முன்னாள் காதலன் – கவிதை
நன்றி – ஆனந்த விகடன்
எப்படிப் போகிறது
உன் காதல் வாழ்வு
என்ற என் கேள்விக்கு
மையமாக முறுவலித்தான்
என் முன்னாள் காதலன்
உனக்கு? என்று திருப்பிக்கேட்ட அவனுக்கு
“நிறைவு” என்று அவன் கண்கள்
துணுக்குறுவதைப் பார்க்கும் வரை
சொல்லிவிட்டு
இனி எஞ்சியவாழ்வை ஓட்டிவிடலாம் என்றேன்
இரண்டு கோப்பை பியர்
உள்ளே இறங்கியிருந்தது
அவளுக்குமுன் குடிக்க முடியாது என்றான்
உடம்புக்கு நல்லதுதானே என்றேன்
புகைப்பதையும் விட்டுவிட்டேன் என்றான்
அவளுக்கு ஆஸ்துமா என்று கேள்விப்பட்டேன் என்றேன்
உன் ரசம் சாப்பிட்டு நாளாச்சு என
அவன் தொடங்கிய வாக்கியத்தை
நீ பாடும்பாட்டெல்லாம்
அப்பப்ப ஞாபகம் வரும் என முடித்துவைத்தேன்
பிறகு மௌனம்
தனித்தனியான எங்கள் மௌனத்தில்
ஒன்றிணைந்த நினைவுகளின் இரைச்சல்
உன் இன்ஸ்டாகிராமில்
நீ வளர்க்கும் பூனையைச் சந்தித்தேன்
அரைப்புன்னகையுடன் சொன்னான்
உனக்குப் பிடித்த ரோஸ்செம்பருத்திபூத்தது
பதிவுபோட்டேன், மனசில்லை, நீக்கிட்டேன்
தலைநிமிராமல் சொன்னேன்.
கோபத்தில் ஒருநாள்
அனுப்பிக்கொண்ட குறுஞ்செய்திகளை ஒன்றுவிடாமல்
அழித்துவிட்டதாகச் சொன்னபோது
அவன் நெற்றி சுருங்கியது
எழுதிக்கொண்ட ஆயிரத்துசொச்சம்
மெயில்களையும் கடவுச்சொல் போட்ட கோப்பில்
சேமித்துவைத்திருக்கிறேன்
தோன்றும்போது ரகசியமாக வாசிப்பேன் என்றபோது
கடித்துத் துப்ப நகம் இல்லாமல்
விரலில் ரத்தம் கசிந்தது
கலவி, காபி என அன்றாடங்களில்
வாய் வரை வந்துவிடும் பெயரை
எச்சில்கூட்டி விழுங்குவது போன்ற
சங்கடங்களை இருவருமே பேசிக்கொள்ளவில்லை.
மகிழ்ச்சியா இருக்கியா
ஒரே குரலில் ஒரே நேரத்தில்
கேட்டுக்கொண்ட போது
உணவும் மதுவும் மாலையும்
செறித்து உடல்கள் வியர்த்துவிட்டன
அவன் கைப்பேசியில் இருபது ‘மிஸ்டுகால்ஸ்’
என் கைப்பேசியில் பத்தொன்பது ‘நோட்டிஃபிகேஷன்ஸ்’
என் முன்பற்களுக்கு நடுவே இடைவெளி
அதிகமாயிருப்பதாய் அவனும்
அவன் மூக்கு முடியில் நரை
விழுந்திருப்பதாய் நானும்
சுட்டிக்காட்டி, சிரித்துக்கொண்டே
விடைபெற்றோம்
பிரிவு வந்தால்
கடலுக்குள் கைகோத்து நடந்து போய்ச் சாவோம்
என்று சொல்லிக்கொண்டவர்கள்
காலத்திற்குள் கைவிலக்கி நடந்துபோய்
அவரவர் வாழ்வுக்குத் திரும்பினோம்.
