மாலதி மைத்ரியின் பன்மெய் கட்டுரை? – எதிர்வினை என்ற இற்றுப்போன சூயிங்கம்!
08/01/2014
மாலதியின் கட்டுரைக்கு எதிர்வினையாற்றுவது, அவரிடம் ஏராளமாக இருக்கும் வன்மத்தையும், காழ்ப்பையும், பொறாமையையும், சூயிங்கம்மை கசப்பு வெளியேறும் வரை மெல்லுவது போன்ற அனுபவம் தான்.
இந்த கட்டுரையைப் பொருத்தவரை அவருடைய ஆண்டை, அடிமை பிரயோகங்கள், விளக்கங்கள் சுத்த பேத்தல். பிறப்பாலே ஒருவர் போராளியாகவிட முடியும் என்று எழுதுவது, பிறப்பாலே ஒருவர் “பிராமணன்” என்று நம்புவதற்கு நிகரானது. மனுதர்மத்தை நான் மூர்க்கமாக மறுப்பவள்.
தேஜஸ்வினி படம் குறித்த அவர் தர்க்கங்கள், தான் வேலை செய்த தன்னார்வ நிறுவனங்கள், கார்பரேட் சி.எஸ்.ஆர் பிராஜக்ட் எல்லாம் எவ்வளவு உத்தமம் தெரியுமா? டாட்டா அளவுக்கு மோசமில்லை என்கிற ரேஞ்சில் தான் இருக்கிறது. சுயாதீன சினிமா வட்டாரங்களில் ஒரு பேச்சு வழக்கு உண்டு. கூலி படப்பிடிப்பா? இண்டிபெண்டெண்ட் படப்பிடிப்பா? என்று. தொலைபேசியில் என்ன ஷூட்டிங் என்று கேட்டுக்கொள்ளும்போது, அந்த குறிச்சொற்களை பயன்படுத்துவோம். கூலிக்கு வேலை செய்து எங்களுக்கு பிடித்த சினிமாவை அதன் சேமிப்பில் எடுப்பது என்பதில் எனக்கு எந்த குற்ற உணர்ச்சியும் இல்லை. அதை யாரும் ஏற்படுத்திவிடவும் முடியாது. எத்தனை காலச்சுவடு, எத்தனை வினவு, எத்தனை மாலதி மைத்ரிகள் வந்து தூய்மைவாதம் பேசினாலும் இது தான் யதார்த்தம். சத்யஜித் ரேவே விளம்பரப் படங்கள் எடுத்து தான் தன் அன்றாட செலவுகளை பார்த்துக்கொள்ள வேண்டியிருந்தது. ஒரு கடைந்தெடுத்த பார்ப்பனீய கார்பரேட் காலச்சுவடு கண்ணனால் அறிமுகப்படுத்தப்பட்டதை நியாயப்படுத்தும் மாலதியின் தூய்மைவாதம் ஒரு அழுகினி ஜோக்.
ஈழத்தமிழர் தோழமைக் குரல் குறித்த அபாண்டங்களுக்கு லீனா மணிமேகலை மைனஸ் 99 பேர் தான் பதில் சொல்ல வேண்டும். என்னை அசிங்கப்படுத்த வேண்டும் என்ற நோக்கத்தில், படைப்பாளிகள், மாணவர்கள், மீனவர்கள், வழக்கறிஞர்கள், மனித உரிமை போராளிகள் என்று எல்லோரையும் ஏதோ நான் அழைத்து சென்ற செம்மறி ஆடுகள் போல சித்தரித்திருப்பத்தை என்னால் கண்டிக்க மட்டுமே முடியும். நெட்டும் கையுமாக இருந்தேன் என்றால், எனக்கு தரப்பட்ட வேலை மீடியா ஒருங்கிணைப்பு என்பதால் அதை முடிந்தவரை செய்தேன். ஏன் கொடுத்த வேலையை செய்யவில்லை என்று கேட்டால் பதில் சொல்லலாம். ஏன் செய்தாய் என்றால் அதற்கு எப்படி பதில் சொல்வது? புகைப்படங்களை கவிஞர் நரன் எடுத்தார் என்பது சரி. அதில் ஜெரால்ட் போட்டோ எடுத்தார் என்ற வாக்கியம் ஏன் வருகிறது. அவருக்கும் ஈழத்தமிழர் தோழமைக் குரலுக்கும் என்ன சம்மந்தம். அவர் தனிப்பட்ட முறையில் என் நலன் கருதி, ஒரு நாள் டில்லி வந்து என்னுடன் துணைக்கு நின்றுவிட்டு சென்றார். அதில் மாலதிக்கு என்ன பிரச்சினை? திடீரென எந்தப் பொருத்தமும் இல்லாமல் ஷோபா சக்தியின் பெயரும் கட்டுரையில் வருகிறது. நம்பகத்தன்மைக்காக வேறு ஏதாவது தந்திரங்களை மாலதி முயற்சி செய்யலாம். மற்றபடி இந்த பெயர்களைப் பயன்படுத்தும் முயற்சிகளில் படுதொல்வியடைகிறார். என் போராட்ட உணர்வை பற்றி பேசும் மாலதி, தமிழின் மூத்த படைப்பாளிகளாக அறியப்பட்ட தானும், பிரேமும் சபையில் நடந்துக்கொண்டதையும், மாலதி அழைத்து வந்த மீனவப் பெண்களே சந்தி சிரித்ததையும் நினைவுப்படுத்தி கொள்வது நல்லது. நினைவில் இல்லையென்றால், அதையும் தனியாக கட்டுரையாக எழுதலாம். என்ன எழுதுவதற்கு கைகள் கொஞ்சம் கூசும். பரவாயில்லை. தேரை இழுத்து தெருவில் விட்டபின் அதை நகர்த்த தானே வேண்டும்.
ஈழத்தமிழர் தோழமைக் குரலின் நிதிக்கும் எனக்கும் எந்த தொடர்பும் இல்லை. இயக்கத்தின் பொருளாளர் சுகிர்தராணி. பொருளாளர் அறிக்கையை கொடுக்கவில்லை ஆதலால் அவர் ஆட்டையைப் போட்டுவிட்டார் என்று நான் எழுதப் போவதில்லை. ஏனெனில், சென்னை திரும்பும்போது ரயிலில் வாங்கிவந்த சாப்பாடு ஊசிப்போக, யாரிடமும் காசில்லாமல், வழியில் ஆந்திராவில் இருந்த நண்பர்களிடம் சாப்பாடு பார்சல்கள் வாங்கி வரச் சொல்லி சாப்பிட்ட நிலைமையில் தான் எல்லோரும் இருந்தோம். திரும்பும் போது, மாலதி எங்களுடன் வராமல், விமானத்தில் சென்னைக்கு திரும்பியதால், அவருக்கு இது தெரிந்திருக்க வாய்ப்பில்லை.
