“என்போன்ற பெண்ணை ஆணாதிக்க – சாதிய தமிழ்ச் சமூகம் கொஞ்சிக் குலாவவா செய்யும்?” – லீனா மணிமேகலை பேட்டி
எந்த அரசியல் பின்புலமும் செல்வாக்கும் இல்லாத எளிய பின்னணியிலிருந்து வந்த என் கலை வெளிப்பாட்டுச் சுதந்தரத்தையும் வழிபாட்டுணர்வு சுதந்திரத்தையும் இந்திய அரசியலமைப்பு காப்பாற்றியுள்ளது.
அதனால், இந்த இடைக்காலத் தடையை இந்துத்துவ பாசிச ஆட்சியாளர்களுக்கு உச்சநீதிமன்றம் விடுத்திருக்கும் எச்சரிக்கையாகத்தான் பார்க்கிறேன். ‘காளி’ என்ற ஆதிப்பெண் வடிவம் எல்லோருக்குமானது. இந்துத்துவவாதிகள் மட்டுமே சொந்தம் கொண்டாட முடியாது என்ற செய்தியையும்தான், இந்தத் தீர்ப்பு உணர்த்தியுள்ளது – உறுதியுடனும் உற்சாகத்துடனும் பேசுகிறார் இயக்குநர் லீனா மணிமேகலை.

லீனா மணிமேகலை
‘காளி’ ஆவணப்பட போஸ்டர் எதிர்ப்புகளைத் தொடர்ந்து லீனா மணிமேகலையை கைதுசெய்ய இடைக்கால தடை விதித்திருக்கிறது உச்சநீதிமன்றம். தற்போது, கனடாவில் கலை சார்ந்த படிப்பை படித்துக்கொண்டிருந்தாலும் தன்மீதான வழக்குகளை எதிர்கொள்வதோடு, தனது ஆறு கவிதை தொகுப்புகளை உள்ளடக்கிய ‘எட்டாம் கன்னிமார் திரட்டு’ நூலையும் இந்தப் புத்தகக் கண்காட்சிக்கு கொண்டுவந்திருக்கிறார் லீனா மணிமேகலை. பல்வேறு கேள்விகளுடன் அவரை தொடர்புகொண்டு பேசினோம்,
“உங்களைக் கைது செய்ய உச்சநீதிமன்றம் இடைக்காலத் தடைதான் விதித்திருக்கிறது. ஒருவேளை, மன்னிப்பு கேட்கவேண்டும் இல்லை என்றால் சிறை என்று உத்தரவிட்டால் என்ன முடிவு எடுப்பீர்கள்?”
“தமிழ்நாட்டில் உங்கள் மீது வழக்குப்பதிவு செய்யப்படவில்லை என்பதை எப்படி உணர்கிறீர்கள்?”

“காளி ஆவணப்படம் எதைப் பற்றியது?”
“ஜூன் 26-ஆம் தேதி குயர் சமூகத்தினருக்கான சர்வதேச சுயமரியாதை தினம். அன்று, டொரான்டோவில் நகர் உலா போகும் காளியை பல்வேறு இன-தேசிய-பண்பாடுகளைச் சேர்ந்த மக்கள் தரிசிக்கும்போது நடக்கும் காட்சிகள்தான் ‘காளி’. அதில், காளியாக வலம் வருவது நான்தான். இந்த பாணி படங்களை நிகழ்த்துக்கலை, ஆவணப்படம் என்று வகைப்படுத்தலாம். Loitering என்று குயர் அரசியல் பதம் ஒன்று உண்டு. ‘What if a goddess decides to loiter?’ என்ற என் கேள்விக்கான பதில்தான் ‘காளி’. இப்படத்திற்காக, பல்வேறு நாடுகளிலுள்ள குயர் தோழமைகளின் அரவணைப்பு எனக்கு கிடைத்திருக்கிறது”.
“குயர் சமூகம் குறித்து சமீபத்தில் வெளியான பா.ரஞ்சித்தின் ‘நட்சத்திரம் நகர்கிறது’ திரைப்படத்தைப் பார்த்தீர்களா?”

“‘மாடத்தி’, ‘செங்கடல்’ போன்ற உங்களுடைய படங்கள் சர்வதேச அளவில் கவனிக்கப்பட்டாலும் தமிழ் ரசிகர்கள் மத்தியில் முழுமையாக போய் சேரவில்லை என்கிற வருத்தம் இருக்கிறதா?”
“தமிழ்ச் சமூகம் சுயாதீனத் திரைப்படங்களையோ கலைஞர்களையோ என்றும் மதிப்பதில்லை, பொருட்படுத்துவதுமில்லை. அதனால் இழப்பு எனக்கு மட்டுமில்லை. ஆனால் சினிமா ஒரு பிரபஞ்சக்கலை. நான் என்னை அதன் கண்ணியாகத்தான் கருதுகிறேன்”.
“ஆணாதிக்க, சாதிய பின்புலத்தில் இன்னும் உழன்றுக்கொண்டிருக்கும் தமிழ்ச் சமூகம், என்னை மாதிரியான சுயமரியாதை மிக்க, தனித்துவமானப் பெண்ணின் இருப்பை கொஞ்சிக் குலாவுமா என்ன? என்னை வீழ்த்த நினைக்கிறது. ‘கடுமையாக உழைக்கத் தயாராக இருக்கும்வரை உன்னை யாராலும் அழிக்க முடியாது கண்ணம்மா’ என்று என் அப்பா, காலஞ்சென்ற தமிழ்ப்பேராசிரியர் இரகுபதி சொல்வார். நான் ஒருநாள் கூட, ஒரு மணிநேரம் கூட உழைக்காமல் இருந்ததில்லை. எனக்கு அரணாக இருப்பது, என் வேலை மட்டும் தான்”.
“தற்போதைய தமிழ் சினிமா எப்படி இருக்கிறது?”

“இலக்கியத்திலிருந்து சினிமா எடுக்கும்போது, பெரும்பாலும் ஆண்கள் எழுதிய படைப்புகளைத்தான் இயக்குனர்கள் சினிமாவாக்குகிறார்கள். பெண்கள் எழுதும் படைப்புகளை திரைப்படங்களாக்குவதில்லையே?”
“அம்பை, தமிழ்ச்செல்வி, உமா மகேஸ்வரி, சந்திரா என்று பெண் புனைவாளர்களின் எண்ணிக்கையும் தரமும் குறைந்ததல்ல. ஆனால் தமிழ் சினிமாவின் pro code தேடும் ‘சூப்பர் ஸ்டார்’, ‘சுப்ரீம் ஸ்டார்’ கதைகளை இவர்கள் எழுதுவதில்லையே?”.
உங்கள் ‘மாடத்தி’ மிகவும் ஒடுக்கப்பட்டவர்களான ‘புதிரை வண்ணார்கள்’ குறித்து பேசியது பாராட்டுக்குரியது. அதேநேரம், இப்படி திரைப்படங்கள், ஆவணப்படங்கள் எடுப்பவர்கள் சாதி இந்துக்களாக இருந்துகொண்டு சாதிய கட்டமைப்பைப் பாதுகாக்கும் சாதி இந்துக்களை எதிர்க்காமல், சாதி இந்துக்களை ஆதரிக்கும் அரசியல்வாதிகளைக் கேள்விகள் கேட்காமல், பட்டியலின பிரிவினருக்குள்ளே சிலர் ஆதிக்கவாதிகளாக இருக்கிறார்கள் என்று காட்டுவதிலேயே ஈடுபடுகிறார்கள் என்ற விமர்சனம் முன்வைக்கப்படுகிறதே?

“கனடாவில் படிப்பு எப்படி போய்க்கொண்டிருக்கிறது? இனி கனடாவில்தானா?”
‘மாடத்தி’ கதையை சினிமாவுக்காகத் தேர்ந்தெடுத்த பின்னணி…
ஒரு சுயாதீனத் திரைப்பட இயக்குநராக ‘மாடத்தி’ படம் பற்றியும் அதை வெளியிடுவதற்கு அவர் எதிர்கொள்ளும் சவால்கள் குறித்தும் அவர் உரையாடியாதிலிருந்து ஒரு பகுதி…
ஆவணப்பட இயக்குநராக அறியப்பட்ட உங்களது முதல் கதைப்படம் இது. நீங்கள் உணர்ந்த வித்தியாசத்தைக் கூறுங்கள்?
