சொல்- கவிதை – வரலாறு
முள்ளிவாய்க்காலுக்குப் பிறகு
ஈழக்கவிதை நூல்
தொகுப்பாசிரியர் : குட்டி ரேவதி
மதிப்புரை : லீனா மணிமேகலை
நன்றி புத்தகம் பேசுது மார்ச் 2011
“வரலாற்றை உருவாக்குபவன் ஒடுக்குமுறையாளன்தான். அவன் எழுதுகின்ற வரலாறு அவனால் ஒடுக்கப்படவர்களின் வரலாறாக இருப்பதில்லை. அது சூறையாடுகின்ற, வன்புணர்ச்சி செய்கின்ற, வறுமையை உருவாக்குகின்ற அவனது சொந்த வரலாறே. இதற்கு மாறாக ஒடுக்கப்பட்டவர்களால் வேறொரு வரலாறு உருவாக்கப்படுகிறது.ஆனால் இந்த வரலாற்றை உருவாக்குபவர்கள் நாவலாசிரியர்களும் கவிஞர்களும்தானே தவிர தொழில்ரீதியான அல்லது கல்வித்துறை சார்ந்த வரலாற்றாளர்களல்ல” என்று ஃபிரான்ஸ் ஃபனான் குறிப்பிடுவார். சமூகத்தின் நெருக்கடியை முதலில் உணர்ந்துக் கொள்வது கவிதையாகத் தான் இருக்கிறது. ஆதிக்கமயமாக்கலுக்கும், சட்டங்களுக்கும் தணிக்கைகளுக்கும் வெளியே சதா தன்னிலையைப் பேசி மிச்சமிருக்கும் நம்பிக்கைகளைத் திரட்டிக் கொண்டேயிருக்கிறது.
கவிஞர் குட்டி ரேவதி தொகுத்து, ஆழி பதிப்பகத்தால் வெளி வந்துள்ள “முள்ளி வாய்க்காலுக்குப் பின்” கவிதை தொகுதி ஒரு மாபரும் இன அழிப்பிற்குப் பின்னான வாழ்வுறுதியை கூட்டு நினைவுகளின் முன்மொழிதலாக வைக்கின்றது. கவிஞர்கள் கி.பி.அரவிந்தன், சேரன், வ.ஐ.ச.ஜெயபாலன், திருமாவளவன், செழியன், சிவசேகரம், மாதுமை, கனகலதா எனறு தொடங்கி தீபச்செல்வன், அனார், பஹீமா ஜஹான், ரிஷான் ஷெரீஃப் ஊடாக விரியும் இத்தொகுதியின் வார்த்தைப் படலங்களின் பின்னால் கசிகிறது படுகொலைகளின் ரத்தக் கவுச்சி நாற்றம். கவிஞர் விநோதினி எழுதிச்செல்வது போல, நாம் காரிருளில், விமானச் சத்தங்களுக்கு நடுவே, வெடி மணத்தோடு, கைகளில், பசித்த மென் வயிறுகளில், தலைகளில், நீண்ட பின்னல்களில், பாதங்களில், தடுக்கி விழுந்து நடந்தபடி கவிதைகளைக் கடக்கவியலாது வாசித்து கிடப்பது உயிர் துடிக்க துடிக்க பிரேதப் பரிசோதனை செய்துக் கொள்வதற்கு ஒப்பானது.
தலைமுறை தாண்டியும் சொற்களில் தான் உறையுமோ முள்ளிவாய்க்கால் வதையின் கதை என்ற கி.பி.அரவிந்தனின் வரிகளில் அலறத் தொடங்கும் மனம் சாம்பலை உதறியபடிக்கு இடிபாடுகளை விலக்கிக் கொண்டு உயிர்த்தெழுகிறது வாழ்வு என்ற வ.ஐ.ச ஜெயபாலனின் எழுச்சியில் சிறிது ஆசுவாசம் அடைகிறது. அரசாங்கங்களுக்கு கவிதை புரியாது தான். ஊடக சுதந்திரம் மறுக்கப்பட்ட, பத்திரிகைகள் வெளியேற்றப்பட்ட, பத்திரிகையாளர்கள் படுகொலை செய்யப்பட்ட யுத்த நிலத்தின் காட்சிகளை, உயிர் பிரியும் வலியுடன் விவரணை செய்யும் இத்தொகுப்பின் கவிதைகள், இந்நூற்றாண்டின் மாபெரும் இன அழிப்பின், மனித உரிமை மீறல்களின், போர்க்குற்றங்களின் அழிக்க முடியா சாட்சிகள். விடுவிக்கப்பட்டவர்களின் இரகசிய வாக்குமூலம் என்ற தமிழ்நதியின் கவிதை திரையை உண்மையால் எரிக்கும் காட்சி கூடிய ஒரு ஆவணப்படம்.
சொல்லின் மீதான வேட்கை என்பதும், ஒருவகை மறுப்பின் மீதான வேட்கை தான். தம்மீதான தொடர்ந்த ஒடுக்குமுறைகளுக்கெதிரான ஒரு மூர்க்கமான எதிர்ப்பு, சொல்லாக, கவிதையாக மாறுகிறது. எதிர்ப்பை பற்றிய கவிதை எதிர்ப்பைக் காட்டிலும் ஒரு படி மேலோங்கியதாக இருக்கவேண்டும் என்ற மஹ்மூத் தர்வீஷின் கூற்றுக்கு கட்டியம் கூறுகின்றன சேரனின் கவிதைகள். கண்ணீரின் சுவடுகளால் முகக் கோலம அழிந்தாலும் இன்னொரு முகம் பன்முகமாக விரியக் கண்டேன் என்று முடியும் அவரின் ’தலைமுறை’ கவிதை, கவிதைக்கும் எதிர்ப்புக்கும் இடையே இருக்கும் சமத்துவமில்லாத உறவை வெளிப்படுத்துகின்றது.
