
ஆண்பால் பெண்பால்
நன்றி – ஆனந்த விகடன் 20/12/2016
வயது 36, சிங்கிள். திரைப்படத்துறையில இயக்குநரா இருக்கேன். கவிதைகள் எழுதுவேன் என்று அறிமுகப்படுத்திக் கொண்டு கை குலுக்கினால், குலுக்கலில் நெளியும் கைகளில் ஆயிரம் கேள்விகள். இந்த சமூகத்தில் ஒரு பெண்ணுக்கு எந்த தயக்கமும் இல்லாமல் கைகுலுக்க கூட ஆளில்லாத போது, வாடகைக்கு வீடு கிடைக்கும் என்பது எவ்வளவு பெரிய பகல் கனவு.பிராமின்ஸ் ஒன்லி, ஃபேமிலி ஒன்லி, ஐடி ப்ரொபெஷனல்ஸ் ஒன்லியைத் தாண்டி நாளிதழ் களில் வெளியாகும் வாடகை வீட்டுக்கான விளம்பரங்கள் ஒன்றிரண்டை குறித்துக் கொண்டு வீட்டு உரிமையாளர்களிடம் பேசிப் பார்த்தால் புரிந்து விடும். தமிழில் “வீடு” என்றால் “ஆண்பால்” என்று. ஹை ஸ்கூல் படிக்கும்போது ஹிந்தியை தனியாக படித்து பிராத்மிக், ராஷ்ட்ரபாஷா, பிரவீன் வரை பரீட்சை எழுதியிருக்கிறேன். ஆனாலும் அந்த மொழியில் மேசை – நாற்காலி – கட்டில் – கத்தி என்று சடப் பொருட்களுக்கும் பால்விகுதி வருவது கடைசி வரை குழப்பமாயிருக்கும். தமிழ் மொழியில் அந்த சிக்கல் இல்லையென்றாலும் தமிழ் சமூகத்திற்கு “பால்” பெரும் சிக்கல் தான். “கல்யாணம் ஆகலையா? ஏன்? ஓ விவாகரத்தா? எதனால விவாகரத்து ஆச்சு? வேற கல்யாணம் ஏதும் பண்ணலையா? அப்பா என்ன செய்றாரு? என்ன இறந்துட்டாரா? ஆச்சச்சோ பாவம். எங்க வேலை செய்றீங்க? படம் எடுக்கிறீங்களா? என்ன படம்?” எனத் துளைத்தெடுக்கும் கேள்விகளுக்கும் வாடகை வீட்டிற்கும் இடையே பல மைல்கள் கடக்க வேண்டியிருக்கும். கடந்த ஐந்து வருடத்தில், ஆறு வாடகை வீடுகள் மாறிய என் அனுபவங்களை ஒரு நீண்ட நாவலே எழுதலாம். தனித்து வாழும் பெண் தமிழ் சமூகத்தில் இன்னும் தீண்டப்படாத ஜந்து தான். ஓராயிரம் சுட்டுவிரல்கள் அவளிருக்கும் திசை நோக்கி நீண்டுக் கொண்டே இருக்கும். தந்தை, சகோதரன், கணவன் என குடும்ப ஆண்களின் துணையில்லாது, தன் சொந்த சம்பாத்தியத்தில் தனியே ஒரு பெண் நேர்மையாக வாழ முடியும் என்பதை ஏற்றுக்கொள்ளும் பக்குவம் இன்னும் இந்த சமூகத்திற்கு வாய்க்கவில்லை.
சுயதேர்வுடன், அமைப்புகளுக்கு வெளியே வாழும் பெண்களை சதா சந்தேகத்துடனும் கண்காணிப்புடனும் தான் பொதுச் சமூகம் அணுகுகிறது. தனித்த பெண் சந்திக்கும் ஒவ்வொரு நபரும் ஒரு ஒழுங்குப் போலீஸ்தான். உடுக்கும் உடை, பேசும் மொழி, செய்யும் வேலை, மேற்கொள்ளும் பயணங்கள், கூட இருக்கும் நண்பர்கள், உறவுகள் எல்லாவற்றையும் எடைபோட்டுக் கொண்டே இருக்கும் கூட்டம், ஒரு சின்ன சரிவு ஏற்பட்டாலும் “அவளுக்கு இது தேவை தான்” என்று பழிக்க தயாராக இருக்கும். போறவன், வர்றவன், பெயர் தெரிஞ்சவன், தெரியாதவன்,ஆம்பள, பொம்பள, கம்பியூனிஸ்ட், பெரியாரிஸ்ட், பெமினிஸ்ட் என வகை தொகை தாண்டி எல்லோரிடமும், “ஆண் துணை இல்லாத பெண்ணைக்” குறித்த ஒரு மரியாதைக் குறைவு இருப்பது தான் கசப்பான உண்மை. கற்கள் எறிவதற்குரிய எளிய திசையாக தனித்து வாழும் பெண் எப்போதும் இருக்கிறாள்.