எனது ‘செங்கடல்’ தற்கால அரசியலைக் கையாண்டது. ‘மாடத்தி’யை, ‘பியூர் ஃபிக் ஷன்’ எனச் சொல்லலாம். இன்னும் சரியாகச் சொன்னால் நான் சிறுமியாகக் கேட்டு வளர்ந்த நாட்டார் தேவதைக் கதைகளின் வடிவத்தைத் தழுவி எடுக்கப்பட்டிருக்கும் படம்.
புதிரை வண்ணார் சமூகத்தில், முதல் தலைமுறையாய்ப் படித்து பட்டம் பெற்று அரசுப் பணியாற்றி தாசில்தாராக ஓய்வுபெற்ற மூர்த்தி, படத்தின் திரைக்கதை, வசனத்தில் ரஃபீக் இஸ்மாயிலோடு இணைந்து பணியாற்றியிருக்கிறார்.
திருநெல்வேலியைச் சுற்றி ஒரு 25 கிராமங்களுக்கு நேரடியாகச் சென்று புதிரை வண்ணார் சமூக மக்களைச் சந்தித்து, நேர்காணல்கள் எடுத்து, சேகரித்த தரவுகள்தான் திரைக்கதைக்கான கச்சாப் பொருள்.
தொழில் முறை நடிகர்களும் புதிரை வண்ணார் சமூக மக்களும் இணைந்து நடித்து, இந்தப் படத்துக்கு உயிர்கொடுத்திருக்கிறார்கள்.
‘மாடத்தி’ கதையை சினிமாவுக்காகத் தேர்ந்தெடுத்த பின்னணி என்ன?
பாலியல் வன்முறையால் தொடந்து இடம்பெயரும் சமூகம், புதிரை வண்ணார் சமூகம். தலித்து களுக்கும் தலித்துகளாய்ப் பார்க்கவும் தகாதவர்களாய் அடிமை வாழ்வை வாழ்ந்துகொண்டிருக்கும் இந்தச் சமூகத்தைக் குறித்து வாசித்ததன் அடிப்படையில், தொடர்ந்து தரவுகளைத் தேடித் திரட்டினேன்.
இமையத்தின் ‘கோவேறுக் கழுதைகள்’, ஆய்வாளர்கள் ஆ. சிவசுப்பிரமணியன், லட்சுமணன், ஆ. தனஞ்செயன் எழுதிய புத்தகங்களைத் தேடி வாசித்தேன். அம்பேத்கர், தன்னுடைய ஐந்தாவது தொகுதியில் மிக ஆணித்தரமாக, திருநெல்வேலி ஜில்லாவில் வாழும் புதிரை வண்ணார் சமூகம் படும் இன்னல்களைக் குறித்துப் பேசியிருந்ததை ஜெயராணி சுட்டிக்காட்டினார்.
திருநெல்வேலியைச் சுற்றி வாழும் குடும்பங்களைச் சந்திக்க ஓவியர் சந்ரு ஏற்பாடுகள் செய்தார். ஆய்வுப் பிரதிகளைத் திரைக் கதையாக்கினோம். திரைக்கதை ஒரு நவீன தேவதைக் கதையாக மாறியது.
நமது கிராம தேவதைகள் எல்லாருமே நியாயமற்ற ஒன்றுக்குப் பலியான பெண்கள். அதைக் குறிப்பிடத்தானே ‘அன்ஃபேரி டேல்ஸ்’ என்று துணைத் தலைப்பு வைத்திருக்கிறீர்கள்?
என் குடும்பம் இன்றும் கும்பிடும் குலதெய்வத்தின் கதை நான் எந்தப் பாடப் புத்தகத்திலும் படிக்காதது. ஆனால், அந்தக் கதைதான் என் பண்பாட்டின் வரலாறு. அந்தத் தடத்தில் நான் தேடிக் கண்டடைந்த ஒரு உக்கிர தேவதைதான் ‘மாடத்தி’.
சம்பிரதாயமான சினிமா தயாரிப்பு, திரை யிடல், விநியோக முறைகள் மாறிவரும் நிலையில், சுயதீனத் திரைப்படம் எடுப்பதற்கு ஏற்ற சூழல் இருக்கிறதா?
இது கூட்டு முதலீட்டில் (Crowd funding) தயாரிக்கப்பட்ட படம். படத்தின் தயாரிப்பாளராகப் பொறுப்பேற்றவர் படத்தைப் பாதியில் கைவிட்டுவிட்டார். அந்த நேரத்தில் என் கல்லூரி நண்பர்களும் கலைத்துறை நண்பர்களும்தான் கைகொடுத்து உதவினார்கள்.
பாதியில் நிறுத்தப்பட்ட படப்பிடிப்பினால், லாஸ் ஏஞ்சல்ஸில் இருந்து வந்த ஒளிப்பதிவாளர் ஜெஃப் டோலன் ஊதியம் எதுவும் வாங்க மறுத்துத் திரும்பினார். அடுத்துப் பொறுப்பேற்ற ஒளிப்பதிவாளர் அபிநந்தன் தன் பங்கோடு, கேமரா கருவிகளையும் தந்து உதவினார்.
கலை இயக்குநர் மோகன மகேந்திரன் தனக்கென எதையும் கேட்காமல் வேலை செய்து தந்தார். எடிட்டராக வந்த தங்கராஜ் நிலைமையை அவதானித்து தயாரிப்பு மேற்பார்வையையும் செய்து தந்தார்.
என்னுடைய ஆவணப்படங் களையும் கவிதை நூல்களையும் நிதி திரட்டலுக்கான (fund raiser) தொகுப்பாக்கி முகநூலில் அறிவித்தேன். குறைந்தபட்சம் ரூபாய் 5 ஆயிரம் கொடுத்தும், கூடுதலாக உதவ நினைத்தவர்கள் ரூபாய் 20 ஆயிரம் முதல் ரூபாய் 1 லட்சம்வரை தந்தும் என் படைப்புகளை வாங்கி ‘மாடத்தி’ தயாரிப்புக்கு உதவினார்கள்.
இறுதிகட்டப் படப்பிடிப்பு, பின் தயாரிப்புப் பணிகளை முகநூலில் திரட்டிய நிதியில்தான் செய்து முடித்தேன். படத்தின் முதல் பிரதியைப் பார்த்துவிட்டு ஒலி வடிவமைப்பாளர் தபஸ் நாயக்கும் இசையமைப்பாளர் கார்த்திக் ராஜாவும் ஸ்டுடியோ கட்டணத்தை மட்டும் பெற்றுக்கொண்டு இசையும் ஒலியும் அமைத்துக்கொடுத்தார்கள்.
அதற்குப்பின், சிங்கப்பூர் திரைப்பட விழாவில் நிறைவு நிதிக்கான (Finishing funds) போட்டியில் வென்றதால், படத்தை நிறைவு செய்து மாஸ்டரிங் முடிக்க, விநியோகிக்க இணை தயாரிப்பாளர்கள் முன்வந்தார் கள். பிரெஞ்சுத் தயாரிப்பாளர் ஃபிரான்சுவா படத்தின் முதல் பிரதியை பார்த்துவிட்டு, பிரெஞ்சு சப்-டைட்டில் இட்டு ஐரோப்பா எங்கும் ‘ரோட் ஷோ’ செய்வதற்குத் தயாராகியிருக்கிறார்.
சம்பிரதாயமான முறைகளுக்கு வெளியே, சுயாதீன சினிமாவுக்கான சூழல் அனுகூலமாக இல்லாமல் ஆக்கு வதற்கான எல்லா தடைகளையும் சினிமாவின் மீதான நேசத்தால் வென்றெடுக்க முடியும் என்பதுதான் அனுபவங்களின் மூலம் நான் கற்ற பாடம்.
‘செங்கடல்’ படத்துக்குத் தணிக்கைச் சான்றிதழ் பெறப் போராடினீர்கள். ‘மாடத்தி’க்கு என்ன நிலைமை?