ஏன் செய்தாய் எனக் கேட்க முடியாத அடக்குமுறையில் காலம் சிக்கியிருந்தது என்று எழுதும் பஹீமா ஜஹான், அடிமையாக இருப்பதையும் விடக் கொடுமையானது அகதியாக இருத்தல் என வெதும்பும் சுலோசனா தேவராஜா, மரணத்துள் வாழத் தலைப்படும் சுல்பிகா, புத்தனை-யேசுவை-அல்லாவை- சில்லறைப்பயல்களா என ஏசும் கவிதா, வரலாறு மதுவிலும், குருதியிலும் பிறழ்ந்துக் கிடக்கிறது என விசனப்படும் கனகலதா, பெரும் சூறாவளிக்குத் தப்பிய பரிசுப் பொருளின் சிதையாத பாகமாய் கிடைக்கின்ற தூக்கத்தை அணைக்கும் அனார் என்று தொகுதியில் தனித்து நிற்கும் பெண் குரல்கள் வாழ்வின் மீதான பெரும் காமத்தை வெளிப்படுத்துபவை.பன்றிகள் கிளறியெறிந்த வீதியில், அந்த பூவரச மரத்தினடியில் கிடக்கிறது நான் உன்னை சந்திக்கிற பொழுதுகள் என நீளும் தீபச்செல்வனின் கவிதைகள் கொடுங்கனவினூடே உன்னத வாழ்வை சதா தேடியலையும் ஆன்மாவின் ஓலங்கள்.
உதவுங் கரங்கள்/வடக்கினின்று நீளுமெனக் காவலிருந்தார்கள்/ மேற்கினின்று ரட்சகர்கள் வருவரென தவங்கிடந்தார்கள்/கிழக்கு ஒளி மங்கி கிடந்தது/தென் திசையின் தெய்வம்/தூதர்களைத் துரிதமாகவே அனுப்பி வைத்தது என்னும் சிவசேகரத்தின் கவிதை வாசிக்கும் மனசாட்சிகளைக் கொல்லும். அடையாள மின்மை, மிச்ச்மிருக்கும் கனவுகளைப் பற்றிய அரற்றுதல், இழப்பை நம்பிக்கையாக மாற்றும் அக்கறை, துர்க்கனவைத் துரத்தும் அலறல் என்று இந்த தொகுப்பின் கவிதைகள் நம்மை தீயிலிறக்கி நீராக்குபவை. ”முள்ளிவாய்க்கால்” என்ற திருமாவளவனின் கவிதையை வாசித்து முடிக்கும்போது “கூத்து முடிந்தது” என்ற வரியில் உறைய மறுக்கிறது காலம். எதிர்காலம் குறித்த ஒரு சொல்லை ஏற்க முடியாத வீரத்தின்/முன்னே/நான் எறிவேன்/நாயின் மலத்தை/இந்த வரலாற்றின் விதி முன்னே என்ற கருணாகரன் வசந்தியின் வரிகள் முள்ளிவாய்க்காலோடு தமிழீழம் முடிந்துவிடாது என்ற அறைகூவலை வைக்கிறது.
எலும்புக்கூட்டு ராஜ்ஜியங்கள் எழுதும் எம்.ரிஷான் ஷெரீப், ரட்சகர் எவருமில்லை என்று முறையிடும் காருண்யன், ஒரு நூற்றாண்டின் கொடுமையை சிறு பாடலில் மட்டுமா பதிவது என வினவும் த.மலர்ச்செல்வன், புதிய குருஷேத்திரத்தை வரையும் மு.புஷ்பராஜன், அட பிணம் தின்னி – நீ உனக்கு மட்டுமே எனச் சொல்கிற இந்த நாடு ஒரு நாள் இந்து சமுத்திரத்தில் பிணமாக மிதக்கும் என்று சாபமிடும் தேவ அபிரா, இறுதிக்கணங்களாலான கவிதையை எழுதும் சிமோன்தி,மந்தைகள் வெறுந்தரை தின்னுகையில் மேய்ப்பனின் மந்தை ஓட்டும் தடியில் எந்தக் களிப்பிற்காக கொடி பறந்துக் கொண்டிருந்தது என்று விடுபட்டுப் போன காலத்தின் வார்த்தைகளாய் ததும்பும் சித்தாந்தன், மனைவி முத்தமிடும் போதும் காது வெளியில் தான் நீட்டிக் கொண்டிருக்கிறது என்று நுட்பமாக விவரிக்கும் இளைய அப்துல்லாஹ், விடியலைத் தேடும் வினாக்குறிகள் என்று அகதிவாழ்வை எழுதும் வெலிகம ரிம்ஸா முகம்மத் என எல்லோரும்,பல்லாயிரம் மக்கள் செத்து மடிந்திருந்தாலும் மொழி இன்னும் செத்துவிட வில்லை என்று கன்னம் அறைகிறார்கள்.
ஆனாலும் மொத்தமாக வாசித்து முடிக்கும்போது போதாமையே மிஞ்சுகிறது. தொகுப்பாசிரியர் குட்டி ரேவதியின் தேர்வின் அரசியல் சில பிரதிநிதித்துவங்களை, நுண்ணரசியல் களன்களை விலக்கிவைக்கின்றது. இந்த தொகுதியின் இஸ்லாமியக் கவிஞர்களின் கவிதை தேர்வு அதற்கொரு உதாரணம். முன்னுரையில் தொகுப்பாசிரியர் முள்ளிவாய்க்காலில் இறுதிவரை நின்று சண்டையிட்ட இருதரப்பு போராளிகளின் பார்வைகளாக கவிதைகள் ஆகி நிற்கின்றன என்கிறார். இருதரப்பென்றால் யாரைச் சொல்கிறார்? இலங்கை ராணுவத்தைப் போராளிகள் என்கிறாரா? அல்லது இருதரப்புமே ராணுவம் என்பதால் ஒரு தட்டில் வைக்கிறாரா? தெளிவாய் இல்லை.