“Personal is Political” என்றொரு வாசகம் உண்டு. சரி என்று நான் நம்பும் விஷயத்திற்கும் வாழ்வுக்கும் நடுவே பெரிய இடைவெளியில்லாமல் வாழ தலைப்படுவதுண்டு. என் குடும்பக்கண்ணியில் இருந்து விலகி முதன்முதலாக சாதி மீறி, மதம் மீறி, தாலி போன்ற சடங்குகள் மறுத்து திருமணம் செய்தேன். பின் கணவனிடமிருந்தும் மணவிலக்கு வாங்கினேன். குடும்பம், திருமணம், சாதி, மதம், சட்டம் என்று நடப்பில் இருக்கும் எந்த அமைப்பும் சுதந்திரமாக வாழ விரும்பும் பெண்ணுக்கானதல்ல என்று அனுபவப் பூர்வமாக உணர்ந்ததால் இவை எல்லாவற்றுக்கும் வெளியில் ஒரு வாழ்க்கையை சாத்தியமாக்க முயற்சி செய்துக்கொண்டே இருக்கிறேன். நீயென்ன “அனார்கிஸ்டா”(Anarchist) என்று பலர் கேட்பதுண்டு. இல்லை, ஒரு பறவை போல, புழு பூச்சி போல, காட்டுச்செடி போல, ஆட்டுக்குட்டி போல தன்னியல்பாக வாழ நினைக்கும் உயிரி என்று நான் பதில் சொல்வதுமுண்டு.
பொம்பள புள்ளயா தலையப் பின்னாம விரிச்சு போட்டு அலையறா, பொம்பளப்புள்ளயா கால்கள சேர்த்து உக்காராம பப்பரப்பான்னு விரிக்கிறா, பொம்பளப்புள்ளயா அடக்கமா இருக்காம இடி இடின்னு சிரிக்கறா, பொம்பளப் புள்ளயா பொழுது சாயறதுக்குள்ள வீடு சேராம ஊர் மேயறா, பொம்பள புள்ளயா சட்டி பான தேய்க்காம ஓயாம விளையாட்டு புத்தி, பொம்பள புள்ளயா ஒரு இடத்தில குந்தாம கால்ல சுடுதண்ணி ஊத்திட்டு திரியறா, பொம்பளப்புள்ளயா வாயடக்கம் இல்லாம எதுத்து எதுத்துப் பேசறா என்று வளரும் பருவத்தில் என் தன்னியல்பான நடத்தைகள் எல்லாம் குற்றமாக்கப்பட்டன. இவ ஆம்பள மாதிரி கேள்வி கேக்கறா, இவ ஆம்பள மாதிரி அக்கரைக்கு இக்கரை நீச்சல் அடிக்கிறா, இவ ஆம்பள மாதிரி சுவரேறி குதிக்கிறா, இவ ஆம்பள மாதிரி மரத்துக்கு மரம் தாவறா, இவ ஆம்பள மாதிரி பைக் ஓட்றா, இவ ஆம்பள மாதிரி தெருவில சண்டைக்கு இழுக்கிறா என்று என் மேல் தரப்பட்ட பிராதுகள் ஒவ்வொன்றும் நான் விரும்பி செய்தவை எல்லாம் “பால்” மீறிய செயல்களாய் கருதப்பட்டதின் அடிப்படையிலானவை.