தணிக்கைத் துறை என்பது சினிமாவைக் குறித்தோ கலையைக் குறித்தோ எந்த அறிவும் அக்கறையும் இல்லாதவர்கள் அமர்ந்திருக்கும் ஒரு மூடர் கூடம். நம் வரிப்பணம் விரயமாக்கப்படும் இடம்.
அங்கிருப்பவர்கள் ஆளும் கட்சியின் கூஜாக்களாகத் தங்கள் அதிகாரத்தை வைத்துக்கொண்டு வெறுமனே ஆட்டம் போட்டுக் கொண்டிருக்கிறார்கள். வணிக சினிமாக்களுக்குத் தணிக்கை என்பது அவர்களின் சூதாட்டங்களின் ஒரு பகுதி. மாற்று சினிமாக் கலைஞர்களுக்குத் தணிக்கை கழுத்தில் வைக்கப்படும் கத்தி.
கடந்த காலத்தின் கசப்பான அனுபவங்கள்போல் இம்முறை இருக்காது என்ற நம்பிக்கையோடு ‘மாடத்தி’யை எடுத்துக்கொண்டு போனேன். கமிட்டியில் அவர்கள் கேட்ட முதல் கேள்வி “பதினாலு பதினைந்து வயது பெண்ணுக்கு பாலீர்ப்பு வருமா, என்னால் நம்ப முடியவில்லை?” என்பதுதான்.
தணிக்கை அதிகாரிக்கும் நமக்கும் அறிவார்ந்த உரையாடலுக்கு எப்போதும் வாய்ப்பில்லை என்ற முடிவுக்கு வந்தேன். ஒவ்வொரு முறையும் உச்ச நீதிமன்றத்துக்குப் போய் நீதிபதி வாயால் சொல்ல வைத்துத்தான் இந்த அதிகாரிகளுக்குப் பாடம் புகட்ட வேண்டியிருக்கிறது.
எங்கள் காலமும் ஆற்றலும் பணமும் ஒவ்வொரு முறையும் வீணாவதற்கு யார் பதில் சொல்வது? இந்த அலைக்கழித்தலின் மூலம், அடக்குமுறையின் மூலம் என்ன சொல்கிறது அதிகாரம்? அப்பீல் போகிறேன்.
இப்போது தணிக்கைச் சான்றிதழுக்கு விண்ணப்பிக்க, தமிழ்ப் படத் தயாரிப்பாளர்கள் சங்கத்திலோ கில்ட் அமைப்பிலோ உறுப்பினராக வேண்டுமாம். ரூ. 50 ஆயிரம் முதல் 3 லட்சம் வரை உறுப்பினர் கட்டணம். பட டைட்டிலைப் பதிவு செய், கம்பெனியைப் பதிவு செய், பப்ளிசிட்டி கிளியரன்ஸ் வாங்கி வா என ஆயிரத்தெட்டுச் சான்றிதழ்களுக்கும் சங்கங்களுக்குப் பணம் கட்ட வேண்டும்.
பண மோசடிகளும் ஊழலும் குடுமிப்பிடி சண்டைகளும் மலிந்து கிடக்கும் இந்த சங்கங்களில் உறுப்பினராக வேண்டும் என்று எதற்குச் சுயாதீனப் படைப்பாளி களைக் கட்டாயப்படுத்த வேண்டும்? மற்றுமொரு கேலிக்கூத்து விலங்குநல அமைப்பிடம் தடையில்லாச் சான்று (Animal Welfare Certifcate) பெற வேண்டும் என்பது. படங்களில் விலங்குகளைப் பறவைகளைப் பயன்படுத்தினால் அதை வாங்க வேண்டும் என்பது சரி. அந்த நிறுவனம் ஏன் ஹரியானாவில் மட்டும் இருக்கிறது.
அந்த நிறுவனத்தில் ஏன் தரகர்கள் மூலம் மட்டுமே சான்றிதழ் வாங்க முடிகிறது? ஒரு படைப்பாளி நேரடியாக, முறையாகக் கையாள முடிவெடுத்தால், அந்த நிறுவனத்தில் யாரையும் ஏன் தொலைபேசியில்கூடத் தொடர்பு கொண்டு பேசிவிட முடிவதில்லை? இந்த ஊழலையெல்லாம் யாரும் ஏன் கேள்வி கேட்பதில்லை?
டிஜிட்டல் தொழில்நுட்பம், இணைய வெளியீடு போன்ற புதிய முறைகள் சினிமாவுக்கு சுயாதீன முயற்சிகளுக்குச் சுதந்திரத்தைக் கொடுத்துள்ளதாகக் கருதுகிறீர்கள்?
டிஜிட்டல் வெளியீட்டு மேடை சுயாதீன சினிமாவுக்கான தளத்தை விசாலப்படுத்தியிருப்பது உண்மை. ஆனால் பாருங்கள்.
‘மாடத்தி’யை டிஜிட்டல் ஃபிளாட்ஃபார்மில் விற்க வேண்டுமென்றால் தணிக்கைச் சான்றிதழ் அவசியம். டிஜிட்டல் வெளியீட்டுக்கு நமது அரசு வைத்திருக்கும் புதிய வேட்டு. படைப்புச் சுதந்திரத்துக்குத் தொழில்நுட்பம் வழிவிட்டாலும் அரசாங்கம் மறித்துக் கொண்டு நிற்கிறது என்பதுதான் நிதர்சனம்.
அறியப்படாத புதிரை வண்ணார் சமூகத்தின் கதை – ‘புதர்ப்பறவை’
நன்றி – குங்குமம் 05/04/2018
-நா.கதிர்வேலன்
‘‘ஊரின் பெரும்பகுதியைக் கடலில் சுழற்றிப் புயல் எறிய, எஞ்சியிருக்கும் சிதிலங்களையும், அதில் கசியும் உயிர்களையும் தாங்கி நின்றது தனுஷ்கோடி. அங்கே காற்றில் கூட இன்னும் உதிர நாற்றம் அடிக்கிறது. மணல் துகள்கள் அளவுக்கு அங்கே கதைகள் மண்டிக் கிடக்கின்றன. அதில் ஒரு கதையைச் சொன்னதுதான் ‘செங்கடல்’. இப்போ கண்டாலே குற்றம், தீட்டுன்னு சமூகத்திலிருந்து தள்ளி வைத்திருக்கிற இன்னும் சொன்னால் ஒடுக்கப்படுகிற புதிரை வண்ணார்களிலிருந்து ஒரு சிறுமியை அடையாளப்படுத்தி எடுக்கிற படம் தான் ‘புதர்ப்பறவை’. உண்மையின் பாய்ச்சலுடனும் எந்த சமரசத்துக்கும் இடம் கொடாத படைப்பு…’’ ஒரு வார்த்தையென்றாலும் சுள்ளென்று தைக்கும் வீரியத்துடன் பேசுகிறார் இயக்குநர் லீனா மணிமேகலை. மிகச் சிறந்த ஆவணப் படங்களாலும், ஆழமானக் கவிதைகளாலும் அறிமுகமான படைப்பாளி.
வித்தியாசமான உண்மையான களங்களை தேடிப்போகிற விதம் எவ்விதம் அமைகிறது…
இந்திய துணைக்கண்டத்தில் நடக்கும் பாலியல் வன்முறைகள் குறித்த “ரேப் நேஷன்” என்ற என்
ஆவணப்படத்தின் ஆய்வில் இருந்தபோது, இன்டர்நெட்ல ஒரு கட்டுரை படித்தேன். நான் வாழும்
சமூகத்தில் ஒரு குறிப்பிட்ட சமூகம், சாதியின் அடிப்படையில் பெண்களுக்கு நேரிடுகிற பாலியல்
வன்முறைகளால் தொடர்ந்து இடம் பெயர்ந்து கொண்டே இருக்காங்க என்கிற தகவல்
அதிர்ச்சியூட்டியது. ஒரு நூறு குடும்பம் இருக்கிற ஊர் தங்களுக்கு அடிமை சேவகம் செய்ய ஓரிரு
புதிரை வண்ணார் குடும்பங்களை குடியமர்த்துகிறார்கள். பாலியல் வன்முறைக்கு அதிகாரத்தை
பயன்படுத்தும் போக்கும் இங்கே சர்வசாதாரணம். பார்வையால் கூடத் தீண்டத்தகாத பெண்கள்,
பாலியல் வன்முறையின் போது மட்டும் தீண்டத்தக்கவர்களாக மாறுவது எப்படி? பாலியல்
வன்முறை, சாதி மத தேச இன நிற பாலின அதிகாரங்களின் துஷ்பிரயோகமாக நாடெங்கும் கோர
தாண்டவம் ஆடுகிறது. காஷ்மீரில் இந்திய இறையாண்மையின் அடிப்படையில் இது நடக்கிறது.