சாதியம், இந்திய தேசியம், தமிழ்த் தேசியம் எல்லாவற்றையும் இணைத்துப் பார்த்து அதன் நுட்பமான கோணங்களை விரித்துப்பேச வேண்டியிருக்கிறது என்று குறிப்பிடும் குட்டி ரேவதி தமிழ்த் தேசியம், ஈழத் தமிழ்தேசியம், சாதியம் குறித்த தன் கருத்தை குழப்பமான முறையில் வரையறுக்கிறார். தமிழ்நாட்டில் பார்ப்பனீயத்தை தவிர்த்து, தமிழ்த் தேசியத்திற்கு பெரும் பங்காற்றியிருப்பது வெள்ளாளக் கருத்தியல் தான். பெரியாருக்குப்பின் பார்ப்பனர் அல்லாதோர் அரசியலில் முதலியார்களும், வெள்ளாளர்களுமிணைந்த அரசியலதிகாரம் உருவாகியது. 1930 களிலேயே தனிநாடு, சுயநிர்ணய உரிமை, மாநிலத்திற்கு அதிக அதிகாரம் போன்றவற்றைப் பேசி இந்திய ஒருமைப்பாட்டுக்கு வெளியே பிராந்திய அரசியலை தங்களுக்கென்று வரித்துக் கொண்டன. தமிழ்த்தேசியத்திற்கு தமிழக தலித்துகள் மற்றும் அடித்தட்டு மக்கள் உடன்படுவது கூட, அரசியல் அதிகாரத்தில் தங்களுக்கான பங்கிற்கும், தமிழகத்திலிருக்கும் பன்னாட்டுக் கம்பெனிகளின் ஊடாக தங்கள் ஆதிக்கத்தை சாதித்துக் கொண்டிருக்கும் சக்திகளுடன் கூட்டாக இருப்பதற்காகவும் தான். மற்றபடி தலித்துகள் திராவிட அரசியலுக்கு கீழ் நின்று தான் தமிழ்த் தேசியம் பேசிக் கொள்ள முடியும்.அதிகாரத்தில் இருப்பவர்கள் தேசியம் பேசுவதும், இல்லதவர்கள் சாதியம் பேசுவதும் தான் இங்கு மெய்யியல். ஈழத்தமிழ் தேசியம் என்பதைப் பொறுத்தவரை அது ஒரு கற்பிதம் தான். கற்பிதமாக இருந்ததால் தான் அப்பாவி தமிழ் மக்கள் பலியிடப்பட்டார்கள். பிரபாகரன் முள்ளிவாய்க்காலில் கைவிடப்பட்டதும் தற்செயலானதல்ல.
ஈழம் கருத்து நிலம் என்கிறார் தொகுப்பாசிரியர். உணமை தான். நவகாலனித்துவ, பன்னாட்டு மூலதனம் இவற்றைப் பற்றிப் பேசாமல் முள்ளிவாய்க்காலை எப்படி விளங்கிக் கொள்வது. பன்னாட்டு வர்த்தக நிறுவனங்கள் அபரிதமான மூலதனத்தின் வழியே ஒரு தேசிய அரசாங்கத்தை ஊடுறுவும்போது, பெரும்பான்மை இனம் அதிகாரத்தின் உள் முரண்களோடு கூடிய சிறுபான்மை இனத்தைக் கொன்றொழித்து தன் விசுவாசத்தை மூலதனத்திற்கு நிரூபித்துக் கொள்ளும். இதுதான் இலங்கையில் நடந்தது. ராஜபக்சே அதற்கொரு கருவி தான்.கூடவே யுத்தத்தினிடையே இலங்கையின் உற்பத்தி உறவும், வர்க்க ரீதியிலான பிரச்சினைகளும் என்னவாயிற்று என்ற கேள்வியையும் கேட்டுப் பார்த்தால் இன்னும் கூட தெளிவானப் புரிந்துணர்வு ஏற்படும்,.
முள்ளிவாய்க்காலுக்குப்பின் என்ற இந்த தொகுப்பைத் தந்ததன் மூலம் குட்டி ரேவதி விவாதிப்பதற்கான பல திற்வுகோல்களையும் சேர்த்தே தருகிறார். செழியன் தன் கவிதையில் சொல்வது போல நெஞ்சில் வாழ்வு அச்சமின்றி குடை விரிக்கட்டும். போராட்டங்களை விட ஆகப் பெரியது வாழ்வு.
நூல் பிரதிக்கு ஆழி பதிப்பகத்தை அணுகவும்
லீனா மணிமேகலையின் இயக்கத்தில் ‘செங்கடல்’ திரைப்படம்
வெளி ரங்கராஜன்
தீராநதி
பிப்ரவரி 2011
மாத்தம்மா, பறை, பலிபீடம், தேவதைகள் போன்ற ஆவணப்படங்கள் மூலம் சமூகத்தின் சில பாரம்பரியமான கண்மூடிப் பார்வைகளால் விளிம்பு நிலைக்குத் தள்ளப்படும் சிற்றினக்குழுக்களின் வாழ்நிலையை கவனப்படுத்திய லீனா மணிமேகலையின் இந்த ‘செங்கடல்’ திரைப்படம் கடலின் நடுவே வதைபடும் தனுஷ்கோடி மீனவர்களின் ஜீவ மரணப் போராட்டங்களையும், ஆயுதத்தாலும் இனவெறியாலும் அலைக்கழிக்கப்பட்டு உயிரைக் காப்பாற்றிக் கொள்ள தனுஷ்கோடி கரையில் ஒதுங்கும் ஈழத் தமிழ் அகதிகளின் அவல வாழ்க்கையையும் ஒளிவுமறைவுகள் ஏதுமின்றி நேரடியாகப் பேசுகிறது.
