இறுதி அழிபாடுகளின் வரிசை-லீனா மணிமேகலை
அழிபாடுகளை எழுத மறுத்து கவிதை விடைபெறுகிறது
என எழுதிக் கொண்டிருக்கும் போதே
மத்தேயு
நாற்பத்தேழாவது மாடியிலிருந்து குதித்து விடுகிறான்
வாக்குறுதிகளின் பாரம் ஒழிந்த காலமிது
திரும்புதற்கென்று பாதைகள் இல்லாத வரைபடங்களை வைத்துக்கொண்டு
காதலை எப்படிக் கோருவது?
புகைமூட்டங்களால் புலப்படாத நகரமொன்றின் சாலையில்
போக்குவரத்து சமிக்ஞையில் பச்சை விழுவதற்காக
நூற்றியெட்டாவது பேருந்தில் காத்துக்கொண்டிருந்த போது
அந்தப் பாடல் ஒலிக்கிறது
பேரிருட்டுக்குள் இட்டுச்சென்ற அதன் மெட்டுகளில்
பிறந்த குழந்தைகளின் சொருகி மூடிய கண்கள்
சூரிய அஸ்தமனங்கள் பொய்த்துப் போன காலநிலையில்
பிரசவங்களை எப்படி நிறுத்துவது?
பெருகும் பல்லாயிர ஆரஞ்சு வண்ணக் கைகளாக
அழகாக விடிந்த நாள்
பருவம் திரிந்து தட்பவெப்பங்கள் கெட்டு
வியர்வையும் கண்ணீரும் அமிலமாக மாறி
மனித உடல்கள் சொட்டச் சொட்ட
நதிகளும் கடல்களும் சுருண்டுகொள்கின்றன
செத்து மிதக்கும் மீன்களைக் கண்டெழுந்த ஓலங்களில்
ஒடுங்கும் பறவை பூச்சி மிருக மர ஓசைகள்
கருகிய சிலைகளெனத் திக்குகள் திரண்டு நிற்க
காற்றறுந்த மண்டலங்களில்
இறுதி மூச்சை யார்மேல் விடுவது?
வெடித்த நிலங்களையும் வெளுத்த பாறைகளையும்
புகைப்படங்கள் எடுத்து வருகிறாள் தோழி
என்வீட்டுச் செடிகளும் அப்போது தான் எரிந்து முடிந்திருந்தன
வெப்பத்தால் உருகித் தொங்கும் கூரைகள்
அதன் விநோதத்தையும் அவள் படமெடுக்கிறாள்
குழந்தைகளின் பள்ளிப் பாடங்களுக்கு
உதவுமெனப் பத்திரப்படுத்துகிறாள்
கணினிகள் ஏய்க்கும்வரை இதயங்களும் இலகுவதில்லை
எந்நேரத்திலும் தீப்பிடிக்கக் காத்திருக்கும்
காடுகளின் பொருட்டு மழைக் கஞ்சியூற்ற
எந்தக் கடவுள் எஞ்சியிருக்கிறது?
கடைசி மாட்டின் கறியை வறுத்துக் கொண்டிருந்த போது
வெடித்துச் சிதறிய அடுப்பால் விருந்து நின்றுபோன இரவில்
சுற்றமும் நட்பும் குடும்பமும் ஒருவரை ஒருவர் அடித்துக் கொல்கின்றனர்
பதறிய ஆவிகளாய் பூமியிறங்கிய மூதாதையர் ஆன்மாக்களும்
காயப்படுகின்றன
இந்த அநாதி காலத்தில் பிறந்த சந்ததிகள்
திரும்புவதற்குக் கருப்பைகளைத் தேடுகின்றன
புல்லும் பூண்டும் பச்சையை இழந்து கொண்டிருக்கும்
கலியில் எது இறுதி நொடி?
வெட்டுவதற்கு மரங்களற்றுப் போன திணைகளில்
கவித்துவமான முடிவுகளுக்கு வாய்ப்பில்லை
பேய்களை விரட்ட ஏலாமல் விறகு முடிந்து போகிறது
நானும் மாடியேறி குதித்து விட எத்தனிக்கிறேன்
ஏற்கெனவே நிறையப் பேர் குதித்துக் கொண்டிருக்கிறார்கள்
தாங்கிக் கொள்ள நிலமில்லை
தற்கொலை செய்துகொண்ட காதலன்
நடுவானில் இன்னும் தொங்கிக் கொண்டிருக்கிறான்
அவனது முகத்தை ஏந்தி
நாளை மலர காத்திருக்கும் மொட்டுகளை இழந்திருப்பது போல
உன்னை இழந்து நிற்கிறேன்
எனச் சொல்ல ஏங்குகிறேன்
முற்றும் முழுதும் உணர முடியா இப்பொழுதுகளைப்
பேச ஏது மொழி?