பால் அடையாளம் பெரும் லஜ்ஜையாக, முட்டுக்கட்டையாக, கைவிலங்காக பதின்பருவத்திலேயே எனக்கு தோன்ற ஆரம்பித்து விட்ட தால், “பெண்ணாகப் பிறந்து விட்டதால் நீ இதை செய்ய முடியாது” என்று சொன்னதையெல்லாம் செய்துப் பார்ப்பது எனக்கு பிடித்த விளையாட்டானது.செய் என்று சொன்னால் செய்யாமல் ஏய்ப்பதும், செய்யாதே என்று சொன்னால் செய்துப் பார்த்துவிடும் பிடிவாதமும், தேவையில்லாத கட்டுப்பாடுகள் வளர்த்துவிடும் குணங்கள் தானே.
பதினெட்டு வயதில் திருமணம் செய்துக்கொண்டுப் பின் எதுவானாலும் படி என்று கட்டாயப்படுத்திய பெற்றோரை மீறி படித்தேன். பொறியியல் படிப்பில் பெண்கள் தேர்வு செய்ய தயங்கும் இன்ஸ்ட்ருமென் டேஷன் அண்ட் கண்ட்ரோல் துறையை தேர்ந்தெடுத்துப் படித்து டிஷ்டிங்கஷனில் பட்டம் வாங்கினேன். கல்லூரி இறுதியாண்டில், மேற்படிப்புக்கு வெளிநாடு செல்லலாம் என்று பரீட்சைகளை எழுதி தள்ளிக்கொண்டிருந்த காலத்தில், தற்செயலாய் கிடைத்த சினிமா அனுபவம் எனக்குள் இருக்கும் கலைஞியை கண்டெடுக்க உதவியது . அப்பா தமிழாசிரியர் ரகுபதி கற்றுக்கொடுத்திருந்த தமிழ் என்னுள் ஊறி தினெவெடுத்திருந்தது. அம்மா ரமாவின் கம்யூனிஸ்ட் குடும்ப பின்புலம் தந்திருந்த துணிச்சல் கை கொடுத்தது. என் கல்லூரித் தோழர்கள் எல்லாம் அமெரிக்காவில் செட்டில் ஆனபோது, நான் எழுத்தும் சினிமாவும் தான் வாழ்க்கை என முடிவெடுத்தேன். ஒழுக்கம் கெட்ட பெண்கள் தான் கலைத்துறையைத் தேர்ந்தெடுப்பார்கள் என்று வீடும் சுற்றமும் கடுமையாக எதிர்த்தது. பிரம்மாண்டமான ஆண்குறியாக இறுகி தடித்திருந்த சினிமா – கலை – இலக்கிய – அரசியல் துறைகள் தந்த சவால்கள் எனக்குரிய பரந்த ஆடுகளத்தை தந்தன. தெருவில் என்னையே தூக்கி எறிந்துக் கொண்டேன். உண்மையான கற்றல் அந்தப் புள்ளியில் தான் தொடங்கியது. கற்றல் என்பது ஏற்கனவே தவறாக கற்றுக்கொடுக்கப்பட்டதைக் கைவிடுதலும் தானே!
தமிழ் சினிமா ஆணின் உலகம். பெண்ணின் உடலைக் காட்சிப் பொருளாக்குவதை தவிர பெண்ணுக்கு வேறெதையும் செய்துவிடும் பிரயத்தனமும் அதற்கில்லை. பழைய பண்ணையார் மனப்பான்மையோடும் வீங்கிய ஆண் ஈகோ வோடும் வலம் வரும் இயக்குனர்கள், சரிசமமாக அவர்கள் முன் அமர்ந்து விவாதம் செய்யும் பெண்ணை, அவளின் அறிவை வெறும் திமிராக மட்டுமே பார்க்கும் இயலாமை நிறைந்தவர்கள்.