காதல் – கவிதை

நன்றி – குமுதம்
 காதல்

உனது கைப்பிடியின்
அந்த சிறுகுகையில்
என்னை ஒளித்துவைத்துக்கொள்
நீ அற்ற நாட்களின்
அனாவசிய வெளிச்சம்
என் கண்களை
கூசச்செய்கிறது

உன் சுவாசத்தின் வழி காற்றையும்
உன் முத்தத்தின் வழி நீரையும்
சுகித்து வாழ்ந்துகொள்கிறேன்

உன் அருகாமை இல்லாத
உலகம்
ஒரு ராட்சச மிருகமாக
மருட்சி கொள்ள வைக்கிறது

இந்த நிமிடத்தில்
என் தலையைக் கோதிவிடும்
உன் விரல்களில்
தஞ்சமடைகிறது என் பிறப்பு

கடவுளின் கருவூலங்கள்
இருண்டு கிடப்பவை
என்னால் அங்கெல்லாம் சென்று
தேடமுடியாது

உன் நெஞ்சின் அடைசலில்
சற்று ஒருக்களித்து படுத்துக்கொள்கிறேன்
எனக்கு வேறு நற்செய்திகள் எதுவும் வேண்டாம்