செங்கடல் பிரச்சினைக்கு வருவோம். காலச்சுவடு, சுகிர்தராணி, மாலதி மைத்ரி மூவரும் ஒரு குரலில் சொல்வதென்ன வென்றால், செங்கடலில் பயன்படுத்தப்பட்ட அந்த 30 நொடி போராட்ட ஃ புட்டெஜுக்காகத் (Footage) நடத்தப்பட்ட படப்பிடிப்பு தான் ஈழத்தமிழர் தோழமைக் குரல். சரி, அபத்த இலக்கியத்திற்கு எப்போதும் ஒரு இடமுண்டு தானே. அந்த வகையில், முத்துக்குமரன் தீக்குளித்தது, கருணாநிதி உண்ணாவிரதம் இருந்தது, ஜெயலலிதா ஈழத்தாயானது, சீமான் உள்ளிட்ட திரைப்பட கலைஞர்கள் போராட்டம், முள்ளிவாய்க்காலில் குண்டுகள் வீசப்பட்டது, இனப்படுகொலை காட்சிகள், பி.பி,.சியின் போர்ச்செய்திகள் . சிதம்பரத்தை பத்திரிக்கையாளர் செருப்பால் அடித்தது, நெடுமாறன்-நல்லக்கண்ணு- வை கோ – என்று தலைவர்களின் முழக்கங்கள், அந்த காலக் கட்டத்தில் தடைசெய்யப்பட்ட சேனல் ஃபோர் வெளியிட்ட சிங்கள படையினர், நிர்வாணமாக கைகள் கட்டப்பட்ட நிலையில் புலிகளை சுட்ட மொபைல் துண்டு காட்சி என்று செங்கடலில் ஆவணப்பட இயக்குனர் கதாபாத்திரம் மூலம் போலீஸ் கமிஷனர் கைப்பற்றும் டேப்புகளில் ஓடும் செய்திக்கோர்வைகள் எல்லாமும் செங்கடலுக்காக நிகழ்த்தப்பட்டவை என்று முடிவுக்கு வரலாம். இவை எதுவும் மாலதி ஏற்பாடு செய்த டில்லி போராட்ட விடீயோகிராஃபர் எனக்கு தந்தவை அல்ல, ஈழத்தமிழர் தோழமைக் குரல் காட்சிகள் உட்பட எல்லாமும் நான் யூ-ட்யூபில் (You tube )இருந்து டவுன்லோட் செய்தவையே! ஓபன் சோர்ஸ் (Open Source ) காலத்தில், இதையெல்லாம் விளக்கமாக எழுதிக்கொண்டிருக்க வேண்டிய தமிழ்ச் சூழலும், படைப்பாளிகளின் வன்மம் வெளிபடுத்தும் அறியாமையும் வெட்கக்கேடானது. செங்கடல் பிரதியைப் பார்த்தவர்கள் அதைப்பற்றி பிரதிரீதியாக வைக்கும் விமர்சனங்களுக்கு நான் விளக்கங்கள் தருவதில்லை. பிரதியை உருவாக்கியபின், அதற்கு வெளியே பேசுவதற்கு, ஒரு படைப்பாளியாய் என்னிடம் ஏதுமில்லை என்று நம்புபவள் நான்.
என் மற்ற படங்களை பற்றிய குற்றச்சாட்டுகளையும் நான் முற்றிலும் நிராகரிக்கிறேன். என் படங்களில் பங்கு பெற்ற கதாபாத்திரங்கள் என்னிடம் நேரடியாக தொடர்பிலிருப்பவர்கள். அவர்களுக்கு முறைப்பாடுகள் இருப்பின் என்னுடன் அவர்கள் தீர்த்துக்கொள்வார்கள். அவர்களுக்கும் எனக்கும் இடையே மாலதி, ஊடறு.காம் போன்ற அவதூறாளர் களின் மத்தியஸ்தமும் அதிகாரமும் அனுமதிக்க முடியாதவை. மற்றபடி உன் திரைப்படத்தை அங்கு திரையிட்டாயா? இவர்களுக்கு காண்பித்தாயா? என்ற கேள்விகள், சிறுபிள்ளைத் தனமானவை.
கூடங்குளத்தைப் பற்றிய கவிதையை அந்த மக்களின் வாசித்துக் காண்பித்தாயா? சிரியா பற்றி எழுதினாயே, அந்த மக்களுக்கு அனுப்பினாயா? உடலுறவு பற்றி எழுதியதை சம்பந்தப்பட்டவரிடம் அனுமதி வாங்கினாயா, இப்படி கவிதைகள் எழுதிவிட்டு அதை புக் போட்டு எப்படி விற்கலாம், வீடு வாங்கலாம், கார் வாங்கலாம் என்று யாரும் கேட்பதில்லை. அதில் லாஜிக்கும் இல்லை. ஏதோ பொருமுகிறார்கள் பாவம் என்று விட வேண்டியது தான்.
இதை எழுதும் நேரத்தில் மாலதியை மனநோய் மருத்துவரிடம் அழைத்து செல்வது உருப்படியான காரியமாக இருக்கும். ஆனாலும் நாம் எப்போதும் உருப்படியான காரியங்களை செய்வதில்லையே!
பின்னிணைப்பு :
1.சிற்பி விருது பற்றிய நான் இதுவரை அறியாத தகவலை எழுதியிருக்கிறார் மாலதி. சிற்பி இலக்கிய விருது குறித்த தகவலை எனக்கு முதலில் தெரிவித்ததும் சம்மதம் வாங்கியதும் நண்பருமான எழுத்தாளருமான இந்திரன். அவரிடம் மாலதி எழுதியதை வாசித்துக் காட்டினேன். “விடும்மா ரப்பிஷ்(Rubbish )” என்று ஒரே வார்த்தையில் முடித்துக்கொண்டார்.
2. இதற்கு வினையாற்றும் எந்த கட்டுரைக்கும் ம்றுமொழியாற்றும் ஆர்வமும் எனக்கில்லை. இந்திரனின் “விடும்மா ரப்பிஷ்(Rubbish )” என்ற விளிப்பை என் தரப்பிலும் வழிமொழிந்து என் முன் குவிந்திருக்கும் வேலைகளில் கவனம் செலுத்தும் முடிவில் இருக்கிறேன். கருத்து ரீதியான விவாதங்கள் தனி மனித தாக்குதலாகவும், அவதூறுகளாகவும் மாறும்போது சற்று விலகி நிற்பதே தொடர்ந்து இயங்குவதற்கு வழிவகுக்கும் என்பதால் இந்த முடிவு.