லீனா மணிமேகலை
போர் வந்த நாள் – கவிதை
நன்றி – ஆனந்த விகடன்
கவிதை : நிகோலா டேவிஸ் (Nicola Davies)
மொழிபெயர்ப்பு: லீனா மணிமேகலை
போர் வந்த அந்த நாளில்
சன்னல் நிலைகளில் பூக்கள் மலர்ந்திருந்தன
என் அப்பா
என் இளைய சகோதரனை
தாலாட்டுப் பாடி
தூங்கவைத்துக் கொண்டிருந்தார்
என் அம்மா
காலை உணவை சமைத்துவிட்டு
மூக்கில் செல்லமாக உரசி முத்தமிட்டு
பள்ளி வரை வந்து விட்டுச் சென்றார்
அந்த நாளின் காலையில் தான்
எரிமலைகளைப் பற்றி படித்திருந்தேன்
தலைப்பிரட்டைகள் இறுதியில் தவளைகளாக மாறுவதைக் குறித்து
பாடல் ஒன்றைக் கற்றிருந்தேன்
என் உருவ ஒவியத்திற்கு சிறகுகள் வரைந்திருந்தேன்
மதியம் சற்று ஆசுவாசமாக
டால்பின் வடிவிலிருந்த மேகத்தை அண்ணாந்துப் பார்த்துக்
கொண்டிருந்த வேளையில் தான்
போர் வந்தது
ழுதலில் இடியிறங்கிப் பின் ஆலங்கட்டி மழை தெறித்தது போல
இருந்தது
தீயும் புகையும் இரைச்சலுமாய் எனக்கு ஒன்றும் விளங்கவில்லை
போர்
விளையாட்டுத் திடல் தாண்டி
என்
ஆசிரியரின் முகத்திற்கு
வந்தது
வகுப்பின் கூரையில் விழுந்தது
நகரத்தை உடைத்து நொறுக்கியது
ஒரு கறுப்பு ஓட்டையாயப் போன
என் வீட்டைப் பற்றி
எந்த வார்த்தைகளைக் கொண்டு விளக்குவது
போர்
எல்லாவற்றையும் கொண்டு போனது
எல்லோரையும் கொண்டு போனது
ரத்தம் கசியும் தனித்த கந்தை மூட்டையானேன் நான்
ஓடினேன்
லாரிகளுக்குப் பின்
பேருந்துகளில் தொற்றிக்கொண்டு
வயல்களில் சாலைகளில் மலைகளில்
குளிரிலும் மழையிலும் புழுதியிலும்
பொத்தல் படகுகளில்
மூழ்கி
தப்பி
குழந்தைகள் முகம் மணல் கவ்விக்கிடந்த கடற்கரைகளை அடையும் வரை
ஓடினேன்
இனி ஓடவே முடியாத நிலைவரை
எண்ணிட்ட குடிசை வரிசை
கண்ணில் படும்வரை
ஓரு மூலையும்
அழுக்குப் போர்வையும்
காற்றில் முனகும் கதவும்
அகப்படும்வரை
போர்
என் தோலின் அடுக்குகளில்
என் கண்களுக்குப் பின்புறம்
என் கனவுகளில்
என்னைப் பின்தொடர்ந்தது
என் இதயத்தை ஆக்கிரமித்தது
என்னிடம் தங்கிவிட்ட போரைத் துரத்த
நடந்தேன்
நடந்தேன்
போர் போயிராத இடத்தை தேடி
நடந்தேன்
போன பாதைகளில்
அடைக்கப்பட்ட கதவுகளில்
இறங்கிய சாலைகளில்
புன்னகையைத் தொலைத்து
திருப்பிக் கொண்ட முகங்களில்
போர்அப்பியிருந்தது
நடந்து நடந்து
ஒரு பள்ளிக்கூடத்தைக் கண்டுபிடித்தேன்
சன்னல் எட்டிப் பார்த்தபோது
அவர்கள் எரிமலைகளைப் படித்துக்கொண்டிருந்தார்கள்
பறவைகளை வரைந்துக் கொண்டும்
பாடிக்கொண்டும் இருந்தார்கள்
உள்ளே போனபோது
அறையில்
என் அடிச்சுவடுகள் எதிரொலித்தன
கதவைத் தள்ளி திறந்ததில்
பல முகங்கள் என்னை நோக்கி திரும்பின
ஆசிரியரின் முகம் இறுகியிருந்தது
இங்கே வேறு யாருக்கும் இடமில்லை என்றார்
உட்காருவதற்கு நாற்காலி இல்லை
என்றார்
என்னை வெளியேறச் சொன்னார்
போர் அங்கும் வந்துவிட்டது போலும்
குடிசைக்குத் திரும்பி
மூலைக்குத் தவழ்ந்து
போர்வைக்குள் சுருண்டுக்கொண்டேன்
போர் உலகம் முழுவதையும் எடுத்துக் கொண்டுவிட்டதென
நினைத்தேன்
கதவு அடித்தது
காற்று தானென நினைத்தேன்
ஆனால் ஒரு சிறுமியின் குரல் கேட்டது
“இது உனக்காகத் தான் கொண்டுவந்தேன்
நீ இனி பள்ளிக்கு வரலாம்” என்றாள்
அவள் கையில் ஒரு நாற்காலி இருந்தது.
நான் இனி அதில் அமரலாம்
எரிமலைகளைப் பற்றிப்
பாடம் படித்து
தவளைகளைப் பாடி
என் இதயத்தை அடைத்து கிடக்கும்
போரை விரட்டலாம்
“என்னுடைய நண்பர்களும்
நாற்காலிகள் கொண்டு வந்திருக்கிறார்கள்
இந்த முகாமில் இருக்கும்
எல்லாக் குழந்தைகளும்
பள்ளிக்கு வரலாம்”
அந்த சிறுமிபுன்னகையோடு சொன்னாள்
குடிசைகளில் இருந்து
குழந்தைகள் இறங்கிவர
நாற்காலிகள் நிரம்பிய சாலையில்
கைகோர்த்து நடந்தோம்
நாங்கள் முன்வைத்த
ஒவ்வொரு அடிக்கும்
போர் பின்வாங்கியது
குறிப்பு:
பெற்றோர்களை இழந்த 3000 சிரியக் குழந்தைகளை அகதிகளாக ஏற்கமறுத்த பிரிட்டனை எதிர்த்து, சிறுவர் இலக்கியத்தில் பரந்துப்பட்டு அறியப்படும் எழுத்தாளர் நிக்கோலாடேவிஸ் எழுதி இக்கவிதை வாசிக்கப்பட்ட உடன் ஓவியர் ஜேக்கிமோரீஸ் ஏற்கெனவே எல்லாவற்றையும் இழந்துநிற்கும் குழந்தைக்கு, மறுக்கப்பட்ட நாற்காலியை வரைய, டிவிட்டரில் அது #3000Chairs என்ற பேரியக்கமாக மாறி உலகமெங்கிலுமிருந்து 3000 ஓவியர்கள் நாற்காலிகளை வரைந்து அனுப்பி தங்கள்ஆதரவை தெரிவித்திருக்கிறார்கள்.