மிகக் குறைந்த காலமே உதவி இயக்குனராக வேலை செய்தேன். டைரக்டர் சார் ஸ்பாட்ல நிற்கும் போது வேற யாரும் உட்காரக் கூடாது, பேசக்கூடாது போன்ற சர்வாதிகார சட்டங்களுக்கும் கலைக்கும் என்ன சம்பந்தம் என்று கேள்விகள் ஒவ்வொன்றாய் குடைய ஆரம்பித்தது. எடுக்கும் படம் நல்ல படமா என்பதை தாண்டி, கொஞ்சம் கூட ஜனநாயகம் இல்லாத வேலைச் சூழல் அலர்ஜியாய் இருந்தது.சுற்றிலும் போலி பம்மாத்துகள். நான் வேலை செய்த யூனிட்களில், டெக்னீஷியனாக ஒரே ஒரு பெண்ணாக நான் மட்டும் வேலை செய்தேன். லொகேஷனில் என்னை நடிகையா என்று தான் பார்ப்பவர்கள் கேட்பார்கள். இல்லை, நான் அசிஸ்டென்ட் டைரக்டர் என்றால் மேலும் கீழும் வினோதமாக பார்ப்பார்கள். தலையை இறுக்க கட்டி தொப்பி மாட்டி தொள தொள டிஷர்ட் ஜீன்ஸ் போட்டுக்கொண்டு நின்றாலும் “நீ அழகா இருக்க” என்ற வாசகத்தின் குறுக்குவாசல் வழியாக நட்பு கோரும் மக்கு ஆண்களோடு ஒரு காவியமும் படைத்துவிட முடியாதென்பதால், சுயாதீன சினிமாவை தேர்ந்தெடுத்தேன். சரியோ தப்போ நாமே செய்துப் பார்த்துவிடுவோம் என்கிற நம்பிக்கையில் சிறிய காமிராவோடும், காலரில் மாட்டிய மைக்ரோஃபோனோடும், தோள்பையில் தொங்கும் மேக்புக்கோடும், 2002-ம் ஆண்டு சினிமா எடுக்க கிளம்பினேன். இன்று வரை சிறிதும் பெரிதுமாக ஒரு டஜன் படங்கள், திரையிடல்கள், விவாதங்கள் என 300 கிராமங்கள், 30 நாடுகள், 3000 இரவுகள் என பயணம் தொடர்ந்துக் கொண்டிருக்கிறது. பெண்ணாய் பிறந்ததால், என் தந்தை மரணமடைந்தபோது அவரை வழியனுப்ப என்னை சுடுகாட்டிற்குள் அனுமதிக்கவில்லை. ஆனால், என் “தேவதைகள்” படத்திற்காக புதுவையில் அனாதைப் பிணங்களை அடக்கம் செய்யும் கிருஷ்ண வேணியம்மாவை படம்பிடிக்க முதன்முதலில் கேமிராவோடு இடுகாட்டில் நுழைந்தேன். என் பாட்டி ராஜேஸ்வரிக்கு பதினோரு வயதிலும், என் அம்மா ரமாவுக்கு பதினைந்து வயதிலும் திருமணம் செய்து வைத்ததை கேள்வி கேட்க நான் பிறந்திருக்கவில்லை. ஆனால், என் “பலிபீடம்” படம் மூலமாக குழந்தை திருமணங்களை ஆவணப்படுத்தி விவாதங்களை எழுப்பினேன். பெண்கள் சாதியாகவும் பாலினமாகவும் இரண்டடுக்குகளில் ஒடுக்கப்படுவதை தட்டிக்கேட்க என் படங்களை பயன்படுத்தினேன். மீனவர்களை, ஆதிவாசிகளை, அகதிகளை, போர் தின்ற மனிதர்களை சந்தித்து, புரிந்துக்கொண்டு அரவணைக்கும் வாய்ப்பை எனக்கு கேமிரா தான் வழங்கியது. அந்தப்பயணங்களும், பயணங்களில் சந்தித்த மனிதர்களும், அவர்களின் வாழ்க்கையும், மொழி, தேசம், நிறம் என்ற அடையாளங்களைக் கடந்த, குறிப்பாக பால் அடையாளத்தை கடந்த உயிரியாக என்னை மாற்றி விட்டன. எனக்கு நான் தேடிக் கொண்ட ஆசிரியர்கள் பயணங்களிலும் படப்பிடிப்புகளிலும் சந்தித்த மனிதர்கள் தாம் .
