது எப்படி உணர்கிறீர்கள்?
காளி என் மூதாதை. என் அவ்வா. காளியை நான் தரித்ததால் தாக்குண்டவர்கள் பார்ப்பனிய குண்டர்கள். காளியிடமிருந்து தாங்கள் பிடுங்கிய சிகரெட்டை நான் பிடித்திருந்தது அவர்களை வெறி ஏற்றிவிட்டது. நமது மூதாதைகளை, நம்மை, நாம் நடக்கும் பாதையை பார்ப்பனிய அடிப்படைவாதத்திலிருந்து விடுவிக்க நான் உருவாக்கிய படம் காளி. பத்துக்கும் மேற்படட எஃப் ஐ ஆர் கள், கொலை மிரட்டல், ரேப் அச்சுறுத்தல், என் சமூக ஊடக வலைத்தளங்களில் அத்துமீறி நுழைந்து என் புகைப்படங்களை, எனது குடும்பத்தின் புகைப்படங்களை என் படக்குழுவின் ப்ரொஃபைல்களைத் தாக்கியது, ஊடகங்கள் அவற்றைத் தவறாகப் பயன்படுத்தி அவமதிப்பு செய்தது, அந்நிய நாட்டில் யாருமற்ற தனிமையில் இந்த வன்முறையையெல்லாம் தன்னந்தனியாகத் தாங்கியது, உச்ச நீதிமன்றத்திற்குச் சென்று சட்டரீதியாக மத்தியில் அரசை வென்றெடுத்தது என நான் போனது வெகு தூரம். இந்த அனுபவத்தால் நான் கற்றதும் உணர்ந்ததும் ஒரு கலைப்பிரதி என்ன சாதிக்கும் என்பதுதான். ஒற்றை இமேஜால் பாசிஸ்டுகளை எவ்வளவு அலற வைக்க முடியும் என்பதைக் கண்கூடாகப் பார்த்தபோது கலையின் ஆற்றல்தான் என்னை உறுதிப்படுத்தியது.
- சித்தூர் போன்ற மூன்றாம் நிலை சிறு நகரத்தில் நடைபெறும் பன்னாட்டுத் திரைப்பட விழா குறித்த உங்களின் கருத்து. தமிழகத்தில் இத்தகைய முயற்சிகள் நடைபெறுகின்றனவா?
சித்தூரில் நடக்கும் பாஞ்சஜன்யம் பன்னாட்டுத் திரைப்பட விழாவைக் குறித்து எனக்கு எப்போதும் பெருமிதமுண்டு. இது முழுக்க முழுக்க திரை ஆர்வலர்களால், திரைப்படங்களால் ஒரு ஆரோக்கியமான ஜனநாயகத்திற்குத் தேவையான உரையாடலை முன்னெடுத்துச் செல்ல முடியும் என்று நம்பும் புரட்சிகர அரசியல் மனங்களால், மானுடத்தின் மேலுள்ள பற்றுள்ள நட்புள்ளங்களால் வழிநடத்தப்படும் விழா. சித்தூருக்கு வருவது எனது வீட்டிற்குத் திரும்புவது போன்றது. திரைப்பட ரசனை கேரளாவில் மேம்பட்டு இருப்பதும், மலையாள சினிமா உலக அரங்கில் பிரகாசிப்பதற்கும் இத்தகைய சிற்றூர்களில் மக்களால் மக்களுக்காக நடத்தப்படும் திரைப்பட விழாக்கள்தாம் அடிப்படை. தமிழ்நாட்டில் நான் பிறந்திருந்தாலும், தமிழ்ப் படைப்பாளியாக இருந்தாலும் கேரளாவை எனது நிலமாக மலையாளிகளை எனது சொந்தங்களாக தான் நான் நேசிக்கிறேன். கனடாவில் இருந்தபோது நான் இழப்பாக உணர்ந்தது கேரள அன்பைத்தான்.
- ஊடகத்துறையில் வெளிநாடுகளில் நீங்கள் பெற்ற கல்வி ஏற்படுத்திய புரிதல்களைப் பகிர்ந்து கொள்ளுங்கள்
திரைப்படக்கலையைப் பொறுத்தவரை நானொரு தெருக் கலைஞி. தெரு தெருவாகச் சுற்றி எனது மக்களிடமிருந்து அவர்கள் சொன்ன கதைகளில் இருந்து நான் கற்றுக் கொண்டது ஏராளம். கவிதையில் எனது மூதாதை ஒளவை என்றால் திரைப்படத்தில் எனது மூதாதை ஆகன்ஸ் வார்தா. திரைப்படப் பள்ளிக்குப் போவதற்கு முதலில் வாய்ப்பு கிடைக்கவில்லை. திரைப்பட விழாக்களில் நான் கண்ட சர்வதேசப் படங்களும், சந்தித்த படைப்பாளிகளும்தாம் எனது ஆசிரியர்கள். ஆரம்பகட்டத்திலிருந்தே எனக்கு விருதுகளாக வழங்கப்படட fellowships திரைப்படக் கலையை அகடெமிக்காக கற்றுக்கொள்ள உதவின. ப்ரிட்டன் வழங்கிய Charles Wallace Art Award மற்றும் Common wealth Fellowship, ஐரோப்பிய யூனியன் வழங்கிய EU Fellowship, BAFTA Breakthrough Talent Selection வரிசையில் கனடா வழங்கிய Graduate Fellowship of Academic Distinction மூலம் எனது மாஸ்டர்ஸ் படிப்பை முடிக்க முடிந்தது. கறுப்பின அமெரிக்க கவிஞர் மாயோ ஏன்ஜெலோ, ஒரு குறிப்பிட்ட பூகோளப்பகுதிக்கு மட்டும் சொந்தமானவளாக உணராமல் பிரபஞ்சத்திற்கே சொந்தமாக உணர்வதுதான் விடுதலையுணர்வென்பார். என் திரைப்படங்கள், படைப்பாளியாகவும், மாணவியாகவும் நாற்பது நாடுகளுக்கு என்னை அழைத்துச் சென்றிருக்கின்றன. நான் சேர்த்த செல்வமெல்லாம் அறிவுச் செல்வம்தான்.