1964-ல் ஆழிப் பேரலையால் நிர்மூலமாக்கப்பட்ட தனுஷ்கோடி கிராமம் கம்பிப்பாடு தனது சிதைவுகளுடனும், மண்ணின் மீனவக் குடும்பங்களுடனும் இன்னும் உயிர்ப்புடன் வாழ்ந்து கொண்டுதான் இருக்கிறது. ஆனால் கடலைத் தவிர வேறு எதையும் அறியாத அந்த மக்கள் மீண்டும் மீண்டும் உயிரைப் பணயம் வைத்து ஒரு பிடி உணவுக்காக கடல்நீரில் இறங்குகிறார்கள். அவர்கள் விடுதலைப் புலியென்றோ, கடத்தல்காரனென்றோ, உளவாளியென்றோ சந்தேகத்தின் பேரால் இலங்கைக் கடற்படையால் அடித்தோ, கொல்லப்பட்டோ, கொள்ளையடிக்கப்பட்டோ துன்புறுத்தப்படுவதுதான் அங்கு அன்றாட நிகழ்வாக இருக்கிறது. சூழலுக்கும், புயலுக்கும், மழைக்கும் போலவே குண்டடிகளுக்கும், துப்பாக்கிச் சூட்டுக்கும் அஞ்சாமல்தான் அவர்கள் தங்கள் வாழ்க்கைப்பாட்டை மேற்கொள்ள வேண்டியிருக்கிறது. கடல் வழியே ஈழத்து அகதிகள் வந்து நிறையும் இடமாகவும் அது இருக்கிறது. நம்பிக்கைகள் சிதைந்த நிலையிலும், தங்கள் குழந்தைகளுக்காக தங்கள் உயிரைத் தக்க வைத்துக் கொள்ளப் போராடும் அந்த மீனவர்கள் மற்றும் அகதிகளின் வாழ்க்கை அதிகார வர்க்கத்தின் அசட்டையினாலும் கடற்படை, மற்றும் காவற்படையின் கண்காணிப்புகளாலும் இழைக்கப்படும் அவமானங்களாலும் மேலும் மாசுபட்டுக் கொண்டிருக்கிறது.
இந்த வாழ்க்கை அவலங்கள் வெளி உலகுக்குத் தெரியப்படுத்தப்பட வேண்டும் என்கிற முனைப்புடன் படம் பிடிக்கக் களமிறங்கிய தன்னார்வச் செயலாளி லீனா மணிமேகலை கடலுக்கு மீன் பிடிக்கச் செல்பவர்கள் பிணமாகத் திரும்புவதையும், மனைவியரின் ஓலங்களையும், நிர்க்கதியான குழந்தைகளையும், நீதி கேட்டு ஊர்வலம் செல்வோர் காவல் துறையால் ஒடுக்கப்படுவதையும் அருகிருந்து பார்த்துப் படமெடுக்கும் நிலையில் தானே ஒரு கையறு நிலை கொண்ட பார்வையாளராகிறார். மீனவர்களின் நல்வாழ்வுக்காக போராடும் மீனவ இனக் குப்புசாமி, கரையொதுங்கும் ஈழத் தமிழ் அகதிகளுக்கு உதவிக் கரம் நீட்டி முகாமுக்கு வழி நடத்தும் தொண்டு நிறுவன ரோஸ்மேரி, யுத்தத்தாலும், துரத்தும் மரணங்களாலும் உருக்குலைந்து கிறுக்கனான ஈழ அகதி சூரி, பள்ளிக்குச் செல்ல மனமில்லாமல் கடற்கரை உயிரினங்களுடன் ஓடித் திரியும் சிறுவர்கள் என வாழ்வுணர்வுத் துடிப்புகளும் அங்கே உண்டு. ஆனால் மனித நேயமற்ற நம்முடைய அரசு மற்றும் கண்காணிப்பு நிறுவனங்கள் இந்த அவலங்களைத் தடுத்து நிறுத்தவோ, நாடி வரும் அகதிகளுக்கு கெளரவமான வாழ்க்கை அமைத்துத் தரவோ இயலாதவைகளாகவே இருக்கின்றன. ஆனால் உண்மை நிலவரங்களைத் தெரியப்படுத்த போராடுபவர்களை மிரட்டவும், தடுத்து நிறுத்தவும் அவைகளால் முடியும். எல்லாம் அப்படியே விட்டுவிட்டு கனத்த மனத்துடன் திரும்பத்தான் முடிகிறது போராளிகளுக்கு. ஆனால் நிரந்தர அகதியான சூரியின் வடிவில் மீனவச் சிறுவர்களின் மனமகிழ்ச்சித் துணையாக ரேடியோப் பெட்டியுடன் எங்கும் பிரசன்னமாக உள்ளது ஒரு நம்பிக்கைக் கீற்று.