அறியப்படாத புதிரை வண்ணார் சமூகத்தின் கதை – ‘புதர்ப்பறவை’
நன்றி – குங்குமம் 05/04/2018
-நா.கதிர்வேலன்
‘‘ஊரின் பெரும்பகுதியைக் கடலில் சுழற்றிப் புயல் எறிய, எஞ்சியிருக்கும் சிதிலங்களையும், அதில் கசியும் உயிர்களையும் தாங்கி நின்றது தனுஷ்கோடி. அங்கே காற்றில் கூட இன்னும் உதிர நாற்றம் அடிக்கிறது. மணல் துகள்கள் அளவுக்கு அங்கே கதைகள் மண்டிக் கிடக்கின்றன. அதில் ஒரு கதையைச் சொன்னதுதான் ‘செங்கடல்’. இப்போ கண்டாலே குற்றம், தீட்டுன்னு சமூகத்திலிருந்து தள்ளி வைத்திருக்கிற இன்னும் சொன்னால் ஒடுக்கப்படுகிற புதிரை வண்ணார்களிலிருந்து ஒரு சிறுமியை அடையாளப்படுத்தி எடுக்கிற படம் தான் ‘புதர்ப்பறவை’. உண்மையின் பாய்ச்சலுடனும் எந்த சமரசத்துக்கும் இடம் கொடாத படைப்பு…’’ ஒரு வார்த்தையென்றாலும் சுள்ளென்று தைக்கும் வீரியத்துடன் பேசுகிறார் இயக்குநர் லீனா மணிமேகலை. மிகச் சிறந்த ஆவணப் படங்களாலும், ஆழமானக் கவிதைகளாலும் அறிமுகமான படைப்பாளி.
வித்தியாசமான உண்மையான களங்களை தேடிப்போகிற விதம் எவ்விதம் அமைகிறது…
இந்திய துணைக்கண்டத்தில் நடக்கும் பாலியல் வன்முறைகள் குறித்த “ரேப் நேஷன்” என்ற என்
ஆவணப்படத்தின் ஆய்வில் இருந்தபோது, இன்டர்நெட்ல ஒரு கட்டுரை படித்தேன். நான் வாழும்
சமூகத்தில் ஒரு குறிப்பிட்ட சமூகம், சாதியின் அடிப்படையில் பெண்களுக்கு நேரிடுகிற பாலியல்
வன்முறைகளால் தொடர்ந்து இடம் பெயர்ந்து கொண்டே இருக்காங்க என்கிற தகவல்
அதிர்ச்சியூட்டியது. ஒரு நூறு குடும்பம் இருக்கிற ஊர் தங்களுக்கு அடிமை சேவகம் செய்ய ஓரிரு
புதிரை வண்ணார் குடும்பங்களை குடியமர்த்துகிறார்கள். பாலியல் வன்முறைக்கு அதிகாரத்தை
பயன்படுத்தும் போக்கும் இங்கே சர்வசாதாரணம். பார்வையால் கூடத் தீண்டத்தகாத பெண்கள்,
பாலியல் வன்முறையின் போது மட்டும் தீண்டத்தக்கவர்களாக மாறுவது எப்படி? பாலியல்
வன்முறை, சாதி மத தேச இன நிற பாலின அதிகாரங்களின் துஷ்பிரயோகமாக நாடெங்கும் கோர
தாண்டவம் ஆடுகிறது. காஷ்மீரில் இந்திய இறையாண்மையின் அடிப்படையில் இது நடக்கிறது.
குஜராத்தில் 2002-ல் முஸ்லீம் பெண்கள் மீதான வன்முறை மதவெறியின் வெளிப்பாடாக நடந்தது. பஸ்தரில் ஆதிவாசி பெண்களை காவல் துறை கஸ்டடியில் வைத்து அன்றாடம் அத்துமீறுகிறது. தமிழகம் முழுக்க ஒரு லட்சம் புதிரை வண்ணார் குடும்பங்கள். அவற்றில் அதிகமானவர்கள் இருந்த இடங்களைப் பார்த்து, அங்கே அவர்களுடன் தங்கி, அவர்களின் துயரை நேரில் கேட்டு உணர்ந்திருக்கிறேன். இந்த சமூகத்தில் பிறந்தது பெண் என்றால் கொன்று விடுகிறார்கள். அப்படியும் வளர்த்தால் பெண் குழந்தை வளர்கிறது என்றே வெளி உலகத்திற்கு அறியத்தராமல் வளர்த்து 15 வயதிலேயே கட்டிக்கொடுத்து விடுகிறார்கள். அப்படிப்பட்ட ஒரு பெண் தான் பிறந்த சாதி அடையாளத்திற்கு அடிபணிய மறுத்து காடு, மலை, ஆறு என சுதந்திரம் பழகினால் எப்படியிருக்கும் என்று கற்பனை செய்ததின் விளைவாக பிறந்தது தான் ‘புதர்ப்பறவை’. என் பதின்ம வயது நாயகி வனத்தை தன் வீடாக மாற்றுகிறாள். நான் இதுவரை தேவதைக் கதைகளை கேட்டுத்தான் வளர்ந்திருக்கிறேன். பெண்ணாய் பிறந்ததாலே தலை திருகி கொல்லப்படாத ஒரு புதிரை வண்ணார் பெண் தான் என் தேவதைக் கதையின் நாயகி. அவளுக்கும் ஒரு கனவு இருக்கிறது. அந்த கனவின் ரேகைகளில் புதர்ப்பறவை ஒளி பாய்ச்சும்.
