அதிகாரத்தின் துர்வாசனை.
ஜனவரி 3, 4 தேதிகளில் சென்னை பல்கலைகழகமும் பெண்கள் சந்திப்பும் இணைந்து நடத்திய பெண்ணிய உரையாடலின் அழைப்பிதழ் எனக்கு கிடைத்தது. அதன் கவிதைக்கான பொது நிகழ்வில் ஊடறு.காம் றஞ்சி தலைமையில், ஆழியாளின் கவிதைத்தொகுதியை மதுசூதனன் வெளியிட சுகிர்தராணி பெற்றுக்கொள்வதான நிகழ்வின் அறிவிப்பும் இருந்தது. இரண்டு மாதங்களுக்கு முன் தான் அண்மையில், இலங்கையில் காணாமல் போனவர்கள் பற்றி நான் எடுத்த White Van Stories குறித்த பொய்யான அறிக்கையை ஊடறு.காம் வெளியிட்டிருந்தது. அந்தப் பொய் அறிக்கையை அம்பலப்படுத்தி எழுதிய எதிர்வினைக்கு எந்த பதிலும் ஊடறுவின் தரப்பில் இல்லாமல் இருந்ததால், என் எதிர்ப்பை பதிவு செய்யலாம் என்று நான் “பெண்ணிய உரையாடல் அரங்கிற்கு” சென்றேன்.எந்த அதிகாரத்தின் பின்புலமுமில்லாத உதிரி படைப்பாளியை அவதூறு கொண்டு காயடிப்பதை எதிர்த்து எழுதுவதும், பேசுவதையும் தவிர வேறு என்ன தான் வழியிருக்கிறது?
ஊடறு.காம் ஆசிரியர் றஞ்சி, ஊடறு.காமின் ஆசிரியர் குழுவில் இருக்கும் ஆழியாள் மற்றும் பெண்ணியவாதிகள் வ,கீதா, அ.மங்கை, புதிய மாதவி, சுகிர்தராணி, பிரேமா ரேவதி, வள்ளி, என தோழிகள் நிறைந்திருந்த அரங்கும் என் தந்தையின் நண்பரும், இருபது வருடங்களாக என்னை குழந்தைப்பருவத்திலிருந்து அறிந்த குடும்ப நண்பருமான பேராசிரியர் வீ அரசின் இருப்பும் என் எதிர்ப்பை அந்த சபையில் பதிவு செய்யும் நம்பிக்கையை எனக்கு அளித்தது. ஊடறு றஞ்சி, சந்தியா இஸ்மாயில் என்ற முகமூடியில் ஒளிந்துக்கொண்டு எழுதிய பொய்களையே அங்கே திரும்ப திரும்ப பரப்பிக்கொண்டிருந்ததை, அந்த அரங்கின் மற்ற பங்கேற்பாளர்கள் எனக்கு தெரிவித்ததும் மனக்கொதிப்பாக இருந்தது. இந்தப் பொய்ப் பரப்புரைகள் என்னையும், என் படக்குழுவையும் பாதிப்பதை விட அந்தப்படத்தில் பங்கெடுத்த பாதிக்கப்பட்ட ஈழத்து தாய்மார்களையும் குடும்பங்களையுமே பாதிக்கும் என்பதை எடுத்து சொல்லி நியாயம் கேட்கலாம் என்று தான் அந்த சபைக்கு சென்றேன். துண்டறிக்கைகளையும் கையோடு எடுத்து சென்றிருந்தேன். படத்தின் எடிட்டர் தங்கராஜும், கேமிரா மேன் அரவிந்தும் நானும் மட்டுமே அங்கு சென்றோம். ஊடறு.காம் தன் பொய்யான அறிக்கையைத் திரும்ப பெற வேண்டும் என்றும், ஊடறுவின் அநியாயப் பரப்புரையால் நடந்த பாதிப்புகளுக்கு மன்னிப்பு கேட்க வேண்டும் என்றும் தட்டியைப்பிடித்துக்கொண்டு அமைதியாக தரையில் அமர்ந்து என் எதிர்ப்பை பதிவு செய்தேன். துண்டறிக்கையை வினியோகிக்க கூடாது என்றும் அந்த அரங்கத்தின் புனிதத்தை கலைக்க கூடாது எனவும் தடை விதித்தார் வீ.அரசு. என் படத்தின் எடிட்டரையும், கேமிராமேனையும் பார்த்து, ’என்ன ஆள் வைத்து கலாட்டா செய்கிறாயா’ என்று வசைபாடி துண்டறிக்கைகளையும் பறித்துக்கொண்டு, பின் தட்டி கேட்டபின், சிலருக்கு தானே வினியோகித்தார். அ.மங்கை ”என்ன நினைத்ததை செய்கிறாயா” என்று சத்தம் போட்டார். அமைதியாக தட்டிப் பிடித்துக்கொண்டு அமர்ந்திருந்த நான், ”சீப்பான அரசியல் செய்கிறாய்” என்று வீ.அரசு சொன்னதற்கு மட்டும், ’இல்லை அங்கிள், நியாயத்தைக் கேட்கிறேன், பதில் சொல்லுங்கள்’ என்று மட்டும் பதலளித்தேன். றஞ்சியும், ஆழியாளும் ஒரு மணி நேரம் நான் பிடித்து நின்ற என் பதாகை வாசகங்களுக்கோ, வினியோகித்த துண்டறிக்கைக்கோ பதில் சொல்லவில்லை. ஒரு மணி நேரமும் நிகழ்வு நடந்து முடிந்தது. யாரும் எதுவும் பேசவில்லை. நான் எதிர்ப்பு தட்டியோடு அமர்ந்திருக்க, பெண்ணியவாதிகளின் செருப்புகள் என் மேல் தூசியெறிய கடந்து சென்றன.நாங்களும் வீடு திரும்பினோம். உலகப் பெண்களுக்கெல்லாம் நீதி பேசிய அரங்கு சமகாலத்தில் மாற்று சினிமா களத்தில் இயங்கும் எனக்கு அநீதி இழைக்கிறார்களே என்பதை அன்றிரவே சமூக வலைத்தளத்தில் பதிவு செய்தேன்.
இன்று(4 ஜனவரி) மாலை புதியமாதவி தலைமையில், பாமா, தமிழ்ச்செல்வி, யாழினிவரன், சுகிரதராணி ”படைப்பும் வாழ்வும்” என்ற தலைப்பில் பேசும் நிகழ்வுக்கு சென்றேன். பாமா பேசியபின், நேற்றைய போராட்டத்திற்கு எந்த பதிலும் றஞ்சியும், ஆழியாளும் எனக்கு தராததால், அரங்கமும் என்னை அலட்சியப்படுத்தியதால் பேசுவதற்கு நேரம் கோரினேன். புதிய மாதவி அரங்கம் முடிந்தபின் பேசுவதற்கு நேரம் தருவதாக சொல்லிக்கொண்டிருக்கும் போதே, பேராசிரியர் வீ.அரசு மைக்கிற்கு வந்தார். நான் செய்ததெல்லாம் படத்திற்கான விளம்பர ஸ்டண்ட் என்றார். படத்திற்கு, சேனல் ஃபோர் ஒளிபரப்பை விட எந்த விளம்பரத்தை இந்த பெண்ணிய உரையாடல் தரும் என்பதை வீ.அரசு விளக்கினால் புரிந்துக்கொள்வேன் என சொன்னேன்.உன்னதமான படைபபாளிகள் பேசும்போது நான் தகராறு செய்கிறேன் என்றார். உன்னதமற்ற படைப்பாளியாகவே நான் இருந்துவிட்டுப் போகிறேன்! எனக்கு நீதி பெற தகுதியில்லையா? எனக் கேட்டேன். அ.மார்க்ஸ், ம.க.இ.கவினரை தனியாக கூட்டம் வைத்துக்கொள்ள சொன்னது போல என்னை தனியாக கூட்டம் வைத்துக்கொள்ள
அரசு கட்டளையிட்டார். ம.க.இ.க தோழர்களுக்கு பேச அனுமதித்தப் பின், அவர்கள் “லீனா மணிமேகலைக்கு தெரிந்த மார்க்ஸிய ஆண்குறிகளின் வகைமாதிரிகளை எங்களுக்கு சொல்ல வேண்டும்” என்று பேசியதால் தான் மார்க்ஸ் அவர்களை வெளியேறச் சொன்னார், அப்படியும் அதே அளவுகோள் வைக்க ’நான் கட்சியில்லையே, தனி ஆள் தானே, பேசுவதற்கும் அனுமதிக்கவில்லையே’ என்று கேட்டேன்.
பொறுமையிழந்த அவர், ”இவளை தூக்கி வெளியில போடுங்க” என்று கர்ஜித்தார். திரண்டு வந்த மாணவர்கள் விசில் சத்தம் கேட்ட கான்ஸ்டபிள்கள் போல என்னை இழுத்து சபையில் இருந்து வெளியேற்றினார்கள். எனக்கு ஆதரவாக பேசிய நண்பர்களையும், மாணவர்களை ஏவியே வெளியே தள்ளினார் வீ.அரசு. என்னுடன் வந்ததாக கருதிய பேராசிரியர் வீ.அரசு ,புகைப்படங்கள் எடுத்துக்கொண்டிருந்த யாரோ ஒரு இளைஞனையும் அடித்து, அவர் கேமிராவைப் பிடுங்கி கொண்டார். சென்னை பல்கலைகழக மாணவர்களை ஏவல் அடிமைகளாக பார்த்தது, என்னை சிறிது நேரம் White Van Stories படத்தையும், அவதூறாளர் றஞ்சியையும் கூட மறக்க வைத்தது.
சபைக்கு திரும்பிய பெண்ணியவாதிகள் சமூக நீதிக்கான தங்கள் அரங்கை தொடர்ந்து நடத்தினார்கள். வேடிக்கை பார்த்தவர்கள், மெளனம் சாதித்தவர்கள் ’உன்னத படைப்பாளிகளின்’ அறத்தில் பங்கேற்க திரும்பினார்கள். எல்லாவற்றிலும் மேலாக கதவுக்கு வெளியே காவலுக்கு ஏவப்பட்டு நின்றுக்கொண்டிருந்த மாணவர்களின் முகங்கள் என்னை அலைக்கழித்தது. என்னோடு வெளியேறிய நண்பர்களின் முகங்கள் பேயறைந்திருந்தது. சில
மீட்டர்கள் தள்ளியிருந்த தமிழக அரசின் தலைமைச் செயலக கூட்டத்திற்கு வந்த இடத்தில் தாக்கப்பட்டு வெளியேற்றப்பட்டது போல உணர்ந்ததாக ஒரு நண்பர் மனம் வெதும்பினார்.
வெளி வாசலில் கிடத்தப்பட்ட புத்தக கடைகளை நின்று சற்று வெறித்துப்பார்த்துவிட்டு கடற்கரை சாலையில் வெளியேறி நடந்தபோது அதிகாரத்தின் துர்வாசனை அடித்தது.
லீனா மணிமேகலை
தொடர்பு சுட்டிகள்
வெள்ளை வேன் கதைகளும் வேடிக்கை மனிதர்களும் : http://www.shobasakthi.com/shobasakthi/?p=1087
பெண்ணிய உரையாடல் அரங்கு
கருத்து சுதந்திரம் – தமிழ் பத்திரிகை சூழல் ( புதிய தலைமுறை ஆசிரி உரையாடல்)
from kalyan kumar kalyangii@gmail.com to Leenamanimekalai@gmail.com date 23 March 2012 14:53 subject உங்கள் கருத்து mailed-by gmail.com Signed by gmail.com Important mainly because of the people in the conversation. |
hide details 23 Mar (3 days ago) |
வணக்கம் லீனா,
போனில் தொடர்பு கொண்டேன். கிடைக்கவில்லை. லண்டனில் இருப்பதாக கேள்விப்பட்டேன்.
’இனியாவது திருந்துமா இலங்கை’ என்ற தலைப்பில் இந்த வாரம் கவர் ஸ்டோரி எங்களின் புதிய தலைமுறை வார இதழில் தயார் செய்து கொண்டிருக்கிறோம். ஒரு படைப்பாளியின் பார்வையில் உங்கள் கருத்து என்ன? அந்த நாட்டுக்கு எதிரான தீர்மானம் எந்த வகையில் பலன் அளிக்கும்? என்ன மாற்றங்கள் வர வேண்டும் என்று நீங்கள் விரும்புகிறீர்கள்?
உங்கள் பதிலை எதிர்பார்க்கிறேன். நன்றி.
அன்புடன்
கல்யாண்
புதிய தலைமுறை
9500061604
from leena manimekalai leenamanimekalai@gmail.comtokalyan kumar <kalyangii@gmail.com> </kalyangii@gmail.com> date 23 March 2012 20:58 subject Notes – Puthiya Thalaimurai mailed-by gmail.com |
hide details 23 Mar (3 days ago) |
Vanakkam. Below is my note. Please mail me and get it approved, if you make any corrections. This is a political opinion on a very sensitive issue and I dont want the note to be changed without my consent. thanks. Leena Manimekalai
இனியாவது திருந்துமா இலங்கை என்பதை எனறாவது திருந்துமா இந்தியா என்று மாற்றி கேட்க வேண்டும் நீங்கள்.
இலங்கை குறித்த பிரேரணைக்கு இந்தியா ஆதரவு அளிக்காதிருந்தால் கூட அந்தப் பிரேரணை 8 மேலதிக வாக்குகளால் நிறைவேற்றப்பட்டிருக்கும். இலங்கையின் உற்ற நண்பனும் யுத்தப் பங்காளியுமான இந்தியா ஏன் பிரேரணைக்கு ஆதரவான நிலையை எடுத்தது என நாம் சிந்திப்பது அவசியம்.
ஐநா மனித உரிமைகள் கூட்டத் தொடரின் முதல் நாள் (மார்ச் 7ஆம் திகதி) வைத்த தீர்மான அறிக்கை இறுதி நாள் வாக்கெடுப்பின் போது இரண்டு மாற்றங்களுக்கு உள்ளாகியிருந்ததது. இந்த இரண்டு மாற்றங்களும் இந்தியாவின் ஆலோசனையின் பேரிலேயே கொண்டுவரப்ப்பட்டுள்ளன என்பதை ஊடகங்கள் சுட்டிக்காட்டுகின்றன.