உண்மை நிலவரங்கள் அறியப்படுவதைத் தடுக்க நினைக்கும் அரசு அமைப்புகளுக்கு எதிராக மனித உரிமை இயக்கங்களின் துணையுடன் ஒரு பரந்த அணியை முன்னிறுத்துவதற்கான வாய்ப்புகள் உள்ள நிலையிலும் தடைகள் நிறைந்த தனி மனித முனைப்பின் தோற்றத்தையே இயக்குனரின் பாத்திரச் சித்திரிப்பு உருவாக்கினாலும் ராமேஸ்வரம் மீனவர்கள், கிடாத்திருக்கை கிராமக் கூத்துக் கலைஞர்கள், நாடகக் குழுக்களின் நடிகர்கள், எழுத்தாளர்கள் என ஒரு கூட்டியக்கம் சாத்தியப்பட்டிருக்றிது. முக்கியமாக கம்பிப்பாடு மீனவர் சமூகமே ஒட்டு மொத்த தயாரிப்பிலும் பங்கு கொண்டிருக்கிறது. பல கட்டுப்பாடுகளுக்கு இடையிலும் மண்டபம் முகாம் ஈழத்து அகதிகளும், கடலிலும் சுடுமணலிலும் கூட சிறுவர்களும் இப்படத்தில் நடித்திருக்கிறார்கள். சதா ஓலமிடும் கடல் முழக்கங்களுக்கு இடையே இச்செங்கடல் திரைப்படம் மரணம் துரத்திக் கொண்டிருக்கும் வலிகள் நிறைந்த ஒரு உண்மை வாழ்வை அதன் பல்வேறு முகங்களுடன் பதிவு மிகைப்படுத்தலோ, உணர்ச்சி மயமாக்கலோ இன்றி பதிவு செய்துள்ளது. ஷோபா சக்தி நடிகராகவும் கதை வசனகர்த்தாவாகவும் ஒரு சிறப்பான கலைப்பங்களிப்பு செய்துள்ளார்.
தன்னுடைய வழக்கமான பிற்போக்குப் பார்வையுடன் நம்முடைய சென்ஸார் போர்டு இப்படத்துக்கு அனுமதி மறுத்துள்ளளது. அரசாங்கங்கள் முறைதவறி விமர்சிக்கப்படுவதும், திரைப்படத்தில் சில இடங்களில் உபயோகப்படுத்தப்படும் மொழி unparliamentary யாக இருப்பதும் தடைக்கான காரணங்களாக காட்டப்பட்டுள்ளன. பெருவாரியான மக்களைச் சென்றடையும் வர்த்தகப் படங்களில் இரட்டை அர்த்தங்கள் கொண்ட ஆபாச வசனங்களையும், கட்டற்ற வன்முறையையும் அனுமதிக்கும் சென்ஸார் போர்டு எளிய மக்கள் பேசும் இயல்பான கொச்சைப் பேச்சுவழக்கை unparliamentary யாகப் பார்ப்பது எவ்வளவு பெரிய முரண்? வட்டார வழக்குகளை ஏற்றுக் கொள்ளத் தெரியாத கலை உணர்வற்ற ஒரு மேட்டிமைக் குழுதான் இதுபோன்ற படங்களின் தரத்தை தீர்மானித்துக் கொண்டிருக்கிறது. மேலும் அரசாங்கங்கள் மக்களுடைய நலன்களுக்கு எதிராக செயல்படும்போது அவைகளை விமர்சிக்கும் உரிமை குடிமக்களுக்கு இல்லையா? வளர்ச்சி பெற்ற ஜனநாயக அமைப்புகளில் எல்லாம் கருத்து சுதந்திரம், விலகல், மறுப்பு இவை குறித்த ஆழமான கருத்தாக்கங்கள் வலுப்பெற்று வரும் இன்றைய காலகட்டத்தில் நம்முடைய அரசு அமைப்புகள் தற்குறிகளாய் More loyal than the king அணுகுமுறையையே பின்பற்றி வருகின்றன. அருந்ததிராய், பினாயக் சென் போன்ற மனித உரிமைப் போராளிகளையே தேசத்துரோக வழக்குகளால் முடக்க முடியுமென்றால் இங்கே எந்தக் கருத்துரிமைதான் சாத்தியம்?
It is time we censored the Censor Board
http://expressbuzz.com/opinion/op-ed/it-is-time-we-censored-the-censor-board/242944.html
Page 11 of Jan28,2011 Indian Express
Leena Manimekalai
First Published : 27 Jan 2011 12:30:00 AM IST
Last Updated : 28 Jan 2011 12:41:50 AM IST
On December 31, 2010, the Censor Board of Film Certification (CBFC) watched and refused the clearance certificate to my film Sengadal for the following reasons. “This film contains many present political references in a denigrative way and usage of many unparliamentary words. There are some denigrating references of the functioning of the Sri Lankan Government. As the film violates guidelines, certificate to the film is refused.”
This experience has only taught me a lesson that it is dangerous to be right when the government is wrong. When Article 19 of the Constitution says, all citizens shall have the right to freedom of speech and expression, intimidation of CBFC, which is an ‘attached and subordinate’ organisation of the Ministry of I&B, with the free-to-use scissors on every other film made in this country is disastrous. Is it not evident that censorship has lost its relevance, when people have access to all kinds of visual entertainment over various media? Is it not dubious that CBFC plays the ‘moral police’ just for the films to be shown in theatres.
As a poet and a filmmaker I have been suffering hurdles in the way of free expression all through my profession by extra-constitutional pressure groups like political party goons, ultra left and ultra right ideological outfits, market, religious movements and even academic institutions. My documentary Parai on caste discrimination which runs to 40 minutes suffered 19 cuts by the CBFC in 2004 on the ground the film shall create law and order problems. I joined the Campaign against Censorship/Vikalp — forum of 250 independent filmmakers and detested the cuts and screened Parai at almost 200 villages by alternative means and the film ultimately called for government intervention in the locality addressed in the film by gearing up people’s movements. And now, Sengadal, which is a people participatory cinema has been refused permission for public exhibition.
Sengadal captures the fragments of ordinary lives beaten by three-decade-long ethnic war in Sri Lanka. It unfolds in a fisher village at Dhanushkodi, the southernmost tip of India and talks of the travails of the fishermen risking their lives everyday in the border waters between Sri Lanka and India. Kambippadu, a village in Dhanushkodi, that was washed out by floods caused by a cyclone in 1964 is now a village of ruins and this is the focal place where the fiction unwinds. This place, where simple traditional fishermen ply their trade, is where Tamil refugees land either in boats or as floating corpses. The fishermen of Kambippadu and the Tamil refugees from the Rameshwaram Mandapam refugee camp form the bulk of the artistes in Sengadal.