அருமையான திரைமொழி, புரிதல் கொண்டு இருக்கிறீர்கள். இன்னும் கொஞ்சம் இறங்கி வந்தால் என்ன?
புரியக்கூடிய மொழியையே கையாளுகிறேன். ஆனால் அதை கொண்டு போய் சேர்ப்பதற்கான
வழிவகைகள்தான் கடினமாக இருக்கின்றன. ஏன், பெரிய நடிகரை போடவில்லை என்பார்கள்.
கமர்சியல் விஷயங்கள் இல்லையே என அங்கலாய்ப்பார்கள். அவர்களுக்காக கதையை மாற்றச்
சொல்வார்கள். நம் மக்களும் வெளுத்த தோலை எதிர்பார்க்கிறார்கள். வாய்மொழிக் கதைகள்,
நாட்டுப்புறக் கதைகள் வழி ஒரு தேவதைக் கதையை இதில் சொல்லப் பார்த்திருக்கிறேன். பெரும் நடிகர்கள் தலையில் விலைப் பட்டியலையிக் கட்டியிருக்கிறார்கள். 200 பேர் கொண்ட யூனிட்டில்வேலை செய்வதையே கௌரவமாக நினைக்கிறார்கள். சுயாதீன சினிமா என்றால் மட்டமாக பார்க்கிறார்கள். இங்கே சினிமா சூதாட்டமாக இருக்கிறது. நிஜமாக நல்ல சினிமாவை
வேண்டுபவர்கள் கூடி இணைந்து ஒருவருக்கொருவர் தோள் கொடுத்து மக்களுக்கு நெருங்கிய
சினிமாவை தரனும். அதற்கான முன்னெடுப்பை சதா கொண்டு செல்வதுதான் என் வேலை. வர்த்தக கோட்பாடுகளிலிருந்து முற்றிலும் விலகி நின்றால்தான் இது மாதிரியான படங்கள் சாத்தியம். நானும் எல்லோரிடமும் இணைந்து வேலை செய்ய முடியும் என ஒரு சமயம் நம்பியிருக்கிறேன். அதற்கான இடங்கள் இப்போது இல்லை. எப்போதும் இல்லை என்றே தோன்றுகிறது. நீங்கள் சொல்லும் விதத்தில் பயணப்பட்டு சமயங்களில் நான் இயல்பாக சிரிக்கும் பக்குவத்தைக் கூட இழந்திருக்கிறேன்.
உங்கள் பயணத்திற்கு உறுதுணையான இருந்தவர்களைப் பற்றிச் சொல்லுங்கள்…
அஜ்மினா என்கிற பெண் மாடத்தியாக நடித்திருக்கிறார். ஏற்கனவே ஒரு மலையாளப் படத்தில்
நடித்து கவனம் ஈர்த்திருக்கிறார். செம்மலர், குமார், பாட்ரிக், ’ஆடுகளம்’ ஸ்டெல்லா, ‘மெட்ராஸ்’
புருஷோத்தமன் நடித்திருக்கிறார்கள். பாபநாசம், விக்ரமசிங்கபுரம், அணவன் குடியிருப்பு மக்கள்
துணை நடிகர்கள. செம்மலர் போன்றவர்களை குறைத்து மதிப்பிட முடியாது. இன்றைய தமிழ்
சினிமா அவரைப் போன்ற திறமையானவர்களை ஓரிரு வசனங்கள் பேசி விட்டு ஒதுக்கி வைத்தும்,
கூட்டத்தில் நிற்க வைத்தும் வேடிக்கைப் பார்க்கிறது. உள்ளூர் மக்கள் நடிக்கும் போது அவர்கள்
பேசும் மொழியிலே இவர்களும் பேசி நடிப்பது சுலபம் இல்லை. அதை என் நடிகர்கள் சுலபமாகத்
தாண்டியிருக்கிறார்கள். வசன உச்சரிப்பு, உடல் மொழி என பல வாரப் பயிற்சியும் அர்ப்பணிப்பும்
அதற்கு உதவியிருக்கின்றது. இங்கு குழந்தைகளுக்கு தாயாக நடிக்க வேண்டுமென்றால் பதறி
ஓடுகிறார்கள். வண்ணார்கள் கதையெல்லாம் யார் பார்ப்பார்கள் என்று பீதியடைகிறார்கள். என்றும் போல படத்தொகுப்பில் என் நண்பன் தங்கராஜ் இருக்கிறார். எம்மி விருது வாங்கிய அமெரிக்காவின் ஜெஃப் டோலன், அபிநந்தன் ராமானுஜன் ஒளிப்பதிவைக் கையாண்டிருக்கிறார்கள்.கலை இயக்கத்தை மோகன் மகேந்திரன் கவனித்திருக்கிறார். யவனிகா ஶ்ரீராம், வடகரை ரஃபீக் திரைக்கதை, வசனத்தில் உதவியிருக்கிறார்கள். புதிரை வண்ணார் சமூகத்தில் முதல் தலைமுறையில் படித்து தாசில்தாராக பணி ஓய்வு பெற்றிருக்கும் மூர்த்தி ஐயாவின் வழிகாட்டுதலில் அச்சமூகத்தின் அசலான வாழ்வையும் வரலாறையும் புனை கதையாக எழுதி திரைப்படமாக்கியிருக்கிறோம்.