குஜராத்தில் 2002-ல் முஸ்லீம் பெண்கள் மீதான வன்முறை மதவெறியின் வெளிப்பாடாக நடந்தது. பஸ்தரில் ஆதிவாசி பெண்களை காவல் துறை கஸ்டடியில் வைத்து அன்றாடம் அத்துமீறுகிறது. தமிழகம் முழுக்க ஒரு லட்சம் புதிரை வண்ணார் குடும்பங்கள். அவற்றில் அதிகமானவர்கள் இருந்த இடங்களைப் பார்த்து, அங்கே அவர்களுடன் தங்கி, அவர்களின் துயரை நேரில் கேட்டு உணர்ந்திருக்கிறேன். இந்த சமூகத்தில் பிறந்தது பெண் என்றால் கொன்று விடுகிறார்கள். அப்படியும் வளர்த்தால் பெண் குழந்தை வளர்கிறது என்றே வெளி உலகத்திற்கு அறியத்தராமல் வளர்த்து 15 வயதிலேயே கட்டிக்கொடுத்து விடுகிறார்கள். அப்படிப்பட்ட ஒரு பெண் தான் பிறந்த சாதி அடையாளத்திற்கு அடிபணிய மறுத்து காடு, மலை, ஆறு என சுதந்திரம் பழகினால் எப்படியிருக்கும் என்று கற்பனை செய்ததின் விளைவாக பிறந்தது தான் ‘புதர்ப்பறவை’. என் பதின்ம வயது நாயகி வனத்தை தன் வீடாக மாற்றுகிறாள். நான் இதுவரை தேவதைக் கதைகளை கேட்டுத்தான் வளர்ந்திருக்கிறேன். பெண்ணாய் பிறந்ததாலே தலை திருகி கொல்லப்படாத ஒரு புதிரை வண்ணார் பெண் தான் என் தேவதைக் கதையின் நாயகி. அவளுக்கும் ஒரு கனவு இருக்கிறது. அந்த கனவின் ரேகைகளில் புதர்ப்பறவை ஒளி பாய்ச்சும்.
அருமையான திரைமொழி, புரிதல் கொண்டு இருக்கிறீர்கள். இன்னும் கொஞ்சம் இறங்கி வந்தால் என்ன?
புரியக்கூடிய மொழியையே கையாளுகிறேன். ஆனால் அதை கொண்டு போய் சேர்ப்பதற்கான
வழிவகைகள்தான் கடினமாக இருக்கின்றன. ஏன், பெரிய நடிகரை போடவில்லை என்பார்கள்.
கமர்சியல் விஷயங்கள் இல்லையே என அங்கலாய்ப்பார்கள். அவர்களுக்காக கதையை மாற்றச்
சொல்வார்கள். நம் மக்களும் வெளுத்த தோலை எதிர்பார்க்கிறார்கள். வாய்மொழிக் கதைகள்,
நாட்டுப்புறக் கதைகள் வழி ஒரு தேவதைக் கதையை இதில் சொல்லப் பார்த்திருக்கிறேன். பெரும் நடிகர்கள் தலையில் விலைப் பட்டியலையிக் கட்டியிருக்கிறார்கள். 200 பேர் கொண்ட யூனிட்டில்வேலை செய்வதையே கௌரவமாக நினைக்கிறார்கள். சுயாதீன சினிமா என்றால் மட்டமாக பார்க்கிறார்கள். இங்கே சினிமா சூதாட்டமாக இருக்கிறது. நிஜமாக நல்ல சினிமாவை
வேண்டுபவர்கள் கூடி இணைந்து ஒருவருக்கொருவர் தோள் கொடுத்து மக்களுக்கு நெருங்கிய
சினிமாவை தரனும். அதற்கான முன்னெடுப்பை சதா கொண்டு செல்வதுதான் என் வேலை. வர்த்தக கோட்பாடுகளிலிருந்து முற்றிலும் விலகி நின்றால்தான் இது மாதிரியான படங்கள் சாத்தியம். நானும் எல்லோரிடமும் இணைந்து வேலை செய்ய முடியும் என ஒரு சமயம் நம்பியிருக்கிறேன். அதற்கான இடங்கள் இப்போது இல்லை. எப்போதும் இல்லை என்றே தோன்றுகிறது. நீங்கள் சொல்லும் விதத்தில் பயணப்பட்டு சமயங்களில் நான் இயல்பாக சிரிக்கும் பக்குவத்தைக் கூட இழந்திருக்கிறேன்.
உங்கள் பயணத்திற்கு உறுதுணையான இருந்தவர்களைப் பற்றிச் சொல்லுங்கள்…
அஜ்மினா என்கிற பெண் மாடத்தியாக நடித்திருக்கிறார். ஏற்கனவே ஒரு மலையாளப் படத்தில்
நடித்து கவனம் ஈர்த்திருக்கிறார். செம்மலர், குமார், பாட்ரிக், ’ஆடுகளம்’ ஸ்டெல்லா, ‘மெட்ராஸ்’
புருஷோத்தமன் நடித்திருக்கிறார்கள். பாபநாசம், விக்ரமசிங்கபுரம், அணவன் குடியிருப்பு மக்கள்
துணை நடிகர்கள. செம்மலர் போன்றவர்களை குறைத்து மதிப்பிட முடியாது. இன்றைய தமிழ்
சினிமா அவரைப் போன்ற திறமையானவர்களை ஓரிரு வசனங்கள் பேசி விட்டு ஒதுக்கி வைத்தும்,
கூட்டத்தில் நிற்க வைத்தும் வேடிக்கைப் பார்க்கிறது. உள்ளூர் மக்கள் நடிக்கும் போது அவர்கள்
பேசும் மொழியிலே இவர்களும் பேசி நடிப்பது சுலபம் இல்லை. அதை என் நடிகர்கள் சுலபமாகத்
தாண்டியிருக்கிறார்கள். வசன உச்சரிப்பு, உடல் மொழி என பல வாரப் பயிற்சியும் அர்ப்பணிப்பும்
அதற்கு உதவியிருக்கின்றது. இங்கு குழந்தைகளுக்கு தாயாக நடிக்க வேண்டுமென்றால் பதறி
ஓடுகிறார்கள். வண்ணார்கள் கதையெல்லாம் யார் பார்ப்பார்கள் என்று பீதியடைகிறார்கள். என்றும் போல படத்தொகுப்பில் என் நண்பன் தங்கராஜ் இருக்கிறார். எம்மி விருது வாங்கிய அமெரிக்காவின் ஜெஃப் டோலன், அபிநந்தன் ராமானுஜன் ஒளிப்பதிவைக் கையாண்டிருக்கிறார்கள்.கலை இயக்கத்தை மோகன் மகேந்திரன் கவனித்திருக்கிறார். யவனிகா ஶ்ரீராம், வடகரை ரஃபீக் திரைக்கதை, வசனத்தில் உதவியிருக்கிறார்கள். புதிரை வண்ணார் சமூகத்தில் முதல் தலைமுறையில் படித்து தாசில்தாராக பணி ஓய்வு பெற்றிருக்கும் மூர்த்தி ஐயாவின் வழிகாட்டுதலில் அச்சமூகத்தின் அசலான வாழ்வையும் வரலாறையும் புனை கதையாக எழுதி திரைப்படமாக்கியிருக்கிறோம்.