3.அரசாங்க எதிர்ப்பு, யுத்த எதிர்ப்பு, பேச்சுவார்த்தைக்கு வலியுறுத்துதல், சுயநிர்ணய உரிமை என்ற அரசியல் கோரிக்கைகளை முன்னிறுத்தி கவிஞர்கள், படைப்பாளிகள், மாணவர் இயக்கங்கள், மீனவர் இயக்கங்கள், மனித உரிமை செயற்பாட்டாளர்கள், வழக்கறிஞர்கள், மருத்துவர்கள், அரவாணிகள், பெண்கள் அமைப்பினர் என்ற பல ஜனநாயக அமைப்புகள் என்று ஒருங்கிணைத்து உருவானது தான ஈழத்தமிழர்தோழமைக் குரல்(voiceforeelamtamil
4. எவ்வளவு குழந்தமையுடனும், எவ்வளவு தீவிரத்துடனும், வேட்கையுடனும், அப்பழுக்கற்ற நோக்குடனும் தலைநகர் சென்றோம். இழப்பதற்கு ஏதுமில்லை என்ற மனப்பாங்கு மட்டுமே ஈழத் தமிழர் தோழமைக் குரல் இயக்கத்தில் எல்லோரையும் ஒரு இறங்க மறுக்காத ஆவி போல இயக்கியது என்று நம்பினேன், இயங்கினேன் . அத்தனையையும் தனிமனித பகைக்கு பலி கொடுப்பது தாள முடியாத துயராய் என்னுள் இறங்குகிறது. சரி இதையும் கடக்கலாம்.
தொடர்புடைய சுட்டிகள் : http://panmey.com/content/?p=
லீனா மணிமேகலை
11.12.13 ஒரு கருப்பு நாள் – தமிழ் இந்துவில் வந்த எனது கட்டுரை
சுரேஷ் குமார் கௌஷல்-எதிர்-நாஸ் பவுண்டேஷன் வழக்கில் உச்ச நீதிமன்றம் அளித்த தீர்ப்பு, காலனிய காலத்து இந்திய தண்டனை சட்டப் பிரிவு 377-க்கு மீண்டும் உயிர்கொடுத்து டிசம்பர் பதினொன்றை ஒரு கருப்பு நாளாக மாற்றியிருக்கிறது. பாலின சிறுபான்மையினரைக் குற்றவாளிகளாகக் கருதும் இந்தச் சட்டம் சமத்துவத்தை எல்லாவற்றுக்கும் முன்நிபந்தனையாக வைக்கும் இந்திய அரசியலமைப்புக் கோட்பாட்டையே நகைப்புக்குரியதாக்குகிறது.
ஒருபால் உறவை இயற்கைக்கு விரோதமானது என்று ஜனநாயக சோஷலிசக் குடியரசான இந்திய நாட்டின் உச்ச நீதிமன்றம் எந்த அறிவியல் ஆதாரங்களின் அடிப்படையில் தீர்ப்பு வழங்குகிறது? சாதி, மதம், கலாச்சாரம் என்பவற்றைக் கருதுகோள்களாக வைத்து ஒரு நாட்டின் நீதிமன்றம் குடிமக்களின் காமத்தை, அவர்கள் எப்படி உறவு வைத்துக்கொள்ள வேண்டும் என்பதை வரையறுப்பதும் அதன் அடிப்படையில் சட்டங்களை நிறைவேற்றுவதும் தண்டனைகளை பரிந்துரைப்பதுமான செயல், சிவில் உரிமைகள் என்ற கருத்தாக்கத்தைக் கரும்புள்ளி செம்புள்ளி குத்தி, கழுதையில் ஏற்றி கற்காலத் தெருக்களில் வலம்வர அனுப்பியிருக்கிறது.
இந்திய தண்டனை சட்டப் பிரிவு (இ.த.ச.) 377 ஆண்/ பெண் இடையிலான வழக்கமான உடலுறவு தவிர மற்ற எல்லாவகை உடலுறவுகளையும் குற்றமெனப் பார்ப்பதால், எச்.ஐ.வி./ எய்ட்ஸ் குறித்த மருத்துவத் தகவல் சேகரிப்பு மற்றும் சேவைகளில் சிக்கல் ஏற்படுகிறது என்பதே நாஸ் அறக்கட்டளை இ.த.ச. 377 நீக்கத்துக்கான வழக்கைப் பதிவு செய்ததன் காரணங்களில் மிக முக்கியமானது. ஆண்-பெண்-காமம்-உடலுறவு விஷயங்களை அறிவியல்பூர்வமாக அணுகாமல், இயற்கை-செயற்கை , பாவம்- புண்ணியம் என்ற மதவாத ஒழுங்கியல் பார்வையில் அணுகுவதும், மாற்றுப் பாலியல் தேர்வாளர்களை சமூக விரோதிகளாக்குவதும் மனிதநேயத்துக்கும் மேன்மைக்கும் பாதுகாப்புக்கும் எந்த வகையிலும் உதவாது.
பா.ஜ.க. நாடாளுமன்ற உறுப்பினர் ஜவடேகரிடம், இ.த.ச. 377 நீக்கம் குறித்து கருத்து கேட்டதற்கு “சிவ சிவா” என்று கன்னத்தில் போட்டிருக்கிறார். இன்னும் பல தலைவர்கள் இதுகுறித்தெல்லாம் எங்களிடம் கருத்து இல்லை என்று திட்டவட்டமாக மறுத்திருக்கிறார்கள். நமது குடியரசு என்பது இப்படிப்பட்ட ஆட்சியாளர்களால் நிரம்பியதுதான். இந்த லட்சணத்தில் சட்டப்பிரிவு 377-ஐ நீக்குவதும் மாற்றுவதுமான முடிவை நாடாளுமன்றத்திடம் தள்ளியிருக்கிறது உச்ச நீதிமன்றத் தீர்ப்பு. அது வந்த 24 மணி நேரத்தில், மார்க்சிஸ்ட் கட்சிகளும் காங்கிரஸ் முக்கியத் தலைவர்களும் 377 நீக்கத்துக்கு ஆதரவாகப் பேசியிருப்பது வரவேற்கத்தக்கது, என்றாலும் தேர்தலை நோக்கி மையம் கொண்டிருக்கும் நாடாளுமன்றம் ஓட்டுவங்கி அரசியலுக்கு உதவாத பாலியல் சிறுபான்மையினரின் உரிமைகளைக் குறித்து என்னவிதமான அக்கறை செலுத்தும் என்பதற்குப் பாரிய மேற்கோள்கள் தேவையில்லை.
“பண்பாட்டை அடியோடு சிதைத்து, கலாச்சாரத்தை வேரோடு பிடுங்கி எறிய இன்றைய காங்கிரஸ் மத்திய அரசும் முற்போக்குப் போர்வையில் இருக்கின்ற வக்கரித்த புத்தி உடையவர்களும் ஓரினச்சேர்க்கையை ஆதரிப்பது தாங்க முடியாத அதிர்ச்சியையும் மனதுக்கு வேதனையையும் தருகிறது” என்ற சனாதன ஓட்டுவங்கி குரல் கொடுத்திருக்கும் வைகோ அதில் உள்ளூர் உதாரணம். சிறுபான்மையினருக்கு எதிரான வன்முறையைத் தேர்தல் ஸ்டன்ட்டாக கையாண்டுவரும் கட்சிகள் பெருத்திருக்கும் இந்த நாட்டின் அரசவைகளிடம் நீதியை எப்படி எதிர்பார்ப்பது?