It was a difficult mission to make a film because Dhanushkodi is a place under constant surveillance by the Coast Guard, the Indian Navy, CB-CID, Q Branch and the Intelligence Bureau as the Sri Lanka is 18 kms away. We overcame all these barriers, natural and man-made, to see Sengadal honestly becomes a portrayal of the unrecognised community, constantly insecure.
What the world knows is that the war for a separate Tamil Eelam was merely bloodshed, violence and terror. But little is known about the struggle of the poor common folk and of the innocent fishermen caught in an internecine war. They are forced to flee a war-ravaged land, battle the sea, and reach India only to confront increasing hostility and an uncertain future.
The lives of the fishermen on mainland India are no different. We learn it from our everyday headlines. They are often mistaken for rebels, spies and smugglers and are beaten, maimed or killed by the Sri Lankan Navy.
I felt that I should not be a silent witness to this discrimination and human rights violation against a vulnerable society. I wanted to register my dissent and share their true story through cinema. When the CBFC stops me from exhibiting my film to the people, it is freedom of expression and right to information which is at stake.
If the government thinks that its citizens are capable of watching thousand and odd advertisements bulldozing the drawing halls of their homes broadcast in hundreds of channels and select which shampoo will bring more lather, if it feels that its citizens can see through headlines and breaking news manufactured by the political mafia-run channels and get their daily dose of ‘truth’ and considers that its citizens are entitled to watch any soap or any television show, can hear any radio programme and browse anything on Internet and remain wise, how come it decides that the moment its citizens buy a cinema ticket they become idiots?
To be eligible for participation in film festivals in India, Indian films need a CBFC certificate while foreign films get away with censorship exemption. The broadcasting ministry has to agree to ‘censorship exemption’ for foreign films. Otherwise, there won’t be foreign films available for exhibition in Indian festivals. But it cannot risk ‘uncomfortable’ or ‘critical’ films being shown at festivals organised by the government. This is stupidity and duplicity at its height.
However much the Indian state machinery wants us to believe that the CBFC carries out certification, in truth it still indulges in censorship in the classical sense. Many independent filmmakers feel that the main censorship law — the Cinematographic Act of 1952 — is archaic and needs a thorough review, especially in the light of rapid changes in the last decade. It is baffling that the political mafia can run their propaganda channels telecasting their rallies and inflammatory footage for hours uncensored but when a filmmaker uses bits and parts of it to show the real side, he/she is denied a screening certificate.
I feel that the censor board should be abolished altogether. What we need is a rating agency, classifying films as being suitable for universal viewing or under parental guidance or only for adults.
leenamanimekalai@gmail.com
Film on Lankan conflict rejected
http://www.deccanchronicle.com/chennai/film-lankan-conflict-rejected-301
January 25th, 2011
DC Correspondent
Jan 24: The Regional Censor Board has denied clearance to Sengadal, a film on plight of the fishermen living in the Dhanushkodi coast of India during the last stages of the ethnic war between the Tamil Eelam rebels and the Sri Lankan Government.
The maiden feature film of the award winning writer/poet Leena Manimekalai and also focuses on the sufferings of Ealam Tamils between February and May 2009, the last stages of the civil war. It is said the censors were reportedly ‘startled’ by the film and felt that it was unfit for viewing.
The film contains many pungent political references and suggests that the Indian government assisted in the ethnic-cleansing of the Tamils and the LTTE. The censors also found the language unpalatable. Ms Leena, who also doubles as the lead protagonist in the film, said, “I have only registered the facts of the ordinary lives (fishermen) caught in the atrocious war and the political apathy. All those who have appeared are real and so are the narratives. This being the case, why should I scissor the dialogues and scenes?”
The filmmaker said the censor board’s refusal was a gross violation of the freedom of artistic expression and said that many Tamil films used the same style of language which the censors found offensive.
“The censor board is being unfair,” said Ms Leena, who, along with her producer Janaki Siva has sent Sengadal to the appellate tribunal in Delhi.
செங்கடல் – காலம் கட்டுரை
செங்கடல்
முப்பது வருடப் போர்!
போரின் தடயங்கள் வேகவேகமாய் மறைக்கப்படுகின்றன
போர் இறந்த காலமென்றால் விடுதலை எப்போது நிகழ்காலமாகும்?
கடுந்துயரின் சாட்சியாய் காலம்
நம்பிக்கை வெறும் வார்த்தை!
இத் திரைச் சித்திரம் உண்மையின் சலனம்!!களம்:
இனச் சுத்திகரிப்புகளாலும் படுகொலைகளாலும் வதைகளாலும் அகதிகளின் ஓலத்தாலும் கருகிப்போன ஈழத்து நிலத்தின் சாம்பல் ‘பாக் நீரிணை‘ யில் மிதந்து வருகிறது. அந்தச் சாம்பலில் செல்லும் தமிழக மீனவர்களின் தோணிகள் கடலில் எரியும் கதைகள் முடிவற்று நீண்டுகொண்டேயிருக்கின்றன. கடல் எரிகிறது. சகல மீட்பர்களாலும் கைவிடப்பட்டிருக்கும் மீனவர்களின் இரத்தமும் கண்ணீரும் இராமேஸ்வரத்தின் கரைகளை நிறைத்துள்ளன.
அப்பாவி மீனவர்கள் கடலின் நடுவே புலிகளெனவும் கடத்தல்காரர்களெனவும் உளவாளிகளெனவும் கொல்லப்படுகிறார்கள். மீனவர்களின் ஓலம் அலைகளின் நடுவே இரகசியமாகப் புதைக்கப்படுகிறது.
கடலைத் தவிர வேறெதையும் அறியாத அந்த மக்கள் மீண்டும் மீண்டும் உயிரைப் பணயம் வைத்து ஒருபிடி உணவுக்காக உப்பு நீரில் இறங்குகிறார்கள். அவர்கள் தமது தோணிகள் செல்லும் பாதையில் மீட்பர்களையோ இரட்சகர்களையோ இதுவரை கண்டதில்லை. ஆனால் ஒவ்வொருநாளும் கொலைகாரர்களை அவர்கள் காண்பதுண்டு.