இளையராஜா ‘புதர்ப்பறவை’யில் பணிபுரிவது…
சந்தித்தபோது ‘‘படத்தை முடித்துக் கொண்டு வா…’’ என்று புன்னகையோடு சொன்னார். ‘‘உங்கள் தகுதிக்கு என்னால் பணம் தர முடியாது…’’ என்று சொல்லிவிட்டேன். எல்லாவற்றுக்கும் அதே புன்னகை. பத்து நிமிஷம் வரைக்கும் போட்டுக் காட்டிய ஒரு முன்னோட்டத்தை அலாதிப்
பிரியத்தோடு பார்த்தார். அவர் தான் இதை செய்ய முடியும். என் தேடலை, உண்மைக்கான
வேட்கையை, மெளனத்தை அவரால் மட்டுமே மீட்டுத் தர முடியும். அவரைப்பற்றி வெளியில் இருந்த எந்த பயமுத்தல்களின் சுவடையும் அவரிடம் நான் பார்க்கவில்லை. நல்லது நடக்கும். அவர் என் சினிமாவிற்கு பண்பாட்டு அடையாளம் தர முடியும்.
ஷோபாசக்தியின் கதையில் நீங்கள் இயக்கும் சர்வதேச படமான ‘சூர்யரேகை’ எந்த நிலையில் இருக்கு…
சூரியரேகை , எங்கள் செங்கடல் போல நேரடி அரசியல் பேசும் சினிமா அல்ல. இன்னும் ஒரு நாள் வாழ்ந்துவிட மாட்டோமா என்ற அகதியின் தவிப்பும் தீரா ஓட்டமும் தான் சூரியரேகை. 2010– ல் “சன்சீ” என்ற சரக்கு கப்பலில் தாய்லாந்திலிருந்து கனடா நோக்கி புறப்பட்ட 492 ஈழத்தமிழ் அகதிகள் என்ன ஆனார்கள் என்பதை சொல்லும் ரத்தமும் சதையுமான சினிமா. ஈழத்தமிழர்கள் ஏறத்தாழ 52 நாடுகளில் தஞ்சம் அடைந்திருக்கிறார்கள். அவர்கள் சொந்த மண்ணைப் பிரிந்து வலிகளோடு இருக்கிறார்கள். பயணமான ஒவ்வொருவரின் ஓட்டமும் ஒரு கதை. அப்படி எத்தனை மில்லியன் கதைகள் இருக்கின்றன. இது மனித உணர்வின் ஊர்வலம். இதில் கற்பனை இல்லை. சிங்களப் பேரினவாதத்தால் சிதறடிக்கப்பட்ட கோரம் நிகழ்ந்த மறுகரைக்கும், ஓடிப்போய் அழுத கண்ணீர் கடலாகக் கிடக்கும் இன்னொரு கரைக்கும் இடையில் நடக்கிற கதை. பெரும் பொருட்செலவு, நேரம்,தரம் வேண்டி நிற்கிறது. இந்தியாவிலிருந்து “ட்ரீம் வாரியர் பிக்சர்ஸ்” எஸ்.ஆர். பிரபு தயாரிக்க,பிரஞ்சு கனடிய ஜெர்மன் கூட்டுத் தயாரிப்பாக படம் உருவாகி வருகிறது. வரலாறு நம்மை தூர நின்று கண் கொட்டாமல் சூரியரேகையில் எட்டிப்பார்த்துக் கொண்டிருக்கும்.
திருநங்கையை அல்லது திருநம்பியை காதலிப்பது எப்படி
நன்றி – விகடன் தடம்
கவிதை – கபே மோசஸ் (Gabe Moses)
மொழிபெயர்ப்பு – லீனா மணிமேகலை
குறி, யோனி
முலை, மார்பு
போன்ற சொற்களை கேட்ட மாத்திரத்தில்
விரியும் உங்கள் மனப் பிம்பங்களை
மறந்துவிட துணிய வேண்டும்
மேலும் அச்சொற்களை மெல்லத் திறந்து
ஒரு மருத்துவச்சி போல அவற்றின் மார்புக்கூடுகளை அழுத்தி
புதுரத்தம் பாய்ச்சுவதோடு
அவற்றின் எலும்புகளின் மஜ்ஜையில் கைவிட்டு
அர்த்தங்களை கலைத்துப்போட வேண்டும்.