இளையராஜா ‘புதர்ப்பறவை’யில் பணிபுரிவது…
சந்தித்தபோது ‘‘படத்தை முடித்துக் கொண்டு வா…’’ என்று புன்னகையோடு சொன்னார். ‘‘உங்கள் தகுதிக்கு என்னால் பணம் தர முடியாது…’’ என்று சொல்லிவிட்டேன். எல்லாவற்றுக்கும் அதே புன்னகை. பத்து நிமிஷம் வரைக்கும் போட்டுக் காட்டிய ஒரு முன்னோட்டத்தை அலாதிப்
பிரியத்தோடு பார்த்தார். அவர் தான் இதை செய்ய முடியும். என் தேடலை, உண்மைக்கான
வேட்கையை, மெளனத்தை அவரால் மட்டுமே மீட்டுத் தர முடியும். அவரைப்பற்றி வெளியில் இருந்த எந்த பயமுத்தல்களின் சுவடையும் அவரிடம் நான் பார்க்கவில்லை. நல்லது நடக்கும். அவர் என் சினிமாவிற்கு பண்பாட்டு அடையாளம் தர முடியும்.
ஷோபாசக்தியின் கதையில் நீங்கள் இயக்கும் சர்வதேச படமான ‘சூர்யரேகை’ எந்த நிலையில் இருக்கு…
சூரியரேகை , எங்கள் செங்கடல் போல நேரடி அரசியல் பேசும் சினிமா அல்ல. இன்னும் ஒரு நாள் வாழ்ந்துவிட மாட்டோமா என்ற அகதியின் தவிப்பும் தீரா ஓட்டமும் தான் சூரியரேகை. 2010– ல் “சன்சீ” என்ற சரக்கு கப்பலில் தாய்லாந்திலிருந்து கனடா நோக்கி புறப்பட்ட 492 ஈழத்தமிழ் அகதிகள் என்ன ஆனார்கள் என்பதை சொல்லும் ரத்தமும் சதையுமான சினிமா. ஈழத்தமிழர்கள் ஏறத்தாழ 52 நாடுகளில் தஞ்சம் அடைந்திருக்கிறார்கள். அவர்கள் சொந்த மண்ணைப் பிரிந்து வலிகளோடு இருக்கிறார்கள். பயணமான ஒவ்வொருவரின் ஓட்டமும் ஒரு கதை. அப்படி எத்தனை மில்லியன் கதைகள் இருக்கின்றன. இது மனித உணர்வின் ஊர்வலம். இதில் கற்பனை இல்லை. சிங்களப் பேரினவாதத்தால் சிதறடிக்கப்பட்ட கோரம் நிகழ்ந்த மறுகரைக்கும், ஓடிப்போய் அழுத கண்ணீர் கடலாகக் கிடக்கும் இன்னொரு கரைக்கும் இடையில் நடக்கிற கதை. பெரும் பொருட்செலவு, நேரம்,தரம் வேண்டி நிற்கிறது. இந்தியாவிலிருந்து “ட்ரீம் வாரியர் பிக்சர்ஸ்” எஸ்.ஆர். பிரபு தயாரிக்க,பிரஞ்சு கனடிய ஜெர்மன் கூட்டுத் தயாரிப்பாக படம் உருவாகி வருகிறது. வரலாறு நம்மை தூர நின்று கண் கொட்டாமல் சூரியரேகையில் எட்டிப்பார்த்துக் கொண்டிருக்கும்.
இவங்க குரல் ஓங்கி ஒலிக்கனும்
சின்ன வயசுல இருந்து நாம் நிறைய தேவதைக் கதைகள் கேட்டு வளர்ந்திருக்கோம். Unseeableனு சொல்லப்படுற, பார்த்தாலே தீட்டுன்னு சொல்லி ஒதுக்கி வெச்ச சமூகத்து தேவதைகளைப் பற்றிய கதை இது. தலித் சமூகத்திற்குள்ளேயே ஒடுக்கப்படுகிற ஒரு பிரிவினர்கள் தான் புதிரை வண்ணார்கள். அந்த பிரிவினர்ல இருந்து ஒரு பதின்ம வயது சிறுமியை மையப்படுத்தி எடுக்கப்பட்ட படம். பிறப்பின் அடையாளங்களுக்கு தன்னை ஒப்புக்கொடுக்க மறுக்கிற ஒரு பெண் குழந்தையின் படம். அதனாலேயே இந்தப் படத்துக்கு ‘புதர்ப்பறவை’ன்னு பெயர் வெச்சு இருக்கேன்” என்ற சுயாதீன திரைப்படக் கலைஞரான லீனா மணிமேகலை வெகுசன திரைப்பட இயக்குனர்கள் காட்சிப்படுத்தத் தவறிய மக்களின் வாழ்க்கைப் பதிவுகளை கடந்த பத்தாண்டுகளுக்கும் மேலாக வெவ்வேறு படைப்புகளின் வழியாக வெளிப்படுத்திக் கொண்டு வருகிறார். புதிரை வண்ணார்கள் எனச் சொல்லப்படுகின்ற சமூகத்து மக்களைப் பற்றிய அவர் எடுத்திருக்கும் முழுநீளக் கதைப்படம் விரைவில் முடிய இருக்கும் சமயத்தில் அவரைச் சந்தித்தேன்
இவர்களைப் பற்றி படம் எடுக்க வேண்டுமென்கிற விசை எப்படி உருவானது?
அம்பேத்கர் தன்னுடைய ஐந்தாவது வால்யூமில் புதிரை வண்ணார்கள் மீது நிகழ்த்தப்படும் வன்முறையைப் பற்றி பேசியிருக்கிறார். அவர் பேசி ஐம்பது அறுபது வருடங்களுக்குப் பிறகும் அந்த மக்களின் நிலைமை இப்படித்தான் இருக்கிறது என்கிற வருத்தம் எனக்கு உண்டு. தவிர இந்த மக்களைப் பற்றி ‘கோவேறு கழுதைகள்’ நாவலிலும் வாசித்திருக்கிறேன். இணையத்தில் ஒரு கட்டுரையையும் வாசித்தேன். அது என்னை உலுக்கியது. புத்தகங்களிலும், இணையத்திலும் வாசிப்பதைத் தாண்டி அந்த மக்கள் இன்று எப்படி வாழ்கிறார்கள்? அவர்களைப் பற்றி வாசித்த தரவுகளில் ஏதேனும் மாற்றம் நிகழ்ந்திருக்கிறதா என்பதை நேரடியாக தெரிஞ்சிக்கனும்னு பயணப்பட்டேன். புதிரை வண்ணார் சமூகத்திலிருக்கிற பெண்கள், சிறுமிகள் தொடர்ந்து பாலியல் வல்லுறவுக்கு உட்படுத்தப்படுவதனால் தங்கள் வீட்டுப் பெண்களின் பாதுகாப்பு கருதி இவங்க தொடர்ந்து இடம்பெயர்ந்துட்டு இருக்கிற சமூகம். படைப்பின் வழியாக இந்த மக்களின் குரல் ஓங்கி ஒலிக்கணும்னு தான் இந்தப் படத்தை எடுக்க முன் வந்தேன். இதற்காக நிறைய கிராமங்களுக்குப் பயணம் செய்து, அம்மக்களைச் சந்தித்து முப்பது மணிநேர நேர்காணல் செய்தேன். அதுதான் இந்த படத்திற்கு கச்சாப் பொருளாகவும் விளங்கியது.
உங்களுடைய படங்களை நீங்கள் பெரும்பாலும் வெகுஜன தளத்திற்கு பதிலாக இண்டிபெண்டன்ட் மூவியாக செய்வதற்குக் காரணம்?
நான் தேர்ந்தெடுக்கிற கதைகளின் பலமே, அதோட உண்மைதான். சந்தைக்கு ஏத்த மாதிரி என்னால மாத்தி எடுக்க முடியாது. யாருடைய தலையீடும் இல்லாமல், எந்த வியாபார நோக்கமும் இல்லாமல் எடுக்கணும்னு விரும்பித்தான் என்னுடைய எல்லாப் படங்களையும் நான் எடுக்கிறேன். பெண் கதாபாத்திரத்த நல்ல நிறமா போட சொல்லுவாங்க, வண்ணான் வேலையா அதெல்லாம் என்னால செய்ய முடியாதுன்னு சொல்லுவாங்க, தகப்பனா நடிக்க முடியாதுன்னு சொல்வாங்க, அவங்களுக்குத் தெரிஞ்ச நடிகர், நடிகைகளை சிபாரிசு செய்வாங்க. நான் யாரைப்பற்றி படம் எடுக்கிறேனோ அந்த மக்களைப் பற்றிய எந்த புரிதலும் இல்லாதவங்ககிட்ட நான் கதையை விளக்கி நடிக்க வெச்சாலும், அதுல ஜீவன் இருக்காது. அதனாலே அடித்தட்டு மக்களுக்கான அரசியலைப் புரிஞ்ச கலைஞர்களை வெச்சு படம் எடுத்துட்டு இருக்கேன். சந்தைக்கு பொருள் உற்பத்தி செய்றவங்க தான் ஏற்கனவே நிறைய இருக்காங்களே!