பாலின சிறுபான்மையினரை ஏற்றுக்கொண்டு அரவணைக்கும் பெற்றோர்களையும் குடும்பங்களையும் நண்பர்களையும் மிக மோசமாகக் காயப்படுத்தியிருப்பதோடு, அவர்களுக்கான சமூகப் பாதுகாப்பையும் கேள்விக்குறியாக்கியிருக்கிறது உச்ச நீதிமன்றத்தின் இந்தத் தீர்ப்பு. தமது மாற்றுத் தேர்வுகளுக்காக அன்றாட வாழ்க்கையில் அவமானத்தையும் புறக்கணிப்பையும் தனிமைப்படுத்தலையும் சந்திக்கும் ஒருபால் ஈர்ப்பாளர்கள் இனி, சட்டமே அனுமதிக்கும் தாக்குதல்களையும் துன்புறுத்தல்களையும் அனுபவிக்கும் கொடுமை நிகழக்கூடும். கொலை செய்தவர்களும் கொள்ளை அடித்தவர்களும் சாதி வெறியர்களும் மதவாதிகளும் பாலியல் வன்புணர்வாளர்களும் வீதிகளில் சுதந்திரமாக உலா வர, அன்புக்குக் கட்டுண்ட ஒருபால் ஈர்ப்பாளர்கள் தலைமறைவாக வாழும் அபத்தங்கள் நடந்தேறும். ஒருபால் உறவாளர்களுக்கு எதிராக நீதித்துறை தூண்டிவிடும் வன்முறை இ.த.ச. 377 என்றால் அது மிகையாகாது.
திருமணத்துக்கு முன்பு கொள்ளும் பாலுறவை ‘திருமணம்’ எனவும் திருமண உறவுக்குட்பட்ட வன்புணர்ச்சியை ‘காமம்’ எனவும், பாலியல் வன்கொடுமைக்கு எதிராக முறையிடும் பெண்கள் நம்பகத்தன்மையற்றவர்கள் எனவும் தீர்ப்புகள் வழங்கிய வரலாறு கொண்ட இங்கே, ஒருபால் உறவைக் குற்றமெனப் பார்ப்பது அதிர்ச்சியாக இல்லையென்றாலும், இப்படிப்பட்ட ‘நீதிமான்’களை எதிர்த்துப் போராடுவதும், நீதிமன்றங்களை அவமதித்தால் குற்றம் என்றால் சிறைச்சாலைக்குச் செல்வதும்தான், ஒரு போலி ஜனநாயகத்தின் குடிமக்களான நமக்கிருக்கும் மார்க்கங்கள்.
ஆண்-ஆண், பெண்-பெண் ஒருபால் உறவில் வெட்கப்பட வேண்டியது ஏதுமில்லை. அது ஒரு வகை பாலியல் செயல்பாடும், அன்பின் வெளிப்பாடுமே. அதைக் குற்றமாக்குவது மனிதத்துக்கு எதிரானது. மனிதம் எல்லா நிறுவனங்களுக்கும் மேலானது, ஆதியானது. மனிதத்துக்கு ஆதாரமான அன்பை, காதலை, காமத்தை, அரசன் அன்றோ, அல்லது நீதி நின்றோ கொல்ல நினைத்தால், அரசக் கொடி கிழியும். அரசின் வன்முறை நீதியென்றால், மக்களின் நீதி எதிர்ப்பே!
லீனா மணிமேகலை
லெனின் விருது – தினமணி கட்டுரை
பார்வையாளர்களுக்கும் இந்த விருதில் பங்குண்டு!
By -யுகன்
சிறந்த ஆவணப்பட இயக்குநர்களுக்கான லெனின் விருதை ஒவ்வொரு ஆண்டும் ஆகஸ்ட் 15 அன்று கடந்த மூன்று ஆண்டுகளாக வழங்கி வருகின்றது “தமிழ்ஸ்டூடியோ இணைய அமைப்பு’. நான்காம் ஆண்டுக்கான லெனின் விருதை சமீபத்தில் ஆவணப்பட இயக்குநர் லீனா மணிமேகலைக்கு அளித்தனர். விழாவிலிருந்து சில துளிகள்:
“”ஆணாதிக்க சமூகத்தில் கடந்த பத்து ஆண்டுகளாக தான் தேர்ந்தெடுத்த துறையில் தொடர்ந்து இயங்கிக் கொண்டிருப்பவர் லீனா. விருதுக்கு அவரைத் தேர்ந்தெடுத்து அறிவித்த உடனேயே நிறைய மிரட்டல்கள், கண்டனங்கள் பரவலாக எங்களுக்கு வந்தன. அப்போதே எங்களுக்குத் தெரிந்துவிட்டது, நாங்கள் சரியான ஒருவரைத்தான் தேர்ந்தெடுத்திருக்கிறோம்…” என்றார் தமிழ் ஸ்டூடியோ இணைய தளத்தின் நிறுவனர் அருண்.
“”வெகுஜன ஊடகங்களாலும் பெரும்பாலானவர்களாலும் கொண்டாடப்படும் பிம்பங்களை தன்னுடைய “மாத்தம்மா’, “தேவதைகள்’ போன்ற ஆவணப்படங்களின் மூலம் லீனா தகர்த்திருக்கிறார். அருந்ததியர்கள் சமூகத்தினரிடையே இளம் சிறுமிகளுக்கு “பொட்டுகட்டி’ அவர்களை மாத்தம்மாக்களாக மாற்றும் விஷயத்தை தன்னுடைய ஆவணப்படத்தில் வெளிப்படுத்திய சமயத்தில், அவருக்கு பெரும் அச்சுறுத்தல் எழுந்தது. சட்டப்பூர்வமான எதிர்ப்புகள் கிளம்பின. அந்தச் சமயத்தில் “தினமணி’ வார இதழிலும் ஆவணப்படம் தொடர்பான ஆதரவான செய்திகள் வந்தன. நானும் கையில் கேமிராவை எடுத்துக் கொண்டு, அருந்ததியர்கள் வாழும் பகுதிக்குச் சென்றேன். நேரிடையாகவே அந்த மக்களிடம் பேசினேன். அந்த சமூகத்தில் மாத்தம்மாக்கள் இருந்ததை உறுதிசெய்துகொண்டேன். அதேபோல்தான், “தேவதைகள்’ ஆவணப்படமும் அதிர்ச்சி அளிக்கக்கூடியது. சமூகத்தில் இப்படிப்பட்ட பணிகளைச் செய்யும் பெண்களும் இருக்கிறார்கள் என்பதை தன்னுடைய ஆவணப்படத்தின் மூலம் காட்டியவர் லீனா மணிமேகலை…” என்றார் சிவகாமி ஐ.ஏ.எஸ்.