மார்ச் 7 தீர்மானத்தின் 3-வது பிரிவில், பன்னாட்டு மனிதாபிமானச் சட்டங்களின் கீழ் நடத்தப்பட வேண்டிய விசாரணையில் ஐ.நா.மனித உரிமை மன்றத்தின் ஆலோசனையையும், விசாரணையை மேற்கொள்வது தொடர்பான சட்ட ரீதியான தொழில் நுட்ப உதவிகளையும் இலங்கை அரசு ஏற்றுக் கொள்ளவேண்டும் என்ற கட்டாயம் இருந்தது.
இந்த 3 வது பிரிவையே இலங்கை மிக அபாயகரமானதாகக் கருதியது. இத்தீர்மானம் இலங்கை இறையாண்மையின் மீதான அமெரிக்காவின் அச்சுறுத்தலாக இலங்கை அரசு கொதித்தது. அப்போதெல்லாம் பிரேரணைக்கு எதிராகவே இந்தியா வாக்களிக்குமென நாடாளுமன்றத்தில் பிரணாப் முகர்ஜி தெரிவித்ததும் அதைத் தொடர்ந்து தமிழக எம். பிக்கள் எதிர்ப்பு தெரிவித்ததும் நிகழ்ந்தன.
இலங்கையை காப்பாற்ற இந்திய அரசு எடுத்த முடிவுதான் அந்தத் திருத்தங்கள். திருத்தங்கள் செய்யப்பட்டதால் தான் தீர்மானத்தை இந்தியா ஆதரிக்க முடிவு செய்தது. எனவே இலங்கையை அச்சுறுத்தக் கூடிய 3 வது பிரிவை “இலங்கை அரசுடன் ஆலோசனை நடத்தி அதன் ஒப்புதலைப் பெற்று நிறை வேற்றவேண்டும்” என்று இந்தியா திருத்தம் செய்துள்ளது. இதன் முலம் ஐ.நா.மனித உரிமை மன்றத்தின் வழிகாட்டலை ஏற்றுக்கொள்ளும் நிர்பந்தத்திலிருந்து இலங்கை தப்பித்துக்கொண்டது.
அதுமட்டுமல்லாமல் “விசாரணைத் தொடர்பாகவும், தமிழ் மக்களுக்கு செய்யப்படும் மனிதாபிமான நடவடிக்கைகளையும் ஆராய வரும் ஐ.நா. குழுவினர் இலங்கை அரசின் ஒப்புதலைப் பெற்றுத்தான் செல்ல வேண்டும் என்றும் ” புதிய அம்சம் தீர்மானத்தில் புகுத்தப்பட்டு இலங்கை இந்தியாவால் காப்பாற்றப்பட்டுள்ளது என்றே கருதவேண்டியுள்ளது.
கூடவே, தீர்மானத்தின் மூலம் இலங்கையை அச்சுறுத்தல் செய்த அமெரிக்கா தீர்மானம் நிறைவேறிய சூட்டோடு சூடாக
இலங்கைக்கு பாதுகாப்பு தளவாடங்களை ஏற்றுமதி செய்வதற்கான தடையை தளர்த்தி, வான் வழி மற்றும் கடல் வழி கண்காணிப்புக்கான கருவிகளின் ஏற்றுமதியை அனுமதித்துள்ளதாக தெரிவித்திருப்பது ஒன்றும் தற்செயலானதல்ல.
லீனா மணிமேகலை
2012/3/24 kalyan kumar <kalyangii@gmail.com>
Dear sir,
கவர் ஸ்டோரி குறித்த தனது கருத்தை லீனா மணிமேகலை மெயில் செய்திருக்கிறார்கள் – இது மிகவும் சென்சிடிவான மேட்டர் என்பதால் இதில் எதுவும் திருத்தங்கள் இருந்தால் அவரிடம் ஒப்புதல் பெற்றுக் கொள்ள வேண்டும் என கேட்டிருக்கிறார். அதை அப்படியே தங்களுக்கு ஃபார்வேர்டு செய்திருக்கிறேன்.
கவிஞர் தாமரை இன்று மதியம் சந்திக்க வரச் சொல்லி இருக்கிறார். மாலைக்குள் அவரது கருத்தையும் அனுப்பி வைக்கிறேன்.
அன்புடன்
கல்யாண்
From Maalan maalan@gmail.com to kalyan kumar <kalyangii@gmail.com> </kalyangii@gmail.com> cc leenamanimekalai@gmail.com date 24 March 2012 12:05 subject Re: Notes – Puthiya Thalaimurai mailed-by gmail.com Signed by gmail.com Important mainly because of your interaction with messages in the conversation. |
hide details 24 Mar (2 days ago) |
கல்யாண்,
இந்தக் கருத்துக்களை எழுத்து மாறாமல் வெளியிடுவதில் எனக்கு ஆட்சேபணைகள் இல்லை. ஆனால் அது குறித்து நிபந்தனைகள் விதிப்பதை ஏற்க முடியாது.
கருத்துரிமையை மதிக்கிறேன். ஆனால் பத்திரிகைக்கு எழுதுபவர்கள் ஆசிரியரின் உரிமையையும் மதிக்கக் கற்க வேண்டும். கருத்துச் சொல்கிறவர்களைப் போல ஆசிரியரும் பொறுப்பானவர்தான்
ஒரு இதழைப் பொறுத்தவரை ஆசிரியரின் முடிவே இறுதியானது. அதை ஏற்காதவரை நாம் ஏற்க வேண்டியதில்லை
எனவே இந்தக் கருத்து வெளியாகாது
லீனாவிற்கும் நகல் அனுப்பியுள்ளேன். நீங்களும் தெரிவித்து விடுங்கள்
அன்புடன்
மாலன்
———- Forwarded message ———-
From: leena manimekalai <leenamanimekalai@gmail.com></leenamanimekalai@gmail.com>
Date: 2012/3/24
Subject: Re: Notes – Puthiya Thalaimurai
To: Maalan <maalan@gmail.com>
வணக்கம் மாலன்,கல்யாண்,
என் கருத்துகள் வெளியிடுவது, அல்லது வெளி யிடாமல் இருப்பது என்பது உங்கள் முடிவு. ஆனால் நான் ஒன்றை சொல்லும்போது, அதைக் கருத்து மாறாமல் வெளியிடுங்கள் என்று கேட்பது என் உரிமை என்றே கருதுகிறேன். எழுதிக் கேட்கும் பத்திரிகையாளர்கள், பல சமயங்களில் அதை மாற்றி வெளியிடும்போது, பல கசப்பான அனுபவங்களை காலம் எனக்குப் பெற்றுத் தந்திருக்கிறது.
இதை நிபந்தனை என்று கருதுவதை விட , ஒரு படைப்பாளியும் கவனம் என்றே கருத வேண்டும் என்பது எனது நம்பிக்கை.
ஆனால் நீங்கள் கேட்ட விடயத்தில், நேற்று academic term break இருந்தும் நான்கு நீண்ட லெக்சருக்கு மத்தியில், நேரத்தை வளைத்து தான் மெயில் அனுப்பினேன். நேரமும் எல்லோருக்கும் எளிதாக கிடைப்பதில்லை தானே.
நன்றி
மணிமேகலை
ஒரு பெட்டை நாயின் கூச்சல்
http://www.lumpini.in/a_punaivu-005.html
மகாஸ்வேதா தேவியின் “திரெளபதி” என்ற கதையில் வரும் காட்சியில் ராணுவ அதிகாரி முன் திரெளபதி நிர்வாணமாக நிற்கிறாள். அவள் தொடைகளிலும், முலைகளிலும், அல்குல்லிலும் உறைந்துப் போன ரத்தம். “இவ துணியெல்லாம் எங்க? “என்ற ராணுவ அதிகாரியின் கேள்விக்கு “உடுத்த மாட்டேங்கிறா சார், கிழிச்சுப் போட்டுட்டா” என்கிறார்கள்.மேலும் அதிகாரியின் அருகில் வரும் திரெளபதியின் கரிய உடல் குலுங்க ஆவேசமாக சிரிக்கிறாள். அவளின் குதறப்பட்ட உதடுகளிலிருந்தும் ரத்தம். “துணி என்ன துணி? யாருக்கு வேணும் துணி? என்னை நிர்வாண்மாக்க உன்னால் முடியும், ஆனால் என்னை திரும்ப உடுத்த வைக்க முடியுமா? சீ.. நீ ஒரு ஆம்பளையா?” என்று கேட்டுவிட்டு ராணுவ அதிகாரியின் தூய வெள்ளை சட்டையில் “தூ” என்று துப்பிகிறாள். “நான் பார்த்து வெட்கப்பட வேண்டிய ஆம்பளை இங்க யாருமில்ல, என்மேல் துணியைப் போட எவனையும் விட மாட்டேன். என்ன செய்வே? வா என்னை என்கெளண்ட்டர் பண்ணு” என்று சிதைக்கப்பட்ட முலைகளோடு தன்னை நெருங்கும் நிராயுதபாணியான டார்கெட் முன்னால் அதிகாரி பயப்படுகிறார். அது ஒரு அமானுஷ்ய பயம்.அந்த பயம் தான் ‘பெண் கவிஞர்கள் தம்மை திடுக்கிட்டு திரும்பிப் பார்க்க வேண்டுமென்பதற்காக ஆடையை அவிழ்த்தெறிகிறார்கள்’ என்ற விமர்சனத்தின் அடிப்படையும் காரணமுமாக இருக்க முடியும்.
தமிழ்ப் பெண் கவிதையின் தொப்புள் கொடியை சங்க காலத்தின் ரேகைகளிலிருந்து எடுக்கிறார்கள் பெண்ணியல் ஆய்வாளர்கள். பின், சமணம், பெளத்தம் என்று பெருமத காலங்களில் மடிந்து, பக்தி காலங்களில் சைவத்திற்கொரு காரைக்கால் அம்மையார்,வைணவத்திற்கொரு ஆண்டாள் என்று புனிதத்தில் தட்டுப்பட்டு, ஒரு நீண்ட தலைமறைவு காலத்தைக் கடந்து, 1970 களில் அரசல் புரசலாகத் தெரிந்து, 90களில் எழுச்சி பெறுகிறது. இது எழுச்சி அல்ல, சுழற்சி என்று சொல்பவர்கள் உண்டு. நிகழ்கால நோக்கில், பழங்கால இலக்கியங்களை ஆராயும் ஆய்வுகள் அடிக்கருத்தியல் மட்டும் சார்ந்தவையா என்ற கேள்வியும் கூடவே எழுகிறது.சங்ககால பெண்பாற் புலவர்களின் பாடல்களிலிருந்து, அக்காலத்துப் பெண்களின் காதல், பொருளாதார சார்புத்தன்மை, வீடே “வெளியாக” இருத்தல், பரத்தையிடம் சென்று வரும் கணவனையும் ‘கற்பு’ நெறியோடு ஏர்றுக் கொள்ளுதல், உடன் கட்டை ஏறுதல், கைம்மை, காதலனை கையகப்படுத்தும் முயற்சிகள் என்பது போன்ற கருப்பொருள்களை சங்க காலப் பெண்பாற் புலவர்களின் பிரதிகளில் காண முடிகிறது. காமத்தை வெளிப்படுத்துதல், காதல் துணையை தேடிக் கொள்வதில் இருக்கும் தேர்வுரிமை, களவொழுக்கம், போன்றவற்றை சுட்டிக் காட்டி, சங்க காலத்தில் ஆண் பெண் சமத்துவம் நிலவியது போல சில விமர்சகர்கள் குறிப்பிட்டாலும், சங்ககாலச் சூழல் தாய்வழி சமூகத்தின் மிச்ச சொச்சங்களையும், தந்தை வழி சமூகம் வேரூன்ற ஆரம்பித்த காலகட்டைத்தையும் கொண்டிருந்ததாக கணக்கிலெடுக்க முடியும்.
பக்தி இயக்கம் தந்த கவி ஆளுமைகளான ஆண்டாளும், காரைக்கால் அம்மையாரும் புனிதப்படுத்தப்பட்ட பிம்பங்கள். அன்றாட வாழ்வின் பெண் இருப்புக்கும், அவர்களின் பனுவல்களுக்கும் எந்த தொடர்பும் இல்லை. கருத்து ரீதியில் சமய நம்பிக்கையுடன் தன்னை அடையாளப் படுத்தும் அம்மையாரின் குரலில் மரபு வழிப்பட்ட பார்வையே பொதிந்துள்ளது. வேட்கை, விழைவு, இச்சை என்பனவற்றை முறைப்படுத்தி ஒருவித ஒடுங்கிய மன அமைப்பைத் தோற்றுவிக்கும் பக்தி உணர்வை காம விழைவாக எழுதிய ஆண்டாள் தனித்துவமிக்கவராகத் தெரிகிறார். ஆனால் கடவுளைக் காமுறுதல் என்ற “சலுகையினாலேயே” அவருடைய துய்ப்பும், திளைப்பும், மறுக்கப்படாமல் பெருக்கப் படுகின்றன, சிவனும், திருமாலும் பாலியல் பிரதிமைகளாக(Sexual Icons) மாறி பக்தைகளைப் பித்தாக மாற்றுவதும் லிங்கமையவாதத்தையே நிலை நிறுத்துகிறது.
2003 ல் எழுத வந்த எனக்கு முன் ஒரு நீண்ட பட்டியல் இருந்தாலும், வித்தியாசப்படுத்துதல் என்ற திசை நோக்கிய பயணம் 1990 களுக்குப் பிறகே பெண் கவிதைக்கு சாத்தியப்பட்டிருக்கிறது.