பால் கடந்த அன்பும் நட்பும் சாத்தியமா என்றால் சாத்தியம் என்று அடித்து சொல்வேன். பரஸ்பர மதிப்பும் மரியாதையும் அதை சாத்தியப்படுத்தும். சினிமா ஒரு கூட்டு முயற்சி. அதில் பால் சார்ந்த உயர்வு தாழ்வு மனப்பான்மைகள் இருந்தால் இணைந்து வேலை செய்து படைப்புகளை உருவாக்க முடியாது. என்னுடன் பதினைந்து வருடங்களாகத் தொடர்ந்து பணியாற்றும் எடிட்டர் தங்கராஜ் என் ஆத்ம நண்பர். அவர் பயாலஜிகலாக ஆணுடலுடன் இருக்கிறார் என்பதும் நான் பயாலஜிகலாக பெண்ணுடலுடன் இருக்கிறேன் என்பதும் எங்கள் நட்புக்கோ வேலைகளுக்கோ ஒரு பொருட்டாக இருந்ததே இல்லை. படைப்பாற்றல் வெளியில் பால் அடையாளங்கள் மறக்கடிக்கப்படுவதும், பால் பேதங்கள் அடித்துச் செல்லப்படுவதையும் நான் திரைப்பட உருவாக்கப் பணிகளில் அனுபவித்திருக்கிறேன். பல சமயங்களில் படப்பிடிப்புக் குழுவுடன் காடுகளிலும் மலைகளிலும் கடற்கரைகளிலும் ஒன்றாக தங்கி உறங்கி உடைமாற்றி வேலை செய்யும் சூழல் தான் இருக்கும். படைப்பு தான் நாங்கள் காணும் கூட்டுக் கனவு. பால் படிநிலைகள் அங்கு குறுக்கே வர அனுமதியே இல்லை. ஒளிப்பதிவாளர்கள் சன்னி ஜோசப், ரமணி, ரதீஷ் ரவீந்தரன், தனேஷ், அரவிந்த் என்று என் நண்பர்கள் பால் கடந்த ஆன்மாக்கள். எங்கள் உறவிலும் பரிவர்த்தனைகளிலும் அன்பிலும் பால் உறுத்தியதே இல்லை. இன்னும் சரியாக சொன்னால் என்னை பெண்பால் என நினைவுறுத்தும் யாரிடமும் என்னால் தொடர்ந்து நட்பு பாராட்டவோ, இணைந்து வேலை செய்யவோ முடிந்ததல்லை. வாழ்விலும் தாழ்விலும் அரவணைக்கும் என் சகோதரன் இளங்கோ, நிபந்தனையற்று நேசிக்கும் என் இணையும் சிற்பியுமான எஸ்வந், சித்தப்பா என்று நான் உரிமையுடன் அழைக்கும் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் தலைவர்களில் ஒருவரான டி.ராஜா, ஓவியர் மணிவண்ணன், கவிஞர் சாகிப், வாசகராயிருந்து நண்பரான தீரா, என் மொழிபெயர்ப்பாளரும் உயிர் நண்பருமான பாலக்காடு ரவி, நிழற்படக்கலைஞர் விஜயசேகர் என்று என் எல்லா மேட்னெஸ்ஸையும் பொறுத்துக் கொள்ளும் ஆண்பால் வட்டம் இல்லாமல் இருந்திருந்தால் இந்நேரம் என்னைப் புதைத்த இடத்தில் புல் முளைத்திருக்கும். என் காலஞ்சென்ற தந்தை ரகுபதி நேசித்ததைப் போல் யாரும் இன்னும் என்னை நேசிக்கவில்லை. “கண்ணம்மா, நீ என்ன துறையைத் தேர்ந்தெடுத்தாலும் தமிழை மறக்க கூடாது. விடாது உழைக்கனும். உழைப்பு ஒன்று தான் நம் சொத்து. பெண்ணுக்கு முக்கியம் பொருளாதார தற்சார்பு. மற்றதெல்லாம் உன் தேர்வு தான்” என்று அவர் என் கைகளை அவர் கைகளில் பொதித்துக் கொண்டு சொன்ன ஈரம் இன்னும் காயவில்லை. அவர் என்னை திடீரென விட்டுச்சென்றதாலோ என்னவோ, நான் நேசிப்பவர்களும் என்னை விட்டுச் சென்றுவிடுவார்கள் என்ற பதட்டம் எப்போதும் என்னை வாட்டும். ஆணோ, பெண்ணோ, உறவுகளில், “என்றென்றும்” என்ற நிலைத்த உணர்வு சாத்தியமில்லை என்றே நம்புகிறேன்.