இயக்குநர் பாலாஜி சக்திவேல், “”போராட்ட உணர்வோடு கடந்த பத்து ஆண்டுகளுக்கும் மேலாக ஆவணப்படவுலகில் செயல்பட்டுக் கொண்டிருக்கும் லீனா மணிமேகலையின் பல படங்களும் அதிர்வை உண்டாக்கும் படங்கள். அவருக்கு என் பாராட்டுகள்..” என்றார்.
“”நானும் தீக்குச்சி. அவரும் தீக்குச்சி. எங்களுக்குள் நிறைய சண்டைகள் வரும். சமாதானங்களும் உடனுக்குடன் ஏற்படும். என்னை பாசமாக “அப்பா’ என்று கூப்பிடும் பெண் லீனா மணிமேகலை. அவரின் சமீபத்திய ஓர் ஆவணப்படத்தைப் பார்த்தேன். இரண்டு, மூன்று முறை பார்த்திருப்பேன். அதிலிருந்து எனக்கு ஒன்றும் புரியவில்லை. புரியவில்லை என்பது என்னுடைய குறையே தவிர, அவருடைய குறை என்று கூறமாட்டேன். சங்க இலக்கியங்களில் சில பாடல்களை இன்னமும் பொருள் அறிந்து படிப்பதில் எனக்கு சிக்கல் இருக்கத்தான் செய்கிறது. அது என்னுடைய குறைதானே! லீனா அந்த ஆவணப்படத்தில் ஒரு நவீன ஓவியம் போன்ற ஒரு முயற்சியைச் செய்திருக்கிறார் என்று நினைக்கிறேன்… இன்னமும் மூன்று நான்கு முறை பார்த்தால் ஒருவேளை அந்தப் படம் புரியும் என்று நினைக்கிறேன்…” என்று லீனாவை மனம் திறந்து பாராட்டினார் இயக்குநர் பாலுமகேந்திரா, அதோடு விட்டிருக்கலாம். “”நம்முடைய தமிழ்த் தாய் வாழ்த்திலும் கூட, “எத்திசையும் புகழ்மணக்க இருந்த பெறும் தமிழ் அணங்கே…’ “அதென்ன இருந்த’ அப்படியென்றால் இப்போது இல்லையா? எனக்குப் புரியவில்லை!” என்றார்.
இறுதியாக ஏற்புரை நிகழ்த்திய லீனா மணிமேகலை சற்று உணர்ச்சிவசப்பட்டு பேசினார். “”நான் அடிப்படையில் ஒரு பொறியியல் பட்டதாரி. அது தொடர்பான பணியையும் சிறிது காலம் பார்த்துவந்தேன். சமூகத்தில் நிலவும் ஆணாதிக்க மனப்பான்மை, வெகுஜன ஊடகங்களால் காட்டப்படும் பொய்யான பிம்பங்கள் இவற்றை எல்லாம் உடைக்கும் அல்லது மறுக்கும் ஆயுதமாகத்தான் நான் ஆவணப்படங்களைக் கையில் எடுத்தேன். யோசித்துப் பார்த்தால் என்னுடைய பிடிவாதம்தான் என்னை இந்த அளவுக்குக் கொண்டுவந்திருக்கிறது. ஆனால் இதற்காக நான் கொடுத்த விலை அதிகம். குடும்பத்தினருடன் தொடங்கி நிறைய பேர்களின் எதிர்ப்பை சம்பாதித்தேன். அன்பு, காதல், நட்பு என நிறைய பிரிவுகளைச் சந்தித்தேன். என்ன செய்தாவது என்னுடைய ஆவணப்படங்களை தொடர்ந்து வெளியிட்டுவந்தேன். ஆவணப்படங்களை திரையிடுவதற்கே இடம் இல்லாத நாட்கள் அவை. ஆவணப்படங்களை திரையிடுவதில் தொடங்கி ஆவணப்படங்களை எடுப்பவர்களுக்கு விருதும் வழங்கி கெüரவிக்கும் தமிழ் ஸ்டூடியோ அமைப்புக்கு என் நெஞ்சார்ந்த நன்றிகள். நிறைய பழைய நண்பர்களை இங்கே சந்திக்கமுடிந்தது.
என்னுடைய ஆவணப்படங்களில் பங்காற்றியவர்கள் அதில் தோன்றியவர்கள்… அவ்வளவு ஏன்… என்னுடைய ஆவணப்படங்களைப் பார்த்த பார்வையாளர்கள் அனைவருக்கும் கூட எனக்குக் கிடைத்த இந்த விருதில் பங்கிருக்கிறது. எல்லாருக்குமான விருதாகத்தான் இந்த விருதைப் பார்க்கிறேன். இந்த விருது என்னுடைய போராட்ட குணத்தை இன்னும் தீவிரமாக்கும்…” என்றார் ஆனந்தக் கண்ணீருடன் லீனா மணிமேகலை!
வரிகளுக்கிடையே….
http://innapira.blogspot.com/2010/04/x.html
http://innapira.blogspot.com/2010/04/blog-post_20.html
http://jamalantamil.blogspot.com/2010/04/blog-post_20.html
http://jamalantamil.blogspot.com/2010/04/x.html
மேற்குறிப்பிட்ட லிங்குகளில் மதிப்பிற்குரிய பெருந்தேவி மற்றும் ஜமாலன் அவ்ர்களின் என் கவிதைகள் குறித்தான கட்டுரையும், உரையாடலும் நடைபெற்றுக் கொண்டிருக்கிறது. மகிழ்ச்சி.
கட்டுரை வெளிவந்தவுடன் என் எதிர்வினையை இருவருக்கும் மெயிலாக அனுப்பியிருந்தேன். அதை பின்னூட்டமாக வெளியிட்டார்கள். அதன்பிறகு தோழர் ஜமாலன் ஒரு மெயில் அனுப்பியிருந்தார். அதன்பிறகு கட்டுரையை திரும்ப படித்துவிட்டு என் பின்னூட்டத்தை அனுப்பியிருந்தேன். அதை ஒரு வாரமாகியும் வெளியிடவில்லை.அந்த இடைவெளியில், வேறு பலரின் பின்னூட்டங்கள் வெளியாகிக் கொண்டு தான் இருந்தது. பெருந்தேவி வாஷிங்டன் போய்விட்டார் என்று மெயில் எழுதினார் ஜமாலன். அந்த ஒரு வாரத்தில் ஃபேஸ்புக்கில் தமிழ்நாட்டு தஸ்லிமா ஆகவேண்டுமென்றால் என்ன மாதிரி கவிதை எழுத வேண்டும் என்ற நக்கல் உரையாடல்களில் இருவருமே பிஸியாக இருந்தார்கள். பின், என் பின்னூட்டத்திற்கான பதில் தயாரித்துவிட்டு,கட்டுரையாகவே வெளியிட்டார்கள். மிக்க மகிழ்ச்சி. அதற்கும் என் பின்னூட்டங்களை போஸ்ட் செய்தேன். இரண்டு நாட்களாகியும் இந்த நிமிடம் வரை வெளியிடவில்லை. இடையில்,தோழர் யமுனா ராஜேந்திரன் போன்றோரின் எதிர்வினைக்கும் பதிலிட்டிருந்தேன். அவற்றையும் பதிப்பிக்கவில்லை.