-லீனா மணிமேகலை
டொகோரோண்டோ (மொஹாக் பழங்குடிகளின் மொழியில், நீரில் மிதக்கும் மரங்கள் அடர்ந்த நிலத்திலிருந்து எழுதுகிறேன்)
நில ஒப்புதல்:
மிசிசாகாஸ் ஆஃப் தி கிரெடிட், அனிஷ்னாபெக், சிப்பேவா, ஹவுடெனோசவுனி மற்றும் வெண்டாட் பழங்குடி மக்கள் உட்படப் பல நாடுகளின் பாரம்பரிய பிரதேசத்தில் தற்போது நான் வாழ்கிறேன் என்பதை டொராண்டோ நகரத்தின் வருகை கலைத் தொழிலாளியாக பொறுப்பளிக்கிறேன். மற்ற முதல் நாடுகளது -இன்யூட் மற்றும் மெடிஸ்- பழங்குடி மக்களின் தாயகமாகவும் தற்போது டொராண்டோ உள்ளது. மிசிசாகாஸ் ஆஃப் தி கிரெடிட்டுடன் கையெழுத்திடப்பட்ட ஒப்பந்தம் 13, பல மிசிசாகாஸ் மற்றும் சிப்பேவா இனக்குழுக்களுடன் கையெழுத்திடப்பட்ட வில்லியம்ஸ் ஒப்பந்தங்கள் ஆகியவற்றுக்கு டொராண்டோ நகரம் பாத்தியப்பட்டுள்ளது என்பதையும் உணர்ந்திருக்கிறேன்.
லீனா மணிமேகலை கவிதைகள் -கனலி
கெட்ட செய்தி
நல்ல செய்தி
1.
உங்கள் வாசற்படியில் என்னை
அடித்துக் கொன்றார்கள்
நீங்கள் அழைக்கப்படாத
ஊர்த் திருவிழாவிற்குப்
பலியிடப்பட்ட
என் விலா துண்டொன்றை
உங்கள் மௌனத்திற்கான
கொடையாகப் பெற்றுக் கொண்டீர்கள்
கெட்ட செய்தி
நான் சாகவில்லை
உங்கள் கழுத்தில்
தெறிகுண்டின் சில்லென
புடைத்துக் கொண்டிருக்கும் என் குரலைக்
குணப்படுத்தத் துடிக்கிறீர்கள்
உங்கள் தோலில்
குத்திய பச்சையெனப்
படர்ந்து கொண்டிருக்கும் என் எழுத்தை
அழுந்தித் துடைக்கிறீர்கள்
எதைப் பாதுகாத்தீர்களோ
அதுவே உங்கள்
ஆழ் நரம்பின் அறுதி
ரத்த நாளக் கட்டாக
இறுக்குகிறது
அதற்கு மருந்தென்னவோ
கலை மட்டும் தான்
நல்ல செய்தி
நான் சாகவில்லை
2.
அந்தச் சிறுமி
வானம் துப்பியவள்
அவள் நட்சத்திரத்திற்கும் களிமண்ணிற்கும்
இடையில் குகை குடைந்து வளர்ந்தாள்
வண்ணங்களை முயங்கிய களைப்பில்
பெருமரக் கிளைகளில் உறங்கினாள்
வேர்களைத் தின்று மழையைப் பிரசவித்தாள்
உங்களைக் காண நேர்ந்த கணத்தில்
உன்மத்தமாய் பாடினாள்
நீங்களோ அவள் மீது உமிழ்ந்தீர்கள்
அவள் உடுத்தியிருந்த பூக்கள் அதில் எரிந்தன
பறந்து போனவளை
மேகங்களை அறுத்துத் தேடினீர்கள்
பகல்கள் மலைகளை விழுங்கின
இரவுகள் கடலில் இறங்கின
பருவங்கள் பிறழ்ந்து
வெள்ளத்தில் நிலங்கள் புரண்டன
தேடுவதை மட்டும்
உங்களால் நிறுத்த முடியவில்லை
நீங்கள்
உங்கள் முதுகெலும்பிற்குத் திரும்பும்போது
ஒருவேளை அவள் அகப்படக்கூடும்
3.
அங்கு தான் ஒரு தரம் மூழ்கினேன்
எனக்கு நீந்தத் தெரிந்தும் முடியவில்லை
கரையில் நின்றவர்கள் வேடிக்கை பார்த்தார்கள்
என் உடல் நீலம் பாரித்தது
மீன்கள் என்னைத் தின்றன
மிச்சமிருந்த முகத்தைத் தாங்கி மிதந்தேன்
சூரியக் கதிர்கள் என் எலும்புகளை மீட்டிப் பாடின
கதை கேட்ட காற்று திசை காட்டியது
இலைகளும் மலர்களும் தோலாகின
ஆற்றுச் சந்தியில் இடப்பட்ட தீபங்கள்
தேவதையைக் கண்டு கொண்டதுபோல்
என்னை நோக்கி வருகின்றன
4.