திரைப்படத்திற்காக அந்த மக்களை சந்தித்த அனுபவங்கள் பற்றி?
அந்த அனுபவங்கள இப்போ நினைச்சாலும் எனக்கு கண்ணீர் முட்டும்.. அவ்ளோ இருக்கு. இந்தப் படத்துல அத்தைக் கிழவின்னு ஒரு கதாபாத்திரம் வரும். திருநெல்வேலி விக்ரமசிங்கபுரத்தில நான் சந்திச்ச பாட்டியோட கதாபாத்திரம்தான் அவங்க. அவங்க பேரு லீலாவதி. இப்பவும் ஊர் மக்கள் கொடுக்கிற தீட்டுத் துணிகளைத் தான் துவைச்சுட்டு அவங்க வாழ்ந்துட்டு இருக்காங்க. அவங்க சொன்ன ஒவ்வொரு கதையும் அவ்வளோ துயரமா இருந்துச்சு. சாதியின் பெயர்ல குலத்தொழில் என்ற பெயர்ல சுரண்டல் தான் நடக்குது. இன்னும் ஊர் மக்கள் கொடுக்கிற அரிசி பருப்புலதான் வாழ்ந்துட்டு இருக்காங்க. ஆனா அவங்க செய்ற வேலைக்கு இதெல்லாம் ஒண்ணுமே இல்ல. “இந்த வேலையெல்லாம் உங்களுக்கு சிரமமா இல்லையாம்மான்னு” கேட்டேன். “என்னமா பண்றது நம்ம புள்ளைகளா இருந்தா செய்ய மாட்டோமான்னு” அவ்வளவு தாய்மையோட சொன்னாங்க. இவங்களுக்கு நடக்கிற அநீதி களையப்பட வேண்டியதில் மாற்றுக் கருத்தில்லை. ஆனால் என்னைப் பொருத்தவரை இந்த மாதிரி பெண்கள்தான் தேவதைகள். இதுமாதிரி இச்சமூகத்தால் புறக்கணிக்கப்பட்ட நிறைய தேவதைகளை சந்திச்சேன். ஆற்றங்கரையில அல்லது சுடுகாட்டுல இந்த இரண்டு இடங்கள்லதான் இந்த மக்கள் அதிகமா புழங்குறாங்க. ஊருக்குள்ள வர்றது இவங்களுக்கு அவ்வளவு ஒவ்வாத காரியம். காரணம் ஊர் தங்களோட தேவைக்கு மட்டுந்தான் இவங்கள உள்ள அனுமதிக்குது ஆக இவங்களும் ஊர ஒவ்வாமையாத்தான் பாக்குறாங்க. நான்கேட்ட பல அதிர்ச்சிகளை அப்படியே சினிமாவுல கொண்டு வந்திருக்கேனான்னு தெரியல. எளிமையா சொல்லணும்னா சாதியின் பெயரால் பாலியல் வல்லுறவுக்குட்படுத்தப்பட்ட மூன்று தலைமுறைப் பெண்களின் கதையை திரைப்படமாக்கியிருக்கிறேன்.
படத்தில் பணியாற்றிய கலைஞர்களைப் பற்றி?
மாடத்தி என்ற மையக் கதாபாத்திரமா வரும் சிறுமி அஜ்மினா கேரளாவில் ஒரு படம் நடித்திருக்கிறார். அந்த சிறுமியின் அம்மா கதாபாத்திரத்தில் செம்மலர் நடித்திருக்கிறார். தமிழ் சினிமாவில் சரிதாவின் இடத்தை பிடிக்கக் கூடிய திறமை செம்மலரிடம் இருக்கிறதென்பதை உறுதியாகச் சொல்வேன். படத்தில் வரும் முக்கிய கதாபாத்திரங்கள் நாடக நடிகர்கள். இந்த கலைஞர்கள் யாருக்குமே தங்களின் முழுத் திறமையை வெளிப்படுத்திக் கொள்வதற்கான வாய்ப்பு ‘மெயின் ஸ்ட்ரீம்’ சினிமாவில கிடைக்கிறதில்லை. அப்படியே கிடைச்சாலும் ஒருசில காட்சிகள்ல மட்டும் வருவாங்க. ஆனா, இந்தப் படத்துல அவங்க முழுமையா தன்னை வெளிப்படுத்தி நடிச்சு இருக்காங்க. இது தவிர படத்தில் வரும் 80 சதவீத கதாபாத்திரங்கள் எல்லாமே பாபனாசம் அணவன்குடியிருப்பு மக்கள்தான். கலை இயக்கத்திற்கு மோகன மகேந்திரன், படத்தொகுப்பிறகு தங்கராஜ் என்று என் நணபர்கள் எனக்கு பலமாக நின்றார்கள். இந்தப் படத்துக்கு இன்னொரு முக்கிய அம்சம் இதோட ஒளிப்பதிவு. படம் பார்க்கும்போது இதை உங்களால உணர முடியும். என்னோட அமெரிக்க நண்பர் ஒளிப்பதிவுக்கு எம்மி விருது வாங்கிய ஜெஃப் டோலன் ஒரு செட்யூல் ஒளிப்பதிவு செஞ்சி இருக்காரு, மீதி படம் முழுக்க அபிநந்தன் ராமானுஜன் பங்களிச்சிருக்கார். திரைக்கதையில் என்னோடு கவிஞர் யவனிகா ஶ்ரீராமும், வடகரை ரஃபீக் இஸ்மாயிலும் பணியாற்றியிருக்கிறார்கள். திருநெல்வேலி மாவட்டத்தின் அச்சு அசலான வட்டார மொழி வசனங்களை ரஃபீக் இஸ்மாயில் எழுதினார். லைவ் ரெக்கார்டிங் என்பதால், நடிகர்கள் வசனங்களை பல வாரங்கள் பயிற்சி எடுத்துப் பேசினார்கள். புதிரை வண்ணார் சமூகத்தில் முதல் தலைமுறையாக படித்து பட்டம் வாங்கி தாசில்தாராக ஓய்வு பெற்றிருக்கும் மூர்த்தி ஐயா வசனங்களிலும், மற்ற தரவுகளிலும் நுணுக்கமான மாற்றங்களை செய்தார். இந்தப் படக்குழுவில் எங்களோடு ஒரு இசைக்கடவுளும் விரைவில் இணைய இருக்கிறார்.இந்தப் படத்துல வேலை செஞ்ச யாருமே பணத்த ஒரு பொருட்டா நினைக்கல. இந்தப் படமே என் நண்பர்களின் அன்பினாலும் பலத்தினாலும்தான் உருவாகுது. ஏன்னா அவங்களுக்குத் தெரியும் இது யாருக்கான படம்னு.
அடுத்து என்ன?
நன்றி –விகடன் தடம் 01/05/2017
படைப்பியக்கம் என்பது படைப்பதைவிட காத்திருத்தல் தான் என்று ஆழமாக நம்புகிறேன். படைப்பின் உன்னத தருணங்களை அந்தக் காத்திருப்பே பெற்றுத் தருகிறது. கதாபாத்திரங்களின் இசைவுக்காக, அவர்கள் பகிரும் வாழ்க்கையின் அதி அந்தரங்கத் துண்டுகளுக்காக, கண்களில் நிறையும் நம்பிக்கைக்காக, ஈரம் கூடிய கைப்பற்றுதலுக்காக, ஒளிக்கீற்றுகளின் சாய்வுக்காக, இதயத்தின் அடுக்குகளில் இருந்து கிளம்பும் குரலுக்காக நான் காத்திருக்கிறேன்.கால தூரங்களை அந்த காத்திருப்பின் சுகத்தில் கடக்க முயற்சிக்கிறேன்.