பாலினம் கடந்த எழுத்தை எழுதிவிட வேண்டும், பெண் எழுத்து என்பது மாதிரியான சொல்லாடலைக் கடுமையாக எதிர்க்க வேண்டும், பார்ப்பனியப் பெண்ணெழுத்து, பார்ப்பனியரல்லாதப் பெண்ணெழுத்து, தலித் பெண்ணெழுத்து என்றெல்லாம் பார்க்க கூடாது போன்ற அடையாள மறுப்பு அரசியலில் ஆர்வமும், குறிக்கோள்களும் மிகுந்தாலும், கடுமையான சிக்கல்கள் இருக்கின்றன.சாதி, மத, பாலின, வர்க்க வேறுபாடுகளும், ஏற்றத்தாழ்வுகளும் புரையோடிப் போயிருக்கும் சமூகத்தில், ஒரு தன்னிலை இவை எல்லாவற்றையும் கடந்துவிடும் இருப்பை அடைந்துவிட முடியுமா? அப்படியொரு இருப்பு சாத்தியமாகாதப் பட்சத்தில் எல்லாவற்றையும் கடந்தப் பிரதி மட்டும் எப்படி சாத்தியம் என்ற நெருக்கடி உண்டாகிறது.
உடலுக்கு வெளியே, கலாசாரத்திற்கு வெளியே, நிறுவனங்களுக்கு வெளியே, எல்லைகளுக்கு வெளியே, தேசங்களுக்கு வெளியே தன்னை நிறுத்திக் கொள்ளும் முயற்சியாகத் தான் ஆணும் சரி, பெண்ணும் சரி எழுத வருகிறார்கள். ஆனால் நடைமுறையில் அற்பமாகவும், வரலாற்றில் ஒடுக்கப்பட்டவர்களாகவும் இருக்கும் தன்னிலைகளுக்கு கூடுதல் காரணங்கள் இருக்கின்றன என்பதை ஒத்துக் கொள்ள வேண்டியிருக்கிறது. இனத்தில், வர்க்கத்தில், பாலினத்தில், சாதியில் படிநிலையில் “மேலிருப்பவர்கள்” மீது சந்தேகமும், எச்சரிக்கையும், சுயமரியாதையும் கொண்டிருப்பதும், “கீழிருப்பவர்கள்” முன் குற்ற உணர்ச்சியும், “படிநிலை நீக்கம்” செய்ய விழையும் முனைப்பும், பழியையும் அதற்குரிய தண்டனையையும் கூட ஏற்றுக் கொள்வதுமாகத் தான் “இருப்பை” புரிந்துக் கொள்ள முடிகிறது.கலைச் செயல்பாடும் அதிலிருந்தே தொடங்க முடிகிறது. அந்த வகையில் சலனங்களை ஏற்படுத்தியவை, பொதுப் புத்தியை தொந்தரவு செய்தவை, நிறுவனங்களைக் கேள்வி கேட்பவை, சுரண்டல்களிலிருந்து இருப்பை விடுவிக்க நினைப்பவை, அசலான வித்தியாசங்களின் மீது வினை புரிந்தவை, ‘பெண்மை’ மேலானது – ‘பெண்’ இழிவானவள் அன்ற முரண்பாட்டைத் திருகியவை என்ற வகைகளில் பெண்ணெழுத்து கடந்தப் பத்தாண்டுகளில் தான் வினை புரிந்திருக்கின்றது.
“பெண்ணுடல் என்ற நிலத்தின் மீதே தந்தை வழி சமூகம் நிறுவப்பட்டது. பெண் தன்னிடம் சிதறிக் கிடக்கும் மன ஆற்றல்களையும், உடல் வல்லமையினையும் நோக்கு நிலையினையும் ஒன்றிணைக்க வேண்டுமானால் அவள் சிந்திப்பது உடலினூடாக நிகழ வேண்டும்” என்கிறார் பெண்ணியலாளர் அட்ரியன் ரிச். பெண் பெயரில் கையெழுத்துப் போட்டால் மட்டும் பெண்ணெழுத்து ஆகிவிட முடியாது.பாலின விழிப்புடன் எழுதும் சில ஆண் பிரதிகளிலும் பெண்ணெழுத்து நிகழ்ந்துவிடும் வாய்ப்புகளையும் மறுக்க முடியாது.
90களுக்குப் பிறகானப் பெண்கவிகள் முரணும் உடன்பாடுமாய் வெவ்வேறு தளங்களைத் தொட்டுச் சென்றிருந்தாலும், அவர்களின் பிரதிகளில் இருக்கும் “பிரதானப் போக்குகளை” அவதானிக்கலாம்.பெண் எழுத வந்ததே அரசியல் செயல்பாடு, மறுக்கப்பட்ட குரல்களின் வெளிப்பாடு, எதிர்ப்பின் தடயங்கள் என்ற அடிப்படையில் எழுத வந்த எல்லா பெண் கவிஞர்களையும் பொருட்படுத்த வேண்டும் என்றாலும், ஆணின், அதிகாரத்தின், நிறுவனத்தின் மொழியையே மறுபதிப்பு செய்யும் பிரதிகளை நிராகரித்து விடலாம்.அரசியல் மற்றும் கவித்துவத்தைக் கூட்டுவித்து வாசிப்பாளரை நுகர்வோராக மாற்றாமல் செயலூக்கமுள்ள பங்கேற்பாளராக மாற்றும் குறிக்கோளை ஓரளவு அடைந்திருக்கும் பிரதிகளாய் சிலவற்றை அடையாளங் காணலாம்.
“என் உடலுடன்
நான் உறங்க வேண்டும்
இடது கரத்தால் சிவனைப்
பிய்த்தெறிந்து விட்டு”
என்ற மாலதி மைத்ரியின் கவிதை, பெண்ணின் நினைவு உலகத்தை தன் கட்டுக்குள் கொண்டு வரும் ஆணின் உச்சக்கட்ட அடக்குமுறையை சிதைக்கிறது. ஆணை, அதன் வழியே அதிகாரத்தை வெளியே நிறுத்தும் துணிச்சலை அவர் பிரதிகள் செய்கின்றன. தாய்மை வழியாக குடும்ப அமைப்பை கையகப்படுத்தி சமூகத்தையும் கையகப்படுத்துவதன் மூலம் அதிகாரத்தை தாயை நோக்கி திரட்டிக் கொள்ளும் அரசியலை முன் வைக்கிறார்.மறு உற்பத்தி பெண்ணின் விடுதலைக்கு தடையாய் இருக்கிறது என்பதை மறுத்து தாய் – சேய் உறவை உயிரியல் அம்சமாகப் பார்க்கிறார். ஆண் – பெண் இணை முரணைத் தலைகீழாக மாற்றிப் போட்டு பெண் – ஆண் என்று பெண்ணை முதன்மைப் படுத்தும் செயல்பாடுகளை மாலதியின் கவிதைகள் செய்துப் பார்க்கின்றன.ஆனால் அந்த இணை முரணை, முரண்களாகவே நிறுத்திவிடாமல், சிதைத்துக் கலவையாக்கி விடும் எழுத்துமுறையை, பன்மைத்துவத்தை எழுதிப் பார்க்கும் சவாலை விட்டுவிடுகின்றன. பெண்ணை தனிமைப்படுத்தும் மாலதியின் கவிதைகள், அவளின் சுதந்திர இருப்பிற்கான மாற்று வழிகளை சொல்லத் தவறுகின்றன.
பெண் துறவை வழிமொழியும் ரிஷி, பெண் இருப்பையே வலியாகவும், மனப்பிறழ்வாகவும் வரிக்கும் சுகந்தி சுப்ரமணியன், மத்தியதர வாழ்க்கை, பணியிடம், குழந்தைகள் என்பது போன்ற “நல்ல” கச்சாவை மட்டும் கவிதையாக்கும் வெண்ணிலா, உழைக்கும் பெண்களைக் காட்சிப்படுத்தும் இளம்பிறை, காழ்ப்பையும் கழிவிரக்கத்தையும் அழகியலாக்கும் உமா மகேஸ்வரி என்று பெண்கவிகள் தங்களுக்கென்று அலாதியான உலகங்களை உருவாக்கிக் கொண்டு எழுதி வருகிறார்கள் என்றாலும் சமநிலையை குலைத்துப் போடும் பொறிகளே காலத்தின் தேவையாய் இருக்கின்றன.
பிரமிளிடமிருந்து படிமங்களையும், தேவ தேவனிடமிருந்து ஆன்மிகத்தையும், கோணங்கியிடமிருந்து இடுகுறி சொற்களையும் எடுத்துக் கொண்டு எழுதும் குட்டி ரேவதி, ஆண் மையங்களை குலைக்காமல் அதன் எச்சங்களையே அடுக்குகிறார். ஆணை அறியாதவனாக்கி ” நான் வேறொரு உலகத்தைக் காட்டுகிறேன் வா” என்ற பெண்ணின் அழைப்பை கவிதைகளாக்குகிறார். அதன் மூலம் தன் ஆளுமையை கட்டமைக்கிறார். ஆணின் ஒடிபஸ் காம்ப்ளெக்ஸிற்கு வடிகாலாய் இருக்கின்றன இவரின் பிரதிகள்.அதிகார வடிவங்களை அப்படியே வைத்துக்கொண்டு உள்ளடக்கங்களை மட்டும் மாற்றிவிடுவது, அரசியலாக உடலை முன் வைக்காமல் வெறும் பேச்சாக அதைப் பெருக்குகிறது. அதனாலேயே தயாரிக்கப்பட்ட உடல்களை எப்படி வீழ்த்துவது என்ற கேள்வியை கேள்வியாகவே விட்டுச்செல்கின்றன.
“ரயில் நிலையத்தின் இரு மருங்கையும்
அணைத்துக்கொண்டிருந்த இரவின்
பால்வாசனையுடைய மேனியைத் தீண்டிய் ரயில்
வேகமெடுத்தது
மரத்தின் ரசத்தை உறிஞ்சி ஆடிய இலையொன்று
தன்னைக் கடந்த பருவத்தின் வேகம் நோக்கி
பழுத்து வீழ்ந்தது
முன்பின் பருவங்களின் நினைவுச் சின்னமாய்ப்
பூவின் மகரந்தங்கள் பெருக்கிய உடலை
மரம் சுமந்து நிற்கிறது
பொன்துகள் உதிரும் பலரியின் அழகை
நீயும் காணவேண்டுமென ஏங்குகிறேன்.
கிழவியின் உடலுக்குள் நீந்திய உடலில்
பைத்தியத்தின் குழப்பமற்ற கண்களுடன் தோன்றிய அவனோ
ஏழுகடல்கள் தாண்டி கூடு கட்டிய
மந்திரக்கிளியின் உயிர்தேடிச் சென்றிருக்கிறான்”
என்பது போன்ற இவரின் படிமமொழி தந்திரங்கள் வாசிப்பவரைக் களைப்படையச் செய்பவை.
“எல்லா அறிதல்களுடன்
விரிகிறதென் யோனி”
என்றெழுதும் சல்மாவின் வரிகள் ஒரு சராசரிப் பெண்ணின் எதிர்வினையை மட்டுமே ஆற்றுகின்றன.ஆணின் வஞ்சகத்தைக் காட்டிக் கொடுத்தாலும், அவனிடமே தன்னை ஒப்புக் கொடுத்துவிடும் இயலாமையாய் எஞ்சுகின்றன. ஆணின் விசாரணைக்குள்ளேயே இருந்துக் கொண்டு ஒரு பெண் தன்னை யார் என்று கண்டுபிடித்துவிட முடியாது என்பதை உணர்த்தும் பிரதிகள் இவருடையது. ஆனால் உடைமைவாதிகளான ஆண்களின் “எங்கே பறிமுதல் செய்யப்பட்டு விடுவோமா? எங்கே அடையாளமிழந்துப் போவோமா? ” என்ற பயங்களை மிக நுணுக்கமாக வெளிப்படுத்த சல்மா தவறவில்லை.
“எலி கீறிய காலில் குருதி கசிகிறது
கரப்பான் எகிறிப் பறக்கின்றன
முதுகில் நடந்து சென்ற புலியின் சுவடுகளை
எப்படி பார்ப்பது”
என்ற சுகிர்தராணியின் எழுத்தில் இருக்கும் களிப்பு ஒரு தாய்வழி சமூகப் பெண்ணிற்கே உரிய மூர்க்கத்திலிருந்து வருவது.போலி ஒழுக்கங்களுக்கு கட்டுப்படாத கச்சாவான எதிர் அழகியலை உருவாக்கியதில் சுகிர்தராணி முக்கியமானப் பங்காற்றுகிறார்..
பண்பாடுxஇயற்கை எதிர்வுகளில் இயற்கையோடு பெண்ணைப் பொருத்திப் பார்ப்பது, கொற்றவை, நீலி, பத்ரகாளி எனத் தொன்மத் தெய்வங்களோடு உருவகப்படுத்திக் கொள்வது, பெருங்கதையாடல்களை புறந்தள்ளி ஒருவித பேகனிஸ்ட்(Paganist) கலகத்தை செய்தாலும், உயர்வு நவிற்சிகள் விட்டில் பூச்சிகள் போல திரும்ப திரும்ப லிங்கமய அழகியலுக்குள்ளேயே விழவைக்கிறது என்ற அபாயத்தைப் புறந்தள்ள முடியாது.
ஒட்டுமொத்தமாகத் தொகுத்துப் பார்த்தால் ஏற்கெனவே கட்டமைக்கப்பட்டப் புனிதங்களின் மீது சந்தேகங்களும் அவற்றின் மேலான ஒரு ரண சிகிச்சையும் பெண்கவிதை உளவியலாக மேற்கொண்டிருக்கிறது என்பதை ஒத்துக் கொள்ளலாம்.கலாசார அரசியலில் இது ஒரு குறிப்பிடத்தகுந்த சலனம் என்றாலும் இன்னும் செய்ய வேண்டியவை ஏராளம் இருக்கின்றன.