கருத்தை உருவாக்குவதில் மதிப்பிற்குரிய ஜமாலன் மற்றும் பெருந்தேவி இருவரிடமும் இன்டெலக்சுவல் அதிகாரம் இருக்கிறது என்றே முடிவுக்கு வர வேண்டியிருக்கிறது..என் பின்னூட்டங்களை என் பிளாக்கிலேயே பிரசுரிக்கிறேன். அப்புறம் இன்னொன்றை தெளிவுபடுத்துகிறேன். பெருந்தேவி “உடனே” வெளியிட்ட மதி என்பவரின் பின்னூட்டத்தில் எனக்கு பதட்டம் என்றும், என் பெண்நிலைவாதம் சரியில்லையென்றும் சொல்லியிருந்தார். அதை அவசரமாக வெளியிட்டதால் பெருந்தேவிக்கும் அதில் உடன்பாடு என்று எடுத்துக் கொள்கிறேன். எனக்கு ஒரு பதட்டமும் இல்லங்க….. நாலு மாதங்களாக, என் கவிதைகளை விமர்சிக்கிறேன் பேர்வழியென்று வெளிளிவந்துக் கொண்டிருக்கும் அவதூறுகளுக்கும், வதந்திகளுக்கும், வக்கிரமான தனிநபர் தாக்குதல்களுக்கும், என் படைப்புரிமைக்கு வெவ்வேறு சக்திகள் ஏற்படுத்தும் அச்சுறுத்தலுக்கும் நான் பதட்டம் அடைந்திருந்தால், இப்போது இந்த பதிவை எழுதிக் கொண்டிருக்க மாட்டேன்.
பெருந்தேவி மற்றும் ஜமாலன் அவர்களுக்கு,
இனி கவிதையைப் பற்றி பேச எங்களிடம் ஒன்றுமேயில்லை என்ற உங்கள் அறிவிப்பால், உங்களுக்குத் தான் விமர்சனத்திற்கான சகிப்புத்தன்மை இல்லையோ என்ற சந்தேகம் வருகிறது.
உணர்ச்சி வேறு, உணர்வு வேறு. உணர்வை அறிவு என்று ஒப்புக்கொள்ளாத நிலைப்பாடு பொதுவாக கோட்பாட்டாளர்களுக்கு உண்டு. படைப்பாளிக்கு குறிப்பாக கவிஞருக்கு உணர்வு தான் அடிப்படைக் கூறாகவும், படைப்புக்கான உந்துதலாகவும் இருக்கிறது என்ற அர்த்தத்தில் தான் குறிப்பிட்டிருந்தேன்.
எங்கள் ஊரில் மட்டும் இல்லைங்க, பல ஊர்களில் பெண்களிடம் பழிப்புக்கான இந்த வடிவம் இருக்கிறது. உதாரணத்திற்காகவும், ஆதென்டிசிட்டிக்காகவும் சொன்னேன். நான் எழுதியவுடன், எல்லாரும் எங்கள் ஊருக்கு கிளம்பி சென்று விடுவார்களோ என்ற உங்கள் சமூக அக்கறை எனக்கு வியப்பாக இருக்கிறது. என் கவிதைக்கான நியாயமாக நான் அதை சொல்லவில்லை. என்னை நீரூபிக்கும் முயற்சியாகவும் இந்த உரையாடலை உங்களிடம் நடத்திக் கொண்டிருக்கவில்லை. ஒரு உருவகமாக சொன்னேன். அவ்வளவு தான்.சப்வெர்சனை கவிதையில் பார்க்கத் தவறுவதின் நோக்கமும் எனக்கு புரியவில்லை.
ஆண், பெண் எதிர்வுகளில், பிறரை பேசத் தவறுகிறேன் என்பது உங்கள் விமர்சனம். நான் முதன்மை முரண்பாட்டை அங்கீகரிக்கிறேன்.பேச விரும்புகிறேன். அப்புறம் மூன்றாம் பாலினர் என்பதெல்லாம் அரசாங்கம் உருவாக்குவது. மூன்றாம் பாலினர் தங்களைப் பெண்கள் என்றே அடையாளப்படுத்துகிறார்கள்.
41 சங்கப் பெண்பால் புலவர்களையோ,ஒரு ஆண்டாளையோ, காரைக்கால் அம்மையாரையோ வைத்துக் கொண்டு பெண்ணுக்கு மொழி இல்லையா? வரலாறு இல்லையா என்று நீங்கள் கேட்பது நகைச்சுவை.தமிழ் இல்லை, எந்த மொழியும் பெண்ணுடையது அல்ல, ஆண் உருவாக்கிவத்திருக்கும் மொழியில், தன்னுடையதை தனி யாக அல்லது வேறாக உருவாக்கவே முயல்கிறாள் என்ற புள்ளியிலிருந்து நான் பேச முயல்கிறேன்.
அப்புறம் என்னங்க, யோனி என்ற வார்த்தையைப் பயன்படுத்துவதற்கும், ஈஷிக் கொண்டு என்ற வார்த்தையைப் பயன்படுத்துவதற்குமான அரசியல் வேறுபாட்டை கூடவா நீங்கள் காணத் தவறுகிறீர்கள். அடையாள அரசியலை நீங்கள் கடக்க விரும்புவது உங்கள் இலக்காக இருக்கலாம். ஆனால் தமிழ்ச்சூழலில் “ஒரு வாக்கியத்தை முழுமையாக எழுதிவிட முடியாத சூழலில்” தானே நாமிருக்கிறோம்.
இறுதியாக நான் ஒரு சில நிகழ்வுகளை உங்களோடு பகிர்ந்துக் கொண்டதும், ஒரு நெகிழ்வுக்காக மட்டுமே. என் கவிதையின் கொடியை நாட்டுவதற்காக அல்ல.
பேஸிவ் டோன் என்று ஒரேயடியாக நீங்கள் சொல்வதை ஒத்துக் கொள்ள முடியாது. ஒரே நேரத்தில் பறந்தபடியும், நிலத்தில் வீழந்தபடியுமான உணர்வுநிலையிலேயே தான் எழுதியிருப்பேன். யோனியிலும் சாவில்லை, யோனிக்கும் சாவில்லை என்று முடித்திருப்பது அதனால் தான்.