பழைய சொற்களை முற்றிலும் துறந்து
‘கிலுக்’ ‘தித்தோ’ என்பது போன்ற
புதிய சொற்களை உருவாக்க வேண்டும்
அவன்
ஆடையின் அடியில் ஆதுரமாய் தடவிக் கொடுக்கும்போது
பற்களுக்குப் பின் கிடுகிடுக்கும் இதயத்துடிப்பு
ஒவ்வொரு அணுவிலும் இரையும் மூச்சு
கலவியில் வளையும் முதுகின் முனகல்
அடுக்கி வைக்கப்பட்ட காகிதக் கோப்பைகளில் நிறையும் மழைநீரென
அவள்
துவாரங்களில் தளும்பும் குளங்களின் சலசலப்பு
அன்பின் உச்சம் ஏற்படுத்தும் சத்தங்களில் கிடைக்கும்
உப்பின் எடை கூடிய புதியசொற்கள்
அவன் உடையின் அடுக்குகளை களையும் போது
நோயாளியின் காயக்கட்டுகளை அவிழ்ப்பது போன்ற பாவனையைக் கைவிடுங்கள்
அறுவை சிகிச்சை செய்துகொண்டாயா என கேட்டு தொலைக்காதீர்கள்
அவன் தொடைகளின் ஊசிமுனைகுத்தியெடுத்த தழும்புகளை காயங்களென கருதாதீர்கள்
நீங்கள் அன்பு செய்யதரப்பட்டிருக்கும் உடல்
சிகிச்சை கத்திகளைக் கண்டிருக்கின்றன
கடவுளின் பலிபீடங்கள் ஏறியிருக்கின்றன
வடுக்களின் திசுக்கள் எல்லை கட்டிய
கவனமாக செதுக்கப்படட அப்புலத்தை
இயற்கையின் வஞ்சனையோடு பார்த்து விடாதீர்கள்
மார்பெலும்புகளை அவள் உங்களுக்குத் தரும்போது
அவற்றில் கிளைத்திருக்கும் ஏக்கங்களை
சதையைவிட கூட தெரியும் திசு திணிப்புகளை
உங்கள் ஸ்பரிசத்தால் பழுக்க விடுங்கள்
கேன்சரிலோ சர்க்கரை நோயிலோ
தொலைப்பதை போன்று
மார்பு பெருக்கத்தை அவள் தொலைத்திருந்தால்
குறைப் பெண்ணாக தெரிய மாட்டாள்
மரபணு விபத்தும்
கார் விபத்து போன்றது தான்
கட்டை விரல் அளவு முளைவிட்டிருக்கும் தசையை
முத்தமிட அவன் தரும்போது
உங்களுக்குள் ஆழ இறக்கி
இதயத்தின் அடிவாரத்தில் அவன் பெயரை கீற விழையும்போது
உங்கள் வாயால், உங்கள் கையால்
உங்கள் இடுப்பின் அடிக்கூட்டுக்குள்
அதை அவ்வாறே பிடித்துக்கொள்ளுங்கள்
அவனுடைய தோல் வெறும் உராய்தலாயில்லாமல்
நீங்கள் நினைத்ததை விட
ஆழமாக உங்களைத் தீண்டும்
நமது உடல்கள் நமது சிறிய பின்னம் தான்
நமது இதயத்தை தாங்கி கொண்டிருக்கும் வினோத வடிவத்திலான நாளங்கள்
உண்மையில் நம்மை முழுமையாக தாங்கிப்பிடித்துக் கொள்ள முடியாதவை
ஒவ்வொரு மூச்சுக்கும் அதன் மூட்டுகள் சிரமப்படுகின்றன
நாம் என்பது
துடிப்பும் வியர்வையும் திசுக்களும் நரம்பின் முடிவுகளும் தாம்
நமக்கு நாமே
அகப்படும் வரை தடவியும் தடுமாறியும் திரிகிறோம்
என்றென்றைக்கும்
உடல்கள் ஒன்றையொன்று வாசித்துக்கொண்டு தான் இருக்கின்றன
பாகங்கள் அடைத்துவைக்கப்பட்ட பைகள் நம் உடல்கள்
வேறு வேறாக அவிழ்த்துப் பார்த்துக் களிப்படைகிறோம்
பற்களை நாக்குகளை
இடுப்பெலும்புகளை
பணிக்கப்பட்ட செயல்களில் இருந்து விலக்கி வேறு பணிக்கிறோம்
மோத விடுகிறோம் வேடிக்கை பார்க்கிறோம்
முயன்றாலும்
ஒருபோதும் இதயத்தின் விதிகளை மட்டும்
நம்மால்
மாற்ற முடிவதில்லை மறக்க முடிவதுமில்லை
இவங்க குரல் ஓங்கி ஒலிக்கனும்
சின்ன வயசுல இருந்து நாம் நிறைய தேவதைக் கதைகள் கேட்டு வளர்ந்திருக்கோம். Unseeableனு சொல்லப்படுற, பார்த்தாலே தீட்டுன்னு சொல்லி ஒதுக்கி வெச்ச சமூகத்து தேவதைகளைப் பற்றிய கதை இது. தலித் சமூகத்திற்குள்ளேயே ஒடுக்கப்படுகிற ஒரு பிரிவினர்கள் தான் புதிரை வண்ணார்கள். அந்த பிரிவினர்ல இருந்து ஒரு பதின்ம வயது சிறுமியை மையப்படுத்தி எடுக்கப்பட்ட படம். பிறப்பின் அடையாளங்களுக்கு தன்னை ஒப்புக்கொடுக்க மறுக்கிற ஒரு பெண் குழந்தையின் படம். அதனாலேயே இந்தப் படத்துக்கு ‘புதர்ப்பறவை’ன்னு பெயர் வெச்சு இருக்கேன்” என்ற சுயாதீன திரைப்படக் கலைஞரான லீனா மணிமேகலை வெகுசன திரைப்பட இயக்குனர்கள் காட்சிப்படுத்தத் தவறிய மக்களின் வாழ்க்கைப் பதிவுகளை கடந்த பத்தாண்டுகளுக்கும் மேலாக வெவ்வேறு படைப்புகளின் வழியாக வெளிப்படுத்திக் கொண்டு வருகிறார். புதிரை வண்ணார்கள் எனச் சொல்லப்படுகின்ற சமூகத்து மக்களைப் பற்றிய அவர் எடுத்திருக்கும் முழுநீளக் கதைப்படம் விரைவில் முடிய இருக்கும் சமயத்தில் அவரைச் சந்தித்தேன்
இவர்களைப் பற்றி படம் எடுக்க வேண்டுமென்கிற விசை எப்படி உருவானது?