சமகாலத்தில் ஒற்றையிலையென, உலகின் அழகிய முதல் பெண் என்று இரண்டு தொகுப்புகளை எழுதியவள் என்ற அடிப்படையில், பெண் எழுத்து எம்மிடம் கோரி நிற்பவை எவை என்பதை உரையாடலாக வைக்கிறேன்.இந்த கட்டுரையில் நான் சொல்ல விழைவதெல்லாம் முற்றும் முதலான முடிவுகளல்ல. நான் ‘சொல்வதெல்லாம் சரி’ என்று நிறுவ நான் நிறுவனமும் அல்ல. விவாதங்களுக்கான வாசல்களுடன் தான் என் கருத்துக்களையும் விமர்சனங்களையும் வைக்கிறேன்.
மரபிலி பிரதிகளைக் கண்காணிக்கும் அதிகார எந்திரம் தன் ஒழுங்கு நடவடிக்கைகளை பிரதியாளரின் மீது நீட்டித்து தாசி, தேவடியாள், அவிசாரி, பைத்தியக்காரி, முண்டை, வேசி, விபசாரி என்று பெயர்களிட்டுப் பாலியல் ரீதியாக ஒடுக்குவது. பெண் படைப்பாளியை திமிர் பிடித்தவள் என்றும் அவளைப் பலரும் புணர்ந்து தான் ஒடுக்க வேண்டும், யோனி வழியாக மட்டுமன்றி வாய்/குதம் வழியாகவும் புணர்ந்து ஒடுக்க வேண்டும் என்று குரலிடுவது, எழுதுவது போன்ற வன்முறைகளை செய்பவர்களின் மீது பகையை அறிவிக்க வேண்டும். அப்படிப்பட்ட சக்திகளோடு “பெண்” விசயத்தில் தானே அவர்கள் அப்படியிருக்கிறார்கள், மற்ற விசயங்களில் சேர்ந்து செயல்படலாம் என்று உடன்படும் பரந்த மனதுக்காரர்களின் இரட்டை வேடங்களை எழுத்தளவிலாவது தொடர்ந்து தோலுரிக்க வேண்டும். சாதி திமிரோடு இருக்கும் சக்திகளோடு எப்படி சகிப்புத் தன்மையைக் காட்ட முடியாதோ, அதே போல பாலினத் திமிரோடு இருக்கும் சக்திகளோடும் வேறு விசயங்களுக்கான கூட்டு நடவடிக்கைகளையும் மறுக்க வேண்டும். பாலின விழிப்பை முன் நிபந்தனையாக வைத்து பிரதிகளுக்குள்ளும், பிரதிகளுக்கு வெளியேயும் கறாராக இயங்க வேண்டும்.பெண்ணாக இருந்தும் ஆண்நிலைவாதக் குப்பைகளை எழுதுபவர்களும், அவர்களின் பிரதிகளும் இதில் விதிவிலக்கல்ல.
நடைமுறையில் பெண்வெளிக்கான , சுதந்திர இருப்புக்கான மாற்றுப் புனைவுகளை எழுதும்போது, நாம் வாழ்வதும் புனைவுகளுக்கு மத்தியில் தான் என்று உணரத் தலைப்பட வேண்டும். உண்மைகளையும், யதார்த்தத்தையும் திட்டமிட்டு குழப்பவேண்டும். மானுட சித்தாந்தங்கள் சந்தர்ப்பவசமாக ஏன் ஆண்களாலேயே எழுதப் படுகின்றன என்ற கேள்வியும், அவற்றின் மீது தீராத சந்தேகமும், அதிகார மறுப்பையும் பிரதிகளில் அச்சமில்லாமல் வைக்க வேண்டும்.
ஆண் பெண் ஏற்றத்தாழ்வை இதுவரை வந்துப் போன எந்த சித்தாந்தமும், தத்துவமும், கோட்பாடுகளும், தீர்த்ததாய் வரலாறோ, நிதர்சனமோ இல்லை. பெண்ணினத்தின் மீது ஒரு அறிவிக்கப் படாத போர் நடந்துக் கொண்டே தான் இருக்கிறது என்பதை அரூபமாகவோ, நேரிடையாகவோ பிரதிகளில் வைப்பதை தவறவிடக் கூடாது.
அனுமதிக்கப் பட்ட வெளியில் மட்டுமே பயணிக்கக் கூடிய அபத்தங்களை பெண்மொழி தாண்டிவிட்டதாக கருதினாலும், பெண்ணிய அனுபவங்களை மானுட அனுபவங்களாக மாற்றுவதற்குரிய புத்தொளிகளை, சமூகத் தணிக்கை, அரசுத் தணிக்கை, சந்தைத் தணிக்கை, சுயத் தணிக்கை யெல்லாம் தாண்டி இன்னும் இன்னும் பெண்ணியப் பார்வைப் படாத தளங்களில் பாய்ச்ச வேண்டும்.
ஆணுக்குப் பெண் மேலானவளும் அல்ல, கீழானவளும் அல்ல, வேறானவள் என்ற புள்ளிக்கு பெண்கவிதை நகர்ந்து வந்திருக்கிறது. ஆனால் அந்த வேறானவள் என்பதைப் பன்மைப் படுத்திப் பார்ப்பது அவசியம்.இன்னும் கவிதை தரிசிக்காத பெண் உலகங்களை, அனுபவங்களைக் கண்டெடுக்க வேண்டும்.
நுகர்வு, சந்தை நவீனங்கள் ஏற்படுத்தியிருக்கும் கொடூரமான பொய்மை, ஏமாற்று, ஏற்றத்தாழ்வு, அதிகாரத்துவம் போன்றவையின் நுண் அத்துமீறல்களை, அதன் வடிவங்களை எதிர்க்க சொற்களைப் பழக்கலாம், அல்லது புதிய சொற்களை உருவாக்கலாம்.
வடிவம், கூற்றுவகை, உத்தி, அமைதி, போன்ற ஒழுங்குகளுக்கு கட்டுப்பட வேண்டும் என்ற கெட்டி தட்டிப் போன மதிப்புரையாளர்களின் அதிகாரங்களைத் தாண்டி பென்ணெழுத்துக்கான விமர்சனத்திற்கென புதிய உபகரணங்களைக்(tools) கோர வேண்டும்.
மார்க்ஸியத்திற்கு உழைப்பு எப்படியோ அப்படித்தான் பெண்ணியத்திற்கு பாலியல்பு என்றார் காதரீன் மக்கின்னென்.உழைப்பை மூலதனமாகக் கொண்ட தொழிலாளர்களை அமைப்பு ரீதியாகச் சுரண்டும் அமைப்பில் வர்க்க வேறுபாடு தொழிற்படுகிறது. அதே போல பெண்ணின் பாலியல்பை அமைப்பு ரீதியாக சுரண்டும் அமைப்பில் பாலின வேறுபாடு தொழிற்படுகிறது. பாலியல்பு குறித்த விவாதம் பெண்ணிய அரசியலின் மையப்புள்ளியாக பெண்ணடிமைத் தனத்தைக் கருதவில்லை. இருபாலருக்குமான பாலியல்பு சுதந்திரத்தைக் கொண்டாடுவது, உடல் வேட்கையைக் கொண்டாடுவதை அங்கீகரிப்பது, இருபாலியல்பு, ஓரினச் சேர்க்கை ஆகியவற்றை தந்தைமை சமூகத்திற்கு சவால் விடும் கண்ணிகளாக அங்கீகரிக்கும் அரசியலைப் பெண்ணெழுத்து முன்னெடுப்பது முக்கியம்.
பெண்களை இணைந்து வேலை செய்ய விடாமல் செய்யும் தந்தைமை ஆதிக்க மதிப்பீடுகளில் உள்ளார்ந்த காலனியத்திற்கு அடிமைப்படாமல், ஆண்களின், ஆண்கள் நடத்தும் நிறுவனங்களின் ஏற்புக்காக நடக்கும் போட்டா போட்டியில் பெண்கள் ஒருவருக் கொருவர் வெறுப்பும், பகையும், பொறாமையும் விட்டொழித்து கவிதா செயல்பாடுகளில், அரசியல் நடவடிக்கைகளில், பொது எதிரிக்கு முன்னாவது இணைவது உத்தமம்.
உண்மையில்,பாட்டாளிகளை விடவும், தலித்துகளை விடவும் பெண் தான் தோல்விகளையே நீண்ட கால அனுபவங்களாக, போராட்ட வரலாறாகப் பெற்றவள். தலித்துகளுக்கு சோசலிச நிர்மாண வழியோ, அல்லது இன்றுள்ள முதலாளியப் பாதையோ திறந்திருக்கின்றன. பாட்டாளி மக்களுக்கு பொதுவுடைமை மார்க்கம் ஒரு இலட்சியமாகக் காட்டப்பட்டிருக்கிறது.ஆனால் விடுதலை பெற விரும்புகிற பெண்ணுக்கு மாற்றுவழி என்ன?
கவிதை சந்தேகமின்றி அதன் பயன்பாட்டு மதிப்புக்காக ஏற்றுக் கொள்ளப்படக்கூடிய ஒன்றாக இருத்தல் வேண்டும். எல்லாப் பெரும் கவிதைகளும் ஒரு சரித்திரப் பூர்வமான சாட்சீய மதிப்பீடைக் கொண்டிருக்கின்றன என்கிறார் பிரெக்ட்.
பன்னெடுங்காலங்களாக மானுடத்திற்கான ரொட்டிகளை தயாரிக்கும் பெண்ணுக்கு கவிதைகள் எம்மாத்திரம்.
லீனா மணிமேகலை
(நாகை மாவட்ட “கலை இலக்கியப் பெருமன்றத்தின்” முட்டம் முகாமில் வாசிக்கப்பட்ட கட்டுரை. 16.05.10)
வரிகளுக்கிடையே….
http://innapira.blogspot.com/2010/04/x.html
http://innapira.blogspot.com/2010/04/blog-post_20.html
http://jamalantamil.blogspot.com/2010/04/blog-post_20.html
http://jamalantamil.blogspot.com/2010/04/x.html
மேற்குறிப்பிட்ட லிங்குகளில் மதிப்பிற்குரிய பெருந்தேவி மற்றும் ஜமாலன் அவ்ர்களின் என் கவிதைகள் குறித்தான கட்டுரையும், உரையாடலும் நடைபெற்றுக் கொண்டிருக்கிறது. மகிழ்ச்சி.
கட்டுரை வெளிவந்தவுடன் என் எதிர்வினையை இருவருக்கும் மெயிலாக அனுப்பியிருந்தேன். அதை பின்னூட்டமாக வெளியிட்டார்கள். அதன்பிறகு தோழர் ஜமாலன் ஒரு மெயில் அனுப்பியிருந்தார். அதன்பிறகு கட்டுரையை திரும்ப படித்துவிட்டு என் பின்னூட்டத்தை அனுப்பியிருந்தேன். அதை ஒரு வாரமாகியும் வெளியிடவில்லை.அந்த இடைவெளியில், வேறு பலரின் பின்னூட்டங்கள் வெளியாகிக் கொண்டு தான் இருந்தது. பெருந்தேவி வாஷிங்டன் போய்விட்டார் என்று மெயில் எழுதினார் ஜமாலன். அந்த ஒரு வாரத்தில் ஃபேஸ்புக்கில் தமிழ்நாட்டு தஸ்லிமா ஆகவேண்டுமென்றால் என்ன மாதிரி கவிதை எழுத வேண்டும் என்ற நக்கல் உரையாடல்களில் இருவருமே பிஸியாக இருந்தார்கள். பின், என் பின்னூட்டத்திற்கான பதில் தயாரித்துவிட்டு,கட்டுரையாகவே வெளியிட்டார்கள். மிக்க மகிழ்ச்சி. அதற்கும் என் பின்னூட்டங்களை போஸ்ட் செய்தேன். இரண்டு நாட்களாகியும் இந்த நிமிடம் வரை வெளியிடவில்லை. இடையில்,தோழர் யமுனா ராஜேந்திரன் போன்றோரின் எதிர்வினைக்கும் பதிலிட்டிருந்தேன். அவற்றையும் பதிப்பிக்கவில்லை.
கருத்தை உருவாக்குவதில் மதிப்பிற்குரிய ஜமாலன் மற்றும் பெருந்தேவி இருவரிடமும் இன்டெலக்சுவல் அதிகாரம் இருக்கிறது என்றே முடிவுக்கு வர வேண்டியிருக்கிறது..என் பின்னூட்டங்களை என் பிளாக்கிலேயே பிரசுரிக்கிறேன். அப்புறம் இன்னொன்றை தெளிவுபடுத்துகிறேன். பெருந்தேவி “உடனே” வெளியிட்ட மதி என்பவரின் பின்னூட்டத்தில் எனக்கு பதட்டம் என்றும், என் பெண்நிலைவாதம் சரியில்லையென்றும் சொல்லியிருந்தார். அதை அவசரமாக வெளியிட்டதால் பெருந்தேவிக்கும் அதில் உடன்பாடு என்று எடுத்துக் கொள்கிறேன். எனக்கு ஒரு பதட்டமும் இல்லங்க….. நாலு மாதங்களாக, என் கவிதைகளை விமர்சிக்கிறேன் பேர்வழியென்று வெளிளிவந்துக் கொண்டிருக்கும் அவதூறுகளுக்கும், வதந்திகளுக்கும், வக்கிரமான தனிநபர் தாக்குதல்களுக்கும், என் படைப்புரிமைக்கு வெவ்வேறு சக்திகள் ஏற்படுத்தும் அச்சுறுத்தலுக்கும் நான் பதட்டம் அடைந்திருந்தால், இப்போது இந்த பதிவை எழுதிக் கொண்டிருக்க மாட்டேன்.
பெருந்தேவி மற்றும் ஜமாலன் அவர்களுக்கு,
இனி கவிதையைப் பற்றி பேச எங்களிடம் ஒன்றுமேயில்லை என்ற உங்கள் அறிவிப்பால், உங்களுக்குத் தான் விமர்சனத்திற்கான சகிப்புத்தன்மை இல்லையோ என்ற சந்தேகம் வருகிறது.
உணர்ச்சி வேறு, உணர்வு வேறு. உணர்வை அறிவு என்று ஒப்புக்கொள்ளாத நிலைப்பாடு பொதுவாக கோட்பாட்டாளர்களுக்கு உண்டு. படைப்பாளிக்கு குறிப்பாக கவிஞருக்கு உணர்வு தான் அடிப்படைக் கூறாகவும், படைப்புக்கான உந்துதலாகவும் இருக்கிறது என்ற அர்த்தத்தில் தான் குறிப்பிட்டிருந்தேன்.