மொழி எனது எதிரி என்று எழுதியிருப்பேன். பாலின ஏற்றத்தாழ்வுகளின் ஊற்று மொழி. சங்க காலத்தில் எழுதியதாக சொல்லப்படும் ஒளவையார், வெள்ளிவீதியார் போன்ற கவிஞர்கள் தவிர, ஆறாம் நூற்றாண்டின் காரைக்கால் அம்மையார், எட்டாம் நூற்றாண்டின் ஆண்டாள் தாண்டி தமிழில் பெண்கள் எழுதிய வரலாறு இல்லை. 2000ம் ஆண்டுகளுக்குப் பிறகு தமிழில் பெண்கள் எழுதுகிறார்கள். அல்லது, ஆண் மைய மொழியை அடித்து, நிமிர்த்தி, வளைத்து தமதாக்கி கொண்டிருக்கிறார்கள் என சொல்லலாம். மொழிக்குப் பாலினம் இல்லை. ஆனால் பெண்கள் இந்த இந்த சொற்களை பயன்படுத்துவது ஆபாசம். மொழிக்கு பாலினம் இல்லை. ஆனால் பெண்கள் அந்த அந்த விஷயங்களை வெளிப்படையாக எழுதுவது அசிங்கம். மொழிக்கு பாலினம் இல்லை. ஆனால் நமக்கென்று மரபு இருக்கு, அதை எப்படி பெண்கள் மீறலாம் . மொழிக்குப் பாலினம் இல்லை. ஆனால் பெண்களாக இருப்பதாலேயே கவனம் பெற்று விடுகிறார்கள் என்று பலவாறு காமெடி பண்ணிக்கொண்டிருக்கிறார்கள். என்னுடைய முதல் கவிதை தொகுப்பு “ஒற்றையில்லையென” புத்தக அட்டையில் ஒரு நிர்வாணப் பெண்ணின் ஓவியம் இருக்கும்.வந்தவாசியில் நடந்த முதல் விமர்சனக் கூட்டத்தில் விமர்சகர் அந்தப் புத்தகத்திற்கு பிரவுன் கவர் போட்டு எடுத்து வந்திருந்தார். அவர் நம்மூர் கோவில்களுக்கெல்லாம் கண்ணைக் கட்டிக்கொண்டு போவார் போலிருக்கிறது. அங்கு தொடங்கி இன்று வரை சர்ச்சைகளுக்கு குறைவில்லை. பெண்களின் “இருப்பை” சதா சர்ச்சைக்குள்ளாக்குவதால் அவர்களின் வீர்யமான படைப்புகள் சரியான வாசக கவனமோ, விமர்சனமோ பெற முடிவதில்லை என்பது தான் துயரம். தமிழ் இலக்கிய உலகம் விசித்திரமானது. தங்கள் கருத்தியல்களை வாசலில் செருப்பைக் கழற்றி வைப்பது போல வைத்துவிட்டு, “ஏய் என்னடி சமையல்” என்று கேட்டுக்கொண்டே வீட்டுக்குள் நுழையும் ஆண்கள் தான் அதன் நாயகர்கள். தெருவில் சீட்டியடிக்கிறவனிடம் கூட ஒரு நேர்மையிருக்கும்.ஆனால் புரட்சி பேசுபவர்கள், முற்போக்காளர்கள், எழுத்தாளர்கள் என்று சொல்லிக்கொள்கிறவர்களில் பெரும்பாலானவர்கள், எழுதும் பெண்ணை, வாசகிகளை வெறும் செக்ஸுவல் ஆப்ஜெக்ட்டாக பார்ப்பதில் கொஞ்சமும் சளைத்தவர்கள் அல்ல. என்னோடு பயணம் வருவாயா? சரிக்கு சரி சிகரெட் சரக்கு அடிப்பாயா? இரவிரவாக விவாதம் புரிவாயா? என்று கட்டபொம்மன் மாதிரி நம்ம இலக்கியவாதிகள் சவால் விடுவதோடு சரி. ஒரு “No” சொல்லும் பெண்ணை எதிர்கொள்ளும் மன உயரம் கூட இல்லாமல் தான் இருக்கிறார்கள். இவர்களின் மன விகாரங்களுக்கு இப்போது ஃபேஸ்புக் வேறு புதிய மேடையை