
செய்வாயா – கவிதை
நன்றி -குமுதம்
செய்வாயா?
நாம் மிகச் சமீபத்தில் இணைந்து எடுத்துக்கொண்ட புகைப்படத்தில்
காலக் கடிகாரத்தின் உடைந்த முள்ளொன்று உயிருடன் படுத்துக் கிடந்தது
அதனிடம் விசாரித்தேன்
நாம் பிரிந்திருந்தோமா என்று
நாம் இப்போது இணைந்துவிட்டோமா என்று அது திரும்பக் கேட்டது
சற்று பொறு, முள்ளின் மறுபாதியை தேடி எடுத்து வருகிறேன் என்றேன்
அது உன்னிடமே இருக்கிறது என்றது
என்னால் கண்டுபிடிக்க முடியவில்லை
உன்னிடம் ஏதும் இருக்கிறதா மச்சான்?
நாம் பேசிக்கொள்ளாத சொற்களினிடையே கிடக்கிறதா என்று பார்ப்பாயா?
நாம் தந்து முடியாத முத்தங்களில் பதுங்கியிருக்கிறதா எனத் தேடுவாயா?
நாம் எழுதிக்கொள்ளாத கடிதங்களின் மடிப்புகளை சற்று கவனிப்பாயா?
நாம் இணைந்திராத இரவுகளில் களவு போயிருக்கும் என்று நினைக்கிறாயா?
நாம் இழந்ததெல்லாம் நதியாக ஓடிக்கொண்டிருக்கிறது என்று ஒருதடவை
தூர தேசத்து தொலைபேசி அழைப்பில் சொன்னாய்!
எந்த நதி? எந்தக் கடல்? எந்த மழை?
அடுத்த தடவை நாம் சந்திக்கும் முன் அந்த முள்ளின் பாதியைக் கண்டுபிடிக்க வேண்டும்
செய்வாயா?