2014-ல் தொடங்கிய “ரேப் நேஷன்” என்ற என் முழு நீள அபுனைவு திரைப்படத்தின் இறுதிக்கட்ட வேலைகளில் இருக்கிறேன்.
“என்னை நிர்வாணப்படுத்துவதாலும், என் உடலில் மின்சார அதிர்ச்சியை கொடுப்பதாலும், என் உறுப்பில் கற்களையும் போத்தல்களையும் நுழைத்து துன்புறுத்துவதாலும் இந்த நாட்டின் நக்சல் பிரச்சினைகளை நீங்கள் ஒழித்துவிடமுடியுமா” என்று உச்ச நீதிமன்றத்தின் நீதிபதியை நோக்கி கேள்வி எழுப்பினார் சோனி சூரி. சத்தீஷ்கரின் பஸ்தரில் ஆரம்பப் பள்ளியின் ஆசிரியராக பணியாற்றிக் கொண்டிருந்த சோனி சூரியை நக்சல்பாரியின் அனுதாபியென சந்தேகித்து கைது செய்த போலீஸ், சிறையில் வைத்து அவரை பலாத்காரம் உட்பட பல கொடுமைகளுக்கு உட்படுத்தியது. அவரின் மீதான பொய் வழக்குகள் சட்டரீதியாக முறியடிக்கப்பட்டாலும் அவரை சிறையில் வைத்து சித்ரவதை செய்த “அங்கித் கர்க்” என்ற போலீஸ் அதிகாரியின் மீது ஒரு எஃப். ஐ.ஆர்( FIR) கூட பதிவு செய்யமுடியாத சூழ்நிலை தான் இந்நாட்டில் நிலவுகிறது. சோனி சூரியின் யுத்தம் இன்று தனக்கான நீதிக்கானது மட்டுமல்ல. நக்சல்பாரிகளை அடக்குகிறோம் என்ற பேரில் இந்தியாவின் சிவப்பு பூமியான பஸ்தரின் ஆதிவாசி பெண்களுக்கு காவல் துறை சதா இழைக்கும் அத்தனை கொடுமைகளுக்கு எதிரான யுத்தம்.
“பதினேழு வயதும் ஐந்து மாத கர்ப்பிணியுமான என் மனைவியை முஸ்லீம் என்பதாலேயே பலாத்காரம் செய்து கைக்குழந்தையையும் உறவினர்களையும் அவர் கண்ணுக்கு எதிரில் கொன்று குவித்த மத வெறியர்கள் தான் பாவிகள், என் மனைவி அல்ல” என்ற தீர்க்கமான குரலுக்கு உரியவரான யாகூப் ரசூல், 2002 குஜராத் கலவரத்தின் போது தாக்கப்பட்ட பில்கிஸ் பானுவின் கணவர். சுதந்திர இந்தியாவின் வரலாற்றிலேயே ஒரு மதக்கலவரத்தின் போது நடந்த பாலியல் பலாத்காரத்திற்கான வழக்கில், 20 குற்றவாளிகளில் 13 பேருக்கு கடும் தண்டனைகளை வென்ற வரலாறு பில்கிஸ் பானு மற்றும் அவரின் கணவர் யாகூப்பினுடையது. மோடியின் அரசாங்கத்தில் நீதி கிடைக்காது என்பதால், மும்பை நீதிமன்றத்தில் விடாது போராடி வழக்கை வென்றதோடு, காவிக்கறை படிந்திருந்தாலும் தாங்கள் வாழ்ந்த வடோதராவிலேயே துணிச்சலாக வாழ்க்கையை தொடரும் பால் வியாபாரியான யாகூப்பும் அவரின் நான்கு குழந்தைகளுக்கு தாயுமான பில்கிஸ் பானுவும், கொத்துக் கொலைகாரர்கள் ஆளும் இந்த நாட்டில் இன்னும் நீதி சாகவில்லை என்பதற்கான சான்று.
“ஒரு கீழ்ச்சாதிப் பெண்ணை மேல்சாதி ஆண்கள் எப்படி தொடுவார்கள்? தலித் பெண்ணான பன்வாரி தேவியை மானபங்கப்படுத்தினார்கள், அதுவும், அவரின் கணவர் மற்றும் உறவினரின் கண் முன்னே நடந்தது என்பதை எப்படி நம்புவது?” என்று மாவட்ட நீதி மன்ற மாஜிஸ்திரேட் வழக்கை தள்ளுபடி செய்ய, ராஜஸ்தானில் மனித உரிமைப் போராளிகளும், பெண்ணிய செயல்பாட்டாளர்களும் பெரும் எழுச்சியோடு ஒன்று சேர்ந்து போராடி, உச்ச நீதிமன்றத்தின் வாயிலாக இந்த நாட்டிற்கு விஷாகா ஜட்ஜ்மென்ட்டை பெற்றுத் தந்தார்கள். உயர்சாதியினர்,அவரின் நடத்தையைக் குறித்து அபாண்டமான குற்றச்சாட்டுகளை வீசி அவரை ஊரிலிருந்தே விலக்கி வைத்தாலும்,தனக்கு நேர்ந்த அநீதியை துணிச்சலாக வெளி உலகத்திற்கு சொன்னதோடு, இறுதி வரை உறுதியாக களத்தில் நின்றதால் தான் பன்வாரி தேவியால் இந்திய நாட்டின் அனைத்து உழைக்கும் பெண்களின் பாதுகாப்பிற்கான உச்சநீதிமன்ற வழிகாட்டுதல்களைப் பெற்றுத்தர முடிந்தது. அரசாங்க அலுவலகங்களிலும், கல்வி நிறுவனங்களிலும் ஒரே ஒரு பெண் வேலை செய்தாலும் அங்கே பாலியல் வன்முறையை முறையீடு செய்வதற்குரிய விசாகா செல் அமைக்கப்பட வேண்டும் என்று விசாகா தீர்ப்பு வலியுறுத்துகிறது. சமீபத்தில் சத்யஜித் ரே திரைப்பட கல்லூரியின் மாணவிகள் இந்த தீர்ப்பின் துணைகொண்டே தங்களிடம் பாலியல் அத்துமீறல்கள் செய்த பேராசிரியர்கள் மீது முறையிட்டு நீதி பெற்றுள்ளனர்.
இந்திய இறையாண்மையைக் காக்கும் பொருட்டு வடகிழக்கிலும், காஷ்மீரிலும் ராணுவத்திற்கு அதிகபட்ச அதிகாரங்களை வழங்கும் “Armed Forces Special Power Act”(AFSPA) அந்தப் பகுதி பெண்களின் உடலை சூறையாடும் அதிகாரத்தையும் கூடவே வழங்கியிருக்கிறது. 2004 – ல், மாவோயிஸ்ட் என்று சந்தேகப்படுகிறோம், விசாரிக்க வேண்டும் என்று தன் வீட்டிலிருந்தே அழைத்து செல்லப்பட்ட மனோரமா மறுநாள் யோனி சிதைக்கப்பட்ட நிலையில் மலையடிவாரத்தில் இறந்துக்கிடந்தார். மணிப்பூரின் தாய்மார்கள் தங்கள் மகள்களை விட்டுவிடுமாறும் முடிந்தால் தங்கள் மேல் கைவைத்துப் பார்க்குமாறும் முழக்கமிட்டு அஸ்ஸாம் ரைஃபிள்ஸ் கூடாரத்திற்கு முன் நிர்வாணப்போராட்டம் நடத்தினார்கள். மணிப்பூர் வெடித்தது. அன்று இயக்கமாக ஒன்றிணைந்த தாய்மார்கள் இன்றுவரை மணிப்பூரின் முக்கிய அரசியல் செயற்பாட்டாளர்கள். மணிப்பூரிலிருந்து முற்றிலுமாக ராணுவத்தை வெளியேற்றி, AFSPAவை செயலிழக்கச் செய்யும் வரை ஓயமாட்டோம் என்ற அந்த தாய்மார்களின் குரல் வடகிழக்கு மற்றும் காஷ்மீர் பெண்களின் ஒட்டுமொத்த குரல்.