அமைத்துக் கொடுத்திருக்கிறது. பெண்ணின் படைப்புகளை விட பெண்ணைகுறித்த பேச்சுக்கு அடிமையான இலக்கிய உலகத்தில் தான் நானும் இயங்கி கொண்டிருக்கிறேன் என்பது சமயங்களில் ஆயாசமாக இருக்கும். இலக்கியக் கூட்டத்திற்குப் போய், பலநாள் இரவு பகலாக முழித்திருந்து எழுதிய கட்டுரையை வாசித்திருப்பேன். ஆனால் அடுத்த நாள் நான் அணிந்திருந்த ப்ளவுஸ் குறித்த சலசலப்பு தான் ஓடிக்கொண்டிருக்கும். நான்பியூட்டி பார்லருக்குப் போறேன், வெள்ளைக் கார்ல வரேன், ஜீன்ஸ் போடறேன் என்பதெல்லாம் கூட விமர்சனமாக எழுதப்பட்டிருக்கிறது. அதை எழுதியதும் கூட ஒரு பெண் தான் என்பது நகைமுரண். பெண் பொருளாதார தற்சார்போடு தொடர்ந்து இயங்குவதையும், ரசனையாக வாழ்வதையும் , தன்னை அழகாக வைத்துக்கொளவதையும் கூட ஒழுங்குப் பிரச்சினையாகப் பார்த்து பெண்கள் தான் கடுமையாக விமர்சிக்கிறார்கள். ஆதிக்க சமூகம் பெண்களுக்கு ஏற்படுத்தும் கடும் உளவியல் சிக்கலிது. பெண்ணிய சிந்தனைகளுக்கும் ஆணின் அங்கீகாரத்தை வேண்டி நிற்கும் இந்த சிக்கலில் சக பெண் எதிரியாகிறாள். தந்தைவழி சமூகம் பெண்ணையும் பெண்ணையும் பிரித்து வைத்து தானே இத்தனை மாமாங்கமாய் கோலோச்சுகிறது.இந்த சூழலில் ஏன் தொடர்ந்து எழுத வேண்டும் என்று இதை வாசிக்கும் நீங்கள் கேட்கலாம். எல்லாவற்றையும் எழுதிக் கடக்கும் போது என்னை நானே சோர்விலிருந்தும் அவநம்பிக்கைகளிலுமிருந்தும் விடுவித்துக்கொள்ளவும் முடிகிறது. மனதில் வெறுப்பை மண்ட விடாமல், முரண்களைத் தாண்டி, காயங்களை மறந்து ஒரு முத்தத்தால் சட்டென எல்லோரையும் அரவணைத்துக் கொள்ள முடிகிற பித்து நிலையை வரம் வேண்டி தொடர்ந்து எழுதுகிறேன், இயங்குகிறேன்.
தரப்பட்ட மத அடையாளத்திலிருந்து விடுவித்துக் கொள்வது போல, சாதி அடையாளத்தை நிராகரிப்பதைப்போல, பால் அடையாளத்தையும் கட்டுடைக்கும் தேவை இருக்கிறது. ஆண் பெண் என்ற இருமை எதிர்வுகளுக்கு வெளியே பாலினத்தை ஒரு நிறப்பிரிகையாக, திரவமாக புரிந்துக்கொள்ளும் புள்ளிக்கு நகர்ந்து வந்திருக்கிறேன். திருநங்கை, திருநம்பி, இடையிலிங்கர், நடுநர், இருநர், முழுநர் என்று ஆண் – பெண் பைனரிக்கு(binary) வெளியே விளிம்பில் நிற்கும் பால் புதுமையரின்( gender queer) பக்கம் நின்று வரலாற்றை கலை – இலக்கியம் வழி திருப்பி எழுத விரும்புகிறேன். யாரும் யாருக்கும் மேலானவர்களும் இல்லை, கீழானவர்களும் இல்லை. வேறானவர்கள் என்பதை முழுமனதாக ஏற்றுக்கொண்டு அந்த வேற்றுமையை மதிக்க கற்றுக்கொள்வது பேதங்களை கடக்க உதவும். பால் வெறும் பண்பாட்டு அலகு தானே? அன்பே உலக நாகரீகம்.
– லீனா மணிமேகலை