எங்கள் ஊரில் மட்டும் இல்லைங்க, பல ஊர்களில் பெண்களிடம் பழிப்புக்கான இந்த வடிவம் இருக்கிறது. உதாரணத்திற்காகவும், ஆதென்டிசிட்டிக்காகவும் சொன்னேன். நான் எழுதியவுடன், எல்லாரும் எங்கள் ஊருக்கு கிளம்பி சென்று விடுவார்களோ என்ற உங்கள் சமூக அக்கறை எனக்கு வியப்பாக இருக்கிறது. என் கவிதைக்கான நியாயமாக நான் அதை சொல்லவில்லை. என்னை நீரூபிக்கும் முயற்சியாகவும் இந்த உரையாடலை உங்களிடம் நடத்திக் கொண்டிருக்கவில்லை. ஒரு உருவகமாக சொன்னேன். அவ்வளவு தான்.சப்வெர்சனை கவிதையில் பார்க்கத் தவறுவதின் நோக்கமும் எனக்கு புரியவில்லை.
ஆண், பெண் எதிர்வுகளில், பிறரை பேசத் தவறுகிறேன் என்பது உங்கள் விமர்சனம். நான் முதன்மை முரண்பாட்டை அங்கீகரிக்கிறேன்.பேச விரும்புகிறேன். அப்புறம் மூன்றாம் பாலினர் என்பதெல்லாம் அரசாங்கம் உருவாக்குவது. மூன்றாம் பாலினர் தங்களைப் பெண்கள் என்றே அடையாளப்படுத்துகிறார்கள்.
41 சங்கப் பெண்பால் புலவர்களையோ,ஒரு ஆண்டாளையோ, காரைக்கால் அம்மையாரையோ வைத்துக் கொண்டு பெண்ணுக்கு மொழி இல்லையா? வரலாறு இல்லையா என்று நீங்கள் கேட்பது நகைச்சுவை.தமிழ் இல்லை, எந்த மொழியும் பெண்ணுடையது அல்ல, ஆண் உருவாக்கிவத்திருக்கும் மொழியில், தன்னுடையதை தனி யாக அல்லது வேறாக உருவாக்கவே முயல்கிறாள் என்ற புள்ளியிலிருந்து நான் பேச முயல்கிறேன்.
அப்புறம் என்னங்க, யோனி என்ற வார்த்தையைப் பயன்படுத்துவதற்கும், ஈஷிக் கொண்டு என்ற வார்த்தையைப் பயன்படுத்துவதற்குமான அரசியல் வேறுபாட்டை கூடவா நீங்கள் காணத் தவறுகிறீர்கள். அடையாள அரசியலை நீங்கள் கடக்க விரும்புவது உங்கள் இலக்காக இருக்கலாம். ஆனால் தமிழ்ச்சூழலில் “ஒரு வாக்கியத்தை முழுமையாக எழுதிவிட முடியாத சூழலில்” தானே நாமிருக்கிறோம்.
இறுதியாக நான் ஒரு சில நிகழ்வுகளை உங்களோடு பகிர்ந்துக் கொண்டதும், ஒரு நெகிழ்வுக்காக மட்டுமே. என் கவிதையின் கொடியை நாட்டுவதற்காக அல்ல.
பேஸிவ் டோன் என்று ஒரேயடியாக நீங்கள் சொல்வதை ஒத்துக் கொள்ள முடியாது. ஒரே நேரத்தில் பறந்தபடியும், நிலத்தில் வீழந்தபடியுமான உணர்வுநிலையிலேயே தான் எழுதியிருப்பேன். யோனியிலும் சாவில்லை, யோனிக்கும் சாவில்லை என்று முடித்திருப்பது அதனால் தான்.
ஒரு படைப்பாளியின் படைப்பு வெளியை கண்க்கிலெடுக்க வேண்டும் என்பதை அவரின் எல்லா கவிதைகளும் ஒன்றா? அப்படியென்றால் சரக்கா? என்றெல்லாம் தட்டையாக நீங்கள் புரிந்துக் கொண்டு உணர்ச்சிவசப்படுவது நியாயமே இல்லை.
ஒரு பிரதியில் சாதி,மதம்,நிறுவனம் மற்றும் எந்தவகையான அதிகாரமும் வெளிப்பட்டுவிடக்கூடாது என்பது ஏற்றத்தாழ்வு மிக்க சமூகத்தில் எழுத வரும் ஒரு எழுத்தாளருக்கு இருக்க வேண்டிய அடிப்படை அறம். ஈஷிக் கொண்டு என்று எழுதும் பார்ப்பனியத்திற்கு என்னால் வக்காலத்து வாங்க முடியாது.
ரோம் சாம்ராஜியம் எரிகிறதா என்ன? வரலாறு முக்கியம் அமைச்சரே என்று வடிவேல் காமெடி போன்ற எகத்தாளங்களையும் தாண்டித்தான் நான் செல்ல வேண்டியிருக்கிறது
யமுனா தோழருக்கு,
மார்க்ஸியப் பிதாமகர்களைப் பற்றி எந்தக் கவிதையும் எழுதியதாக நினைவில்லை. லெனின், மார்க்ஸ் போன்ற பெயர்களை கவிதைககளில் பயன்படுத்துவதை Blasphemic notionsodu பார்க்க மாட்டீர்கள் என்று நம்பவே விரும்புகிறேன்.
அவதூறுகளுக்கென்றே இயங்கும் ஒரு இணையதளத்தில் நான் ஏதோ அரசியல் அணியில் இணைந்துவிட்டதாக நீங்கள் எழுதியிருந்தீர்கள் என்று நண்பர்கள் சொன்னார்கள். நான் இடதும் இல்லை, வலதும் இல்லை, நடுவிலும் இல்லை, விளிம்பில், ஒரு இடமற்ற அடையாளமாகவே இருப்பதாக சமீப காலங்களில் உணர்கிறேன். தோழர் அ.மார்க்ஸ், எனக்கென்று இல்லை, எந்தப் படைப்பாளிக்கு அச்சுறுத்தல் நடந்தாலும் அவர்களுக்காக சமரசமின்றி முன் நிற்பார்.அவர் மையமாக உருவாக ஒருபோதும் முயற்சிக்க மாட்டார். அவரிடம் இருக்கும் அபூர்வமான சனநாயகத்தன்மை அணிகளை, குழுக்களை உருவாக்கும் தந்திரங்களுக்கு எதிரானது.
யமுனா தோழர், இதே இரண்டு கவிதைகளை ஆங்கிலத்தில் வேறு யாரோ, வேறு நாட்டு முகவரியில் வெளியிட்டிருந்தால்,மொழிபெயர்த்து “எனக்குள் பெய்யும் மழை” இரண்டாம் பகுதியை தொகுக்க ஆரம்பித்திருப்பீர்கள். நான் உங்கள் அடுத்த வீட்டுப் பெண்ணாக இருப்பது தான் உங்கள் பிரச்ச்னை.
இறுதியாக பெருந்தேவி மற்றும் ஜமாலன் அவர்களின் இந்த விவாதங்களுக்கெல்லாம் பின்னால் பல முன்முடிவுகளும், வேறு நோக்கங்களும் இருப்பதாக எனக்குப் படுகிறது.
கவிதை/ ஒன்றுகூடல்/ உரையாடல்
தமிழ்க் கவிஞர்கள் இயக்கம் வால்பாறை மற்றும் சென்னை/ 2009
-லீனா மணிமேகலை /செல்மா பிரியதர்ஷன்
இரண்டு ஆண்டுகளில் வெளிவந்த சில கவிதைத் தொகுப்புகளை முன்வைத்து ‘தமிழ்க் கவிஞர்கள் இயக்கம்’ ஒரு மனம் திறந்த உரையாடலுக்குத் திட்டமிட்டிருந்தது. ஜூன் 13,14 ஆகிய இரு நாட்களில் வால்பாறையின் இயற்கை எழில் சார்ந்த பிண்ணனியோடு கவிதைக்கான அமர்வுகள் திட்டமிடப்பட்டிருந்தன. நவீன தமிழ்க்கவிதையில் உருவாகியிருக்கும் பன்மைத்துவ போக்குகளையும் பிரதிநிதித்துவப்படுத்தும் வண்ணம் கவிதைப் பிரதிகள் தேர்ந்தெடுக்கபப்பட்டிருந்தன. ஈழத் தமிழ்க் கவிதைத் தொகுப்புகள் பெண்களின் கவிதைத் தொகுப்புகள், தலித் மற்றும் விளிம்புநிலை கவிதைகள், சமகாலத்து அரசியல் கவிதைகள், என அனைத்துப் போக்குகளையும் உள்ளடக்கிய தெரிவாக இருக்கும்படி கூடுமான வரை முயன்றோம். இந் நவீன கவிதைப் போக்குகள் மீது மனத்தடையற்ற விவாதங்களை உருவாக்குவது, நகர வேண்டிய திசைவெளி தூரங்கள் குறித்த பிரக்ஞையைக் கண்டடைவது, சாதி இனம் மொழி மதம் என்னும் உள்ளுர் தேசியப் பிடிமானங்களிலிருந்தும், பண்டம் சந்தை, போர், மரணம் என்றும் உலகளாவிய நெருக்கடிகளிலிருந்தும் தமிழ்க் கவிதை எதை உள்வாங்கியது எவற்றிலிருந்து விலகி நிற்கின்றது என பகிரங்கப்படுத்திக் கொள்வது தொடர்ந்து சிந்திப்பது எழுதுவது ஒன்றுகூடுவது இயங்குவது என்பதான அடிப்படையில் தமிழ்க் கவிஞர்கள் இயக்கத்தின் மற்றுமொரு முயற்சியாக இந்த ஒன்றுகூடல் அமைந்திருந்தது.
ஜூன் 13 சனி காலை வெவ்வேறு பகுதிகளிலிருந்து வந்திருந்த கவிஞர்கள், ஆய்வாளர்கள், கருத்தாளர்கள் பொள்ளாச்சியில் ஒன்றுகூடி வால்பாறையை நோக்கிப் புறப்பட்டோம் Holiday Home என்ற விடுதியில் தங்குவதற்கு அறைகளும் திறந்த வெளியில் அரங்கமும், மழை இருக்கும் பட்சத்தில் தங்குமிடத்தில் உள் அரங்கமும் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. சாரல் காரணமாக முதல் அமர்வு மாலை உள் அரங்கத்தில் ஜூன் 13 மாலை 3 மணிக்கு துவங்கியது. கரிகாலன் வரவேற்க அ.மார்க்ஸ் தொடக்கவுரை ஆற்றினார். 90-களுக்குப் பின் உலகளாவிய அளவில் ஏற்பட்ட அரசியல் மாற்றங்கள், இந்திய அரசு கடைப்பிடித்த பொருளாதார வெளியுறவுக் கொள்கைகள், அதனால் மக்கள் வாழ்க்கை முறையில் உருவான விளைவுகள் அவை இலயக்கியத்தில் உருவாக்கிய தாக்கங்கள் ஆகியவைகள் பற்றி அ.மார்க்ஸ் விரிவாக பேசினார்.கவிஞர் உலக அரசியல் நிலவரங்களை புரிந்து கொண்டு தீவிரமான எழுத்துக்களை எழுத வேண்டும் என்றார். முதல் அரங்கம் கமலாதாஸ் அரங்கமாக கடைபிடிக்கப்பட்டது. தமிழ்நதி, கமலாதாஸின் வாழ்வு மற்றும் எழுத்து குறித்து கட்டுரை வாசித்தார். கமலாதாஸின் மொழிபெயர்ப்பு கவிதை ஒன்று வாசிக்கப்பட்டது. கமலாதாஸ் குறித்த ஜெயமோகனின் வலைத்தள பதிவு சர்ச்சைக்குள்ளானது. யாராலும் காதலிக்கப்பட முடியாத கமலாதாஸின் அழகற்ற உருவமே அவரது எழுத்திலுள்ள திரிபுபட்ட பாலியல் எழுத்திற்கும் பாலியல் விரக்திக்கும் உளவியல் அடிப்படையாக விளங்குகிறது என்பது போன்ற அவரது பதிவு பலராலும் கண்டிக்கப்பட்டது. அழகிய பெண்களின் எழுத்தில் இதுபோன்ற உளவியல் அடிப்படையிலான பாலியல் பிசிறுகள் இருப்பதில்லை என்பது மிக பிற்போக்கான ஆணிய அணுகுமுறை என்று விவாதிக்கப்பட்டது. லீனா மணிமேகலை, சுகிர்தராணி, தமிழ்நதி, முஜ்பூர் ரஹ்மான் நட.சிவக்குமார் இவ்விவாதத்தில் பங்கு பெற்றனர். ஆணாய் இருக்கும் எழுத்தாளர் பெண்ணின் தோற்றத்தை அடிப்படையாகக் கொண்டு அழகு,அழகற்ற உடல் என்று பிரித்துப்பார்த்து தோற்றம் சார்ந்த உளவியல் அடிப்படையில் பெண்ணின் பாலியல் எழுத்தை குறுக்குவது ஒட்டுமொத்த பெண் எழுத்தையும் சிறுமைப்படுத்துதலாகவே இருக்கிறது.
முதல் அமர்வில் சாராயக்கடை(ரமேஷ் பிரேதன்) பிரதியை இளங்கோ கிருஷ்ணன், உறுமீன்களற்ற நதி( இசை) , கரிகாலன், நிசி அகவல் (அய்யப்ப மாதவன்) , அசதா, கரிகாலன் தேர்ந்தெடுத்த கவிதை(கரிகாலன்)- க மோகனரங்கன், திருடர்களின் சந்தை )ம மதிவண்ணன்6. உலகின் அழகிய முதல் பெண்(லீனா மணிமேகலை), க. பஞ்சாங்கம் துறவி நண்டு (எஸ். தேன்மொழி) விஷ்ணுபுரம் சரவணன், கடலுக்கு சொந்தகாரி(மரகதமணி)- எஸ் தேன்மொழி ஆய்ந்து கட்டுரைகள் சமர்ப்பித்தார்கள் கட்டுரைகளின் மீது கேள்விகளும் உரையாடலும் விவாதங்களும் நடைபெற்றன.