தான் பெற்ற மகளையே வல்லுறவு செய்ததால் கன்னூரில், ஆயுள் தண்டனை சிறைக்கைதியாக இருக்கும் ஹாரிஸ் தன் மனைவியிடமும் பிள்ளைகளிடமும் மன்னிப்பு கேட்டு நாள்தோறும் கடிதங்களை எழுதிக் கொண்டிருக்கிறார். தன் தந்தையையே எதிர்த்து காவல் துறையில் முறையீடு செய்ததால், தங்கள் கிராமத்தில் தொடர்ந்து வாழ்வதற்கு வழியில்லாமல் வெளியேறி அரசாங்கத்தின் நிர்பயா ஆதரவு இல்லத்தில் தன் தாயார் மற்றும் தங்கை தம்பிகளோடு அடைக்கலம் புகுந்தார் பதினாறு வயதேயான ரெஹனாஸ். இன்று சட்டக்கல்லூரியில் படித்துக்கொண்டிருக்கும் ரெஹனாஸ் தன் சுயசரிதத்தை எழுதிக்கொண்டிருக்கிறார். படித்து முடித்து சட்ட வல்லுனராகி பாலியல் வன்முறைக்குள்ளாகும் சிறுமிகளுக்காக பணியாற்ற வேண்டும் என்பதே அவரின் கனவு.
ரேப் நேஷன் திரைப்படத்திற்காக கடந்த மூன்றரை வருடங்களாக ரெஹ்னாஸின், சோனி சூரியின், பன்வாரி தேவியின், பில்கிஸ் பானுவின், மணிப்பூர் தாய்மார்களின் இயக்கத்தின் கைகளைப் பிடித்து அலைந்துக்கொண்டிருக்கிறேன். எல்லோரும் எல்லாமும் கைவிட்டாலும் விடாமல் போராடி நீதியை நிலைநிறுத்திக்கொண்டிருக்கும் இந்தப் பெண்களின் நிழலில் தான் எமது நாளைக்கான தரு கிளைக்க வேண்டும். பெண்ணின் உடலை தங்களின் அதிகாரத்திற்கான கொடிக்கம்பமாகப் பார்க்கும் சமூகமும், நாடும், குடும்பமும், கலாசாரமும், மதங்களும், சாதிகளும் தம்மை நிலைநிறுத்திக்கொள்ள பெண்ணினத்தை நூதனமாக காவு கேட்கின்றன. படத்தொகுப்பு வேலைகளில் இருக்கும் எனக்கு இந்தப் பிரபஞ்சமே ஒரு மாபெரும் பலிபீடமாக காட்சியளிக்கிறது. என் தலையை அவ்வப்போது தொட்டுப்பார்த்துக் கொள்கிறேன். கண்ணீரும் உதிரமும் விந்துவுமாக வீச்சமடிக்கும் இந்தக் கதைகளில் என் வியர்வையையும் சேர்க்கிறேன். நிச்சயமாக எழுவேன். எழுவோம். இந்த ஆண்டு இறுதியில் திரைக்கு வர இருக்கிறது ரேப் நேஷன்.
எனக்கெனப் பருவகாலங்கள் தனியே இருக்கின்றன. எந்தப்பிடிமானமும் அற்று திசை குழம்பி திரியும் காலம் எனக்கு கோடை. தணிக்கவே முடியாத மூர்க்கமான தாகத்திலும் வெப்பத்திலும் உடலையே ஓடையாக்கி ஓடினாலும் அடங்காத அநாதி காலமது. எங்கிருந்தோ பொத்துக்கொண்டு ஊற்றுவதைப்போல மளமளவென இயங்க முடிவது எனக்கு கார்காலம். இலக்கு சுடர்விட்டு எரியும். எஃகு போல என் எல்லா விசைகளையும் முடுக்கி விரைவேன். எந்த சக்தியாலும் தடுத்துவிட முடியாதென்ற தினவை மூன்று வேளையும் உண்பேன். வாசிப்பாலும், வாழ்க்கையாலும், பயணங்களாலும் பொறுக்கியதையெல்லாம் அடைகாக்கும் காலம் வசந்த காலம். உருட்டி உருட்டி எல்லாவற்றையும் விதைகளாக்கி என் கண்களுக்கு மட்டும் தெரியும் சாடிகளில் பாதுகாத்து வைப்பேன். என் விதைகளுக்கேற்ற நிலங்கள் எங்கோ என் வருகைக்காக காத்திருக்கின்றன என்ற நினைப்பின் மந்தகாசத்தில் மிதப்பேன். எல்லாம் இருந்தும் எதிலும் பற்றில்லாமல், ப்ரியங்களை அண்டவிடாமல் ஒரு துறவி போல மௌனத்திற்குள் அடைக்கலமாகி விடுவது எனது இலையுதிர்காலம். இறுமாப்புகளை உதிர்த்த பட்ட மரம், தருவதற்கும் பெறுவதற்கும் ஏதுமில்லாமல் வெட்ட வெளியில் நின்றுக்கொண்டிருப்பதான படிமமாக என்னை நினைத்துக்கொள்வேன். காலையில் கோடையையும், கருக்கலில் வசந்தத்தையும் , இரவில் மழையையும், ஜாமத்தில் இலையுதிர்வையும் உணரும் கிழமைகள் உண்டு.
கடந்த சில வருடங்களாக, உலையில் கொதிக்கப் போட்டிருந்த திரைக்கதைகளில் ஒன்று தான் அடுத்து நான் இயக்கவிருக்கும் “சூரியரேகை”( The Sunshine) என்ற முழுநீளக் கதைப்படம். 2010-இல் தாய்லாந்து துறைமுகத்திலிருந்து கிளம்பிய SunSea என்ற சரக்கு கப்பலில் 492 ஈழத்தமிழ் அகதிகள் கனடா நோக்கி பயணிக்கின்றனர். பயணிகள் அவசரத்திற்கு மூத்திரம் போகக்கூட அடிப்படை வசதிகள் கூட இல்லாத சரக்கு கப்பலில் பசிபிக் மாக்கடலில் 40 நாள் பயணம். சூறைக்காற்று,கடல் கொந்தளிப்பு, உணவு பற்றாக்குறை, முதலுதவி மருந்து மாத்திரைகள் கூட இல்லாத சூழல், அவ்வப்போது செயலிழக்கும் கப்பலின் எஞ்சின், எமர்ஜென்சிக்கு இருப்பில் இல்லாத ஆக்சிஜன் அங்கிகள் என்று எந்த சாதகங்களும் அற்ற பிரயாணத்தில், இன்னும் ஒரு நாள் கூடுதலாக வாழ்ந்து விட முடியாதா என்ற மனித ஏக்கத்தின் நெடும் மூச்சுதான் சூரியரேகை. யூதப்படுகொலைகளைக் குறித்து இதுவரை இருநூறுக்கும் மேற்பட்ட திரைப்படங்கள் ஐரோப்பாவில் எடுக்கப்பட்டுவிட்டன. உலகின் பார தூரங்களில் அகதிகளாகத் தூக்கி எறியப்பட்டிருக்கும் லட்சக்கணக்கான ஈழத்தமிழர்களின் பாடுகளும் உயிரைப் பயணம் வைத்து அவர்கள் மேற்கொண்ட சாகசப்பயணங்களும் திரைப்படங்களாக உருவாக்கப்படவில்லை. இந்திய-பிரஞ்சு-ஜெர்மானிய-கனடிய சர்வதேச இணைத்தயாரிப்பாக உருவாகிக் கொண்டிருக்கும் சூரியரேகை தமிழில் ஒரு முன்னோடி முயற்சி. இப்படம் சாத்தியமாகும் காலக்கட்டம் – கோடம்பாக்க சந்தைக்கு விலை போகாமல் இண்டிபெண்டென்ட் சினிமாவுக்கான கங்குகளை ஊதி ஊதி தங்கள் கார்காலத்திற்காக காத்திருக்கும் படைப்பாளர்களுக்கு சர்வதேச வாசல்களைத் திறந்து விடும் என்று உறுதியாக நம்புகிறேன்.
லீனா மணிமேகலை