அம்பேத்கர் தன்னுடைய ஐந்தாவது வால்யூமில் புதிரை வண்ணார்கள் மீது நிகழ்த்தப்படும் வன்முறையைப் பற்றி பேசியிருக்கிறார். அவர் பேசி ஐம்பது அறுபது வருடங்களுக்குப் பிறகும் அந்த மக்களின் நிலைமை இப்படித்தான் இருக்கிறது என்கிற வருத்தம் எனக்கு உண்டு. தவிர இந்த மக்களைப் பற்றி ‘கோவேறு கழுதைகள்’ நாவலிலும் வாசித்திருக்கிறேன். இணையத்தில் ஒரு கட்டுரையையும் வாசித்தேன். அது என்னை உலுக்கியது. புத்தகங்களிலும், இணையத்திலும் வாசிப்பதைத் தாண்டி அந்த மக்கள் இன்று எப்படி வாழ்கிறார்கள்? அவர்களைப் பற்றி வாசித்த தரவுகளில் ஏதேனும் மாற்றம் நிகழ்ந்திருக்கிறதா என்பதை நேரடியாக தெரிஞ்சிக்கனும்னு பயணப்பட்டேன். புதிரை வண்ணார் சமூகத்திலிருக்கிற பெண்கள், சிறுமிகள் தொடர்ந்து பாலியல் வல்லுறவுக்கு உட்படுத்தப்படுவதனால் தங்கள் வீட்டுப் பெண்களின் பாதுகாப்பு கருதி இவங்க தொடர்ந்து இடம்பெயர்ந்துட்டு இருக்கிற சமூகம். படைப்பின் வழியாக இந்த மக்களின் குரல் ஓங்கி ஒலிக்கணும்னு தான் இந்தப் படத்தை எடுக்க முன் வந்தேன். இதற்காக நிறைய கிராமங்களுக்குப் பயணம் செய்து, அம்மக்களைச் சந்தித்து முப்பது மணிநேர நேர்காணல் செய்தேன். அதுதான் இந்த படத்திற்கு கச்சாப் பொருளாகவும் விளங்கியது.
உங்களுடைய படங்களை நீங்கள் பெரும்பாலும் வெகுஜன தளத்திற்கு பதிலாக இண்டிபெண்டன்ட் மூவியாக செய்வதற்குக் காரணம்?
நான் தேர்ந்தெடுக்கிற கதைகளின் பலமே, அதோட உண்மைதான். சந்தைக்கு ஏத்த மாதிரி என்னால மாத்தி எடுக்க முடியாது. யாருடைய தலையீடும் இல்லாமல், எந்த வியாபார நோக்கமும் இல்லாமல் எடுக்கணும்னு விரும்பித்தான் என்னுடைய எல்லாப் படங்களையும் நான் எடுக்கிறேன். பெண் கதாபாத்திரத்த நல்ல நிறமா போட சொல்லுவாங்க, வண்ணான் வேலையா அதெல்லாம் என்னால செய்ய முடியாதுன்னு சொல்லுவாங்க, தகப்பனா நடிக்க முடியாதுன்னு சொல்வாங்க, அவங்களுக்குத் தெரிஞ்ச நடிகர், நடிகைகளை சிபாரிசு செய்வாங்க. நான் யாரைப்பற்றி படம் எடுக்கிறேனோ அந்த மக்களைப் பற்றிய எந்த புரிதலும் இல்லாதவங்ககிட்ட நான் கதையை விளக்கி நடிக்க வெச்சாலும், அதுல ஜீவன் இருக்காது. அதனாலே அடித்தட்டு மக்களுக்கான அரசியலைப் புரிஞ்ச கலைஞர்களை வெச்சு படம் எடுத்துட்டு இருக்கேன். சந்தைக்கு பொருள் உற்பத்தி செய்றவங்க தான் ஏற்கனவே நிறைய இருக்காங்களே!
திரைப்படத்திற்காக அந்த மக்களை சந்தித்த அனுபவங்கள் பற்றி?