யவனிகாவின் திருடர்களின் சந்தை’ நூலிற்கு ம.மதிவண்ணன் வாசித்த கட்டுரை பெருத்த விவாதங்களை உருவாக்கியது யவனிகாவின் கவிதைகளில் பார்ப்பனிய இந்து பேரினவாத அரசியலுக்கு ஆதரவாக எதுவும் இல்லை அதே நேரத்தில் எதிராகவும் எதுவும் இல்லை. இந்திய ஆட்சியின் தர்மமாக விளங்கும் பார்ப்பனிய ஆதிக்கத்தை எதிர்க்காமல் தீண்டாமைக்கு எதிராக எழுதாமல், தலித் விடுதலை குறித்து எழுதாமல், எங்கோ இருக்கும் அமெரிக்க ஏகாதிபத்தியத்தை பாம்பும் சாகாமல் கம்பும் நோகாமல் எதிர்த்து எழுதிவிட்டால் மிகச் சிறந்த அரசியல் கவிதைகள் எழுதிவிட்டதாக ஆகிவிடமுடியுமா என்று தனது கட்டுரையில் கேள்வி எழுப்பினார். கடந்த பத்தாண்டுகளில் எழுதிவருபவர்களில் யவனிகாஸ்ரீராம் குறிப்பிடக் தகுந்த அரசியல் கவிதைகள் எழுதி வருபவர் (தீராநதி பதிவு) என்ற அ. மார்க்ஸின் கருத்தை மறுத்துப் பேசிய ம.மதிவண்ணன் கவிதையின் அரசியல், அரசியல் கவிதைகளுக்கான இலட்சணங்கள் பற்றிய விவாதங்களை தொடங்கி வைத்தார். தொடர்ந்து பேச எழுந்த நட.சிவக்குமார் இதுவரை பிற்படுத்தப்பட்ட சாதியிலிருந்து எழுத வந்த கவிஞர்கள் தங்களது ஜாதிய பெருமைகளைத்தான் கவிதைகள் என்ற பெயரில் எழுதியிருக்கிறார்கள் என்றும் கலாப்பிரியா, விக்ரமாதித்தன் எழுத்துக்கள் பிள்ளைமார் எழுத்துக்கள் என்றும் கரிகாலன் கவிதைகள் வன்னியர் எழுத்துக்கள் என்றும் கூறினார். தொடர்ந்த விவாதத்தில் பட்டாளிமக்கள் கட்சி ஒன்றிணைத்த தமிழ் படைப்பாளிகள் பேரியக்கத்தில் கரிகாலன் ஏன் கலந்து கொண்டார் என்று ம.மதிவண்ணன் கேள்வி எழுப்பினார். பாட்டாளி மக்கள் கட்சியோடு தனக்கு தொடர்பில்லை என்று சொன்ன கரிகாலன் தான் தொடர்ந்து தலித் மக்களோடும் படைப்பாளிகளோடும்தான் இணைந்து செயல்பட்டுவருவதாக கூறினார். சுகிர்தராணி, கவின்மலர், கம்பீரன் ஆகியோர் இவ்விவாதங்களின் பங்கு பெற்றனர். யவனிகா ஸ்ரீராம் இதுவரை நான்கு கவிதைத் தொகுப்புகள் வெளிட்டுள்ளார். மற்ற மூன்று தொகுப்புகளிலும் தலித் ஆதரவு பிராமணிய எதிர்ப்பு கவிதைகளையெல்லாம் எழுதியுள்ளார். ஒருவரது தொகுப்பை விமர்சிக்க வருகையில் (வேறு தொகுப்புகள் இருந்தும் அதனை படிக்கவில்லை என்ற ஒப்புதலோடும்) ஒரு தொகுப்பிலுள்ள கவிதைகளை மட்டுமே வைத்து ஒருவரது ஒட்டுமொத்த ஆளுமை மற்றும் இலக்கிய அரசியல் நிலைப்பாடுகள் குறித்து முற்று முடிவான அபிப்ராயங்களை முன்வைப்பது முறையாகாது. சாதி ஒழிப்பு தலித் ஆதரவு நிலைப்பாடுகளை மட்டுமே அரசியல் கவிதைகளுக்கான இலட்சணம் என்பது ஒற்றை மைய அணுகுமுறையாக உள்ளது. சாதி ஒழிப்பும் ஏகாதிபத்திய எதிர்ப்பும் ஒன்றோடொன்று தொடர்புடையதுதான். சாதிய பிரச்சினைகளுக்கான தீர்வை உள்ளுர் தேசிய உலகளாவிய பிரச்சினைகள் அனைவற்றிற்கும் முன் நிபந்தனையாக வைப்பது பொருத்தமற்றது. ஏகாதிபத்தியம் தனது சந்தையை விரிவுபடுத்த ஒருபுறம் வன்முறை குழுக்களுக்கு ஆயுதம் வழங்கும் மறுபுறம் முன்னின்று ஒரு தேசிய இனத்தை அழிக்கும். ஒருவேளை தனக்கு சாதகமென்றால் எந்த ஒரு நாட்டின் சமூக கட்டமைப்பையும்கூட தகர்க்கும் வல்லமை வாய்ந்ததாய் இருக்கிறது. ஏகாதிபத்தியத்தை எதிர்த்து எழுதும் கவிதைகளும் அரசியல் கவிதைகள்தான் என்று செல்மா பிரியதர்ஸன் ‘அரசியல் கவிதைகள்’ குறித்த விவாதத்தில் தனது கருத்துக்களை முன் வைத்தார்.
அதிகம் விவாதிக்கப்பட்ட மற்றொரு தொகுப்பு லீனாமணிமேகலையின் ‘உலகின் அழகிய முதல் பெண்’. க.பஞ்சாங்கம் அனுப்பியிருந்த கட்டுரை வாசிக்கப்பட்டது. பால் கடந்த எழுத்தை எழுதுவதே தனது இலட்சியம் என்று முன்னுரையில் லீனா மணிமேகலை குறிப்பிட்டிருந்தது, அதையொட்டி க.பஞ்சாங்கம் தமிழ்ச்சூழலில் அதற்கான வாசகர்கள் இல்லாத நிலையில் பால்கடந்த எழுத்திற்கு வாய்ப்புகள் இல்லை என்று கருத்துத் தெரிவித்திருந்தார். பால்கடந்த எழுத்தின் சாத்தியங்கள் பற்றி ராஜன் குறை பேசினார். பாலினத்தின் அடையாளங்கள் தட்டுப்படாத வண்ணம் எழுத்து சமநிலையுள்ள நியூட்ரல் தன்மைக்கு மாறவேண்டும் என்றார். நான் எழுதத் துவங்கும்போதும் சிந்திக்கத் துவங்கும்போதும் பெண் என்ற அடையாளத்தை மறந்துவிட்டு ஒருநொடிகூட இருக்க முடியவில்லை. என்னைப் பொறுத்தளவில் பெண் என்ற பிரக்ஞை கடந்த எழுத்தை கற்பனை செய்து பார்க்க முடியவில்லை என்றார். தமிழ்நதி. பாலினம் மட்டும் அல்ல. சாதி அடையாளத்தையும் கடந்த எழுத்து என்பது சாத்தியமில்லை. நான் ஒரு பெண். அதிலும் தலித்பெண் என்பது எனது எழுத்தின் அங்கமாக இருக்கிறது என்று சுகிர்தராணி குறிப்பிட்டார். ‘நவீன பெண் தமிழ்க் கவிதையின் உச்சம்’ என்ற தலைப்பிட்டு அனுப்பியிருந்த பஞ்சாங்கத்தின் கட்டுரையில் குறிப்பிடப்பட்டிருந்த ‘லீனாவின் கவிதைகள் காமக் களியாட்டக் கவிதைகள்” என்ற அடைமொழி பெரிதும் சர்ச்சைக்குள்ளானது. காமக் களியாட்ட கவிதைகள் என்ற வார்த்தை மிகவும் கண்டிக்கத்தக்கது என முஜ்பூர் ரஹ்மான், ரசூல் மற்றும் பலரும் கண்டனம் தெரிவித்தனர். இந்த வார்த்தை பிரயோகத்தில் பெரிய தவறொன்றும் இல்லை என்று சஃபி வாதிட்டார்.
மதுச்சாலைகள், குடி, அநாதரவு ஆகிய மனோநிலைகள் கவித்துவச் செறிவோடு ரமேஷ் பிரேதனின் சாராயக் கடையில் பரவியிருக்கிறது என்றும் அவைகள் மிகச் சிறந்த பின் நவீனத்துவ கவிதைகளாக இருக்கிறதென்று இளங்கோ கிருஷ்ணன் குறிப்பிட்டார். தன் நிலம் சார்ந்த மக்களின் தொழில், வாழ்க்கைப்பாடுகளை சித்தரிக்கும் தொகுப்பாக கரிகாலனின் கவிதைகள் விளங்குகிறது என்று க.மோகனரங்கன் கூறினார். எஸ்.தேன்மொழி கவிதைகளில் எப்போதும் ஒரு சிறுமி மழையை வரவழைத்த வண்ணம் வந்துகொண்டிருப்பதாகவும் தொன்மங்களை நிகழ்காலத்தோடு தொடர்புபடுத்தி ஒப்புநோக்கும் தன்மையையுடைய கவிதைகளை அவர் அதிகம் எழுதுவதாக விஷ்ணுபுரம் சரவணன் குறிப்பிட்டார். இசை நம்பிக்கையளிக்கும் கவிஞராக இருப்பதாகவும் இசையின் கவிதைகளை பெருங் கொண்டாட்டத்தோடு பகிர்ந்து கொள்வதே தனக்கு மகிழ்வளிக்கும் செயல் என கரிகாலன் கூறினார்.
கவிதைக்கான விமர்சனமும் விவாதமும் முடிந்தவுடன் கவிஞர்கள் தாங்கள் எழுதியதில் தங்களுக்குப் பிடித்த ஒரு கவிதையை வாசித்தார்கள். அய்யப்ப மாதவன் மரணமுறுதல் குறித்து ஒரு கவிதையை வாசித்தார். அத்தனை விதங்களிலும் ஏற்படும் மரணங்கள் பற்றியும் பட்டியலிடப்பட்ட அக்கவிதையும் அதை அவர் வாசித்த விதமும் ஒருவிதமான இலகுவான கவித்துவ கணங்களாக இருந்தன. முதல் நாள் அமர்வு முடிவடைந்தபிறகு இரவு அவரவர் வசம் ஒப்படைக்கப்பட்டது.
இரண்டாம் நாள் சின்னக்கல்லாறில் அமர்வு திட்டமிடப்பட்டிருந்தது. கிடைமட்டமாக ஓடிவரும்போது ஆறாக செங்குத்து பாறைகளில் வீழும்போது அருவியாக, பாறைக்குடைவுகளில் தேக்கமாக நீரும் பாறையும் மரப்பசுமையும் சூழ்ந்த இடந்தேடி அமர்ந்தோம். இரண்டாம் நாள் ராஜமார்த்தாண்டன் அரங்கம் க.மோகனரங்கன் அவரின் நினைவுகளைப் பகிர்ந்து கொண்டார். ராஜ மார்த்தண்டான் நம் காலத்தின் மிகப்பெரும் கவி ஆளுமையாக விளங்கினார். தங்கு தடையற்று அனைவரிடமும் பழகும் விவாதிக்கும் பண்பாளராக இருந்தார். தற்கால கவிதைகளின் முக்கியமான தொகை நூலான கொங்குதேர் வாழ்க்கை யை ராஜமார்த்தாண்டனின் முக்கியமான தொகுப்பு நூல். ஆனால் அதில் சில முக்கியமான கவிஞர்களின் கவிதைகளை தவிர்த்துவிட்டார். அதுகுறித்து அவரோடு விவாதித்த அனுபவங்களை க.மோகனரங்கன் பகிர்ந்து கொண்டார்.
செல்மா பிரியதர்ஸனின் தெய்வத்தைப் புசித்தல் நூலிற்கான விமர்சனக் கட்டுரையை ரசூல் வாசித்தார். குழந்தைகளின் உலகமும், காதலும், கிராமத்து காட்சிகளும் தொன்மங்களும் நிறைந்த கவிதைகள் இவைகள் என்றார். இளங்கோ கிருஷ்ணனின் காயசண்டிகை நூலிற்கு இளஞ்சேரல் எழுதிவந்த கட்டுரையை சுரேஷ்வரன் வாசித்தார். இவர் கவிதைகளில் சமூக அரசியல் பண்பாட்டுத்தளம் கலாச்சார சிக்கல்களிலும் அறிவியல் கோட்பாடுகளிலும் இனம் புரியாத ஈடுபாடு கொண்டிருப்பது வியப்பளிக்கக்கூடியது என்று இளஞ்சேரல் குறிப்பிட்டிருந்தார். அழகிய பெரியவனின் உனக்கும் எனக்குமான சொல் நூலிற்கு யாழன் ஆதி கட்டுரை வாசித்தார். காதலும் தான் சார்ந்த தலித் சமூகம் சார்ந்த வாழ்வு முறைகளும் கவிதையின் முக்கிய பாடுபொருளாக உள்ளதென்று யாழன் ஆதி குறிப்பிட்டார். கடந்து போகவே முடியாத இந்த சாதி அடையாளங்கள் குறிப்பாக தலித்மக்கள் மீது பாரமாக பெருஞ்சுமையாக உள்ள பிறப்படையாளம் புதிதாய் பிறந்த ஒரு சிறு குழந்தைமீதும் அடுத்தநொடியே எங்ஙனம் அது இறங்குகிறது என்ற அழகிய பெரியவனின் கவிதை உலகத்தை சித்திரப்படுத்தினார்.