ஒரு படைப்பாளியின் படைப்பு வெளியை கண்க்கிலெடுக்க வேண்டும் என்பதை அவரின் எல்லா கவிதைகளும் ஒன்றா? அப்படியென்றால் சரக்கா? என்றெல்லாம் தட்டையாக நீங்கள் புரிந்துக் கொண்டு உணர்ச்சிவசப்படுவது நியாயமே இல்லை.
ஒரு பிரதியில் சாதி,மதம்,நிறுவனம் மற்றும் எந்தவகையான அதிகாரமும் வெளிப்பட்டுவிடக்கூடாது என்பது ஏற்றத்தாழ்வு மிக்க சமூகத்தில் எழுத வரும் ஒரு எழுத்தாளருக்கு இருக்க வேண்டிய அடிப்படை அறம். ஈஷிக் கொண்டு என்று எழுதும் பார்ப்பனியத்திற்கு என்னால் வக்காலத்து வாங்க முடியாது.
ரோம் சாம்ராஜியம் எரிகிறதா என்ன? வரலாறு முக்கியம் அமைச்சரே என்று வடிவேல் காமெடி போன்ற எகத்தாளங்களையும் தாண்டித்தான் நான் செல்ல வேண்டியிருக்கிறது
யமுனா தோழருக்கு,
மார்க்ஸியப் பிதாமகர்களைப் பற்றி எந்தக் கவிதையும் எழுதியதாக நினைவில்லை. லெனின், மார்க்ஸ் போன்ற பெயர்களை கவிதைககளில் பயன்படுத்துவதை Blasphemic notionsodu பார்க்க மாட்டீர்கள் என்று நம்பவே விரும்புகிறேன்.
அவதூறுகளுக்கென்றே இயங்கும் ஒரு இணையதளத்தில் நான் ஏதோ அரசியல் அணியில் இணைந்துவிட்டதாக நீங்கள் எழுதியிருந்தீர்கள் என்று நண்பர்கள் சொன்னார்கள். நான் இடதும் இல்லை, வலதும் இல்லை, நடுவிலும் இல்லை, விளிம்பில், ஒரு இடமற்ற அடையாளமாகவே இருப்பதாக சமீப காலங்களில் உணர்கிறேன். தோழர் அ.மார்க்ஸ், எனக்கென்று இல்லை, எந்தப் படைப்பாளிக்கு அச்சுறுத்தல் நடந்தாலும் அவர்களுக்காக சமரசமின்றி முன் நிற்பார்.அவர் மையமாக உருவாக ஒருபோதும் முயற்சிக்க மாட்டார். அவரிடம் இருக்கும் அபூர்வமான சனநாயகத்தன்மை அணிகளை, குழுக்களை உருவாக்கும் தந்திரங்களுக்கு எதிரானது.
யமுனா தோழர், இதே இரண்டு கவிதைகளை ஆங்கிலத்தில் வேறு யாரோ, வேறு நாட்டு முகவரியில் வெளியிட்டிருந்தால்,மொழிபெயர்த்து “எனக்குள் பெய்யும் மழை” இரண்டாம் பகுதியை தொகுக்க ஆரம்பித்திருப்பீர்கள். நான் உங்கள் அடுத்த வீட்டுப் பெண்ணாக இருப்பது தான் உங்கள் பிரச்ச்னை.
இறுதியாக பெருந்தேவி மற்றும் ஜமாலன் அவர்களின் இந்த விவாதங்களுக்கெல்லாம் பின்னால் பல முன்முடிவுகளும், வேறு நோக்கங்களும் இருப்பதாக எனக்குப் படுகிறது.
ரோசா : சோஷலிசத் தொடர்ச் சங்கிலியில் ஒரு புரட்சிக் கண்ணி
முக்கிய எதிரி வீட்டில் தான் இருக்கிறான்
“……புரட்சியின் போது செத்துப் போனவற்றைத் தட்டி எழுப்பியது பழைய போராட்டங்களை நையாண்டிப் போலி செய்வதற்காக அல்ல: புதிய போராட்டங்களைப் போற்றிப் புகழும் நோக்கத்திற்காகத் தான். யதார்த்தத்தில் அந்தப் பிரச்சினையைத் தீர்க்கும் பொறுப்பிலிருந்து தப்பியோடுவத்ற்காக அல்ல: கற்பனையில் அந்த குறிப்பிட்ட கடமையைப் பன்மடங்கு பெரிதுபடுத்திப் பார்ப்பதற்காகத் தான். அதனுடைய ஆவியை மீண்டும் நடமாடச் செய்வத்ற்காக அல்ல: புரட்சியின் ஆன்மாவை மீண்டும் கண்டடைவதற்காகத் தான்” – கார்ல் மார்க்ஸ்
ரோசா லக்சம்பர்க் என்ற மாபெரும் பாட்டாளி வர்க்கப் புரட்சியாளரின் சமூகப் பிண்ணனியைப் புரிந்துக் கொள்ளவும், அவரைப் பற்றிய மீளாய்வின் பொருளை உணர்ந்துக் கொள்ளவும் மார்க்ஸின் மேற்காணும் கூற்றை விடச் சிறந்தது ஏதுமில்லை. இரண்டாம் உலகப் போரின் முடிவு தொட்டே ரோசா லுக்சம்ப்ர்கின் வாழ்வு, சிந்தனை ஆகியவற்றின் மீது உலகம் முழுவதுமுள்ள மார்க்சியர்கள் காட்டத் தொடங்கிய ஆர்வமும், அக்கறையும் அதிகரித்துக் கொண்டே வந்துள்ளன. அந்த அக்கறையும் ஆர்வமும் தற்கால முதலாளித்துவத்தின் வளர்ச்சி, அனைத்துலகப் பொதுவுடமை இயக்கத்தில் ஏற்பட்ட மாற்ற்ங்கள் ஆகியவற்றோடு தொடர்புடையவை. உலக முதலாளித்துவத்திற்குத் தற்கால வெற்றியும், சோசலிஸ இயக்கத்திற்கு தற்காலிகச் சரிவும் ஏற்பட்டுள்ள இந்தநாட்களிலும் ஏறக்குறைய முக்கால் நூற்றாண்டுக்கும் முன்பே ரோசா எழுப்பிய கேள்வி “சோசலிஸமா அல்லது காட்டுமிராண்டி நிலையா?” இன்றும் பொருத்தமுடையதாக விள்ங்குகிறது.