அந்த அனுபவங்கள இப்போ நினைச்சாலும் எனக்கு கண்ணீர் முட்டும்.. அவ்ளோ இருக்கு. இந்தப் படத்துல அத்தைக் கிழவின்னு ஒரு கதாபாத்திரம் வரும். திருநெல்வேலி விக்ரமசிங்கபுரத்தில நான் சந்திச்ச பாட்டியோட கதாபாத்திரம்தான் அவங்க. அவங்க பேரு லீலாவதி. இப்பவும் ஊர் மக்கள் கொடுக்கிற தீட்டுத் துணிகளைத் தான் துவைச்சுட்டு அவங்க வாழ்ந்துட்டு இருக்காங்க. அவங்க சொன்ன ஒவ்வொரு கதையும் அவ்வளோ துயரமா இருந்துச்சு. சாதியின் பெயர்ல குலத்தொழில் என்ற பெயர்ல சுரண்டல் தான் நடக்குது. இன்னும் ஊர் மக்கள் கொடுக்கிற அரிசி பருப்புலதான் வாழ்ந்துட்டு இருக்காங்க. ஆனா அவங்க செய்ற வேலைக்கு இதெல்லாம் ஒண்ணுமே இல்ல. “இந்த வேலையெல்லாம் உங்களுக்கு சிரமமா இல்லையாம்மான்னு” கேட்டேன். “என்னமா பண்றது நம்ம புள்ளைகளா இருந்தா செய்ய மாட்டோமான்னு” அவ்வளவு தாய்மையோட சொன்னாங்க. இவங்களுக்கு நடக்கிற அநீதி களையப்பட வேண்டியதில் மாற்றுக் கருத்தில்லை. ஆனால் என்னைப் பொருத்தவரை இந்த மாதிரி பெண்கள்தான் தேவதைகள். இதுமாதிரி இச்சமூகத்தால் புறக்கணிக்கப்பட்ட நிறைய தேவதைகளை சந்திச்சேன். ஆற்றங்கரையில அல்லது சுடுகாட்டுல இந்த இரண்டு இடங்கள்லதான் இந்த மக்கள் அதிகமா புழங்குறாங்க. ஊருக்குள்ள வர்றது இவங்களுக்கு அவ்வளவு ஒவ்வாத காரியம். காரணம் ஊர் தங்களோட தேவைக்கு மட்டுந்தான் இவங்கள உள்ள அனுமதிக்குது ஆக இவங்களும் ஊர ஒவ்வாமையாத்தான் பாக்குறாங்க. நான்கேட்ட பல அதிர்ச்சிகளை அப்படியே சினிமாவுல கொண்டு வந்திருக்கேனான்னு தெரியல. எளிமையா சொல்லணும்னா சாதியின் பெயரால் பாலியல் வல்லுறவுக்குட்படுத்தப்பட்ட மூன்று தலைமுறைப் பெண்களின் கதையை திரைப்படமாக்கியிருக்கிறேன்.
படத்தில் பணியாற்றிய கலைஞர்களைப் பற்றி?
மாடத்தி என்ற மையக் கதாபாத்திரமா வரும் சிறுமி அஜ்மினா கேரளாவில் ஒரு படம் நடித்திருக்கிறார். அந்த சிறுமியின் அம்மா கதாபாத்திரத்தில் செம்மலர் நடித்திருக்கிறார். தமிழ் சினிமாவில் சரிதாவின் இடத்தை பிடிக்கக் கூடிய திறமை செம்மலரிடம் இருக்கிறதென்பதை உறுதியாகச் சொல்வேன். படத்தில் வரும் முக்கிய கதாபாத்திரங்கள் நாடக நடிகர்கள். இந்த கலைஞர்கள் யாருக்குமே தங்களின் முழுத் திறமையை வெளிப்படுத்திக் கொள்வதற்கான வாய்ப்பு ‘மெயின் ஸ்ட்ரீம்’ சினிமாவில கிடைக்கிறதில்லை. அப்படியே கிடைச்சாலும் ஒருசில காட்சிகள்ல மட்டும் வருவாங்க. ஆனா, இந்தப் படத்துல அவங்க முழுமையா தன்னை வெளிப்படுத்தி நடிச்சு இருக்காங்க. இது தவிர படத்தில் வரும் 80 சதவீத கதாபாத்திரங்கள் எல்லாமே பாபனாசம் அணவன்குடியிருப்பு மக்கள்தான். கலை இயக்கத்திற்கு மோகன மகேந்திரன், படத்தொகுப்பிறகு தங்கராஜ் என்று என் நணபர்கள் எனக்கு பலமாக நின்றார்கள். இந்தப் படத்துக்கு இன்னொரு முக்கிய அம்சம் இதோட ஒளிப்பதிவு. படம் பார்க்கும்போது இதை உங்களால உணர முடியும். என்னோட அமெரிக்க நண்பர் ஒளிப்பதிவுக்கு எம்மி விருது வாங்கிய ஜெஃப் டோலன் ஒரு செட்யூல் ஒளிப்பதிவு செஞ்சி இருக்காரு, மீதி படம் முழுக்க அபிநந்தன் ராமானுஜன் பங்களிச்சிருக்கார். திரைக்கதையில் என்னோடு கவிஞர் யவனிகா ஶ்ரீராமும், வடகரை ரஃபீக் இஸ்மாயிலும் பணியாற்றியிருக்கிறார்கள். திருநெல்வேலி மாவட்டத்தின் அச்சு அசலான வட்டார மொழி வசனங்களை ரஃபீக் இஸ்மாயில் எழுதினார். லைவ் ரெக்கார்டிங் என்பதால், நடிகர்கள் வசனங்களை பல வாரங்கள் பயிற்சி எடுத்துப் பேசினார்கள். புதிரை வண்ணார் சமூகத்தில் முதல் தலைமுறையாக படித்து பட்டம் வாங்கி தாசில்தாராக ஓய்வு பெற்றிருக்கும் மூர்த்தி ஐயா வசனங்களிலும், மற்ற தரவுகளிலும் நுணுக்கமான மாற்றங்களை செய்தார். இந்தப் படக்குழுவில் எங்களோடு ஒரு இசைக்கடவுளும் விரைவில் இணைய இருக்கிறார்.இந்தப் படத்துல வேலை செஞ்ச யாருமே பணத்த ஒரு பொருட்டா நினைக்கல. இந்தப் படமே என் நண்பர்களின் அன்பினாலும் பலத்தினாலும்தான் உருவாகுது. ஏன்னா அவங்களுக்குத் தெரியும் இது யாருக்கான படம்னு.