ஆறு, அருவிக் குளியல், பாறையின் அடர்ந்த சாம்பல் நிறம், வனப்பசுமை, மிதந்தலையும் மேகங்களின் அடர்ந்த நீலம், சமயத்தில் கீழிறங்கும் மஞ்சுப் பொதியின் புகைமூட்டம் இவையனைத்தையும் உள்ளிடக்கி விரிந்து பரந்த வெளி நம்மிடம் கூடுதல் ஆற்றலைக் கோரியது. தலைக்குமேல் மேகம் உறுமியது. ஒரு சறுக்குப் பாறையையும் புழுத்த மரப்பாலத்தையும் மறுபடி ஒருமுறை கடந்து அறை சேர்ந்தோம். சிறிதாக அரங்கத்தில் ஒன்றுகூடி நிகழ்வுகள் பற்றி பேசி நன்றிகூறி அவரவர் நெடுந்தூரப் பயணத்திற்கு தயாரானோம். சுகிர்தராணி, யாழன் ஆதி, செல்மா பிரியதர்ஷன் இச் சந்திப்பை திட்டமிட்டு ஒருங்கிணைத்தார்கள். திட்டத்தில் ஈழக்கவிதைகள் முழுதாய் விடுபட்டுப் போயிருந்தது. ஈழக் தமிழ்க் கவிதைகளுக்கு விரைவில் தனி அரங்கம் என்ற உறுதிமொழியோடு அனைவரும் கலைந்தோம்.
கவிதை ஒன்றுகூடல் உரையாடலின் இரண்டாவது நிகழ்வு ஜீன் 26ல் சென்னை லயோலா கல்லூரி அய்க்கப் அரங்கத்தில் ஈழக்கவிதைகள்: ஒரு பன்முக வாசிப்பாக நடைபெற்றது. இரண்டாவது நிகழ்விற்கு திட்டமிட்டுக் கொண்டிருக்கும் போதே வால்பாறை நிகழ்வுகள் குறித்து வதந்திகளும் கிசுகிசுக்களும் பரவ ஆரம்பித்திருந்தன. வழக்கம்போல நமது கலாச்சாரக் காவலர்கள் வேவுபார்த்து துப்பறிந்த உண்மைகளை பரப்பினார்கள். விகடன் குழுமத்திலிருந்து வெளிவரும் ‘குடும்பப்பெண்களுக்கான’ அவள் விகடனிலும் அரசியல் துப்பு துலக்கும் பத்திரிக்கையான ஜூனியர் விகடனிலும் அதனதன் வியாபார யுத்திக்கிணங்க செய்தி வெளியானது, காட்டுக்குள் கவிதாயினிகள் நடத்திய கவிதையாகம் என்று அவள் விகடனில் ஒரு காமெடி பீஸ.; ஜூனியர் விகடனில் கழுகார் வரைக்கும் தலைபோகிற பிரச்சினை பெண் கவிஞர்களில் சிலர் குடித்தார்கள் என்பதுதான் நெருக்கடிகளிலிருந்து விலகி ஒரு 40 பேர் இலக்கியம் பேசுவதற்கு மலையேறினாலும் அதில் ஒரு நான்கு பெண்கள் குடித்ததை கண்டுபிடித்து கவிதாயினிகள் குடித்தார்கள் கூத்தடித்தார்கள் என்று பல லட்சம் பேர் படிக்கும் கிசு கிசு பத்திரிக்கையில் எழுதி பொதுச் சமூகத்திற்கு காட்டிக் கொடுக்கும் அறிவு ஜீவியார் என்பது இன்னும் விளங்கவில்லை. இதற்கு கண்காணிக்கும் வேவுபார்க்கும், காட்டிக் கொடுக்கும் அறிவுஜீவி கலாச்சாரக் காவலர்கள் இலக்கியக் கூட்ட்ங்களில் உருட்டுக் கட்டைகளோடு நுழைந்து குடிக்கும் பெண்களை அடித்து நொறுக்கிவிட்டுப் போவது மேலானது.
ஈழக் கவிதைகள் பன்முக வாசிப்பு நிகழ்வு ஈழ அரசியலின் பல்வேறுபட்ட கருத்து நிலைப் பாடுகளையும் விவாதித்துக்கொள்ளும் களமாக முக்கியத்துவம் பெற்றிருக்கிறது. குறிப்பாக இலங்கையில் போர் முடிவடைந்த நிலையில் இனிதான அரசியல் நடவடிக்கைகள் என்னவாக இருக்கவேண்டும் என்பதை நோக்கி உரையாடல்கள் எழுந்தன. நிகழ்வை ஒருங்கிணைந்த லீனா மணிமேகலை குறிப்பிட்ட ஒரு செய்தி அதிர்ச்சியாயிருந்தது. ரவிக்குமார் எம்.எல்.ஏ. “வால்பாறையில் என்ன நடந்தது” என்று குறுஞ்செய்தியிட லீனா. வதந்திகளுக்கு பதில் சொல்லி என்ன ஆகப் போகிறது என்று பதிலளித்திருக்கிறார். ஈழத்தமிழ் கவிதைகள் பன்முக வாசிப்பு நிகழ்வு குறித்த செய்தியை குறுஞ்செய்தியிட அதற்கு ரவிக்குமார் “பேஷ், பேஷ் , செத்தும் கொடுத்தார்கள் சீதக்காதிகள்” என்று பதில் எழுதியிருக்கிறார். தமிழ்க் கவிஞர்கள் இயக்கத்தைச் சேர்ந்தவர்கள் ஈழத்துக் கவிதைகளை முன்வைத்து இலங்கையில் நிலவும் பலதரப்பட்ட அரசியல் நிலைப்பாடுகளையும் விவாதிக்க ஒரு தளம் அமைத்து தர வேண்டும் என்ற முயற்சியை ரவிக்குமார் சிறுமைப்படுத்துவதாகக் குறிப்பிட்டார். தமிழ்க் கவிஞர்கள் இயக்கம் இதை கண்டனம் செய்கிறது. “இது இறுதிப் போர் பிரபாகரனைப் பிடித்து உயிருடனோ பிணமாகவோ இந்திய அரசிடம் ஒப்படைப்போம்” என்பதே ராஜபக்சே அரசின் போர் அறிவிப்பு. “இந்திய அரசின் யுத்தத்தை நான் நடத்தினேன்” என்பது மகிந்த ராஜபக்சேவின் போரின் வெற்றிச் செய்தி. இலங்கையில் போரை நடத்திய காங்கிரஸ் கட்சியோடு கூட்டணி அமைத்து ஆதரித்து தேர்தலில் பிரச்சாரம் செய்தவர் ரவிக்குமார் தான். 20ஆயிரம் உயிரிழப்பிற்கும் 1 இலட்சம் பேர் அடைந்த படுகாயங்களுக்கும், பல்லாயிரம் வீடுகள் மேல் குண்டுகள் போட்டு மூன்று இலட்சம் மக்கள் அகதி முகாம்களில் வாழ நேர்ந்ததற்கும் காரணம் காங்கிரஸ் கட்சி இல்லையா? ஒரு சில சீட்டுகளுக்கு காங்கிரஸடன் கூட்டணி வைத்து படுகொலைகளின் பாவங்களை நீங்களும் உங்களது கட்சியும் பங்கு போட்டுக் கொள்ளவில்லையா? சாகடித்தவர்கள் நீங்கள் தான், பெற்றுக்கொண்டவர்களும் நீங்கள்தான். அப்பாவிக் கவிஞ்ர்கள்மேல் உங்களுக்கெதற்கு இந்த வன்மம்.
நிகழ்வு இரண்டிற்கு எட்டுக் கவிதை தொகுப்புகள்மேல் வாசிப்பு நிகழ்த்தப்பட்டது. இலங்கையில் பல்வேறு பகுதிகளிலிருந்து எழுதப்பட்ட, புலம்பெயர்ந்து தமிழ்நாடு மற்றும் அயலில் இருந்து எழுதப்பட்ட, வேறுபட்ட அரசியல் நிலைப்பாடுள்ளவர்களின் கவிதைத் தொகுப்புகள் மீதும் வாசிப்பும் விவாதமும் நடத்தப்பட்டது. அ.மங்கை தொகுத்த “பெயல் மணக்கும் பொழுது” என்ற தொகுப்பு நூல் குறித்து வ.ஐ.ச.ஜெயபாலன் பேசினார். இத்தொகுப்பு இலங்கையின் தமிழ் பேசும் பெண்களால் எழுதப்பட்ட தொகுப்பு. பெயல் மணக்கும் பொழுதுக்காக நாங்கள் கனவு கண்டு இருந்தோம். சாம்பலிலிருந்தும், நெருப்பிலிருந்தும், இரத்தத்திலிருந்தும், வாழ்ந்து வந்த நாங்கள் யாரைச் சபிப்பது என்று தெரியவில்லை. இந்த தோல்விக்கு நேரடியாகவோ, மறைமுகமாகவோ துணைபோனவர் யார் என்பதை அனைவரும் அறிந்திருக்கிறோம். மறுபடியும் எங்களது பெண்கள் எழுதிய கவிதைகளுக்குள் என்னால் உள்ளே நுழைய முடியவில்லை. இந்த தொகுப்பின் மூலம் சொல்லாத சேதிகள் ஏராளமுண்டு. ஆனால் தமிழின் முன்னணிக் கவிஞர்கள் என்று எங்களில் பலரும் பெயரெடுக்கவில்லை. மொழி ஒன்றாயிருந்தாலும் எங்களது பெண்களின் வாழ்வும் வரலாறும், வேறு வேறு. தமிழ்நாட்டிலுள்ள தமிழிலும், பிற மொழிகளிலும் இல்லாத தாய்வழித் தன்மை அதிகமுடையது எங்களது பெண்களின் மொழி என்று கூறிய ஜெயபாலன் சிவரமணியின் நெருக்கடிமிகுந்த அரசியல் தற்கொலையை நினைவுகூர்ந்தார்.
“பதுங்கு குழியில் பிறந்த குழந்தை” தொகுப்பின் மீது அரங்கமல்லிகா உரையாற்றினார். இந்நூலின் ஆசிரியர் தீபச்செல்வன் வன்னியில் கிளிநொச்சியில் வாழ்ந்து வருபவர். எரிந்த நகரின் காட்சிக்குறிப்புகளும், ரத்தம் சிந்திய தெருக்களும், பதுங்குகுழிகளும், படுகொலைகளும் நிரம்பிய தீபச்செல்வனின் கவிதைகளை வாசித்து செயலற்றுக்கிடந்ததாக அரங்கமல்லிகா கூறினார். தனது சக பேராசிரியர்களிடமும், மாணவிகளிடமும், இக்கவிதைகளை பகிர்ந்துகொண்ட அனுபவங்களை விவரித்தார். மீனை அரியும்போது கிடைத்தன குழந்தையின் கண்கள் என்ற வரிகளிலிருந்து இன்னும் தன்னால் மீள இயலவில்லை என்ற அரங்கமல்லிகா இதையெல்லாம் அறிந்தும் அறியாமலும், இலங்கையின் தமிழ் மக்களின் விடுதலைக்கு எதுவும் செய்யமுடியாது சொரணையற்று தமிழ் சமூகம் இருக்கிறது எனக் குறிப்பிட்டார்.
இலங்கை இஸ்லாமியத் தமிழ் எழுத்துக்கள் என்ற அடிப்படையில் இரண்டு நூல்கள் நிகழ்வில் இடம் பெற்றிருந்தன. அதில் ஒன்று மஜீத்தின் “புலி பாய்ந்தபோது இரவுகள் கோடையில் அலைந்தன”. மஜீத் இலங்கை அக்கரைப்பற்றில் தலைமறைவாக வாழ்ந்து வருபவர். 90களில் புலிகள் முஸ்லிம்களை வடக்கிலிருந்து வெளியேற்றியதைக்கூட புலிகளின் போர் தந்திரோபாயம் என்று புலி ஆதரவு நிலைப்பாடிலிருந்து பின்னர் சிங்களப் பேரின வாதத்திற்கு இணையானது புலிகளின் தமிழ்ப் பேரினவாதம் என்று எழுதி தற்போது தலைமறைவு வாழ்க்கை நடத்திக்கொண்டிருப்பவர், இவரது கவிதைகளின் மீது சந்திரா கட்டுரை வாசித்தார். இலைகளின் நுனியிலிருந்து விழும் இரத்தத் துளிகள், இரத்தத்தை நினைவூட்டியபடி அலையும் காற்று, ஆறு, கிணறு எழுத்து, சித்திரங்களிலிருந்து பொங்கிவரும் இரத்தம், இரத்தச் சிகப்பிலிருந்து மாறாத மழையின் நிறம் என நீளும் மஜீத்தின் கவிதைகள் கவித்துவ துயரம் மிக்கவைகள் என்றார் சந்திரா. எனது வெளியை பங்கு போட்டு சிங்கங்களும் புலிகளும் பகிர்ந்துகொண்டன, இரண்டின் வால்களையும் முடித்துவிட்ட எவனோ எனது இடத்தின்மீது நிரந்தரமான காயத்தை ஆரம்பித்து வைத்தான், அதிலிருந்து வடியும் இரத்தம் நிரந்தரமானது என அடிக்குறிப்பும் எழுதிவைத்துவிட்டான், எனது காயத்திலிருந்து வடியும் இரத்தத்துளிகள் விழும் இடமெல்லாம் இனி எனது வெளிதான் என்ற மஜீத்தின் கவிதையில் வரும் சிங்கம் புலி இரண்டும் தனது வெளியை பங்கு போட்டு கொண்டனர் என்ற சொல்லாடலின் மூலம் சிங்களப் போர் வெறியையும் விடுதலைப் புலிகளின் போராட்டத்தையும் ஒரே தராசில் நிறுத்துவதில் தனக்கு உடன்பாடில்லை என்று சந்திரா கருத்துரைத்தார்.