வளைகுடாப் போர், சோமாலியா, அங்கோலா தொடங்கி, இலங்கை வரை ஏற்க்குறைய முப்பதுக்கும் குறையாத இடங்களில் உலக ஏகாதிபத்தியம் மாற்றாள் போர்களை நடத்தி வருகிறது. உலகச் சந்தையை மறுபங்கீடு செய்துக் கொள்ளவும், மூல வளங்களைத் தம் கட்டுப்பாட்டில் வைத்து கொள்ளவும் தான் இப்போர்கள். முதலாளித்துவமும், ஏகாதிபத்தியமும் ஒருபோதும் தம் இயல்பை மாற்றிக் கொள்ளாது என்ற உண்மையைத்தான் இப்போர்கள் மெய்ப்பிக்கின்றன, சோசலிஸம் கோட்பாட்டளவிலும், நடைமுறையிலும் மீண்டும் தன் வெற்றியை நிலைநாட்டிக் கொள்வதற்கு இந்த உண்மை ஒன்றே போதும்.
அதே வேளையில் சோவியத முகாமின் தகர்வு, சீனாவின் நிறமாற்றம் ஆகியன ஏற்கெனவே நிலவி வந்த சோசலிஸம் குறித்த மறுஆய்வைப் பல்வேறு கோணங்களிலிருந்து செய்ய வேண்டிய தேவையை அதிகரித்துள்ளன. அனைத்துலக மார்க்ஸிய இயக்கத்திலும் சோசலிஸ கட்டுமானத்திலும் இருந்த குறைபாடுகள், அவற்றில படிந்துள்ள அழுக்குகள் ஆகியவற்றை ஒப்புக் கொள்ளாமல் சோசலிஸத்தைப் புதுப்பிக்க இயலாது. கட்சி சர்வாதிகாரம், தன்னிச்சையான ஒடுக்குமுறைகள், கொடூரமான தணிக்கை முறைகள், சித்திரவதை முகாம்கள், ஆகியன இல்லாத சோசலிஸத்தை உருவாக்க முடியும் என்பத்ற்கான சான்றுகளை மார்க்ஸிய மரபிலிருந்து எடுத்துக் காட்டாமல் சோசலிசத்தைப் புதுப்பிக்க முடியாது. இத்தகைய மரபை உருவாக்கியவர்களில் ஒருவர் தான் ரோசா.
ஜனநாயகம் பற்றிய அவரது கீழ்க்காணும் கூற்று பல்வேறு சர்ச்சைக்குள்ளானது: ” அரசாங்கத்தின் ஆதரவாளர்களுக்கு மட்டும், ஒரு குறிப்பிட்ட கட்சியின் உறுப்பினர்களுக்கு மட்டும், சுதந்திரம் வழங்கப்படுமாயின் அது சுதந்திரமாக இருக்க முடியாது, சுதந்திரம் என்பது வித்தியாசமான கருத்துக்களைக் கொண்டிருக்கும் சுதந்திரம் தான்..அது தனிச் சலுகைகளாக மாற்றப்படும் அந்தக்கணமே அதன் பாத்திரம் மறைந்து விடுகிறது” உட்கட்சி ஜனநாயகம், பரந்துபட்ட மக்களின் ஜனநாயகம் ஆகிய இரண்டையும் மிக உயர்ந்த தளத்திற்கு எடுத்துச் செல்லும் ஆற்றலுடையவை அவரது கருத்துக்கள்.
பொது விதிகளை உருவாக்கிக் கொண்டு வரலாறில் ஏற்படும் தேசிய இனப் பிரசினைகளுக்கு தீர்வு காணமுடியாது” என்ற ரோசாவின் கருத்தோடு லெனின் முரண்பட்டது, இனறைய காலகட்டத்திலும் முக்கியத்துவம் பெறுகிறது.
ரோசாவின் கருத்துக்களை நேர்மையாக எடுத்துக் கூறாமலும், சர்வதேசப் பாட்டாளி வர்க்க லட்சியத்திற்காக அவர் செய்த மாபெரும் தியாகத்தை அங்கீகரிக்காமலும், அவரை லெனினின் புரட்சிகர மரபுக்கு எதிரானவராகக் காட்டும் அற்பத்தனத்தை சோவியத்துகளோடு, இந்தியாவிலுள்ள மார்க்ஸியர்களிடையேயும் காணலாம்.
ஒருநாளில் ஒருதடவையாவது ரோசா லக்சம்ப்ர்கின் பெயரை உச்ச்ரித்துவிடும் என் தோழன் ஷோபா சக்திக்காக, ரோசா தன் நண்பருக்கு எழுதிய கடிதத்திலிருந்து ஒரு பகுதி, “உலக வரலாறு ஒரு சுவையற்ற மலிவான மர்ம நாவலைப் போன்று காணப்படுகிறது, அதில் திகைப்பூட்டும், ரத்தம் உறையச் செய்யும் அமசங்கள் வாசகனை உணர்ச்சி வசப்பட செய்வதற்காக ஒன்றையொன்று முந்துகின்றன, ஏனெனில் ஒருவன் அத்தகைய நாவலைப் படிக்காமல் வைத்து விடக் கூடாது.வரலாற்றின் இயங்கியலில் நான் ஒருபோதும் ஐயுறுவதில்லை, வரலாறு இயங்குகிறது”
அப்புறம் எனக்கே எனக்கான ரோசாவின் வார்த்தைகள் “சிறைக் காவலின் கனமான் காலடிகளின் கீழ் சிக்குண்ட ஈரமண் அரைபடும் ஓசை ஒரு எளிய கவிதை போன்றது, அதனை எப்படி கேட்பது என்பதைத் தெரிந்துக் கொண்டதால்”
பாட்டாளி வர்க்கத்தின் எழுச்சியில் மட்டுமே அசைக்க முடியாத நம்பிக்கை கொண்டிருந்தவர் ரோசா. மிக்க பலம் கொண்டும், அறிவாற்றல் மிகுந்தும் சமூக ஜனநாயக ரீதியில் பயிற்றுவிக்கப்பட்டும், அமைப்புரீதியாக ஒழுங்கமைவு கொண்டும், கொள்கை ரீதியாகக் கற்பிக்கப்பட்டும் பாட்டாளிவர்க்கம் ஒருநாள் எழுச்சி பெறும் என்று ஜெர்மானிய பாட்டாளிவர்க்கம் பற்றிய அவரது நம்பிக்கை மானுடத்திற்குமானது.
போலந்து சிந்தனையாள்ர் ஐசக் தாட்சர் கூறியுள்ளதை நினைவு கூறுவது இங்கு பொருத்தமாக இருக்கும். “சந்தேகமில்லாமல் அவர் சில தவறுகளை ரோசா செய்திருந்தார், ஆனால் அவை லெனின், ஸ்டாலின் செய்த தவறுகளைப் போல மோசமானதல்ல”
ரோசாவை ஆழமாக கற்பது, அவரது போராட்டத்தை, வீரமரணத்தை தெரிந்துக்கொள்வது, புரட்சிகர வரலாற்றின் ஒதுக்கப்பட்ட பகுதிகள் தன்னியல்பு பெறுவத்றகு உதவியாக இருக்கும்.
நன்றி ரோசா லக்ஸம்ப்ர்க் பற்றிய தோழர் ராயனின் கட்டுரையும் புத்தகமும்