உங்கள் கடவுளர்களுக்கு
இங்கு அனுமதியில்லை
பிரார்த்தனைகள்
அண்டாத நிலமிது
எந்தக் குறிக்கோளுமின்றி
பூக்களின்
இதழ்களை,
தண்டுகளை,
மகரந்தக் காம்புகளை,
சூலக முடிகளை,
மஞ்சள் ஒளிக்கற்றைகளை,
பனித் திவலைகளை,
எண்ணிக்கொண்டே
உயிர்விடலாம்
“துருக்கி ராஜா” கவிதை
ஆகஸ்ட் தடம் இதழில் எனது புதிய கவிதைகள்


முன்னாள் காதலன் – கவிதை
நன்றி – ஆனந்த விகடன்
எப்படிப் போகிறது
உன் காதல் வாழ்வு
என்ற என் கேள்விக்கு
மையமாக முறுவலித்தான்
என் முன்னாள் காதலன்
உனக்கு? என்று திருப்பிக்கேட்ட அவனுக்கு
“நிறைவு” என்று அவன் கண்கள்
துணுக்குறுவதைப் பார்க்கும் வரை
சொல்லிவிட்டு
இனி எஞ்சியவாழ்வை ஓட்டிவிடலாம் என்றேன்
இரண்டு கோப்பை பியர்
உள்ளே இறங்கியிருந்தது
அவளுக்குமுன் குடிக்க முடியாது என்றான்
உடம்புக்கு நல்லதுதானே என்றேன்
புகைப்பதையும் விட்டுவிட்டேன் என்றான்
அவளுக்கு ஆஸ்துமா என்று கேள்விப்பட்டேன் என்றேன்
உன் ரசம் சாப்பிட்டு நாளாச்சு என
அவன் தொடங்கிய வாக்கியத்தை
நீ பாடும்பாட்டெல்லாம்
அப்பப்ப ஞாபகம் வரும் என முடித்துவைத்தேன்
பிறகு மௌனம்
தனித்தனியான எங்கள் மௌனத்தில்
ஒன்றிணைந்த நினைவுகளின் இரைச்சல்
உன் இன்ஸ்டாகிராமில்
நீ வளர்க்கும் பூனையைச் சந்தித்தேன்
அரைப்புன்னகையுடன் சொன்னான்
உனக்குப் பிடித்த ரோஸ்செம்பருத்திபூத்தது
பதிவுபோட்டேன், மனசில்லை, நீக்கிட்டேன்
தலைநிமிராமல் சொன்னேன்.
கோபத்தில் ஒருநாள்
அனுப்பிக்கொண்ட குறுஞ்செய்திகளை ஒன்றுவிடாமல்
அழித்துவிட்டதாகச் சொன்னபோது
அவன் நெற்றி சுருங்கியது
எழுதிக்கொண்ட ஆயிரத்துசொச்சம்
மெயில்களையும் கடவுச்சொல் போட்ட கோப்பில்
சேமித்துவைத்திருக்கிறேன்
தோன்றும்போது ரகசியமாக வாசிப்பேன் என்றபோது
கடித்துத் துப்ப நகம் இல்லாமல்
விரலில் ரத்தம் கசிந்தது
கலவி, காபி என அன்றாடங்களில்
வாய் வரை வந்துவிடும் பெயரை
எச்சில்கூட்டி விழுங்குவது போன்ற
சங்கடங்களை இருவருமே பேசிக்கொள்ளவில்லை.
மகிழ்ச்சியா இருக்கியா
ஒரே குரலில் ஒரே நேரத்தில்
கேட்டுக்கொண்ட போது
உணவும் மதுவும் மாலையும்
செறித்து உடல்கள் வியர்த்துவிட்டன
அவன் கைப்பேசியில் இருபது ‘மிஸ்டுகால்ஸ்’
என் கைப்பேசியில் பத்தொன்பது ‘நோட்டிஃபிகேஷன்ஸ்’
என் முன்பற்களுக்கு நடுவே இடைவெளி
அதிகமாயிருப்பதாய் அவனும்
அவன் மூக்கு முடியில் நரை
விழுந்திருப்பதாய் நானும்
சுட்டிக்காட்டி, சிரித்துக்கொண்டே
விடைபெற்றோம்
பிரிவு வந்தால்
கடலுக்குள் கைகோத்து நடந்து போய்ச் சாவோம்
என்று சொல்லிக்கொண்டவர்கள்
காலத்திற்குள் கைவிலக்கி நடந்துபோய்
அவரவர் வாழ்வுக்குத் திரும்பினோம்.
லீனா மணிமேகலை