கிழக்கிலங்கையிலிருந்து தேர்ந்தெடுக்கப்பட்ட மற்றொரு நூல் “எனக்குக் கவிதை முகம்” இஸ்ஸத் ரீஹானா முஹம்மப் அசீம் என்ற இயற்பெயற் கொண்ட அனாரின் நூல். அனாரின் எனக்கு கவிதை முகம் நூலிற்கு செல்மா பிரியதர்ஸன் கட்டுரை வாசித்தார். அனாரின் கவிதைகள் இனம், மொழி, மதம், தேசம், எல்லை, என எதுவும் ஊடுறுவாத தூய காதல் கவிதைகள், சமகாலமும் வரலாறும் அதன் வழியே கடந்துபோகிறது. அனாரின் கவிதைகள் மிகுந்த வசீகரமாயிருக்கிறது. வாஞ்சையும் தத்தளிப்பும், மிக்க தேர்ந்தெடுத்த சொற்களில் கசிந்து உருகுகிறார். அன்பும், பிரியமும், ஏக்கமும், தவிப்பும் நிறைந்த அவரது சொற்கள் தன்னந்தனியான யாருமற்ற ஆதியில் ஆணும், பெண்ணுமாய், தாங்கள் மட்டுமே தனித்திருந்த ஒரு தோட்டத்தை, உலகத்தை, உண்டுபண்ணிவிடுகிறது. தொடும்போது வார்த்தைகள் பனிக்கட்டியாய் இளகுகிறது. முத்தமும், கண்ணீரும் உள்வயமாய் அதற்குள் சலசலக்குகிறது. தொடும்போது வார்த்தை திராட்சை ரசமாய் நுரைக்கிறது. அதற்குள் மருதாணிச்சாயமாய் மாலை மங்கி ஒழுகுகிறது. தொடும் போது வார்த்தைகள் காற்றின் கிழிந்த ஓரங்களை நெய்து முடிக்கிறது. தொடும் போது வார்த்தைகளில் மகரந்தங்கள் உதிர்கிறது. பரவு காலங்களை சூடிய வண்ணத்திகள் அதில் இருந்து பறந்து போகின்றன. அவரது வார்த்தைகளை தொடும் போது விரியும் உலகம் வாழ்வுக்கானது, அன்பிற்கானது, என்ற தனது வாசிப்பினை முன்வைத்தார்.
தமிழ்நதியின் “சூரியன் தனித்தலையும் பகல்” நூலிற்கு ராஜேஸ்வரி கட்டுரை வாசித்தார். தமிழ்நதி தமிழ்நாட்டில் வாழ்ந்து வருகிறார். தமிழ் இணைய வலைப்பக்கங்களில் பெரிதும் அறியப்பட்டவர். வால்பாறையில் இரண்டு நாள் நிகழ்வுகளிலும் கலந்துகொண்டார். ஜுன் 26 ஈழக்கவிதைகள் பன்முக வாசிப்பு நிகழ்விற்கு விரும்பி அழைத்தும் அவர் வராதது எங்களுக்கு வருத்தமளிக்கிறது. நிலத்தை இழந்து திரியும் பரிதவிப்பு புலம்பெயர்ந்தலையும், இருப்பற்ற துயரமும், போர்க்காட்சிகளின் நினைவுமாக தமிழ்நதியின் கவிதைகள் உள்ளன என்று ராஜேஸ்வரி தனது கட்டுரையில் குறிப்பிட்டார்.
அதைத்தொடர்ந்து நடைபெற்ற விவாதத்தில் லதா ராமகிருஷ்;ணன் பேசினார். அரங்கமல்லிகா பயன்படுத்திய சொரணை என்ற வார்த்தையை மிகக் கவனமாக கையாளவேண்டும். தாமரை எழுதிய “கண்ணகி மண்ணிலிருந்து ஒரு கருஞ்சாபம்” என்ற கவிதையில் இந்தியாவில் ஓடும் ஆறு நதிகள் எல்லாம் வற்றிப்போகவேண்டும் என்று சாபமிடுகிறார். இது என்னவிதமான தமிழ் சொரணை? கவிதை என்ற பெயரில் சொந்த தேசத்திற்கு சாபமிடலாமா என்றும் உலகெங்கும் போரினால் கொல்லப்படுவதைப் போலவே வறுமையினால் மடியும் மக்களின் எண்ணிக்கை அதிகம். வறுமை என்பதும் மக்கள் மேல் திணிக்கப்படும் மௌனப்போர் தான் அதுகுறித்தும் நாம் கவலைகொள்ள வேண்டியிருக்கிறது என்றார்.
இலங்கையிலிருந்து புலம்பெயர்ந்து பிரான்சில் வாழ்ந்துவரும் சுகன் ஈழத்து தமிழ் இலக்கியம் மற்றும் போர் குறித்து பேசினார். பௌத்தம் அன்பையும், கருணையையும் போதிப்பது, சிங்களப் படையின் பின்னால் உள்ளது பௌத்தவெறி என்று சொல்வது மிகவும் தவறானது. விகாரமான இந்திய இந்து மனத்தின் தட்டையான புரிதலே பௌத்தம் குறித்த இந்த புரிதல் என்று கூறியவர், இலங்கையின் தேசிய கீதத்தை தமிழில் பாடிக் காண்பித்தார். காசி ஆனந்தன், சேரன் உள்ளிட்டவர்கள் போரை ஆதரித்துப் பாடினார்கள். இன வெறுப்பை வளர்த்தவர்கள் இப்படித்தான் தலை முறைக்கும் போர் காணிக்கையிடப்பட்டது. போர் அனைத்தையும் அழித்துவிடும். ஈழத்தில் உருவான பிரச்சினை வெள்ளாளர்களுக்கும், சிங்களர்களுக்கும் இடையே உருவானது இன்றுவரை அங்கு தலித்துகளுக்கு கல்வியிலும் வேலைவாய்ப்பிலும், இட ஒதுக்கீடு வழங்கப்படவில்லை. புலிகள் சாக்குமூட்டைகள்போல் மனித உயிர்களை அரணாக்கித் தங்களை பாதுகாத்து வந்தார்கள் என்றார், இலங்கையில் போர் முடிவுக்கு வந்தது தனக்கு ஒரு வகையில் மன நிம்மதியை தருகிறது என்றார்.
அடுத்ததாக தனிமையின் நிழல்குடை என்ற த.அகிலனின் கவிதைத் தொகுப்புக் குறித்து சுகுணா திவாகர் பேசினார். த.அகிலன் தற்போது சென்னையில் வசிக்கிறார் த.அகிலன் எழுதிய “மரணத்தின் வாசனை” போர் தின்ற சனங்களின் கதையாக இருந்தது, தொடர்ந்து எழுதிவரும் இளங்கவிஞர் அகிலனின் காதல் கவிதைகள் இளம்பிராய நிலையில் உள்ளது என்றும் அரசியல் கவிதைகளுக்கான முன்னெடுப்பு தனிமையின் நிழல்குடை தொகுப்பிற்கு வலிமை சேர்க்கிறது என்றார். லதா ராமகிருஷ்ணனின் கவிஞர்கள் சாபமிடலாமா என்ற கேள்விக்கு எதிர்வினையாற்றினார். இந்திய தேசியம் என்பது இந்துப்பிராமணியம் கட்டியமைத்த தேசியம் என்றும் அதனை சாபமிடுவதில் தவறொன்றுமில்லை என்று சுகுணா திவாகர் பேசினார்
இளங்கோவின் “நாடற்றவனின் குறிப்புகள்” தொகுப்பு குறித்து சோமிதரன் பேசினார். இளங்கோ யாழ்ப்பாணத்தில் பிறந்து உள்நாட்டிலே அகதியாக அலைந்து 16 வயதில் கனடாவிற்கு புலம்பெயர்ந்தவர். இளங்கோ தனது வயதை ஒத்தவர் என்று பேச ஆரம்பித்த சோமிதரன் இலங்கையில் தான் எதிர்கொண்ட போர் நிலவரங்கள் குறித்து பேசினார். ஓட ஆரம்பித்தால் ஓடிக்கொண்டே இருந்து மூச்சிறைத்து எங்காவது காட்டில் தங்கிவிடுவது, விமானத்தில் இருந்து குண்டுகள் போடும்போது பள்ளியிலுள்ள பதுங்கு குழிகள் அனைவருக்கும் போதுமானதாயும் இருக்காது அதனால் சிலபேர் மரங்களுக்கடியில் படுத்துக் கொள்வோம். சிதறிக்கிடக்கும் பரளைகளைப் பொறுக்கிக் கொண்டுபோய் இயக்கத்தில் கொடுத்தால் காசு தருவார்கள் என்றார். இப்போது தமிழ்நாட்டில் பிரபாகரன் உயிரோடு உள்ளாரா இல்லையா என்பதுதான் பிரச்சனையாக இருக்கிறது. 80களுக்குப்பின்னாhல் பிறந்த எங்களுக்கு இலங்கையில் இருந்தபோது நாடென்று ஒன்று இருந்ததில்லை. அகதிகளாய் வெளியேறிய பின்னும் நாடென்று எதுவும் இருக்கவில்லை. எங்களது வாழ்வே நாடற்றவர்களின் குறிப்புகள்தான் என்றார்.
நிகழ்வின் மீது இந்திய கம்யூனிஸ்டு கட்சியின் மாநிலத் துணைச் செயலாளர் மகேந்திரன் கருத்துரையாற்றினார். சிங்களர்கள் கடைபிடிக்கும் பௌத்தத்திலும் சாதிய ஏற்றத்தாழ்வுகள் உண்டு. பண்டார நாயகாவை கொலை செய்தது ஒரு புத்த பிக்கு. போருக்குப்பின்னால் சிங்கள பௌத்த இனவெறி உண்டு என்றார். புலிகள் மேல் விமர்சனங்கள் இருந்தாலும் இன்று ஈழ விடுதலைக்காக களத்தில் நின்று போராடியவர்கள் புலிகள்தான் இலங்கைக்கு வெளியிலுள்ள தமிழர்களும் தமிழகத்திலுள்ள அரசியல் சக்திகளும் இலங்கை மக்களுக்கான விடுதலையை பெற்றுத்தர தொடர்ந்து போரட வேண்டும் என்றார். இஸ்லாமிய தமிழர்கள் மலையகத் தமிழர்கள் என வேறுபாடுகளை வளர்க்காமல் அங்கொரு தீர்வை ஏற்படுத்த வேண்டும் என்றும் சிங்களப் பேரினவாதத்திற்கு இணையாக புலிகளின் தமிழ்ப் பேரினவாதத்தைக் கட்டியமைப்பது தவறு என்றார். அப்போது கறுப்புப்பிரதிகள் நீலகண்டன் எழுந்து அப்படியென்றால் புலிகள் இஸ்லாமியர்களை வடக்கிலிருந்து துரத்தியதையோ இஸ்லாமியர்கள் துரோகிகள் என்று படுகொலைகள் செய்ததையோ பேச வேண்டாம் என்கிறீர்களா என்றார். பழைய கதைகளை பேசி இப்பொழுது என்ன செய்யப் போகிறோம். போரினால் எத்தனை ஆயிரம் பேர் இறந்துள்ளார்கள். வீடற்று அகதிகள் ஆக்கப்பட்டிருக்கிறார்கள். இதற்கெல்லாம் ஒரு தீர்வு வேண்டும். அதை நோக்கி செயல்பட வேண்டும் என்று கூறினார். சுகனைப் பார்த்து உனது வயதென்ன? வரலாறு தெரியுமா? நீ இதையெல்லாம் படித்திருக்கிறாயா? என்பது போன்று மகேந்திரன் கேள்விகள் கேட்பது மிகவும் தவறு எனறும், பொது அரங்கத்தில் இது போன்று அதிகார தொனியில் பேசுவது கண்டிக்கத்தக்கது என்று சுகுணா திவாகர் குறிப்பிட்டார். தனக்கு 47 வயதாகிறது. இலங்கையில் நான் போகாத கிராமங்களே இல்லை. இயக்கத்திலும் இருந்திருக்கிறேன். புலிகள் செய்த சகோதரப் படுகொலைகள் மாற்று இயக்கங்களை அழித்தது, சிறுவர்களை படையில் சேர்த்தது, மலையக மக்களின் கோரிக்கையில் எந்த அக்கறையும் அற்று இருந்தது. இஸ்லாமியர்களை விரட்டியடித்தது, மக்களை கேடயமாக்கி சொந்த மக்களின் உயிரிழப்புகளுக்கு காரணமாக இருந்தது. வரலாற்றில் மறக்கக்கடிப்பட்டு விடாது என்று சுகன் பேசினார். தமிழக அகதி முகாம்களில் கல்வி கற்பதற்கான ஏற்பாடுகள் இல்லாமல் இருப்பது மிகுந்த வேதனைக்குரியது என்றார்.
மரணம் வருந்தத்தக்கது, புலிகளை அழித்து விட்டதை சிங்கள இனம் கொண்டாடுகிறது, ஒரு வேளை சிங்களப் படையை புலிகள் வெற்றி கொண்டிருந்தால் நாம் மகிழ்ந்து கொண்டாடியிருப்போமா? ஒரு இனத்தின் அழிவைப் பார்த்து இன்னொரு இனம் மகிழ்வது முதலாளித்துவத்திற்கு கிடைத்த வெற்றி, போரும், போரினால் உருவாகும் மரணமும் வெறுக்கத்தக்கது என்று வசுமித்ரா கூறினார்.
தொடர்ந்து வந்திருந்த அனைவரும் பேசுவதற்கு விருப்பம் தெரிவித்தனர் இரவு 9.30 மணிவரை உரையாடல் தொடர்ந்து ஆனால் ஏதுவும் முற்றுப்பெற்றதாக இல்லை. ஒரு கனத்த வெறுமையும், இன்னும் ஏதோ ஒன்று விடுபட்டுப்போனது என்ற உணர்வோடும், கூட்டம் கலைந்தது.
பின்குறிப்பு
இந்தக் கட்டுரை, நிகழ்வு குறித்த பதிவே
இதையொட்டி பரப்பிவிடப்பட்டிருக்கும் வதந்திகளுக்கும், அவதூறுகளுக்கும், உளவு அறிக்கைகளுக்குமான எதிர்வினைகள் தொடர்ந்து, இதே பகுதியில் வெளியிடப் படும்
உங்கள் பொறுமைக்கு நன்றி