எப்போதாவது அவர்கள் நடுக் கடலில் தத்தளித்துக்கொண்டிருக்கும் ஈழத்து அகதிகளைக் காணும்போது ஒரு துயரப் புன்னகையுடன் அவர்களை வரவேற்கிறார்கள்.
கதை
புயல், நகரின் பெரும்பகுதியைக் கடலில் சுழற்றி எறிய, எஞ்சியிருக்கும் சிதிலங்களையும், அதில் கசியும் உயிர்களையும் ஊரெனத் தாங்கி நிற்கும் தனுஷ்கோடி. இந்தியப் பெருங்கடலும், வங்காள விரிகுடாவும் கலக்கும் அதன் கரையில்,முப்பது வருடங்களாகத் தீராத இலங்கை உள்நாட்டு இனப் போருக்குத் தப்பி ஈழத்து அகதிகள், தங்கள் வாழ்வின் இறுதி நம்பிக்கையைப் பிடித்துக் கொண்டு செத்தோ, உயிரோடோ வந்தவண்ணம் உள்ளனர்.ஆயுதமும், இனவெறியும் நொருக்கிய ஈழத் தமிழர்களின் விடுதலைக் கனவை வரலாறு எட்டி நின்று பார்த்துக் கொண்டிருக்கும் காலக்கட்டம்.
சிங்களப் பேரினவாதம், அழித்தொழிக்கப்பட்ட போராளிகள், வீணடிக்கப்பட்ட ரத்தம் உறைந்து நிற்கும் பீரங்கிகள், இன்னும் புதைத்து முடியாத பிணங்கள், வேண்டப்படாத உயிர்களாய் முள்வேலிகளிடையே அடைத்து வைக்கப்பட்ட மனிதவிலங்குப் பண்ணைகள் ,ஒலமிடவும் சக்தியற்று சிதறடிக்கப்பட்ட தமிழினம் மிச்சமுள்ள வாழ்க்கையை வாழ்ந்துவிடும் ஆசையில் ஏதோ ஒரு நாட்டின் எல்லையில் தன் கடைசி ஒரு பிடிமூச்சைத் தாங்கிக் கொண்டு நிற்கின்றது.
கடற் தண்ணீரில் சிங்கள நீரெது? தமிழ் நீரெது? என்ற அச்சத்திற்கிடையே தினமும் மீன் பிடிக்கச் செல்லும் தமிழக மீனவர்கள். விடுதலைப் புலியென்றோ, கடத்தல்காரனென்றோ, உளவாளியென்றோ சந்தேகத்தின் பேரில் சிறிலங்கா எல்லைக் கடற்படையால் நாள்தோறும் அடித்தோ, கொல்லப்பட்டோ, கொள்ளையடிக்கப்பட்டோ துன்புறுத்தப்படுகின்றனர். இருந்தும் அடுத்த வேளை உணவுக்காக கடலில் பாயும் வள்ளங்கள் சுழலுக்கும், புயலுக்கும், மழைக்கும் போலவே குண்டடிகளுக்கும், துப்பாக்கிச்சூட்டுக்கும் அஞ்சாமல், எப்படியும் கரைக்குத் திரும்பி விடும் உறுதியை மீனவ்ர்களுக்கு தருகின்றன.
இந்த சுழலில் தங்கள் இருப்பைத் தக்கவைக்க அலைக்கழிக்கப்படும் மீனவர் முனுசாமி, அகதிகள் நலனுக்கான கிறிஸ்தவ மையத்தில் பணி செய்யும் ரோஸ்மேரி மற்றும் ஆவணப்பட இயக்குனர் மணிமேகலை ஒரு மையப்புள்ளியில் சந்திப்பதும், வெளியேறுவதுமாய் கதையைப் பின்னுகின்றனர். யுத்தத்தாலும்,சதா துரத்தும் மரணங்களாலும் காலத்தையும் வெளியையும் தன் இழுப்புக்கு வளைத்துக் குறுக்குசால் போடும் ஒரு கிறுக்கனாக அறியப்படும் ஈழத்து அகதி சூரி உண்மையின் மயக்கத்தை முன்னறிவித்த தீர்க்கதரிசி.அதிகாரம் அவனின் நாவுகளைத் துண்டித்து எறிகிறது, மணிமேகலையைச் சட்டத்தின் பெயரால் ஒடுக்குகிறது, முனுசாமியைக் கொன்று போடுகிறது, ரோஸ்மேரியை கடவுளின் கையில் பிடித்துக் கொடுக்கிறது. கடவுள் அடிமைகளிற்காகவும் ஏதிலிகளிற்காகவும் செங்கடலை இரண்டாகப் பிளந்தார்.
விடுதலை எங்கே ஒளிந்திருக்கிறது? குருதிச் சகதியில் நொண்டியடித்து மெல்ல நடக்கிறாள் காலதேவதை
உருவாக்கம்
இந்தியாவிற்கும் இலங்கைக்கும் இடையே விரிந்து கிடக்கும் கடலின் நடுவே வதைபடும் மீனவர்கள் குறித்தும்,இந்தக் கடலைத் தாண்டி உயிரைக் காப்பாற்ற ஓடிவரும் ஈழத்து அகதிகள் குறித்தும் எளியவர்களின் துயரங்களை அசட்டுடையுடன் பார்க்கும் அதிகார வர்க்கம் குறித்தும் செங்கடல் திரைச் சித்திரம் ஒளிவு மறைவுகள் ஏதுமின்றி நேரடியாகப் பேசுகிறது.