- தமிழில் பால் புதுமையர் இலக்கியங்களுக்கான இடம் ?
தலித் இலக்கியம் போல, பெண்ணிலக்கியம் போல தமிழில் பாய்ச்சலை ஏற்படுத்திக்கொண்டிருப்பது பால் புதுமையரின் இலக்கியம். பெரியார் சொன்னது போல காட்டுமிராண்டி மொழியாகத் தேங்கிவிடாமல் தமிழை மேலும் மேலும் சமத்துவப்படுத்துவதும் புதுப்பிப்பதும் மேம்படுத்துவதும் வரலாற்று ரீதியாக ஒடுக்கப்பட்டவர்களின் இலக்கியம்தான். ‘உலகின் அழகிய முதல் பெண்’ தொகுப்பில் பைசெக்சுவலாக வெளிப்பட்டேன். ‘அந்தரக்கன்னி’ என்ற தமிழின் முதல் லெஸ்பியன் கவிதைத் தொகுதியை எழுதிப் பதிப்பித்தேன். என்னை தமிழ் குயர் படைப்பாளியாகத்தான் அடையாளம் காண்கிறேன். நாம் அடைய வேண்டிய தூரம் அதிகம். நடக்கும் அநீதிகளுக்கெல்லாம் அடிப்படை இருமை எதிர்வுகள்தாம். குயர் சித்தாந்தம் அதை உடைத்து புதிய பார்வைகளை உருவாக்கும்.
- மூன்றாம் பாலினத்தாருக்கான இடத்தை மறுக்கும் வலதுசாரி சிந்தனைகளை ஒரு செயற்பாட்டாளராக எப்படிப் பார்க்கிறீர்கள்?
பாலினத்தில் மூன்றாம் என்ன முதலாம் என்ன? அதுவே வலதுசாரிப்பார்வை இல்லையா? பாலின சமத்துவமும் விடுதலையும் மனித நேயத்தால் மட்டுமே அடைய முடியும். சக மனிதரை நேசிக்க விடாமல் தடுக்கும் சாதி, மத, நிற, வர்க்க, பாலினப் பாகுபாடுகளை வைத்து பிழைப்பு நடத்தும் வலதுசாரிகளைக் களையெடுக்க வேண்டும். என் கலை அதைத் தொடர்ந்து செய்யும்.
- மாற்றுப் பாலினத்தார் குறிப்பாகத் தன்பாலின ஈர்ப்பாளருக்கான குரல் உங்கள் கவிதைகளில் அழுத்தமாகப் பதிவு செய்யப்படுகிறது. பேசாப்பொருளைப் பேசத் துணியும் உங்கள் பெயர் பெண் கவிஞர்களின் வரிசையில் பலநேரங்களில் முன்னெடுக்கப் படுவதில்லை. எதனால் என நினைக்கிறீர்கள்?
எனக்கு எந்த வரிசையிலும் இடம் வேண்டாம். தனித்த குரலென்றாலும் தனித்துவமான குரலாக நானிருப்பேன். என் படைப்புகளை வாசிப்பவர்கள், பின்பற்றுபவர்கள், அதில் இளைப்பாறுகிறவர்கள்தாம் என்னை இயக்குகிறார்கள். இவ்வுலகில் எல்லோருக்கும் இடமுண்டு.
- கவிஞர், விமர்சகர், ஆவணப்பட இயக்குனர், திரைக்கலைஞர், பெண்ணியச் செயல்பாட்டாளர் என பல்துறைகளில் இயங்குகிற லீனா தனது தொடக்க கால ஆக்கங்களில் இருந்து கடந்து வந்த பாதைகளை குறித்து என்ன நினைக்கிறார்? லீனா மணிமேகலை தன் அடையாளமாக எதைக் கருதுகிறார்?
நான் மேற்கு தொடர்ச்சி மலை முகட்டில் வளர்ந்து நிற்கும் ஒரு காட்டு நெல்லிச்செடி. பெருமழையிலும், தீக்காற்றிலும், சளைக்காது காய்க்கும் ஆன்மா. பசித்த மனிதர்களோ, வரையாடுகளோ யார் என்னைத் தேடி வந்தாலும் கனி தருவேன். மற்றதெல்லாம் வெறும் லேபிள்கள்தாம்.
(நேர்காணல் வினாக்கள் : பொற்றாமரை ஆசிரியர் குழு)
Dravidam X Festival – ‘DRAVIDIAN POLSOC’
Giving a keynote lecture on “Art, Literature, Freedom against Caste and Patriarchy” at the much awaited, progressive students led, Dravidam X Literature Fest 2025
Delegate Registration Link: https://docs.google.com/…/1FAIpQLSeAKGxZhdna…/viewform