கம்பிப்பாடு, இது 1964ல் ஆழிப்பேரலையால் நிர்மூலமாக்கப்பட்ட ஒரு தனுஷ்கோடிக் கிராமம். அது இன்றும் தனது சிதைவுகளுடனும், அந்த மண்ணின் மீனவக் குடும்பங்களுடனும் உயிர்ப்புடன் இருக்கிறது. கடல் வழியே ஈழத்து அகதிகள் வந்து நிறையும் அந்த இடமே செங்கடல் திரைச் சித்திரம் நிகழும் இடமாக இருக்கிறது.
இந்தத் திரைச் சித்திரத்தில் இராமேஸ்வர மீனவர்களும் மண்டபம் முகாமில் தங்கியிருக்கும் ஈழத்து அகதிகளுமே நடித்திருக்கிறார்கள். துணைக் கதாபாத்திரங்களில் கிடாத்திருக்கைக் கிராமத்துக் கூத்துக் கலைஞர்களும், நாடகக் கலைஞர்களும் பங்கெடுத்திருக்கிறார்கள்.
செ்கடலில் நடித்த பலரும் இதற்கு முன் ஒரு படம்பிடிக்கும் கருவியைத் தங்கள் வாழ்வில் எதிர்கொண்டதில்லை. அந்த ஒட்டுமொத்த சமூகமே மீண்டும் மீண்டும் வரிசையாகத் திரைக்கதையை வாசித்தும் நடிப்புப் பயிற்சிப் பட்டறைகளில் கலந்து கொண்டும், ஒத்திகை பார்த்தவண்ணமுமிருந்தனர். கப்பிப்பாடு மீனவர்கள் பெரும்பாலும் எல்லா தயாரிப்புப் பணிகளிலும் தங்களை ஈடுபடுத்திக்கொண்டனர். உணவுத் தயாரிப்பு, வாகனப் போக்குவரத்து, கூட்டத்தைக் கட்டுப்படுத்துதல், படப்பிடிப்பின்போது தொழில் நுட்பக் கலைஞர்களிற்கு உதவுவது போன்ற எல்லாவிதமான பணிகளிலும் அவர்கள் உற்சாகத்தடன் தம்மை ஈடுபடுத்திக்கொண்டனர்.
நொடிக்கொருதரம் மாறிக்கொண்டிருந்த காலநிலை, புயல் அறிவிப்புகள், திடீரெனக் கொந்தளித்துப் பெருகும் திடீரென உள்வாங்கும் கடல், மின்சாரமின்மை, தொலைத்தொடர்பு வசதிகளின்மை, சீரற்ற மணல் பாதையில் படப்பிடிப்பு உபகரணங்களுடன் நீண்ட பயணம் போன்றவையே படப் பிடிப்புக் குழு எதிர்நோக்கிய. முதன்மைப் பிரச்சனைகளாயிருந்தன.
ஈழத்து அகதிகள் மண்டபம் அகதி முகாமின் அனைத்து கட்டுப்பாடுகள் மற்றும் பாதுகாப்புநடைமுறைகளையும் அனுசரித்தே படத்தில் நடித்தனர். அவர்கள் காலை எட்டு மணிக்குத் தங்கள் அன்றாட வேலைகளுக்காக மட்டுமே முகாமை விட்டு வெளியேற வேண்டும். மேலும் மாலை ஆறு மணிக்கு முன்னதாகவே முகாமின் வருகைப்பதிவேட்டில் கையெழுத்திட திரும்பியாக வேண்டும். இதில் ஏற்படும் ஏதேனும் சிறுபிழைகூட அவர்களை மோசமான சிக்கல்களுக்கும், கேள்விகளுக்கும் இட்டுச்சென்றுவிடும். இத்தனை சிரமங்களுக்கு அப்பாலும் அவர்கள் மனப்பூர்வான ஈடுபாட்டுடன் செங்கடலில் நடித்தார்கள். கடலிலும் தீடையிலும் சுடுமணிலிலும் குழந்தைகள் கூட கடும் சிரமத்துடன் நடித்துக் கொடுத்தார்கள்.
தனுஷ்கோடியின் கரை இலங்கையிலிருந்து வெறும் பதினெட்டு கிலோமீட்டர் தொலைவிலிருக்கிறது. தனுஷ்கோடி நிலப்பரப்பு கடலோரக் காவற்படை, காவற்துறை, கடற்படை, மத்திய புலனாய்வுத்துறை, கியூ பிரிவு முதலியவைகளால் தொடர்ந்து கண்காணிக்கப்பட்டுவருகிறது. கம்பிப்பாடு கிராமத்தின் சிதைவுகளின் நிழலில் இந்திய உளவுத் துறையினர் மறைந்திருக்கிறார்கள்.
செங்கடல் திரைப்படக் குழு நிழல்களைப் படமாக்குவதில் ஆர்வம் காட்டவில்லை. அது உண்மையை மட்டுமே தேடிச் சென்றது …அதைப் படமாக்கியுமிருக்கிறது.
இயக்கம் லீனா மணிமேகலை
தயாரிப்பு கனவுப்பட்டறை
திரைக்கதை சி.ஜெரால்ட்,ஷோபாசக்தி,லீனா மணிமேகலை
வசனம் ஷோபாசக்தி கூடுதல் வசனம் சி.ஜெரால்ட்
ஒளிப்பதிவு எம். ஜே ராதாகிருஷ்ணன்
இசை எல்.வி.கணேசன்
படத்தொகுப்பு மேற்பார்வை ஸ்ரீகர் பிரசாத்
படத்தொகுப்பு துஹினாபோ முஜும்தார்
கலை மாயக்கண்ணன், கே.டி. காந்திராஜன்
ஒலிப்பதிவு ஹரிகுமார் மாதவன் நாயர்
ஒலிவடிவமைப்பு சுபதீப் சென்குப்தா
தயாரிப்பு மேற்பார்வை இளங்கோ ரகுபதி